ஹிப்னாடிசத்தால் தற்கொலையைத் தூண்டும் தொழிலதிபரை தடுக்கும் போலீஸ் அதிகாரியும், ஹிப்னாடிச வல்லுநரும்! - டிசையர் கேட்சர்

 




டிசையர் கேட்சர் - சீன டிவி தொடர்

டிசையர் கேட்சர் - சீன டிவி தொடர்







டிசையர் கேட்சர்

சீன டிவி தொடர்

24 எபிசோடுகள்

ராகுட்டன் விக்கி


தலைப்பு நன்றாக இருக்கிறதென டிவி தொடரை தேர்ந்தெடுத்தால் அது உங்களை பாடாய்படுத்துமே அந்த ரகம்தான், டிசையர் கேட்சர் டிவி தொடர்.

சீனாவில் நிறையப் பேர் திடீரென ஜோம்பி போல நடந்துகொள்கிறார்கள். அதாவது முதல் காட்சியில் ஒருவர் ஏதோ போதையில் இருப்பது போல சாலையில் நடந்து வருகிறார். பறவை சிறகடிக்கும் ஒலி, இசை, மக்களின் பேச்சு இதெல்லாவற்றையும் போதையில் இருப்பவரின் பார்வையில் காட்டுகிறார்கள். திடீரென மணிக்கூண்டு திறந்து குயில் வெளியே வந்து கூவ, போதை மனிதர் வெறிபிடித்தது போல மக்கள் கூட்டத்தில் ஒருவரைப் பிடித்து கழுத்தை கடிக்கிறார்.

பலரையும் அடித்து உதைக்க முயல்கிறார். எனவே, காவலர் துப்பாக்கியால் அவரை சுட்டுக்கொல்கிறார். இதைப்பற்றி மனோவசிய ஆய்வாளர்கள் மாநாட்டில் பேசுகிறார்கள். அதில்தான் லூ ஃபெங்பிங் என்ற மனோவசிய ஆய்வாளர் அறிமுகமாகிறார். ஆம். அவர்தான் நாயகன். இன்னொருவர், மாநாட்டில் ஆர்வம் இல்லாமல் தூங்கி வழியும் காவல்துறை அதிகாரி லுவோ ஃபெய்.

ஹிப்னாடிச கொலைகள் நடந்துகொண்டே இருக்க, அதைக்கண்டுபிடிக்க லூ பெங்பிங் வருகிறார். அவரே தனது பேராசிரியரிடம் அந்த வேலையைக் கோரி பெறுகிறார். காவல்துறைக்கு பணியாற்றுவதன் மூலம் அவருக்கு நிறைவேறாத ஆசை ஒன்றை நிறைவேற்றிக்கொள்ள நினைக்கிறார்.

 2008ஆம் ஆண்டு அவரது அம்மா, பழைய கட்டிடம் ஒன்றில் படுகொலை செய்யப்படுகிறார். இளம் மாணவி ஒருவரை வல்லுறவு செய்ய முயல்பவனைத் தடுக்கும் முயற்சியில் அவர் இறந்துபோகிறார். கொலையின் ஆதாரம், கொலையாளி யார் என்பதை பத்தாண்டுகளாக ஹிப்னாடிச வல்லுநர் லூ பெங்பிங் தேடி வருகிறார்.

லூ ஃபெய், உளவியல் ஆலோசகர் லூ பெங்பிங்கைப் பற்றி ஆராயும்போது தான் இறந்துபோன வென் என்ற பெண்மணியின் மகன் எனத் தெரிய வருகிறது. எனவே, அவரை வேலைக்கு அழைக்கிறார். மிகவும் நட்பாக லூ பெங்பிங்குடன் நடந்துகொள்வதில்லை.  அவரும் அந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க தூக்கமின்றி நாயாய் உழைத்து வருகிறார். உண்மையில் குற்றவாளி கையருகே இருந்தும் லூ ஃபெய் அவரை பிடிக்காமல் விட்டுவிடுகிறார். அது ஏன் என்பதை தொடர் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

டிவி தொடர் நெடுக லூ பெங்பிங், மனோவசிய மாயாஜாலம் ஏதாவது செய்வார் என்று பார்த்தால், குச்சி மிட்டாயை சப்பிக்கொண்டே திரிகிறார். வெளியே சிரித்தாலும் உள்ளே பெரும் விரக்தியிலும் வேதனையிலும் இருக்கிறார். கால்ம் ஸ்டூடியோ என்ற பெயரில் மனோவசிய சிகிச்சை செய்து வரும் வல்லுநர். வசனமாக தன்னை மிகப்பெரிய ஆள் என்று லூ பெங்பிங் கூறிக்கொள்கிறாரே ஒழிய காட்சி ரீதியாக கதை ரீதியாக அவர் எதையும் செய்வதில்லை. லூ ஃபெய்யின் ஒரே நண்பனாக காரில் ஏறுகிறார். இறங்குகிறார். சண்டை போடுகிறார். ஜெல் தடவிய சீவாத முடியுடன் அலைகிறார். அம்புட்டுத்தேன்.

