அல்சீமர் பற்றிய கல்வி அனைவருக்கும் தேவை - மருத்துவர் சஞ்தீப் ஜாவ்கர்

 



மை ஃபாதர்ஸ் பிரெய்ன் - அல்சீமர் நூல்

சந்தீப் ஜாவ்கர்






மருத்துவர் சந்தீப் ஜாவ்கர்

இதயவியல் மருத்துவர், அமெரிக்கா

அண்மையில் மருத்துவர் சந்தீப், தனது அப்பாவிற்கு ஏற்பட்ட அல்சீமர் நோய் பற்றிய தனது கருத்துகளை, தொகுத்து நூலாக எழுதியிருக்கிறார். நூலின் பெயர். மை ஃபாதர்ஸ் பிரெய்ன்  - லைஃப் இன் தி ஷாடோ ஆஃப் அல்சீமர்ஸ்.

தங்களுடைய  பெற்றோர், மனைவி ஆகியோருக்கு அல்சீமர் ஏற்பட்டிருப்பதை ஒருவர் முதல்முறையாக அடையாளம் காண்கிறார். அவர்களுக்கு ஏற்படும் நினைவிழப்பை எப்படி சமாளிப்பது?

குறைந்த கால அளவில் ஏற்படும் நினைவிழப்பு என்பது அல்சீமரின் முக்கிய அறிகுறி. இது நோயாளியை கடுமையான விரக்தியில் தள்ளும். விரக்தியும் கோபமுமாக மாறுவார்கள். மேலும், நோயாளிகளை கவனித்தும்கொள்ளும் குடும்ப உறுப்பினர் அல்லது பணியாளர்களுக்கு பொறுமை தேவை. அல்சீமர் வந்த நோயாளிகளுக்கு மூளையில் மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் செயல்பாடு குணங்கள் மாறும். எனவே, இதைப் புரிந்துகொள்ள அவர்களைக் கவனித்துக்கொள்பவர்களுக்கு நோய் பற்றிய கல்வி தேவை.

அல்சீமர் நோய் வந்தபிறகு நோயாளிகளுக்கு அவர்கள் புரிந்துகொண்டபடியே உலகம் இயங்குமாறு அனுமதிக்கலாம். கெடுதல் இல்லாத அவர்களின் கௌரவம் காக்கும் பொய்களைக் கூறலாம். இப்படி செய்வது அவர்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும்.

குறுக்கெழுத்து, சுடோகு ஆகியவை ஒருவரின் நினைவிழப்பைத் தள்ளிப்போட குறைக்க உதவுமா?

ஆம், இல்லை என இரண்டு பதில்களையும் இந்தக் கேள்விக்கு கூறலாம். சுடோகு, குறுக்கெழுத்து ஆகியவற்றை பயிற்சி செய்வது குறிப்பிட்ட வரம்பிற்குள் பயன்களை அளிப்பது உண்மை. முழுமையாக அல்ல.

 இவற்றை விட புதிய மொழியைக் கற்க முனைவது, ஏதேனும் ஒரு இசைக்கருவியை கற்க முயல்வது ஆகிய செயல்பாடுகளை செய்யலாம். இவை, மூளையில் ஏற்படும் பாதிப்புகளை சற்று கட்டுப்படுத்தும். முழுக்க நிறுத்தாது. நோயாளிகளின் நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் இந்த விஷயத்தில் உதவ முடியும். மூளையில் நிறைய செல்கள் உருவாகி இருந்தால் , அவை நோயால் முழுக்க அழிய அதிக காலமாகும்.

உறவினர்கள் குடும்பமாக இருந்து பாதிக்கப்பட்ட உறுப்பினரை பார்த்துக்கொள்வது, தனியாக கண்காணிப்பாளர் ஒருவரை நியமித்து பார்த்துக்கொள்வது என இரண்டுக்குமான வேறுபாடுகளை நூலில் விவரித்திருக்கிறீர்கள் அல்லவா?

