பறவைகளின் காதலர்கள்

பறவைகளின் காதலர்கள்

                                                                சம்ஹதி மொஹபத்ரா

                                                                தமிழில்: வின்சென்ட் காபோ

                ராஜாளி, வல்லூறு, கழுகுகள் மற்றும் பல்வேறு  வகையான ஆந்தைகளின் காயங்களை, உடல்நலிவை, அதற்கென அமைக்கப்பட்ட கூண்டுகளில் சென்று பார்வையிட்டு தீர்க்க முயலுவதிலிருந்து  நதீம் ஷெஸாத், முகமது சாத் ஆகியோரின் நாட்கள் தொடங்குகிறது.

                டெல்லியிலுள்ள வஃஜீராபாத்திலுள்ள வீட்டினைப் பறவைகளுக்கான அகதிகள் முகாம் போலாக்கி, அண்ணன், தம்பி இருவரும் காயம்பட்ட பறவைகளுக்கு சிகிச்சையளித்து காப்பாற்றி வருவதை கடந்த 11 ஆண்டுகளாக செய்துவருகிறார்கள்.

                                தங்களின் வீட்டு மேற்பகுதியில் பறவைகளை பாதுகாப்பதற்கான கூண்டுகள் மற்றும் மருத்துவமனையைப் பயன்படுத்தி பருந்து, வல்லூறுகள், பல்வேறு வகையான ஆந்தைகள், எகிப்திய பிணந்தின்னி கழுகுகள் ஆகியவற்றிற்கான மருத்துவ உதவியை வழங்கி வருகிறார்கள். காயம்பட்ட பறவைகளைக் காணும் வனவாழ்வு ஆர்வலர்கள், காவல்துறை, பறவைகளுக்கான மருத்துவமனை ஆகியவற்றுக்கு கொண்டு செல்ல இவ்விரு சகோதரர்களும் உதவுகிறார்கள். பறவைகளுக்கான அறுவை சிகிச்சைகள், எலும்புகளை சரி செய்து பொருத்துவது உள்ளிட்டவற்றை தொடர்ந்து மருத்துவர்களின் செயல்பாடுகளை கவனிப்பதன் மூலம் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

                36 வயதாகும் நதீம் 2003 ஆம் ஆண்டு காயம்பட்ட கழுகு ஒன்றினை மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சையளித்து, ஜெயின்கோவிலில் உள்ள பறவைகளுக்கான மருத்துவமனையில் சேர்க்க முயற்சித்தபோது, மாமிசம் உண்ணும் பறவைகளுக்கு இடமில்லை என்று கூறி சிகிச்சை செய்ய மறுத்துவிட்டார்கள்.

                ‘’ சிறுவர்களான நாங்களிருவரும் பறவைகள் எங்கள் கண்முன் இறப்பதை பார்த்து என்ன செய்வதென தெரியாமல் நின்றுகொண்டிருந்தோம். பொதுவாக காயம்படுகிற புறா, சிட்டுக்குருவி ஆகியவை நாய்களால் உண்ணப்பட்டு வந்தன. இதில் கழுகுகள் போன்றவை தம்மை காப்பாற்ற யாரும் இல்லாத போதும், உண்ணுவதற்கான இரை கிடைக்காதும் பட்டினியால் இறக்க நேரிடுகிறது. அதற்கு காயங்களும் முக்கிய காரணமாகிறது. வனக்காவலராக நதீம்  சில ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார்.

                டெல்லியில் நடைபெறும் பறவைகளின் இறப்பிற்கு தீவிரமான அளவு அதிகரித்து வரும் பட்டங்களை பறக்கவிடும் செயல்பாடுகள்தான் காரணம் என்று சுட்டிக்காட்டுகிறார் நதீம். கண்ணாடி மற்றும் உலோகத்துகள்களினால் தோய்த்து கூராக மாற்றப்பட்டு பட்டங்கள் பறக்க இதனைப் பயன்படுத்தும் போது, இந்தக்கயிறு பறவைகளின் உடலில் சிக்கி, அவற்றை ரத்தம் கசிய குரூர மரணத்திற்கு ஆளாக்குகிறது என்று கூறுகிறார் நதீம்.

                சகோதரர்கள் பறவைகளின் தொற்று நோய்கள், விபத்துகளினால் ஏற்படும் காயங்களினால் பாதிக்கப்படுகின்ற அவற்றுக்கு எப்படி சிகிச்சையளிக்கிறார்கள் என்ற போது, அப்பறவைகளை நாங்கள் காயப்படுத்தப்போவதில்லை, ஆபத்தானவர்களில்லை என்று மெல்ல புரிந்துகொண்டன என்று கூறுகிறார் ஸாத். அண்மையில் பறவைகள் மரத்தில் பாதுகாப்பாக கூடு கட்டி வாழ 60 பஞ்சுகள் பொதிந்த கூடுகளை அமைத்து  தந்திருக்கிறார்கள்.

