பேருயிரின் அழுகை: நூல்வெளி2 - ப்ராட்லி ஜேம்ஸ்

யானைகள் ஆதியில் இருந்தன
கோவை சதாசிவம்
தடாகம் வெளியீடு
விலை ரூ.40








தலைப்பு உணர்த்துவதுதான். பத்திரிகைச் செய்திகளில் அட்டகாசம்  அட்டூழியம் என்று திட்டமிட்டு எழுதி எழுதி எப்படி ஒரு பேருயிரை மனிதர்களுக்கு எதிராக நிறுத்தி பொதுக்கருத்து ஒன்றினை உருவாக்கி அதனை எப்படி மெல்ல அழித்தார்கள் என்பதை விளக்குகின்ற நூல் இது. காடு இதழில் வெளிவந்த கட்டுரையின் முழுவடிவம் இது.

இதுவேறுபடுவது எங்கென்றால் சங்க காலப் பாடல்களிலிருந்து யானைகள் குறித்த தரவுகளை மேற்கோள் காட்டி விளக்கி இன்றைய காலத்தில் நிலைமை எப்படியுள்ளது என்று விளக்குகின்ற தன்மையில்தான். 

அதோடு யானை என்றால் பொதுவாக அதன் பழக்கவழக்கங்கள் எப்படி என்று அறியாது அறியாமையால் கூறிவரும் சில பொதுவான வழக்குகளான யானைக்கும் அடி சறுக்கும், தன் தலையில் தானே மண் வாரி போட்டுக்கொண்டது என்பது போலான வார்த்தைகளுக்கு அறிவியல் பூர்வமான முறையில் விளக்கமளித்துள்ளார் ஆசிரியர் சதாசிவம். 

சங்க காலத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனுக்கு பரணி பாடுவதிலிருந்து அலங்காரப் பொருட்களுக்காக அதனை சுட்டுக்கொல்வது வரையிலான பல குற்றங்களை பட்டிலிடும்போது உண்மையிலே மனம் திடுக்கிட்டுத்தான் போகிறது. 

இயற்கையோடு இணைந்து வாழ்கின்ற சக உயிர்தான் யானையும் என்ற தன்மையை நாம் பெறுவதற்கு இது போன்ற சூழலியல் நூல்கள் நிச்சயம் துணைபுரியும். குறைந்தபட்சம் நமது முந்தைய தவறுகளை இனிமேலும் நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்வதற்கேனும் உதவக்கூடும்.