நூல் வெளி



இயந்திரம்
மலயாற்றூர் ராமகிருஷ்ணன்
என்பிடி                                                   
கபியாஸ்
    
     அதிகாரப்படிக்கட்டுகளை இடையறாது தேடிப்பயணிக்கும் ஒரு மனிதனின் கதை. அவனின் பயணவழியே பிற மனிதர்களின் வாழ்வும் நம் கண்களுக்கு வசப்பட கதை நகர்கிறது.
     பாலகிருஷ்ணன் எனும் வசதியில்லாத அந்தஸ்து குறைந்த ஒரு மாணவன் ஐ.ஏ. எஸ் தேர்ச்சி பெறுகிறான். ஆனால் அந்த மகிழ்ச்சியைக்காட்டிலும் அவனுக்கு அவன் குடும்பம் இருக்கும் கீழ்நிலையில் மற்ற மாணவர்களான வசதி நிறைந்த குரியன் உள்ளிட்டோரை நினைத்து ஏங்குகிறான். தொடர்ந்து தன் வாழ்வை குரியனுக்கு நிகராக ஆக்கிக்கொள்ள நினைத்து திட்டமிட்டு திருமணம், நட்பு ஆகியவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.
     ஆனால் அந்த உறவுகள் எதிலும் இவனால் உண்மையாக இருக்கமுடியவில்லை. அவை உண்மையாகவும் இல்லை. இயந்திரம் கவனம் பெறுவது அதனுள் இருக்கும் குறையாத அதிகார விளையாட்டுக்களின் நம்பகத்தன்மைதான். அதிகாரத்தோடு ஒருவன் இன்னொருவரோடு எப்படி உண்மையாக நேர்மையான நட்பை ஏற்படுத்திக்கொள்ளமுடியும்? அதேதான் நிகழ்கிறது இங்கேயும். இவனது வாழ்வில் இவனுக்கு கடும் குற்றவுணர்வை ஏற்படுத்துபவராக ஜேம்ஸ் பயிற்சி காலத்தில் இருந்து இருக்கிறார். ஜேம்ஸ் அனைத்து மனிதர்களுக்கு மதிப்பளித்து நடப்பவர். பணியில் மிக நேர்மையான ஒருவர். ஆனால் அவரது குடும்பவாழ்க்கை அவை பிறரது தயவை எதிர்நோக்கி உள்ளுக்குள் அழும் கழிவிரக்க நிலையில் தள்ளுகிறது. அவர் இறுதியில் தன்னை அதிகார விளையாட்டிலிருந்து காப்பாற்றிக்கொள்ள பணியை ராஜினாமா செய்வதோடு நிறைவடைகிறது. ரணம் பட்ட மனதின் ஒரு சாட்சி ஆக இந்தக்காட்சியை கூறலாம். பாலகிருஷ்ணனின் மாமனாரின் வாழ்வு, அவரது மகள்கள், இரண்டாவது மகளின் வாழ்வு, அவளின் கணவனின் மனநலப்பிரச்சனைகள், பாலகிருஷ்ணனின் ஆசிரியர், அவனின் அப்பா, அவனது நண்பன் எஸ்.பி என பல கதைகள் நிகழ்கின்றன.
     அரசு இயந்திரத்தின் பாகமாகி சாமானிய மக்களுக்கு எதிராக மாறும்  அரசு அலுவலர்கள் பற்றிய நேர்மையான பதிவு என்று இந்த நாவலை கூற முடியும். பாலகிருஷ்ணனின் பணியில் பலர் வந்துபோகிறார்கள். அவர்களின் குணம் பற்றி தனியாக பல பக்கங்கள் எழுதலாம். பாலகிருஷ்ணன் எந்த ஒரு தனித்துவமும் இல்லாமல் குரியனோடு தன்னை ஒப்பிட்டுக்கொண்டு எந்த உறவுகளின் பிணைப்பும் இல்லாமல் இரும்புபோலாகி இயந்திரமேயாகிறான் என்பதுதான் இறுதிப்பகுதி.











