லட்சியவாதங்களின் நொறுங்கல்

                                          லட்சியவாதங்களின் நொறுங்கல்





 சில நாட்களுக்கு முன் ஒரு முன்னாள் லட்சியவாதி ஆசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். சந்தித்து நான் பேசியதை விட அவர் பேசிய பொருமலைத்தான் அதிகம் கேட்க வேண்டியிருந்தது. ஏறத்தாழ காந்தியின் லட்சியங்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் ஏற்பட்ட அதே உரசலைத்தான் இன்னொரு நிகழ்கால அப்டேட் வர்ஷனில் கூறிக்கொண்டிருந்தார். முன்பு லட்சியவெறி எல்லை தாண்டி இருந்த போது தன் மூத்த மகளையும், இரு மகளையும் தமிழ் வழியில் படிக்கவைத்திருந்தார் ஆனால் இன்றைய காலநிலையில் தமிழுக்கான கௌரவத்தை இந்த வலைப்பூ நிறுவனரின் நிலையைப் பார்த்தாலே தெரிந்திருக்கும். முதுகெலும்பு நொறுங்க வேலை செய்து நகரத்தில் என்ன செய்கிறார் என்பதை அவரது புலம்பலான எழுத்துக்களிலிருந்து அறிந்துவருகிறோம். அதே கதைதான். ஆனால் பயம் தொடர்பான அவரது இளைய மகளுக்கல்ல.  ஆசிரியர் மற்றும் முக்கியமான அந்த எழுத்தாளப்பெருந்தகைக்குத்தான். 

           ஒவ்வொரு நண்பராக அழைத்து என்ன படிப்பிற்கு வருங்காலத்தில் வரவேற்பு இருக்கும்? என்று அழைத்து கேட்டுக்கொண்டிருந்தார். ஏறத்தாழ ஆறு அழைப்புகளுக்கும் மேல். மேலும் தன் சாதி, நண்பர்களின் அதிகாரம் வைத்து நல்ல கல்லூரியில் தன் மகளை நுழைய வைக்க பல பிரயத்தனங்களையும் செய்துகொண்டிருந்தார். பெரும் கல்லூரியில் முதல்வராக வரும் அளவு தன் மகளை தகுதிப்படுத்தவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தவரிடம், அவரது நண்பர் ஏதேச்சையாக மகள் என்ன விரும்புகிறார்? என்று கேட்க, அதற்கு அவர் அவள் ஓவியம் நன்றாக வரைவாள், அது தொடர்பாக படிக்கத்தான் விரும்புகிறாள். ஆனால் அதற்கு நிச்சயமான எதிர்காலம் என்ன இருக்கிறது? இயற்பியல் படித்தால் எப்படியேனும் உயர்வான பதவிக்கு போய்விடலாம் என்று உறுதியாக பேசினார். ஒரட்டாங்கை காரர்களே இன்று தாங்கள் பேசுவது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கிறார்கள். ஆசிரியர் இன்று இப்படி விரக்தி அடைந்து பேசுவது பெரிய ஆச்சரியமில்லை. ஏனெனில் இந்த லட்சியவாதிகளைப் பொறுத்தவரை வேலை கிடைக்காதவரை சும்மா ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் வரை இப்படி ஏதாவது பிதற்றிக்கொண்டு திரிவது, பொதுக்கூட்டங்களுக்கு செல்வது, அக்குள் முடி தெரிய சட்டை கைப்புறம் கிழிய கோஷமிடுவது இன்னும் பல வேஷமிடுவார்கள். ஆனால் வேலை அதுவும் அரசு வேலையெல்லாம் கிடைத்துவிட்டால் சுவற்றில் ஒட்டும் பல்லி போலத்தான். பல்லி கூட தவறி சில சமயங்களில் கீழே விழும். ஆனால் இவர்கள் அவ்வளவுதான். அப்படியே குடும்பம், குழந்தை, பேரன் அப்புறம் கிடைக்கின்ற பணத்தில் ஒரு சுய தம்பட்ட பதிப்பகம் ஒன்று துவங்கி ஓயாது சமூகத்திற்கு தன் புலம்பல்களை அள்ளித்தெளிப்பார்கள்.  அந்த ஆசிரியரின் முகத்தில் காஞ்சனா -3 படத்தின் திகிலை விட அதிக திகிலைப் பார்த்தேன். ஒரு தகப்பனாக தன் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தரவேண்டியது அவசியம்தான். ஆனால் கைபிடித்து நாமே அவர்களின் பயணத்தோடு நம்மையும் இணைத்துக்கொள்ளக்கூடாது. இப்படி ஒவ்வொன்றிலும் இருந்தால் அவர்களுக்கு எப்படி வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும்? 

