உணவு வீணாவதால் உருவாகும் மீத்தேன் வாயு!

 








ஆண்டுதோறும் 1.4 பில்லியன் டன் உணவுப்பொருட்கள் வீணாகி வருகின்றன. உற்பத்தியாகும் மூன்றில் ஒரு பங்கு உணவுப்பொருள், வீணாகிவருவதாக ஐ.நா அமைப்பு கூறுகிறது. உணவு வீணாவது எந்தெந்த நிலையில் நேரிடுகிறது? உற்பத்தி, அதை ஓரிடத்திலிருந்து சந்தைக்கு கொண்டு செல்வது, விற்பனை, வீட்டு பயன்பாடு என பல்வேறு செயல்களில் உணவு வீணாகிறது.

உலக நாடுகளில் நாற்பது சதவீதம் உணவுப்பொருட்கள் அதன் விற்பனை நிலையில்தான் வீணாவது தெரிய வந்துள்ளது. மனிதர்கள் சாப்பிட உற்பத்தியாகும் உணவுப்பொருட்கள் வீணாவது, பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த உணவுப் பொருட்கள் பட்டியால் தசை உருகி கிடக்கும் மக்களுக்கு சென்று சேருவது பல்வேறு உலகளவிலான பொருளாதார கொள்கைகளால் தடுக்கப்படுகிறது.  மக்களுக்கு பயன்படாமல் கெட்டு அழுகிப்போகும் பொருட்களால் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுவான மீத்தேனின் அளவு கூடுகிறது.

உணவு வீணாவதால் உலகளவில் 28 சதவீத வேளாண்மை நிலங்களின் பயன்பாடு சீர்கெடுகிறது.  60 க்யூபிக் கி.மீ அளவு நீர் வீணாகிறது. வீணாகும் உணவை உற்பத்தி செய்யும் செயல்முறையில் வெளியாகும் கார்பன் அளவு 3.6 பில்லியன் டன் ஆகும்.

உணவை உற்பத்தி செய்ய பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் செலவாகிறது. தனிநபராக இப்படி செலவாகும் நீரின் அளவு, 15-540 லிட்டர்களாக உள்ளது. செலவாகும் நீர் என்பதில் அதன் மாசுபாட்டு அளவும், பயன்பாட்டு அளவும் உண்டு.

நீரின் பயன்பாட்டில் தனிநபர் பயன்பாடு, பயிர்கள், அதன் இறுதிப் பயன்பாடு வரை கணக்கிடப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் மக்கள் பயன்படுத்தும் நீரின் அளவு மிக அதிகம்.

வாழை

790 லிட்டர்

பால்

1,020 லிட்டர்

பருத்தி டீ ஷர்ட்

2,700-4,100 லிட்டர்

 

பிரெட் – கோதுமை

1,608 லிட்டர்

கோழி

4,325 லிட்டர்

மாடு

15,415 லிட்டர்

பருத்தி டீஷர்ட் உற்பத்திக்கு செலவாகும் நீரின் அளவு குறிப்பிடப்பட்டுள்ளது. இழையின் அடர்த்தியைப் பொறுத்து அதன் அளவு மாறும்.

அனைத்து வகையான நுகர்வுமே, ஓரளவுக்கு காலநிலை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. இப்படி நுகரும் அளவு என்பது வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிகமாக உள்ளது. இன்று வறுமையான நிலையில் உள்ள நாடுகளிலும் நுகர்வு அதிகரித்து வருகிறது. தற்போது ஒருவரின் பசுமை இல்ல வாயு வெளியீடு என்பது 5.3 டன்களாக உள்ளது. சூழல் சார்ந்த மன அழுத்தங்களுக்கு மக்கள் இப்போது ஆட்பட்டு வருகிறார்கள். இன்று வெளியாகும் வெப் சீரிஸில் பலவும் உலகம் அழிந்தபிறகு, மிச்சமிருக்கும் மக்களின் வாழ்க்கை பற்றியதாகவே இருக்கிறது. இதையும் உலக நாடுகளிலுள்ள மக்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அதற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள முடியும் என நம்புகிறார்கள்.

சில நாடுகளில், தங்கள் கார்பன் வெளியீட்டை குறைவாக காட்ட தங்களது தொழில்துறையை ஏழை நாடுகளுக்கு குறிப்பாக தொழிலாளர் கூலி குறைவான நாட்டிற்கு மாற்றிக்கொள்கின்றனர். இந்தியா, சீனா போன்ற நாடுகள் இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறுகின்றன. ஆனால், இதற்கு நாம் கொடுக்கும் விலை என்பது நீண்டகால நோக்கில் பார்த்தால் மிக அதிகம்.

தொழில்புரட்சி காலத்தில் நிலக்கரி மிக மலிவான ஆற்றல் ஆதாரமாக இருந்தது. ஆனால் அதை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு இயற்கை சூழல் பெரும் விலை கொடுக்க வேண்டியிருந்தது. எரிவாயுவை எரிப்பதால் உண்டாகும் அளவை விட 50 சதவீதம் அதிக கார்பன் நிலக்கரியால் உருவாகிறது.

