கடலில் ஏற்படும் அபாய மாற்றங்களால் உலக நாடுகள் மூழ்கும் அபாயம்!

 









 

நேரடியாகவும் மறைமுகமாகவும் கடல் ஏராளமான பாதிப்புகளை அடைந்து வருகிறது. கடல் வெப்பமடைவதற்கு முக்கியமான காரணங்கள், சூரிய வெப்பம், மேகங்கள், நீர் ஆவியாகும் செயல்முறை, பசுமை இல்ல வாயுக்கள் வெப்பத்தை கடத்தி பிறகு பூமிக்கு கடத்துவது ஆகியவையாகும்.

மேற்சொன்ன காரணங்கள் மூலம் வெப்ப அலை உருவாகி கடல் மட்டம் மெல்ல உயர்கிறது. கடலிலுள்ள பவளப்பாறைகள் மெல்ல அழியத் தொடங்குகின்றன. மீன்கள் வெப்பம் காரணமாக துருவப் பகுதிகளுக்கு நகரத் தொடங்கியுள்ளன. கார்பன் டை ஆக்சைடு கடல் நீரில் அதிகளவு உள்ளிழுக்கப்பட்டால், அமிலத்தன்மை அதிகரிக்கும். இந்த சூழ்நிலையில் கடல் உயிரினங்கள் அழியத் தொடங்குகின்றன.

கடல்மட்டம் உயர்வதால் மாலத்தீவுகள் (இந்தியப் பெருங்கடல்), கிரிபதி (பசிஃபிக் கடல்) ஆகிய தீவுகள் மெல்ல மூழ்கத் தொடங்கியுள்ளன. 2100க்குள் ஒரு மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்தால் தீவுகளில் உள்ள கடற்கரையில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் 30 சதவீதத்தை கடல் ஈர்த்துக்கொள்கிறது. இதன் விளைவாக, கடலின் பிஹெச் அளவு மாறி, அமிலத்தன்மை கொண்டதாகிறது. இதன் காரணமாக சில கடல் வாழ் உயிரினங்கள் தாவரங்கள் மட்டுமே பயன் பெறுகின்றன. 2016ஆம் ஆண்டு தொடங்கி, பவளப்பாறைகள் 50 சதவீதம் அழிந்துவிட்டன. 1950ஆம் ஆண்டு தொடங்கி பிளாஸ்டிக்குகள் உலகில் அதிகரித்து வருகின்றன. இதனால், கடலின் சமநிலை கெட்டு உயிரினங்கள் பாதிப்படைகின்றன.

ஆண்டுதோறும் 419 மில்லியன் டன் பிளாஸ்டிக், உலகளவில் உற்பத்தியாகிறது. இதில், 14.3 மில்லியன் டன் பிளாஸ்டிக், கடலில் ஆண்டுதோறும் கழிவாக சேர்ந்து வருகிறது. இதில், எண்பது சதவீத பிளாஸ்டிக்குகள் நிலத்தில் பயன்படுத்தப்பட்ட கழிவுகளாகும். மீதியுள்ளவை கப்பல் போக்குவரத்து மூலம் கடலில் வந்து சேர்ந்தவை.

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகள் பொருளாதார வளர்ச்சி குறைவானவையே. இதன் விளைவாக வெப்பஅலை, புயல், கடல் மட்டம் உயர்வு ஆகியவை ஏற்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகள், காலநிலை மாற்றத்தால் உடனடியாக பாதிக்கப்படுவதில்லை. 2000-2019 காலகட்டத்தில் பத்து பொருளாதார வளர்ச்சி குறைந்த நாடுகள் காலநிலை மாற்றத்தில் பாதிக்கப்படவுள்ளதாக அடையாளம் காணப்பட்டன. மியான்மர், ஹைதி, நேபாளம், மொசாம்பிக், தாய்லாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், புவர்டோ ரிகோ, தி பகாமாஸ், வங்கதேசம்.

காலநிலை மாற்றம் தொடர்ச்சியாக ஏற்பட்டால, 2050ஆம் ஆண்டில் உள்நாட்டில் 143 மில்லியன் மக்கள் இடம்பெயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. சகாரா ஆப்பிரிக்கா (86 மில்லியன்), மத்திய, தெற்கு அமெரிக்கா (17 மில்லியன்), தெற்காசியா (40 மில்லியன்) ஆகிய பகுதிகளில் அதிக மக்கள் இடம்பெயர்வார்கள்.

காலநிலை மாற்றத்தால் வேளாண்மை முற்றாக பாதிக்கப்பட்டு பயிர்களின் விளைச்சல் குறையும். எனவே, அதை நம்பியுள்ள மக்கள் வேறு இடங்களுக்கு வேலை தேடி நகரும் சூழல் உருவாகும். காலநிலை மாற்றம் உருவாக்கும் இயற்கை பேரிடர்களையும் கருத்தில் கொள்வது அவசியம்.

ஆப்பிரிக்க பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் கொசுக்கள் மூலம் பரவும் மலேரியா நோய் அதிகரித்து வருகிறது. காலநிலையின் இயல்பு மாறும்போது நோய்களை ஏற்படுத்தும் கொசு, சிலவகை பூச்சிகள் வலிமை பெறுகின்றன. இவையும மனிதர்களைப் போலவே வேறு இடங்களைத் தேடுகின்றன. காலநிலை மாற்றம் காரணமாக பயிர் உற்பத்தி வீழ்ச்சியடைந்தால் 2050ஆம்ஆண்டு மக்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை  20 சதவீதம் வரை ஏற்படும்.  உணவு தானியங்களின் உற்பத்தி குறைந்து, அதன் விலை அதிகரிக்கும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படுகிறது.

பஞ்சம், நிலங்கள் வளங்களை இழந்து பாலையாவது ஆகிய சிக்கல்களால் 2050ஆம் ஆண்டில் 3 பில்லியன் மக்கள் நீராதாரம் இல்லாத அல்லது பற்றாக்குறையான இடத்தில் வாழ்வார்கள். கடல்நீர், நன்னீர் வளங்களுக்குள் ஊடுருவவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

 காலநிலை மாற்றம் என்பது முதலில் பாதிப்பது என்பது ஏழை மூன்றாம் உலக நாடுகளைத்தான். ஆனால், வளர்ச்சி அடைந்த நாடுகளும் மெல்ல பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி வரும். பொருளாதார வளர்ச்சியும், சூழல் பாதிப்பும் பிரிக்க முடியாதபடி ஒன்றாக இணைந்துள்ளன. எனவே, நாடுகள் பொருளாதார வளர்ச்சியை நேர்மறையாக வெற்றியாக பிரகடனப்படுத்துகின்றன. சூழல் சார்ந்த பின்னடைவை முழுமையாக மறைக்க முயல்கின்றன.

 

 

 

மூலநூல்

சிம்ப்ளி கிளைமேட் சேஞ்ச்

டிகே/பெங்குவின் ராண்டம் ஹவுஸ்

மூலத்தை தழுவிய தமிழாக்க கட்டுரை.

https://in.pinterest.com/pin/1000784348426852525/

கருத்துகள்