                                22
ஒன்நைட் அட் தி கால்சென்டர்
சேட்டன் பகத்
ரூபா பதிப்பகம்
                                                            தில்லுதுரை
     இளைஞர்களின் மனம் கவர்ந்த மாஸ் எழுத்தாளர் சேட்டன் பகத்தின் கால்சென்டர் தொடர்பான நாவல் இது. இது தெரியாதா என்ன உங்களுக்கு?
     ஈஷா, பிரியங்கா, ராதிகா , ஸ்யாம் மெஹ்ரா, வருண் மல்கோத்ரா என ஒரு குழுவாக பணிபுரியும் இந்த நண்பர்களின் ஊடல், காதல், குடும்பம், வேலை, கால்சென்டர் பற்றிய பிரச்சனைகளை தீர்வுகளை பேசுகிறது இந்த நாவல்.
     கதை ஸ்யாம் எனும் இந்தக்குழுவின் குழுத்தலைவரின் பார்வையில் நகருகிறது. வருண் (வ்ரூம்) மிகத்துணிச்சலானவன்; பேரைப்போலவே மோட்டார்சைக்கிள், கார் என பேரார்வம் கொண்டவன். அவனுக்கு மாடலாக ஆசைப்படும் ஈஷா மீது ஒருதலைக்காதல். ஸ்யாமிற்கு பிரியங்காவுடன் பிரேக் அப் ஆகிவிட தன்னம்பிக்கை இழந்து திரிகிறான். பிரியங்காவிற்கு தன் அம்மா ஆடும் மெலோடிராமாவினால் அமெரிக்கா வழுக்கைத்தலை மிஸ்டர். மைக்ரோசாப்டை கைபிடித்து எந்த கலர் காரில் போகலாம் என்று யோசனை. ஈஷாவுக்கு தான் மாடலாக உயரம் போதாது போனதில் பெரும் வருத்தம். ராதிகாவிற்கு தன் மாமியார் கூறும் குற்றம் குறைகளால் கணவரோடு சண்டை, மிலிட்டரி அங்கிளுக்கு தன் மகன், பேரனைப்பார்க்க ஆசை.
     இந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒருநாள் இரவில் கடவுள் தீர்வைக்கூறுகிறார். அதன்பின் என்னவானது அவர்களது வாழ்க்கை. இதுதான் மிக சுவாரசியமான எழுத்துக்களைக்கொண்ட நம்பர் ஒன் எழுத்தாளர் சேட்டன் பகத்தின் நாவலின் கதை.
     கதை எப்படித்துவங்கும் சேட்டனை முன்பின் வாசித்தவர்களுக்குத் தெரியும். பெண் தன்னை அறிமுகம் செய்துகொண்டு பேசத்தொடங்குகிறாள். ரயிலில் மெல்ல பயணிக்கும்போது இந்த கதை தொடங்குகிறது.
     கதையின் இறுதிப்பகுதி தர்க்கத்திற்கு அப்பால் செல்கிறது என்றாலும், ரசிக்கவைக்கும் படியான வடிவம் கொண்டு இருக்கிறது.
     இதில் பத்திரிக்கையாளராய் இருந்து கால்சென்டர் வேலைக்கு வரும் வ்ரூம்தான் ஆசிரியரை பிரதிபலிப்பவன். அவனின் பகடி, கிண்டல், சமூகத்தின் மீதான கேள்விகள் என நம் மனதில் எழுபவையாகவே இருக்கின்றன.
     ஸ்யாம் பிரியங்காவை காதலித்து பிரிவது பின் மறக்கமுடியாது தவிப்பது என கச்சிதமான வார்ப்பு. தன்னை ஏமாற்றிய பக்ஷியை அறையும் இடமிருக்கிறதே செம.செம.செம
     கதையை நகர்த்துவதே வ்ரூம்தான். இதில் மிகத்துணிச்சலாக ஏன் கால்சென்டர் வேலைக்கு வந்தேன் என்று கூறுவது, தண்ணியடித்துவிட்டு பீட்ஸா ஹட் வாசலில் வாந்தி எடுப்பது, அவற்றின் கண்ணாடியை கல் எறிந்து நொறுக்குவது என மனதில் தோன்றுவதை செய்துவிடும் எக்ஸ்பிரஸ்ஸிவ் கதாபாத்திரம்.
     கால்சென்டர் கம்ப்யூட்டர்கள் பிரச்சனையில் ஸ்தம்பித்து நிற்க அந்த பணிகளைச்செய்யும் பலரும் தங்கள் பிரச்சனை குறித்து பேச நினைத்து தொடங்குகிறார்கள். ஒரே இடத்தில் கதை நின்றுவிட்டதே என்று கவலைப்படாதபடி கதையின் வடிவம், ஆண், பெண் ஆகிய இருவரின் புரிந்துகொள்ள முடியாத குணங்கள், கால்சென்டர் இரவு வாழ்க்கை, கிடைக்கிற பணம், காதல், செக்ஸ் என சேட்டனின் கரங்கள் எதையும் ரசிக்கச்செய்யும் ரசவாதத்தை ஏற்படுத்துகின்றன.
     சேட்டனின் சமூகம் குறித்த எதிர்வினைகள் இந்த நாவலில் சுதந்திரமாகவே பதிவாகியிருக்கிறது என்பேன். அமெரிக்காவின் மனநிலையும், அவர்களின் நடவடிக்கை பற்றியும் பல இடங்களில் பகடியும், அங்கதமும் நிறைய குறிப்பிடப்படுகிறது.
     லட்சியத்தை நோக்கிய பயணத்திற்கு எவை முக்கியம் என நான்கு அம்சங்களை கூறும் இந்நாவல் தன் இயல்பான இளமைக்குறும்புகளை விட சமூகம், பணம், பணியின் மனநிலை ஆகியவற்றைப்பற்றி தீவிரம் கொண்டு பேசுகிற படைப்பு என்பேன். சேட்டன் பகத் ஒரு நண்பனைப்போல சமூகத்துடனான உரையாடலை நம்தோள்மீது கைபோட்டு பேசுவதுதான் அவரது நூல்கள் வெற்றிபெறுவதற்கான காரணம் என்று கொள்ளலாமா?

கருத்துகள்