லூ ஃபெய், தனது நண்பன் லூ பெங்பிங்கை உள்ளுக்குள் நேசித்தாலும் கூட அதை வெளியில் காட்டாமல் இருக்கிறார். சற்று அகவயமான அழுத்தமான ஆளாக இருக்கிறார். ஆனால் அவர்தான் கேப்டன். அவரது காவல்துறை குழுவுக்குத் தலைவர். கதை ரீதியாக நிறைய விஷயங்களைக் கண்டுபிடித்து சாதிப்பது சார் மட்டும்தான். மனோவசிய வல்லுநர் அமைதியாக பக்கத்தில் நிற்கிறார். நண்பனை விபத்தில் இருந்து காப்பாற்றுகிறார். இறுதியாக, கொலையாளி என்ற களங்கத்திலிருந்து நண்பனைக் காப்பாற்றிவிட்டு சிறை செல்கிறார்.

 லூ ஃபெய்யின் தங்கை பாத்திரத்திற்கு ஏதேனும் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கலாம். முன்னாடி போய்விட்டு பின்னாடி வாங்க என சொல்லி நடிக்க வைத்திருக்கிறார்கள். உண்மையில் நடக்க வைத்திருக்கிறார்கள். அவர்தான் லூ பெங்பிங்கின் அம்மா இறந்தபோன சம்பவ இடத்தில் இருந்தவர். கதையில் லூ ஃபெய், லூ பெங்பிங், லூ ஃபெய்யின் தங்கை மூவருமே குற்றவுணர்ச்சியிலும், இயலாமையிலும் தவிப்பவர்களாக இருக்கிறார்கள். லூ பெங்பிங் மட்டுமே தனது நோக்கத்தை நேரடியாக சொல்கிறார். லூ ஃபெய்யின் தங்கை, வல்லுறவு செய்யப்படுவதிலிருந்து மீண்டாலும் அந்த நேரத்தில் சகோதரன் லூ பெய் வந்து காப்பாற்றவில்லை என வருந்துகிறாள். பிறகு சமாதானம் ஆனாலும் அந்த சம்பவத்தின் தாக்கம் அவளை விட்டு நீங்குவதில்லை. ஏறத்தாழ பிடிஎஸ்டி பிரச்னை போல.  

காவல்துறை, ஊடகங்கள் என அத்தனை பேர்களையும் இடது கையில் சமாளித்து மகத்தான வில்லனாக இருக்கிறார் மாஸ்டர் மனோவசிய வல்லுநர் பாக்சிங். இவர் ஸ்டார் எனும் தொழில் வணிக குழுமத்தின் தலைவர். மனோவசிய தத்துவத்தை புத்தகத்தில் கற்றுக்கொண்டு அதில் மாஸ்டராகி ஏராளமான மக்களை தன்னிச்சையாக தற்கொலை செய்துகொள்ள தூண்டுகிறார். ஏறத்தாழ அத்தனையிலும் வெற்றிதான் பெறுகிறார். இவரை சமாளிக்க முடியாமல் நாயகர்கள் இருவருமே தடுமாறுகிறார்கள். இந்த காட்சிகளை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

வில்லனுக்கு காட்சிகளை,  தர்க்கங்களை வலுவாக உருவாக்கிய எழுத்தாளரும். இயக்குநரும்ம் நாயகர்களை அநியாயத்திற்கு கைவிட்டு விட்டார்கள். பாதி காட்சிகளில் இப்ப நான் என்ன செய்ய கையைப் பிசைந்துகொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.