      அதிக பாதுகாப்பு என்றிருக்கும் நிலை குழந்தைகளை எப்போதும் ஊனமாக்கிவிடும் ஒன்றே. இரக்கமில்லாத உலகில் தந்தை, தாயின் காலத்திற்குப் பின்னும் அவர்கள் எப்படி நம்பிக்கையுடன் வாழ்வது? இதோ தொடங்கிவிட்டது. பள்ளி, கல்லூரிகளின் விளம்பரத்தம்பட்டங்கள். பத்திரிகைகள் வண்ணம், கருப்புவெள்ளை கட்டணத்தை அறிவித்துவிட்டார்கள். சில பள்ளிகள் இன்னும் பல படி அதுக்கும் மேல் போய் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் போதே பொறியாளர் என்றால் சார்ட்டும், ஸ்கேலும், மருத்துவர் என்றால் கத்தி, கோட்டுடன் பிரசவித்து தருகிறோம் என்று நான் பிறந்த ஊரில் பேனர் வைத்திருக்கிறார்கள். காலத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் லட்சியவாதங்கள் நொறுங்கி விழுவதை பார்த்துத்தான் தீரவேண்டும். இவர்கள் போன்ற லட்சியவாதிகள் தங்கள் மகளுக்கு என்று வரும்போது அலறுவதை முன்னால் செய்திருந்தால் பலருக்கு பலன் கிடைத்து இருக்கும். கல்லூரிப் பாடங்களை ஏன் முழுக்க தமிழ் வழியில் அரசை மொழி பெயர்த்திருக்க தூண்டியிருக்க கூடாது? மருத்துவம், பொறியியல் போன்றவற்றையும் தமிழில் மொழி பெயர்த்திருந்தால் அனைவரும் அதனை எளிதாக அணுகியிருக்க முடியுமே? லட்சியங்களை வெறும் சொற்களாக பார்த்தால் சரிதான். பெரிய நிறைவைத் தருகிறது. ஆனால் மக்கள் அதன் வெற்றியை அதனைக் கடைபிடிக்கும் மனிதர்களின் முனைப்பிலிருந்துதான் அணுகுகிறார்கள். கணிக்கிறார்கள். இதனால்தான் சுத்தியலையும், அரிவாளையும் யாரும் கண்டுகொள்வதே இல்லை. ஏனெனில் அவர்களின் குழந்தைகளே இவர்கள் கூறும் சித்தாந்தங்களைத் தாண்டி வெளியேறிபோய்விட்டார்கள். சூழல் இப்படியிருக்க  நெருப்பு ரே பத்திரிகையில் கட்டுரைகளைத் தீட்டி என்ன செய்வது? அதனை விற்பவர்கள் கூட அதனை பார்க்கிறார்களோ என்னமோ! அதனால்தான் குறிப்பிட்ட காலச்சூழ்நிலை தாண்டி ஒரு நல்ல தலைவர்களே உருவாகவில்லை. அவரவரின் தேவை என்றால் அம்பேத்கர், காந்தி, நேரு என்று பிடித்து தொங்குவது. தேவை முடிந்ததா? தூக்கி வீசு அவர்களை குப்பையில் என்ற நிலைதான் இன்றுள்ளது. உலகம் முழுவதும் உள்ள நிலைமைதான். ஆனால் சிறுவயதிலிருந்தே நல்ல விஷயங்களை அதற்கான சூழலையும் ஏற்படுத்தியிருந்தால் பிரச்சனையில்லை. ஆனால் இங்கு புத்தகத்தில் ஒரு விதி, நடைமுறையில் ஒரு விதி என்றிருக்கும். எப்படி மாற்றங்கள் வரும்? போலிகள் யார் என்று அனைவரும் கண்டுணர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். 

                எளிய மனிதன் இப்படியெல்லாம் தன்னை குழப்பிக்கொள்வதில்லை. தன் சட்டைப்பையில் உள்ள பணத்தைப் பொறுத்து உணவு, உடை, வாழிடம் என்று அமைத்துக்கொள்கிறான். இதில் என்ன தவறுள்ளது? ஏன் இந்த கொள்கைவீரர்கள் ஏழைகளிடம் குற்றவுணர்வை ஏற்படுத்த துணிகிறார்கள்? உங்களின் கொள்கை, தத்துவம் என்பதை விட பசியில் காதடைக்கும் அவனுக்கு மலிவு விலை உணவகத்தின் உணவு முக்கியமானதாக தோன்றுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? அது குறித்து லட்சியவாதிகள் குறைபட்டுக்கொள்கிறார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. உணவில் நிறைவடைந்தவன் அதன்பிறகுதான் சிந்திக்கவே முடியும். தன் கொள்கையை குடும்பம், மகன், மகள் என்று வலுக்கட்டாயமாக திணிப்பதில் என்ன நீதி இருக்கிறது? சிலவற்றுக்கு வழிகாட்டலாம். அவ்வளவுதான். அவர்களின் முழு பயணத்தையும் தான் அவர்களது தந்தை என்ற ஒரே காரணத்திற்காக காலாவதியான கொள்கைகளினால் சிதைப்பதில் என்ன நேர்மை இருக்கிறது? 

கருத்துகள்