                பெண் பறவைகள் முட்டைகள் இட சிரமப்படும்போது, அவற்றின் முட்டைகள் வெளிவருவது சிரமமானதாகிவிடுகிறது. ‘’ சில பிரச்சனைகளால் பறவைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பறவைகளின் கர்ப்ப பையிலிருந்து எண்ணெய் மூலம் முட்டைகளை மெதுவாக தடவி வெளியே எடுப்போம்’’ என்கிறார் நதீம்.

                33 வயதாகும் ஸாத்  பறவைகளுக்கான அறுவை சிகிச்சைகளை செய்கிறார். எலும்புகளை பறவைகளுக்கு பொருத்துவது குறித்து மனிதர்களுக்கான எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணரிடம் கற்றுக்கொண்டிருக்கிறார் ஸாத். மேலும் தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள பல புத்தகங்களை இணையத்தில் தேடிப்படிப்பதோடு, அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களின் ஆலோசனைகளையும், சிக்கலான தருணங்களில் நாடுகிறார்கள்.

                தோராயமாக 111 பறவைகள் இவர்களின் மையத்திற்கு ஒரு மாதத்திற்கு வந்தடைகின்றன. சில சமயங்களின்போது வரும் பறவைகளின் காயம் கடுமையாக இருக்கும்போது, அவை காப்பாற்றமுடியாமல் இறந்துவிடும் அல்லது அதனை வேதனை இன்றி மரணிக்க வைக்க மருத்துவரை நாடுகிறோம் என்கிறார் நதீம்.

                அறுவை சிகிச்சையின் பின் பறவை இழந்த தன் சக்தியை திரும்பப் பெற ஒரு மாதமாகிறது. வயதான சக்தி இழந்த பறவைகள் மையத்தில் தங்கிவிட, காயம் குணமான பறவைகள் மையத்தின் கூண்டுத்திறப்பின் வழியே பறந்து சென்றுவிடுகின்றன. ஆழ்ந்த சிந்தனைகளின் விளைவாக அவை தன்னியல்பாக பறந்துசெல்ல அத்திறப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

                ‘’இளம் பறவைகள் ஓய்வெடுக்கவும், இரை தேடிப் பயணிக்கும் உடல்வலிமை பெறும்வரை தங்கியிருக்கவும் ஒரு வாசலாக உள்ளது திறப்பு’’ என்று கூறும் இச்சகோதரர்கள் பறவைகளுக்கான ஹெல்ப்லைன் ஒன்றினை 2010 ஆண்டு உருவாக்கியிருக்கிறார்கள்.

                பறவைகளினோடான உறவினால் சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறியிருக்கும் இவர்கள் பறவைகளுக்கு நன்றி கூறுகிற அதேசமயம்அவைகளோடு உணர்வு பூர்வமான எவ்வித உறவுகளையும் வைத்துக்கொள்வது, மற்ற மனிதர்களையும் தங்களையும் போல நம்பி ஆபத்தில் சிக்கிக்கொள்ள ஏதுவாகும் என்று கவனமாக இருக்கிறார்கள்.

                பீப்பிள்ஸ் ஃபார் அனிமல்ஸ் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பணிபுரிவதால் லிம்கா புத்தகத்தில்(2014) இடம்பிடித்திருக்கிறார்கள். விலங்குகள் கருத்தரங்கம் ஒன்றில் சிறப்பு விருது ஒன்றினையும், மற்றும் சிட்டுக்குருவி விருதினையும் பெற்றிருக்கிறார்கள்.

                பறவைகளுக்கான உணவு செலவு 30,000 ரூபாய்க்கும் மேல் வருவதால் இது அவர்களின் முயற்சிகளுக்கு கடும் சவாலானதாக அமைந்துள்ளது. இது பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்படாமல் எதிர்காலத்தில் பறவைகளுக்கான மருத்துவமனை ஒன்றினை அமைக்கும் திட்டமும் இவர்களின் மனதில் உள்ளது.

                ‘’இதற்கான தேவை என்னவென்றால் காயம்பட்ட பறவைகள் இறந்துவிடுகின்றன. பெரும்பாலும் தங்கள் வீட்டிற்கு தீமையைக் கொண்டுவந்துவிடும் என்று சாபமிட்டு பறவைகளின் மீது கற்களை எறிகிறார்கள்’’ என்கிறார் நதீம். காயம்பட்ட பறவைகளைக் கண்டால் பாதுகாப்பு மையத்திற்கு அழைக்க உதவும் எண் - 0981029698.  


                                                                Thanks: The new indian express

கருத்துகள்