மனோவசியம் என்றால் என்ன, அதன் பயன் என்ன, எதற்கு பயன்படுத்தவேண்டும் என இறுதியாக நாயகன் பேசுகிறார். அவ்வளவுதான். அதில் பெரிதாக ஊக்கம் தரும் விஷயம் ஏதுமில்லை. ‘’வருத்தம் வலி இருந்தாலும் நாளை பற்றிய நம்பிக்கை முக்கியம். அதை ஹிப்னாடிசம் தந்தால் போதும்’’ என்கிறார். ஆனால், வில்லன் வாழ்க்கை முழுக்க வலியும் வேதனையும் இருக்கிறது. பின் எதற்கு வாழ்ந்துகொண்டு, இறந்துபோகலாமே  என நினைக்கிறார். அவரின் தத்துவத்தை பழிவாங்கும் வெறியுடைய ஆட்களை கண்டுபிடித்து உதவி அவர்கள் மூலமே ஏராளமான மனிதர்களை கொல்கிறார். இதனால் சீனாவில் மனோவசிய நிபுணர்கள்,ஆய்வாளர்கள் என்றாலே தவறான எண்ணம் உருவாகிறது. ஒட்டுமொத்த துறையையே மக்கள் வெறுக்க வைக்க வில்லன் நினைக்கிறார். இதற்கு என்ன காரணம் என்பதை அறிந்தால் தொடர் பார்ப்பதை அங்கேயே நிறுத்திவிடலாம். தொடரில் வில்லனின் கூட்டாளியாக நர்ஸ் ஒருவர் வருகிறார். உயரமாக அழகாக இருக்கிறார். லூஃபெய், லூ பெங்பிங் இருவருக்குமான நட்பு மட்டுமே தொடரில் உருப்படியாக காட்டியிருக்கிறார்கள். கதைப்படி பார்த்தாலும் லூ பெங்பிங், லூ ஃபெய்யின் தங்கையைக் காப்பாற்றிவிட்டு இறந்துபோயிருந்தால் சரியாக இருந்திருக்கும்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், அவனுக்கு அம்மா மட்டும்தான் வாழ்வதற்கான ஒரே காரணமாக இருப்பாள். மற்றபடி அவன் வாழ்க்கையில் நட்போ, அத்தை, மாமா ஒருவரைக் கடந்த நெருக்கமான உறவோ இருக்காது. சீவாத தலை, பழுப்பு நிறமான அழுக்கு கோட், வாயில் பதற்றம் சோகம் ஏற்படும்போது குச்சிமிட்டாய் என சுற்றி வருவான். ஒருவகையில் குற்றவாளியை பிடிப்பதற்கான வாய்ப்பு இருந்தும் பிடிக்காத  லூ பெய்யை, தனது உயிரைக் காப்பாற்றிய பெண்மணியை நினைத்துப்பார்க்காத, குறைந்தபட்சம் அவளின் மகனிடம் நட்பு பாராட்டாத லூ ஃபெய்யின் தங்கை ஆகியோருக்கு லூ பெங்மிங் கொடுக்கும் மகத்தான பரிசு அவர்களை மீண்டும் மீள முடியாத குற்றவுணர்ச்சியில் தள்ளுவதுதான்.

தொடர் நெடுக வில்லன்தான் வென்றுகொண்டே இருக்கிறார். இறுதிக்காட்சியில் கூட அவர் நினைத்ததை சாதித்துவிடுகிறார். ஒருவரை சிறையில் தள்ளிவிடுகிறார். இன்னொருவரை  அவர் பால் தீர்க்க முடியாத நன்றிக்கடனை, குற்றவுணர்ச்சியை ஏற்படுத்த வைக்கிறார்.  பழிவாங்குவதில் பெரிய வெற்றி ஏதுமில்லை. ஆனால், அது ஏற்படுத்துகிற மனநிறைவு, வேறெதுவும் தரமுடியாது.

வில்லன், அவரது காதலியின் பெற்றோர் இறந்துபோக காரணமாகிறார். அதற்கு அவரது எதிரிக்கூட்டத்தில் அவரால் காப்பாற்றப்பட்டவனே காரணம். இதன் விளைவாக, காதலி வில்லனை விட்டு பிரிய நினைக்கிறாள். அவனைப் பார்த்தால் இறந்துபோன பெற்றோர் ரத்தசகதியில் கிடப்பது நினைவுக்கு வருகிறது. ஆனால், வில்லனோ அவளை போகவிடாமல் தடுக்கிறான். இதனால் காதலி மனநிலை குறைபாடு ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்கிறாள். உளவியல் வல்லுநர் அவன் அவளை விட்டு பிரிந்தால் மட்டுமே அவளின் மனநிலை சீராகும், பிழைப்பாள் என கூறுகிறார். அதை வில்லன் ஏற்பதில்லை. ஆனால், அந்த வார்தையை சொன்ன காரணத்திற்காக உளவியல் வல்லுநரை பழிவாங்க நினைக்கிறான். இதுதான் தொடரின் முக்கியமான பின்னணிக் கதை.

 

தீராத பழிவாங்கும் வெறி

கோமாளிமேடை டீம்

 -----------------------

Native Title: 无眠之境Also Known As: Xie E Cui Mian Shi Zhi Bu Meng Ren , 邪惡催眠師之捕夢人 , 邪恶催眠师之捕梦人 , Wu Mian Zhi Jing , 無眠之境
Director: Wang Tao Tao
Genres: Thriller, Mystery, Psychological, Crime

கருத்துகள்