கூலி ஆட்கள் எங்கே போனார்கள்?

                                      கூலி ஆட்கள் எங்கே போனார்கள்?







 விவசாயத்திற்கு கூலி ஆட்கள் கிடைக்கவில்லை என்று பலரும்  குறை கூறுகிறார்கள். சிலர் இதனை நேரடியாக டி.வி நிகழ்ச்சிகளிலும் கூறுகிறார்கள். அந்த நிகழ்ச்சி ஒன்றினை நண்பர் ஆர்.எம்  கலந்துகொண்ட பகுதியை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஏறத்தாழ அழுதுகொண்டே என் நிலத்தில் யாரும் வேலை செய்ய வரமாட்டேன் என்கிறார்கள் அதற்கு காரணம் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்தான் அதை நிறுத்தவேண்டும் என்கிற ரீதியில் பேசினார். அப்போது செந்தமிழன், ஆர்.எம் இருவரும் அதற்கான நேர்மையான காரணத்தை கூறியபோதும், நிலவுடைமையாளரால் உண்மையை ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. நேர்மையான காரணம் என்னவென்றால் நிலத்தில் வேலை செய்வது தாழ்த்தப்பட்ட வகுப்பினர்; தலித் மக்கள்தான். ஆனால் இந்த மேல்ஜாதி முதலாளிகள் அவர்களை கடுமையாக அதட்டி உருட்டி அடிமைபோல வேலை வாங்குகிறார்கள். மரியாதை கிடைக்காத வேலையை ஒருவர் ஏன் ஏற்க வேண்டும்? முதலில் வேறு வாய்ப்புகள் இல்லை. ஆனால் இன்று ஏராளமான வாய்ப்புகளை நகரம் வாரி வழங்குகிறது.  எனவே அவர்கள் அங்கே குறைந்த கூலி என்றாலும் அதை நாடி செல்கிறார்கள். அந்த வீடியோவில் ஒருவர் அவனே இவனே என்று இயல்பிலே வருவதுபோல  அப்படியே பேசியும் விட்டார். அது அப்படித்தான். கிராமம் அழகானது என்று சில நகரத்து கவிஞர்கள் அழகான பொய்களை வடிப்பார்கள். ஆனால் அது தொடர்ந்து உங்களது ஜாதி அடையாளத்தினை தலைமீது சுமத்தி குத்திக்கொண்டே இருக்கும். தப்பவே முடியாது. பத்துவயது பையன் ஜாதி என்ற ஒன்றின் பெயரால் எண்பது வயது ஆன தலித்தை பெயர் சொல்லி டே இங்க வா என்பான். அதற்காக அவர் அவனை  மன்னிக்கவும் அவரை பெயர் கூறிவிடமுடியாது, சின்ன****************  என்று அழைக்கவேண்டும். இதுதான் நிதர்சனம். ஆனால் இனி அது தேவையில்லை. 


              அவரவர் பாட்டை அவரவர் பார்த்துக்கொள்ளலாம். யாரும் யாரையும் நாடி நிற்க வேண்டியதில்லை. நகரம் உண்மையான உழைப்பிற்கு கௌரவமான தொகையைத் தருகிறது. தெரிந்தவர்கள் இல்லை. அவமானப்படுத்தல்கள் இல்லை. சுதந்திரம் அவர்களுக்கு புதிது. கண்காணிப்புகள் கிடையாது. இனி ஏன் விவசாயம் நாட்டின் உயிர் என்றெல்லாம் ஏழைமக்களின் குற்றம்சாட்டி அவர்களை வருத்தவேண்டும்? கூலி வேலை செய்பவருக்கு நிலம் கிடையாது. அவருக்கு என்ன அடிப்படை இருக்கிறது அடுத்த நாளுக்கு? அவர் தன் பிள்ளைகளை எப்படி படிக்க வைப்பார்? இதெல்லாம் இங்கே டி.வி, இதழ் போன்றவற்றில் முன்னிலைப் படுத்தப்படுவதேயில்லை எப்போதும். நிலம் கொண்டோர் எப்படியும் அதை விற்றாவது பிழைத்துக்கொள்வார். அது இல்லாதவர் என்ன செய்வார்? ஏழை மக்களின் மீதே நாட்டின் தேசபக்தியிலிருந்து சட்டங்கள் வரை கட்டாயமாக சிலுவை போல  சுமத்தப்படுகிறது? நிலம் உள்ளவர் வேலை செய்ய ஆளில்லை என்று அழுகிறார். ஏழை மக்கள் தினந்தோறும் அழுது அழுது சலனமில்லாது கண்ணீரும் உலர்ந்து போய் அழுகை வராது உழைத்துக்கொண்டுதானே உள்ளார்கள். முன்பு நிலம் வைத்திருந்தவர்கள் தங்களுக்காக உழைப்பவர்களை கவனமாக பராமரித்து வந்ததோடு, அவர்களுக்கான தேவைகளையும் நிறைவேற்றி வந்தார்கள். இன்று அந்தத் தன்மை கைவிடப்பட்டுவிட்டது. ஏழை மக்களும் மெல்ல அவர்களிடமிருந்து வெளியேறி விட்டார்கள். இரு சாராருக்குமான பிளவுகள் இன்று அனைவரும் அறியும் விதமாக வெளித்தெரிகிறது அவ்வளவுதான்.


                 உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்பது இந்தியாவின் மேல் மட்டும் கவியும் மேகமல்ல. உலகம் முழுவதும் இதே நிலைமைதான்.  மன்மோகன்சிங் அதை எந்த நிலைமையில் அதை பின்பற்ற வேண்டியிருந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.  அதனால் நாம் பெற்ற நன்மைகளை ஏன் யாரும் பேசுவதில்லை?. ஏழை மக்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைப்பது இல்லை என்பதினால்தான் ஆண்டிற்கு நூறு நாட்கள் என்ற செயல்திட்டத்தைக் கொண்டு வந்தது காங்கிரஸ் அரசு. ஊழல்கள் இருக்கலாம்தான் இல்லையென்று கூறமுடியாது. ஆனால் எதில் ஊழல் இல்லை? அதனோடுதானே அனைத்து அரசுத்திட்டங்களும் இயங்குகிறது?ஏழைகளுக்கு கொஞ்சமேனும் ஏதாவது கிடைக்காதா என்ன? இன்றைய  பி.ஜே.பி முன்பு சுதேசி கோஷம் போட்டவர்கள்தானே இன்று காங்கிரசின் திட்டங்களைத்தானே பெயர் மாற்றி பயன்படுத்துகிறார்கள். என்ன பேச வேண்டும்?, என்ன சாப்பிட வேண்டும்? என்பது வரை நிபந்தனையோடு நம்மை ஆட்சி செய்கிறார்கள். எந்த பிரச்சனைக்கும் தீர்வு உண்டுதான். அதை செயல்படுத்துவதுதான் சிரமமாக உள்ளது.தீர்வு தெரிந்தும் செயல்படுத்தாவிட்டால் தவறு நம் நெஞ்சில்தானே உள்ளது?  எந்த ஒன்றிலும் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.  தவறுகளை உணர்ந்தால்தான் அதை காலத்தோடு திருத்திக்கொள்ளவும் முடியும். அன்பினையும், உதவியினையும் நிபந்தனையோடு செய்யமுடியாது நண்பர்களே!

கருத்துகள்