மக்கள்தொகை பெருக்கமே, கார்பன் வெளியீட்டுக்கு முக்கியக் காரணம்!

 








தொழில்துறை வளர்ச்சி பெறுவதற்கு முன்னர், மக்கள் கிராமத்தில் உள்ள தங்கள் வீடுகளில் உழைத்து வந்தார்கள். பின்னாளில், தொழிற்சாலைகள் நகரத்தில் உருவாகின. அதைச் சுற்றி பல்வேறு உபதொழில்கள் தொடங்கப்பட்டன. தொழிலாளிகள் எந்திரம் போல அதிக நேரம் வேலை வாங்கப்பட்டனர். அவர்கள் வேலை செய்யும் இடத்தில் போதிய வசதிகளும் இல்லாமல் இருந்தன. தொழில்துறை வளர்ச்சி அதிகரித்தபோது வளிமண்டலத்தில் 48 சதவீத கார்பன் டை ஆக்சைடு கலந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வேளாண்மை பொருளாதாரத்தில் இருந்து பெரும் உற்பத்தி சார்ந்த தொழில்துறைக்கு மாறினர். இந்த தொழில்புரட்சி மெல்ல பிற நாடுகளுக்கும் பரவியது. இரும்பு, ஸ்டீல் ஆகியவற்றைத் தயாரிக்க அதிகளவு நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. பொருட்களை கொண்டு செல்ல உதவி நீராவி எஞ்சினுக்கு முக்கிய ஆதாரமே நிலக்கரிதான். அன்று உலக நாடுகள் ஆற்றல் தேவைக்கு நம்பியிருந்த ஒரே பொருள், நிலக்கரிதான்.

தொழில்புரட்சி மேற்கு நாடுகளுக்கு பெரும் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுத் தந்தன. அதேசமயம் அவை நிலம், நீர், காற்றை  மாசுபடுத்தவும் செய்தன. தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு, நாட்டின் முன்னேற்றம் என்ற அடிப்படையில் பலரும் பேசியதால், மாசுபாடு தொடர்பான வாதம் அடிபட்டு போனது.

1970ஆம் ஆண்டு உலகம் முழுக்க ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு அதிகமாக இருந்தது. பின்னாளில்தான், குழந்தைகளின் மரணம் குறைந்தது. ஆரோக்கியம் மேம்பட்டது. மருத்துவ வசதிகள் கிடைத்த காரணத்தால், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. உண்மையில் குழந்தைகளை விட காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள் அதிகரிப்பது வயதானவர்கள்தான். அதாவது, 50 வயது தொடங்கி 75 வயது வரையிலான நபர்கள்.

உலகளவில் வயதானவர்களின் எண்ணிக்கை உயரத்தொடங்கியது, 1970களில்தான். 2015-60 காலகட்டத்தில் முதியோர்களின் எண்ணிக்கை 1.1 பில்லியனாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகள், இளம்வயதினரின் எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகமாக முதியவர்கள் இருப்பார்கள்.

கைக்கட்சி ஆட்சியில் கிராமம் எதற்கு, அனைவரும் நகரத்திற்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தனர். அதாவது நகரத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. அங்கு சென்று மக்கள் வாழ்க்கையைத் தொடங்கினால், புகார்கள் ஏதும் இருக்காது என்பதுதான் அந்த கட்சியின் அரசாங்க நினைப்பு. ஆனால் பெருநகரங்களில் வேலைவாய்ப்பு கிடைப்பதை மறுக்க முடியாது. ஆனால், அதற்கு மறுபுறத்தில் காற்று மாசுபாடு பிரச்னைகள், அரசின் பொது சேவைகளை பெற முடியாத தடங்கல்கள், நெருக்கடியான வாழ்க்கை முறை  ஆகியவற்றை மக்கள் எதிர்கொண்டனர்.

இப்படி கூறுவதன் அர்த்தம், இந்தியா பொருளாதார வளர்ச்சி பெறவில்லை என்பதல்ல. அந்த வளர்ச்சி மக்களுக்கு பகிரப்படவில்லை. குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள் அபரிமிதமாக வளர்ந்தன. அவை உலகளவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தின. எனவே, கைக்கட்சியை அடுத்து வந்த அணுக்க முதலாளித்துவம் கொண்ட கட்சி, அதன் கூட்டணிக் கட்சிகள் மக்களை முழுமையாக மறந்துவிட்டனர்.  சர்வாதிகாரத்தை நோக்கி நாடு செல்லத் தொடங்கிவிட்டது.