இந்தியாவில் ஒரே குடும்பமாக இருப்பவர்கள், நோயாளியை யாரேனும் ஒருவர் பார்த்துக்கொள்வார்கள். அமெரிக்காவில் தனி கண்காணிப்பாளரை அமர்த்திக் கவனிக்கிறார்கள், ஐரோப்பா இந்த விஷயத்தில் மிகவும் நவீனமாக உள்ளது. அங்கு டிமென்ஷியா கிராமங்களே உள்ளன. நெதர்லாந்தில் உள்ள ஹோக்வெய்க் என்ற இடத்தில் உள்ள டிமென்ஷியா கிராமங்களை முன் மாதிரியாக கொண்டு இங்கிலாந்தில் நோயாளிகளுக்கான இடங்கள் அமைக்கப்பட்டன. இந்த வசதிகள் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளை விட சிறப்பானவை. அல்சீமர், டிமென்ஷியா நோயாளிகளும் தங்கள் விருப்பம் போல சுதந்திரமாக இயங்கலாம்.  இந்தியாவில் தற்போது பத்து மில்லியன் அல்சீமர் நோயாளிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும். அப்போது நிறைய வசதிகளை உருவாக்க முடியும்.

அல்சீமர் தொடர்பான மருந்து ஆராய்ச்சிகள் ஏதேனும் நடக்கிறதா?

ஆச்சரியகரமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், சோதனை , குணமாக்குவது என்ற நிலைக்கு இன்னும் வரவில்லை. நோயாளி முழுக்க கண்காணிப்பாளரை சார்ந்து இருக்கும் நிலைக்கு வருவதை தாமதப்படுத்தும் அளவுக்கு மருந்துகள், சிகிச்சை தேவை.

மூளையில் தடுப்பு போல திசுக்கள் வளருவது அல்சீமர் நோயின் அறிகுறி. இதை மருந்துகள் மூலம் அகற்றினாலே பெருமளவு பாதிப்பு குறையும். கடந்த ஆண்டுகளில் அமெரிக்காவின் எஃப்டிஏ அமைப்பு இரண்டு அல்சீமர் தெரபிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. இந்த மருத்துவ சிகிச்சை முறைகளும் முழுமையான தீர்வைக் கொடுப்பவை அல்ல. எனவே, இன்னும் சிகிச்சை என்பது தொடக்கநிலையில்தான் உள்ளது.

உங்கள் தந்தைக்கு வயதாவதால் ஏற்படும் அல்சீமர் பிரச்னை பற்றி நூலில் எழுதியிருந்தீர்கள். அதற்கு தினசரி சோதனை செய்வது சரியான அணுகுமுறையாக அமையுமா?

பிஇடி, ரத்தசோதனை ஆகியவற்றை எடுத்தால் மூளையில் உள்ள பாதிப்பை அறியலாம். இதை விட எளிதான முறை, குடும்ப உறுப்பினர்களுக்கு நினைவிழப்பு குறைந்த கால அளவில் ஏற்பட்டால் உடனே கவனிக்கவேண்டும். அறிகுறியை முன்னமே அறிந்து அதை தடுக்கும் சிகிச்சை செய்தால் நோயை சற்றுத் தள்ளிப்போடலாம். நினைவிழப்பு என்பது வயதாகும்போது ஏற்படுகிற ஒன்றுதான். ஆனால் அது ஒருவருக்கு தொடர்ச்சியாக நடந்தால் அல்சீமரரா என சோதனை செய்துகொள்ளலாம். உறவினர்கள், நண்பர்கள் இதை முன்னமே கண்டறிந்தால் நோயாளி விரக்தியும், கோபமும் கொள்வதைத் தடுக்கலாம்.

 

 

ஆர் எட்வன் சுதீர்

டைம்ஸ் ஆஃப் இந்தியா

கருத்துகள்