மேலோட்டமான ஊடகமனிதர்கள்

                                             மேலோட்டமான  ஊடகமனிதர்கள்






                   ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகள் கடினமான உழைப்பையும், தளராத முயற்சியையும் கோருவன. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை தகவல்களை இளைஞர்கள் பெறுவது மிக எளிது.  ஆனால் குறிப்பிட்ட செய்திகளின் தாக்கம் அவர்களின் மனதை சென்றடைகிறதா என்பதே சந்தேகம்தான். ஆனால் அவர்களின் வேகத்திற்கு ஏற்ப அவர்களின் உழைப்பு இருக்கிறதா என்று என்னால் அறியமுடியவில்லை. அவர்கள் மெல்ல ஏழைமக்களுக்கு எதிராக திரும்புவதும் போல் தெரிகிறது. இவர்களின் கல்வித்தகுதி என்பது பெரியதாக இருக்கிறது. எனக்கு அண்மைய நாட்களில்  சுந்தர் என்பவர் அறிமுகமானார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். முதல் சந்திப்புகளிலேயே நான் நினைத்தது பட்டினத்தாரின் மறுபிறப்போ என்றுதான். ஆனால் அவருக்குள்ளேயே பெண்களின் உடை, சுதந்திரம் குறித்து ஆதிக்க மரபான மனிதன் இடையறாது உரையாடி வந்தான் என்பதை நான் பேச்சினூடே எளிதில் உணர முடிந்தது. இணைய வீடியோக்கள், செய்திகள் என சிந்திக்காது அவற்றின் பார்வைக்கோணத்தை,  அரசியலை சந்தேகிக்காமல், புரிந்துகொள்ளாமல் அவற்றை நம்பும் மனங்களினால் விளையும் கொடுமை என்னவென்றால் இவர்கள் மிக விரைவில் வீடற்றவர்கள், ஏழைகள் மட்டும்தான் சமூகத்தில் நடக்கும் அனைத்து கொடுமைகளுக்கும் காரணம் என்று முடிவு செய்து செயல்படத்தொடங்குவதுதான். 

          கல்வி தொடர்பான பாடங்களைத் தவிர்த்து வேறு எதையும் சிந்திக்கவே அவர் முயற்சி செய்யாதவர். அவர் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் இன்டர்ன்ஷிப்பிற்காக சென்று கொண்டிருப்பதாக கூறினார். அப்பத்திரிகை ஆசிரியரை நேர்காணல் செய்யப்போவதாகவும் கூறினார். ஆனால் அதற்கான தயாரிப்பு வேலைகள் ஏதாவது செய்தீர்களா என்று கேட்டால் ''அதற்கென்ன செய்யறது, மனசுல தோணுவதை கேட்க வேண்டியதுதான்'' என்று கேட்டார். ''என்னங்க நீங்க இப்படிச்சொல்றீங்க'' என்று நான் அதிர்ச்சியடைந்து கேட்டால், அதைவிடுங்கள் என்று சு.சாமி தாலி கட்ட முயற்சித்த வீடியோவைக் காட்டி சிரிக்கிறார்.  அவர் கூறும் குறிப்பிட்ட பத்திரிகை ஆசிரியர் குறிப்பிட்ட கொள்கை என்பதை முன்வைத்து 18 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவரிடம் நேர்காணல் செய்வது என்பதற்கான தயாரிப்பு இல்லாமல் எப்படி அவரிடம் கேள்வி கேட்பது என்பதை விட அவர் கூறும் பதிலை இவர் எப்படி புரிந்துகொண்டுவிட முடியும் என்று தெரியவில்லை.

                  இவர் முழுக்க நகரத்தில் பிறந்துவளர்ந்தவர். நான் சில சிறுபான்மையினர் மீது நடக்கும் தாக்குதல்களை சில உதாரணங்களாக கூறியதற்கு, அப்படியா? இப்படியெல்லாம் நடக்குதா என்ன என்று கேட்டார். இத்தனைக்கும் அவர் கல்லூரியில் எண்பது சதவீத மதிப்பெண்கள் பெற்று ஊடகவியல் குறித்து மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார். முதல் கேட்டதற்கு, அறக்கட்டளை தொடங்கி நான்காயிரம் குழந்தைகளுக்கு உதவவேண்டும் என்று உற்சாகமிகுதியில் பேசினார். ஒரு நாள் விடுமுறைக்குப் பின் சந்தித்தபோது, ''பணந்தாங்க எல்லாமே, அதிகமாக பணஞ் சம்பாதிக்கணுங்க, அதுக்கு இன்னும் மேல படிக்கணும். அப்புறம் இந்த ஊரு எனக்கு புடிக்கவே இல்லைங்க. ஒரே நாத்தம், பிளாட்பாரத்துல நிறைய பேரு இருக்காங்க. நான் ஊருக்கு போறங்க. ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கிட்டு இருக்கேன். சீக்கிரம் கெளம்பிரணும். முடிஞ்சா வெளிநாடு போயிரணும். இந்த அசிங்கத்தயெல்லாம் பாக்க முடியில. நான்சென்ஸ்''  என்று கண்கள் சிவக்க பேசினார். இதோ எனது மேசையில் ஒரு நாள் விடுப்பு எடுத்து கட்டுரைகள் இரண்டை எழுதி அதை நீங்கள் படித்தே தீரவேண்டும் என்று கூறிவிட்டு போயிருக்கிறார். 