1950ஆம் ஆண்டில் மெகாசிட்டி என்று கூறினால் உலகில் இரண்டு நகரங்களைக் கூறலாம். ஒன்று அமெரிக்காவிலுள்ள நியூயார்க், மற்றொன்று ஜப்பானில் உள்ள டோக்கியோ. இன்று மெகா நகரங்களின் பட்டியலில் 30 நகரங்கள் வந்துவிட்டன. 2030க்கும் இந்த எண்ணிக்கை 40க்கும் அதிகமாக செல்லும் வாய்ப்புள்ளது.

பளபளப்பான கட்டிடங்கள், சுற்றுலா, தொழில்வளர்ச்சி, மெட்ரோ ரயில், ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டங்கள் எல்லாம் சரிதான். ஆனால் இதன் மறுபக்கத்தில் திட்டமிடாத நகர அமைப்பு, திடக்கழிவுகள் தேக்கம், அரசின் வசதிகளை முறையாக வழங்கமுடியாதது, கட்டுப்படுத்த முடியாத மாசுபாட்டு அளவு என நிறைய விவகாரங்கள் அணிவகுக்கின்றன.

பெருநகரங்களை அழகாக்க ஏழை மக்களை பூர்விக நிலத்திலிருந்து அப்புறப்படுத்தி புறநகரில் சிறைபடுத்துவதோ, ஏழை மக்கள் வாழும் பகுதியை சுவரெழுப்பி மறைப்பதோ வளர்ச்சியாகாது. புற்றுநோய்க்கு ஆஸ்பிரின் மாத்திரை தீர்வாகாது என்பதை அரசு உணர்ந்து தனது திட்டமிடல்களை அமைத்துக்கொண்டால் மாசுபாடுகளை குறைத்து மக்களின் நலன் பேணமுடியும்.

1800ஆம் ஆண்டு, உலகளவில் மக்களின் வாழ்நாள் என்பது 35 வயதுக்கும் குறைவுதான். வறுமை, பஞ்சம், தொற்றுநோய்கள் என பல காரணங்கள் இதற்கு உண்டு. 2020 ஆம் ஆண்டு மக்களின் வாழ்நாள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. கல்வி, சுகாதாரம், மருந்து ஆகியவை பெருகியதுதான் இதற்கு காரணம். ஒருவரின் வாழ்நாள் அதிகரிப்பிற்கு தனிநபர் வருமானம் முக்கியமான காரணம். அதிக வாழ்நாள் வாழ்ந்தவர்கள் அனைவரும் அதிகளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிட்டுள்ளனர் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  இருப்பதிலேயே நவீன காலத்திலும் ஆப்பிரிக்காவில் மட்டுமே ஒருவரின் சராசரி ஆயுள் குறைவாக உள்ளது.

தோராயமாக ஜப்பானில் பிறக்கும் குழந்தை 84 வயது வரை வாழ்கிறது. ஒப்பீட்டளவில் நைஜீரியா நாட்டில் வாழ்பவரை விட 30 ஆண்டு அதிகம்.

இப்படி கூறுவதன் அர்த்தம், ஒருவர் திருமணம் செய்துகொள்ளாமல் அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளாமல் உலகை காப்பதல்ல. அவர் தனது செயல்பாட்டில் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும். கார்பன் வெளியீட்டை அவரளவில் குறைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். தனிநபர் வருமானம் அதிகம் இருந்தாலும், சூழல் கெட்டுவிட்டால் நிலம், நீர், காற்று என அனைத்தும் நச்சாகிவிட்டால் குடிமக்கள் யாரும் அதிக காலம் உயிருடன் வாழ முடியாது.

 

 

 

 

மூலநூல்

சிம்ப்ளி கிளைமேட் சேஞ்ச்

டிகே/பெங்குவின் ராண்டம் ஹவுஸ்

மூலத்தை தழுவிய தமிழாக்க கட்டுரை.

https://pixabay.com/illustrations/diversity-ratio-world-population-7409291/

கருத்துகள்