இந்திய வெளியுறவுக் கொள்கையின் தவிர்க்க முடியாத ஏழு அம்சங்கள்!

 










இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஏழு தூண்கள்

வெளிநாட்டுப் பயணம்

இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகள் அப்ரைசல் பெறுவதற்கான முக்கியமான தகுதி, அவர்களுடைய முதலாளி அதாவது, தலைவர் வெளிநாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறாரா இல்லையா என்பதுதான். அதிகமுறை வெளிநாடுகளுக்கு செல்ல உதவியிருந்தால் அவருக்கு நிச்சயமாக பதவி உயர்வு உண்டு. அதிக நாட்கள் தலைவர் வெளிநாட்டு மண்ணில் இருந்தால், வெளியுறவு அமைச்சகத்தில் அத்றகு உதவிய அதிகாரிகளுக்கு விரைவான வளர்ச்சி சாத்தியம்.

கட்டி அணைப்பேன் உன்னையே…

நாட்டின் தலைவர், உலகின் வலிமையான தலைவர்களைக் கட்டிப்பிடிக்கும்போது அதை புகைப்படமாக, வீடியோ வழியாக பார்க்கும் அனைத்து இந்தியர்களின் நெஞ்சமும் பெருமையால் விம்மும். ஆனால் அப்படி உணர்ச்சி பொங்காதபோது நீங்கள் உடனே அருகிலுள்ள தேசிய புலனாய்வு முகமைக்கு சென்று உங்கள் இதயத்தில் தேசதுரோக கருத்துகள் உள்ளதாக என சோதித்துக்கொள்வது நல்லது.

இந்திய வெளியுறவுக் கொள்கையில் தலைவர்களைக் கட்டிப் பிடிப்பது முக்கியமான அம்சம். இதை நீண்ட காலமாக முக்கியமான கொள்கையாக கடைபிடித்து வருகிறார்கள். இதன் மூலம் ஐ.நா பாதுகாப்பு கௌன்சிலில் நிரந்தர உறுப்பினராவதே லட்சியம். தொன்மை இந்தியாவின் ராஜதந்திரியான சாணக்கியர் ‘’ காற்று வீசும் திசையில் பூக்களின் நறுமணம் பரவும். ஆனால், உங்கள் உடலில் பூசியுள்ள டியோடிரண்டின் நறுமணம், நீங்கள் கட்டிப்பிடிக்கும் மனிதர்கள் வழியாகவே பரவும்’’ என அன்றே கணித்துக் கூறியிருக்கிறார்.

தேச முன்னேற்ற ஒப்பந்தம்

எந்த ஒரு வெளிநாட்டு பயணமும் பல கோடி ரூபாய் மதிப்பு கொண்ட வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாமல் நிறைவடையாது. இந்தியாவை முன்னேற்ற இரவும் பகலுமாக பாடுபடுவது தேசப்பற்று கொண்ட பெருநிறுவன முதலாளிகள்தான். இவர்களின் உழைப்பால்தான் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளிநாடுகள், தங்களது தேவைக்கான மின்சாரத்திற்காக, நிலக்கரிக்காக, துறைமுக போக்குவரத்தை நடத்த இந்திய நிறுவனங்களை நம்பியிருப்பது, இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருப்பதற்கான எடுத்துக்காட்டுதானே?

 

எதிரி எப்போதும் தேவை!

வெளிநாடுகளுக்குச் சென்று உலக அமைதி பற்றி உரையாற்றுவது சிறப்பானது. ஆனால் அதேசமயம் உள்நாட்டு பார்வையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அருகில் உள்ள நாடான பாகிஸ்தானை எதிரியாக காட்டுவது முக்கியம். பாரம்பரியமாகவே பாகிஸ்தானை எதிரியாக காட்டி, நமது மனதிலுள்ள பகையை வளர்ப்பது வெளியுறவு கொள்கையின் மாறாத முக்கியமான அம்சம்.

ஒரே குடும்பம்

புதிய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் வாசுதேவ குடும்பகம் என்ற கருத்து முக்கியமானது. தலைவரின் பக்தர்கள் வெளிநாடுகளில் ஒன்றாக திரண்டு வந்து கரகோஷங்களை எழுப்பி, ‘’நாம் அனைவரும் ஒரே குடும்பம்’’ என உணர்வதுதான் கருத்து சொல்லும் உண்மை.

ஒரு பெரிய விளையாட்டு மைதானத்தில் தலைவர் பெருமையுடன் பேசும்போது, அவரைச் சுற்றி ஆரவாரம் செய்தபடி என்ஆர்ஐ இந்தியர்கள் இருப்பார்கள். ஏறத்தாழ ஒரு லட்சம் பேர். இவர்கள் அனைவருமே பிறந்த தாய் நாடான இந்தியாவை நிரந்தரமாக கைவிட்டு விட்டு வந்து வெளிநாட்டில் குடியேறி வாழ்வதற்கான க்ரீன் கார்டு வாங்கிய பெருமை மிக்க குடிமகன்கள். தாய் நாட்டுத் தலைவருடனான ஒரே குடும்பம் நிகழ்ச்சியில் தங்களது தாய்நாடு பற்றிய பெருமையால் விம்மி கண்ணீர் சிந்துவது காண்பதற்கரிய அற்புத காட்சி.

குவாட் தசைகள்

குவாட் என்றால் பலருக்கும் இது என்ன சொல், பொருள் என்ன என்று கூட தெரியாமல் இருப்பார்கள். அது இயல்பானதுதான். கணுக்காலில் உள்ள முன்தசைகளுக்கு குவாட்ரிசெப்ஸ் என்று பெயர். இந்த தசைகள் சரியாக இயங்காதபோது உங்களால் நடக்க முடியாது. குனிய முடியாது. குறிப்பாக உங்கள் பக்கத்து வீட்டுக்காரர், உங்களுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தால் உங்களால் தட்டிக்கேட்க முடியாது. இந்திய – சீன உறவில் மேற்சொன்ன விஷயங்கள் மிக அடிப்படையானவை.

ஜி20

கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக, இந்தியா பெறாத பெருமையை ஜி20 மாநாட்டை நடத்துவதன் மூலம் பெற்றிருக்கிறது. இந்தியாவை இந்த மாநாடு நடத்தும் பொறுப்புக்காக தேர்ந்தெடுத்த உலக நாட்டு தலைவர்களுக்கு நன்றி கூறவேண்டும். இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் இந்தியா எளிமையான மதிப்பிற்குரிய நாடுகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. ஜி 20 மாநாட்டை இந்திய அரசு நடத்துவதன் மூலம் பல்லாண்டுகளாக இருந்து வந்த வேலையில்லா திண்டாட்டம், வறுமை, மதவெறுப்பு, சூழல் சார்ந்த சீர்கேடுகள், முட்டாள்தனம் அதிகரிப்பு, பாகுபாடு பெரிதாவது ஆகிய பிரச்னைகளை ஒன்றாகச் சேர்த்து தீர்த்துக் கட்டிவிடலாம்.

 

ஜி சம்பத்

இந்து ஆங்கிலம் 

படம் - பின்டிரெஸ்ட்

கருத்துகள்