மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு 3 - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்







லெனினின் சிலையை சுமந்து செல்லும் ஊர்வலமானது உலகில் மதம் குறித்த பெரும் விஷயங்களைக் குறிக்கிறது. கம்யூனிச மதம் வீழ்ந்தது ஒருபுறமிருக்க, விவசாய குடியானவர்கள் லெனின் சிலையுடன் கம்பீரமாக ஆற்றைத்தாண்டி வருகிறார்கள் என்பது  ஒருபுறம் நிகழ்கிறது. விரக்தியுற்ற விவசாயிகள்  மதம் தேவை என்பதை அறிந்தும் ஆனால் அது எப்படி இருக்கவேண்டும் என்று அறியாது இருக்கிறார்களா?

      மதம் குறித்த விஷயங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. வளம் குன்றிய விவசாயிகளுக்கு எரிச் ப்ரோம் கூறுவது போல மாய உதவி என்று மதம் குறித்து கூறலாம். ஒரு சிறு கப்பலில் பெரிய சிலையை துண்டுகளாக்கி செல்லும் காட்சியை நானே கண்டும் இருக்கிறேன். சிறு படகு ஒன்று கரும்கடலில் ரோமானிய துறைமுகமான கான்ஸ்டன்னாவினை கடந்து செல்கிறது. பேரளவிலான அழகற்ற லெனினின் உடைத்து போடப்பட்டிருக்கிற சிலைத்துண்டுகளை பார்க்கும் ஒருவன் திகிலடைந்து போகிறான். அவனைப்பார்த்து தானாக தன் நெஞ்சருகே படகோட்டும் பெண் சிலுவைக்குறி போட்டுக்கொள்கிறாள். இது போன்ற நிகழ்வுகளில் சிலுவைக்குறி போட்டுக்கொள்வது இயல்பானதாகவே உள்ளது.

உங்களது அண்மைய படங்களில் நிகழ்காலத்திலிருந்து கடந்த காலம் என ஒரு காட்சியிலேயே தொடர்ச்சியாக மாறி விடுகிறது. நேரான திரைக்கதை வடிவத்தை நீங்கள் இதற்கு தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். நாயகனின் இறந்த காலம், மற்றவர்களின் நினைவுகள் குறித்து அவன் எண்ணுவது என்பனவற்றுக்கு பின்னோக்கிய காட்சிகளை பயன்படுத்துகிறீர்கள். முறையை மாற்றி பயன்படுத்தும் அணுகுமுறை என்று இதனை எடுத்துக்கொள்ளலாமா?

      இந்நூற்றாண்டின் வரலாற்றை இப்படம் பேசுகிறது. எனவே பின்னோக்கிய காட்சிகள் இப்படத்திற்கு தேவையாக உள்ளது. என்னுடைய அனுபவத்தை பொறுத்தவரையில் இறந்த காலம் என்பது நிகழ்காலத்தின் முக்கியமான உள்பகுதி என்று நினைக்கிறேன். நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் நிகழ்காலம், இறந்தகாலம், உண்மை , கனவு என ஒன்றுடன் ஒன்று பிணைந்தே உள்ளது.

இறுதியில் உங்கள் நாயகன் மனாகி படங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறான். ஆனால் அப்படத்தினை பார்வையாளர்கள் காண முடிவதில்லையே ஏன்?

      அதனை பல்வேறு வழிகளில் பொருளில் கோணங்களில் புரிந்துகொள்ளலாம். படத்தைப் பார்ப்பது போல எடுத்திருக்க முடியும். ஆனால் அப்படி காட்சியை எடுத்தால் அது இறுகிய தட்டையான காட்சியாகிவிடும் என்று அதனை தவிர்த்துவிட்டோம். அவனுடைய தேடுதல் என்பது தனக்குள் நிகழ்வது எனவேதான் படமானது திரையிடப்பட்டு காட்டப்படுகிறது. மேலும் உண்மையில் அப்போது வாழும் மனாகி சகோதரர்களை பயன்படுத்தி அவர்களது படங்களை திரையிடாது வேறேதும் வழிகளை பயன்படுத்தினால் அது அவர்களுக்கு செய்யும் மோசடியாகவே அமையும். அடிப்படையாக படத்தினை மேம்படுத்துவது என்பது ‘ஏ என்பவர் தன் இலக்கு நோக்கி சென்றடைவது அவன் தேடுதலின் இறுதியாக இருக்கும். படத்தில் என்ன உள்ளது என்பது தேவையில்லாத ஒன்று. அதிலுள்ள காட்சிகள் எப்போதும் காட்டப்படப்போவதில்லை. அப்பயணம்தான் அவர்களை கண்டறிய அவர்களுக்கு உதவுகிறது என்பதுதான் முக்கியமான விஷயம்.

கெய்டெல் உடன் வேலை செய்தது எப்படி இருந்தது? வேறுபட்ட முறையிலான நடிப்பு,மாறுபட்ட மொழிகளை பேசுவது என இதில் அவருக்கும் உங்களுக்கும் முரண்பாடுகள் ஏதேனும் ஏற்பட்டதா?