பொருளாதார ரீதியாக வலு பெற்ற நாடுகள் இப்போது நிலக்கரியை மெல்ல கைவிட்டு வேறு ஆற்றல் ஆதாரங்களுக்கு  மாறி வருகின்றன. நவீன மின் உற்பத்தி ஆலைகளில் முடிந்தளவு வாயுக்களை சுத்திகரிக்கின்றனர். பிறகு அதை வளிமண்டலத்தில் வெளியிட்டு விடுகின்றனர். நிலக்கரியை எரித்து அதன் மூலம் கிடைக்கும் சக்தியை வைத்து நீரை  500 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சூடாக்குகிறார்கள். இந்த முறையில் பெறும் நீராவியை வைத்து டர்பைன்களை இயக்குகிறாகள். இப்படித்தான் மின்சாரம் உற்பத்தியாகிறது. இதற்கு மாற்றாக புதுப்பிக்கும் ஆதாரங்களை உருவாக்கி வந்தாலும், முழுமையாக பல்வேறு நாடுகள் மாறுவதற்கு தயங்குகின்றன. தூய ஆற்றல் ஆதாரங்களை முழுமையாக உருவாக்க, பெருமளவு நிதி தேவைப்படுகிறது. கட்டமைப்பு உருவாகிவிட்டால், பின்னாளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது எளிதாக மாறலாம்.

உலகம் முழுக்க தனிநபர் வாகனங்கள் பெருகிவருகின்றன. இதன் மூலம் உருவாகும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு, பத்து சதவீதமாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பலரும் பொதுப்போக்குவரத்தைக் கைவிட்டு தங்களுக்கென தனி வாகனங்களை வாங்கிக்கொண்டனர்.

குறைவான தூரத்திற்கு சைக்கிள்களை பயன்படுத்தலாம் என சூழல் நோக்கில் கூறினாலும் சென்னை போன்ற பெருநகரத்தில் கூட அதற்கென தனி பாதைகள் இல்லை. அமைக்க மனமில்லாமல் இல்லை. அவற்றை அமைத்தாலும் அதில் ஆக்கிரமிப்புகள் வந்துவிடுகின்றன. அதை நீக்குவதற்கு அரசு முனைப்பு காட்டவில்லை. சைக்கிள்களுக்கென அமைக்கப்பட்ட பாதைகளில் கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

பொதுப்போக்குவரத்து, சைக்கிள், நடப்பது ஆகியவற்றை கார்பன் வெளியீட்டுக்கு மாற்றாக கூறுகிறார்கள். அரசு இதில் கவனம் செலுத்தி பொதுப்போக்குவரத்திற்கான பேருந்துகளை அதிகரிப்பது முக்கியம். 2010ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள் எஸ்யூவி வாகனங்கள் மீது அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள்.உ லகளவில் கார்பன் வெளியீட்டுக்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த வகை கார்கள்தான். விமான வசதிகள் அதிகரித்துள்ளது, நாட்டின் வளர்ச்சிக்கு பெருமை சேர்க்கும் விஷயம். வணிகத்திற்கு ஊக்கமளிக்கும் செயல்தான்.

விமானங்கள் உலகளவில் 2.4 சதவீத கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டுக்கு காரணமாக இருக்கிறது. விமானங்கள் மேகங்களை கலைத்து செல்லும்போது, வெளியிடும் எரிபொருள் காரணமாக கான்ட்ரெய்ல் என்ற நிலை உருவாகிறது. இதனால் மேகங்களில் சைரஸ் மேகங்கள் என்ற வகை உண்டாகி, பூமியின் வெப்பத்தைக் கவர்கிறது. இந்த வெப்பம் வளிமண்டலத்திற்கு செல்லாமல் திரும்ப பூமிக்கு வருவதால், பூமியின் வெப்பம் இயல்பானதை விட அதிகரிக்கிறது. இப்படி கூறுவதால், விமானப்போக்குவரத்தை குறைத்துக்கொள்ளலாம் என்று அர்த்தமல்ல. ஏற்படும் பாதிப்பை குறைக்க அரசு முயற்சிகளை செய்யவேண்டும்.

கனரகத் தொழிற்சாலைகள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. குறிப்பாக இரும்பு, எஃகு உருக்கு ஆலைகள். இங்கு  உலோகங்களை உருவாக்க அதிக ஆற்றல் தேவை. இதற்கு, நிலக்கரியைப் பயன்படுத்துகிறார்கள். அதை அதீதமாகப் பயன்படுத்துவதால் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிக்கத் தொடங்குகின்றன. உலகளவில் 41 சதவீத அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு வாயு வளிமண்டலத்தில் சேர கனரக தொழிற்சாலைகளே காரணம் என ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

 

 

 

மூலநூல்

சிம்ப்ளி கிளைமேட் சேஞ்ச்

டிகே/பெங்குவின் ராண்டம் ஹவுஸ்

மூலத்தை தழுவிய தமிழாக்க கட்டுரை.

https://pixabay.com/photos/crow-bird-animal-feathers-plumage-6650506/

கருத்துகள்