நூல் வெளி



29
வெற்றிபெற காந்திய வழிகள்
ஆலன் ஆக்ஸல்ராட்
தமிழில்: மரு.வெ. ஜீவானந்தம்
தமிழினி
                                                               ரோசா
      காந்திய பல்வேறு கட்டங்களில் நாடு குறித்து பேசிய பல விஷயங்கள் எப்படி ஒரு நிறுவனத்தை நிர்வாகம் செய்ய பயன்படுகின்றன என்பதை நூறு காந்தியின் வார்த்தைகள் மூலம் கூறுகிற நூல் இது.

     ஏன் இந்த புத்தகம் முக்கியம் பெறுகிறது என்றால், காந்தியின் கொள்கைகள் மற்றும் பேச்சுக்களவு தவறாக புரிந்துகொள்ளப்பட்டவையும், கைகழுவப்பட்டவையும் வேறெந்த தலைவருக்கும் நிகழ்ந்திருக்குமா என்று தெரியவில்லை.

     காந்தி இந்நூலில் கூறும் கருத்துக்களை சூழல் பொறுத்து மாறுதலை செயல்படுத்துவது பற்றிக்கூறும் நெகிழ்வுத்தன்மையை கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் காந்தி தன் வாழ்வு முழுமைக்குமான ஆதாரமான ஒன்றாக கூறுவது தான் கடைசி மூச்சு வரைக்கும் நம்பிய கடைபிடித்த உண்மை ஒன்றையே. இந்நூல் முக்கியத்துவம் பெறுவதும் இந்த தன்மையினால்தான்.

     நமக்கு நம்பிக்கை ஏற்பட பெரிய வார்த்தைகளினாலான விஷயங்கள் இல்லாமல் எளிமையாக காந்தியின் வார்த்தைகளிலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டிருக்கும் வரிகள் நன்றாக பொருந்தியுள்ளன.
     வெ.ஜீவானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பு இதில் ஆற்றியிருப்பது முக்கியமான பங்கு எனலாம். காந்தியின் சிந்தனைகளை தொடர்ந்து சமூக தளத்தில் பரப்ப பெரும் முயற்சிகளை இவரின் எழுத்துக்களில் காணமுடியும்.
     காந்தி குறித்த நிராகரிப்பு, ஏளனங்கள் இன்று முன்னெப்போதையும்விட அதிகமாக உள்ளது. நாம் சிறந்த செயல்பாட்டாளருக்கு சிலைவைக்க காட்டும் முனைப்பை விட அவர்களது சிந்தனைகளை விமர்சனம் செய்து பல்வேறு நூல்களை வெளியிட முயற்சி செய்தால், அதுவே அக்குறிப்பிட்ட சிந்தனையாளர்களுக்கு செய்யும் மிகச்சிறந்த அஞ்சலியாக, நன்றியாக இருக்கும்.  நிராகரிப்பு வேறு, விமர்சனங்கள் வேறு. காந்தியின் எழுத்துக்கள் மொத்தம் 98 தொகுதிகள் கொண்ட நூலாக இருக்கையில் இவை ஒன்றைக்கூட படிக்காமல் எப்படி காந்தியை நிராகரித்து புறக்கணிக்க தைரியம் வருகிறது சிலருக்கு என்று எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.

     காந்தியின் வார்த்தைகளை படிக்க ஆவல் ஏற்படுத்தும் இந்த நூலாகட்டும், அல்லது வேறு நூலாகட்டும் காந்தியை சிபாரிசு செய்ய எதுவுமே தேவையில்லை. உண்மையைத்தேடி ஓடிய அவரது தேடலே போதுமானது. அந்த தேடலை அவரின் எழுத்துக்களில் நேருக்கு நேர் சந்திக்கும் ஒருவனுக்கு, காந்தி என்பவர் பல்வேறு தரிசனங்களை தொடர்ந்து அவனின் ஆன்மாவில் கிடைக்கச்செய்தபடியேதான் இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

     காந்தியச்சிந்தனைகள் ஒரு நாட்டையே கவர்ந்தது, தீவிரமாக அவரது கொள்கைகளில் பிணைத்தது எனும்போது, அவற்றைக்கொண்டு ஒரு நிறுவனத்தை நிர்வாகம் செய்யமுடியாதா என்ன? என்ற கேள்விக்கு பதிலாக இந்த நூல் தோன்றியிருக்கிறது. காந்தியின் எழுத்துக்களை பின்தொடர ஒரு எளிய அறிமுகமாக இந்த நூல் அமையக்கூடும்.
     

கருத்துகள்