நிச்சயமாக. ஹார்வி கெய்டெல் நடிகர்கள் அரங்கில் பயிற்சி பெற்றுவந்தவர் என்பதால் அவர் தயாராவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வார். நான் ஒரு குழந்தை போல, கதை கூறுங்கள், நான் என்ன செய்ய வேண்டுமோ நான் அதை செய்கிறேன் என்று மாஸ்ட்ரோய்யன்னி கூறுவார். அவர் நடிக்கும் முறை பற்றி மிகக்குறைந்த அளவு மட்டுமே கவனம் கொள்வார். கெய்டெல் தனக்காக நடிப்பு முறையைக் கொண்டவர். சினிமாதீக் இடிக்கப்படும் இறுதிக் காட்சியினை அக்காட்சியினை தொடர்ந்து படமாக்க முடியாமல் தாமதம்  செய்துகொண்டே இருந்தார். படம் அக்காட்சியோடு முடிவதை அவரால் ஏற்றுக்கொள்வது மிக கடினமானதாக இருந்திருக்கிறது. ஆனால் அக்காட்சி தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் எடுத்து முடித்துவிட்டதால், அக்காட்சியை நாங்கள் எடுத்தே ஆகவேண்டியிருந்தது. அக்காட்சிக்கான விளக்குகளை அமைத்துக் கொண்டிருந்தபோது, ஹார்வி அருகில் வந்து ‘‘தியோ ஒரு நிமிடம் கொடு, சினத்ரா பாடலை எனக்கு கேட்கவேண்டும் போல் உள்ளது ’’ என்று  கூறினார். அப்போது நாங்கள் ஏதேன்ஸ் அருகில் உள்ள சிறுநகரம் ஒன்றில் இருந்தோம். அவர் கேட்ட பாடலை பெறுவதற்கான எந்த வழியும் அங்கே இல்லை. ஒரு கார் ஒன்றை அனுப்பி அப்பாடல் ரெக்கார்டை வாங்கி வரச்செய்தோம். அதனை அவர் ஒலிக்கவிட்டு ஒரு மூலையில் நின்றுகொண்டார்.  பிறகு திடீரென வித்தியாசமான ஒலிகளைக் கேட்டேன். என்னவென்று பார்த்தால் அவர் தன் அம்மாவினை நினைத்துக்கொண்டு குழந்தை போல அழுதுகொண்டிருந்தார். அப்பாடல் அவருக்கு தன் தாயை நினைவுபடுத்திவிட்டது. பின்னர் அவர் படப்பிடிப்புக்கு தயாராகும் வரை நாங்கள் காத்திருந்தோம். காட்சியை எடுக்கலாம் என்று முடிவிற்கு வரும்போது அவர் முன்னதாகவே நிறைய அழுது விட்டதால் அவர் மனம் முழுக்க வெறுமையானதாக மாறிவிட்டிருந்தது. நான் இந்த சிக்கலை கண்டறிந்த பின் அவரிடம் ‘‘ முதலில் உங்களது முறையைப் பயன்படுத்தினோம். இப்போது என்னுடையதை சோதித்துப் பார்ப்போம் ’’ என்று கூறினேன். படப்பிடிப்பில் இருந்த அனைவரையும் விதிவிலக்கின்றி வெளியேற்றினேன்.  ஹார்வி தன் குழுவினரான உதவியாளர், உடற்பயிற்சியாளர், வசன பயிற்சியாளர் என முழு குழுவே அவருடனிருந்தது. ‘அரங்கை விட்டு ஹார்வியும் வெளியேற வேண்டுமா? என அவரது உதவியாளர் கேட்க ‘ஆமாம் என்று கூறினேன். ஹார்வி ஒரு வார்த்தை கூட பேசாமல் வெளியேறினார். நான் மட்டும் அங்கே தனியாக இருந்தேன். படத்தின் இசையை முழு ஒலி அளவில் வைத்தேன். வெளியே உள்ளவர்கள் அந்த இசையைக் கவனித்துக்கொண்டு நின்றிருந்தார்கள். இசை ஒலித்து முடிந்ததும் அனைவரையும் திரும்ப அழைத்தேன். கெய்டெல் ஆவேசமான நிலையில் இருந்தார். ‘‘ நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? கடவுள் என்றா? யாருக்கும் நீ மரியாதை தருவதில்லை’’ என்று பேசிக்கொண்டே சென்றார். என்னை அடிப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் என்னருகில் வந்து பேசிக்கொண்டே இருந்தார். நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மெல்ல அவர் பேசி ஓய்ந்தார். ‘இப்போது நீங்கள் தயாரா?’’ என்று கேட்டேன். தன்னை மெல்ல மீட்டெடுத்துக்கொண்ட அவரைக் கொண்டு அக்காட்சியை எடுத்து முடித்தோம். காட்சி முடிந்துவிட்டது. எர்லெண்ட் ஜோசப்ஸன் தனது காட்சிக்காக தயாராக இருந்தார். என்ன நடந்தது என்பதை மோசமான ஒரு நேரத்தில் அவரிடம் நான் கூறிவிட்டேன். கூறும்போதே, அவர் சிரித்தது எனக்கு தர்ம சங்கடமாகிவிட்டது. என்னருகில் இருந்த கெய்டெலை அவர் கவனித்துவிட்டார். எனக்கோ இரண்டாவது முறை எரிமலை லாவாவை கக்குமோ என்று பீதி கிளம்பியது. ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. இறுதியில் ‘‘நீ கெட்டிக்காரன்தான்’’ என்று கெய்டெல் கூறினார்.