                சோட்டா பவுண்டேஷனில் இருந்து  ப்ரான்சிஸ் குமார் என்று ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ஏதோ ஆராய்ச்சி நமைச்சல் அதிகமாகி விட்டிருக்கும்போல. மிகவும் தயங்கித் தயங்கிப் பேசி கேள்விகளை தொடர்பு எண்களைக் கேட்டார். ஆசிரியரும் கூறினார் என்றாலும், அவர் ஆராய்ச்சி செய்யும் விஷயங்கள் தொடர்பாக அவருக்கு எந்தத்தெளிவும் இல்லை என்பது அவரின் பேச்சிலிருந்து தெரிந்தது. குறிப்பிட்ட சமூகம் தொடர்பாக செயல்பட்டு வரும் எழுத்தாளர்கள், களப்பணியாளர்கள் என்று பலரையும் இனிதான் அவர் தெரிந்துகொண்டு அவர்களின் செயல்பாட்டை ஆய்வு செய்யவேண்டும். இத்தனைக்கும் அவர் தர்மபுரி பாதிக்கப்பட்ட கலவரப்பகுதியைச் சேர்ந்தவர். ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு கூட அவர் தன் வாழ்விடத்திற்கு திரும்ப வரவில்லை.  இது குறித்து ஆசிரியர் கேட்டபோது, தனக்கு மும்பையில் வேலை இருந்தது, அதனால் வரமுடியவில்லை என்று கூறினார். பின் அவரிடம்  அதுகுறித்து நான் கேட்டபோது, எனக்கு களப்பணியிலெல்லாம் ஆர்வமில்லை. கட்டுரைகள் எழுதவேண்டும். ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும் அவ்வளவுதான் என்று திட்டவட்டமாக பேசினார். அதற்கான நேரத்தை அவர் திட்டமிட்டது மிகக் குறைவான நாட்கள்தான். அந்த நாட்களுக்குள்ளேயே அவர் பயணம் செய்து மனிதர்களைச் சந்தித்து பேசி, தரவுகளை சேகரித்து அவற்றை  ஆய்வுக்குள் சேர்த்து எழுதி.... எனக்கு அவரின் ஆய்வின் மீது நம்பிக்கையில்லை. ஆய்வு குறித்து எந்தவிதப் புரிதலும் இல்லாமல் அது குறித்த புத்தகங்கள் கூட படிக்காமல் தமிழ் விக்கிபீடியாவை வைத்தேதான் தன் ஆய்வுகளை முடிக்கப்போகிறாரோ என்னவோ!? இப்படி ஆழமில்லாத ஆய்வுகளினால், ஆராய்ச்சிகளினால் என்ன நிகழ்ந்துவிடும் சமூகத்தில்? இதை இங்கு கூறுவதற்கான காரணம் என்னவென்றால் இத்தகைய குறைந்த ஆழமும், விரிவும் கொண்டவர்கள் தங்கள் கல்வித்தகுதிகளால் எளிதில் ஊடகப்பணிகளை மற்றவர்களைக் காட்டிலும் பெற்றுவிட முடியும். அப்போது இவர்கள் தயாரிக்கும் செய்திக்கட்டுரைகள், விஷயங்கள் எப்படி இருக்கும்? அவர்களின் மேம்போக்கான பார்வையைத்தானே கொண்டிருக்க முடியும்? அதனால்தான் விவசாயி தனக்கு தூக்குமாட்டிக்கொண்டு இறப்பது பின்னுக்கு போவதும், ஊழல் செய்தவர்கள், ஏழைகளைக் கொன்றவர்கள் பால் பரிதாபம் வரும்படியான செய்திகள் முன்னுக்கு வருவதும் நமது ஊடகங்களில் நிகழ்கின்றன. வணிகத்தில் கருணையே கிடையாது இல்லையா?

கருத்துகள்