எம்மி விருதுக்கு சென்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான படம்!

 

 


 

 

எம்மி விருதுக்கு சென்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான படம்!

இந்தியா பர்னிங் என்ற படம்தான் 2020ஆம் ஆண்டிற்கான செய்திப்பட தொகுப்பாக சிறப்பு பிரிவில் இடம்பெற்றது. பத்திரிகையாளர் இசோபெல் இயுங் என்பவர் இச்செய்திப்படத்திற்காக இந்தியாவில் காஷ்மீர், அசாம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று அதனை பதிவு செய்துள்ளார். முக்கியமாக பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமியிடமும் நேர்காணல் பெற்றுள்ளார்.

இந்த படம் எம்மி விழாவில் விருது பெறவில்லைதான். ஆனால் இதில் இடம்பெற்றது என்பதே பெருமைக்குரியது என்கிறார் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான காஷ்மீரைச் சேர்ந்த அஹ்மத் கான்.

நாங்கள் விருது பெறவில்லையென்றாலும் இந்த படம் இதயப்பூர்வமாக எடுத்தபடம் என்பதில் சந்தேகமில்லை. இப்பணிகளை நாங்கள் தொடர்வோம் என்று கூறுகிறார்.   இப்படத்தில் இவர் அசாம் பகுதி போராட்டங்களை எடுக்க உதவியுள்ளார். அகதிகள் முகாம் அமைக்கும் பணி, அஹ்மத் கானின் அம்மா குடியுரிமை பட்டியலில் விடுபட்டுள்ள சிக்கலை பதினாறு நிமிட படம் பதிவு செய்துள்ளது.

சட்டம் அங்கீகாரம் பெற்ற டிசம்பர் 11 அன்று, காஷ்மீர் கடுமையான நெருக்கடியில் இருந்தது. அன்றைய இரவில் நான் ஹோட்டலில் தங்கியிருந்தேன். ஆனால் சாப்பிடக்கூட அங்கு ஏதுமில்லை. சாலையெங்கும் துப்பாக்கிச்சூடு, கற்கள் பறந்தன, தெருவில் நெருப்ப பற்றி எரிந்துகொண்டிருந்தது. இணையம் முழுக்க நிறுத்தப்பட்டுவிட்டது. மக்கள் துப்பாக்கிச்சூட்டில் அடிபட்டு சரிந்தனர் என அந்த நாளை இன்றும் மறக்கமுடியாது என்கிறார் அஹ்மது. இவர் அந்த அனுபவங்களை தி கார்டியன், நியூயார்க் டைம்ஸ், சிஎன்என் ஆகிய ஊடகங்களுக்கு எழுதியுள்ளார். அந்த சூழ்நிலையில்தான் இந்தியா பர்னிங் படத்திற்கான குழுவில் இணைவதற்கான அழைப்பு வந்திருக்கிறது. அகதிகள் முகாமிற்கு மறைத்து வைக்கப்பட்ட கேமராக்களோடு சென்று செய்தி சேகரித்து வந்த அனுபவம் சிலிர்க்க வைக்க கூடியது.

கடந்த ஆண்டு அஹ்மத் கான், கேட் வெப் பரிசை வென்றுள்ளார். இப்பரிசு, சவாலான சூழ்நிலைகளில் சிறப்பாக பணிபுரியும் நேர்மையான பத்திரிகையாளர்களுக்கானது. ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கான விருது இது. மனித உரிமை பத்திரிகையாளர் விருதையும் பெற்றுள்ளார். பொதுமுடக்கத்திற்கு பிறகான வாழ்க்கை பற்றி நான் பதிவு செய்ய நினைத்தேன். ஒரு பத்திரிகையாளராக எந்த இடத்தில் இருந்தாலும் செய்தி சேகரித்து அனுப்புவதை முக்கியமாக நினைக்கிறேன் என உறுதியாக பேசுகிறார். ஆம்னெஸ்டி அமைப்புடன் இணைந்து ஆப்கானிஸ்தானில், ரோஹிங்கயா பிரச்னையில்  வங்கதேசம், இலங்கை, இந்தியா, கொரியா, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், இந்தியா சீனா எல்லைப்பிரச்னை ஆகியவற்றிலும் செய்தி சேகரித்த தைரியசாலி இவர்.

பத்து வயதில் தனது தந்தையை பறிகொடுத்தவர். தற்போது குடும்பத்திற்கு இவர்தான் ஆதரவாக உள்ளார். சிறுவயதிலேயே உங்கள் தெருவில் துப்பாக்கிகள் முழங்கிக்கொண்டு இருந்தால், செய்தி சேகரிப்பு உங்களுக்கு எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள் என்கிறார். பேனா துப்பாக்கியை விட வலிமையானது என்பவர், ஒருவர் சட்டங்களை எதிர்த்து தெருவில் போராடினால் மற்றொருவர் உலகுடன் பேசிக்கொண்டிருப்பார். நம் அனைவருக்கும் வெவ்வேறு வித பொறுப்புகள் உண்டு என எதார்த்தமாக பேசுகிறார்.

லிவ்மின்ட்
அஸ்மிதா பக்‌ஷி








 

கருத்துகள்