இடது


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இடது

சமூக அரசியல் பண்பாட்டு காலாண்டிதழ் ஆசிரியர்
ஓடை.பொ.துரையரசன்












மார்க்ஸ் புதிய உலகின் திறவுகோல்

பேராசிரியர் ஹிரென் முகர்ஜி
தமிழில் : நா. தர்மராஜன்


உலகத்தில் கடைசி மனிதன் இருக்கின்றவரை, அவனுடலில் கடைசி மூச்சு இருக்கின்ற வரை அவர்களுடைய பெயர் நிலைத்திருக்கும் என்று சொல்லப்படுகிற தகுதியுடைய பெரியோர்கள் சிலரே. அந்த சிலரில் கார்ல் மார்க்ஸ் தலைசிறந்தவர். அவர் பிறந்தநாள் (1818 மே 5) உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது.


‘’உலகத்தில் முதலாளிகளும் தொழிலாளிகளும் இருக்கின்றவரை நமக்கு முன்னாலிருக்கின்ற புத்தகத்தைப் போல தொழிலாளர்களுக்கு அதே அளவு முக்கியத்துவத்தைக் கொண்ட வேறு புத்தகம் இதுவரை வெளிவரவில்லை’’  வாழ்நாள் முழுவதும் மார்க்சினுடைய நண்பராக சகாவாக இருந்த ஏங்கெல்ஸ் ‘மூலதனத்தின்’ முதல் தொகுதியின்(1867) விமர்சனத்தை இப்படித்தொடங்கினார். இந்த வார்த்தைகள் முதன்முறையாக எழுதப்பட்டபோது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு இன்றும்கூட உண்மையாக இருக்கின்றன.


கார்ல் மார்க்சும் அவருடைய சகாவான ஏங்கெல்சும் ஒன்றிணைந்தும் தனியாகவும் அடிப்படையான முக்கியத்துவம் கொண்ட பல நூல்களை எழுதினார்கள். ஆனால் மார்க்சியத்தின் சத்துச்சாறாகவுள்ள விளக்கம் ‘மூலதனமே’ இங்கே மார்க்சின் முறையியலுக்கும் அவருடைய அறிவுக்களத்தின் வியக்கத்தக்க நெடும்பரப்புக்கும் அவருடைய நுண்ணறிவின் ஆழத்துக்கும், தன்மைக்கும் சிறந்த விளக்கத்தைக் காண்கிறோம். இங்கே கறாரான விஞ்ஞானப் பார்வை தலைசிறந்த புரட்சிகர உணர்ச்சியோடு பிரிக்கப்பட முடியாதபடி இணைந்திருக்கிறது. அதன் விளைவாக ‘மூலதனமும்’ அவருடைய மற்ற எல்லா நூல்களும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாக இருக்கின்றன.


1867 ஆகஸ்ட் பதினாறாம் தேதியன்று இரவு இரண்டு மணி. ‘மூலதனத்தின்’ முதல் தொகுதியின் கடைசிப்பக்கத்தை எழுதிமுடித்த பிறகு ‘’ஏங்கெல்ஸ்! நன்றிப்பெருக்கோடு உங்களை நெஞ்சாரத்தழுவுகின்றேன்’’ என்று மார்க்ஸ் எழுதினார். இந்த இரண்டு மாமனிதர்களிடையே இருந்த நெருக்கமான ஒத்துழைப்புக்கு வரலாற்றில் வேறு முன்னுதாரணம் கிடையாது. முற்றிலும் மனிதத்தன்மையோடிருக்கும் புரட்சிகரமான உறவுக்கு முன்மாதிரி அவர்களுடைய உறவாகும்.


‘’மூலதனத்தை எழுதுவதற்காக என்னுடைய உடல்நலத்தை, மகிழ்ச்சியை, குடும்பத்தைத் தியாகம் செய்தேன்’’ என்று மார்க்ஸ் ஒருசமயத்தில் எழுதினார். இதைத்தொடர்ந்து அவரெழுதிய வாக்கியங்கள் மறக்கமுடியாதவை. ‘’காரியவாதிகளின் கெட்டிக்காரத்தனத்தைப் பார்த்து நான் சிரிக்கிறேன்; ஒரு நபர் மாடாக இருந்தால் மனிதகுலத்தின் துன்பங்களைப்பார்க்காமல் தன்னுடைய உடலைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருக்கலாம்’’. மார்க்சுக்கு ஏங்கெல்ஸ் தன்னாலியன்ற உதவிகளைச் செய்தார். ஆனால் மார்க்சும் அவரது குடும்பத்தினரும் கோரமான நசுக்கும் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தனர். ‘’ஏதாவது அற்பமான நோயில் சிக்கி என்னுடைய நுண்ணறிவு பாதிக்கப்பட்டு, கடும் மூளை உழைப்புக்கான என்னுடைய திறமை அழிந்துவிடலாம் என்பதை நினைக்கும்போது எனக்கு ஆவேசம் ஏற்படுகிறது’’ என்று மார்க்ஸ் ஏங்கெல்சுக்கு கடிதம் எழுதினார். மார்க்ஸ் ‘மூலதனம்’ நூலை எழுதிக்கொண்டிருந்த காலத்திலும் காசில்லாமல் கஷ்டப்பட்டார் என்று அவருடைய நண்பர்கள் மத்தியில் வேடிக்கையாக சொல்லப்பட்டது. ‘’மருத்துவர்கள் எழுதித்தரும் மருந்துகளையெல்லாம் வாங்கவேண்டுமென்றால் ஒருவர் வட்டிக்கடைக்காரராக இருக்கவேண்டும். என்னைப்போல ஏழைமாதாகோவில் சுண்டெலியாக இருக்கக்கூடாது’’ என்று மார்க்ஸ் எழுதினார். மார்க்ஸ் ‘மூலதனத்தை’ எழுதிய காலம் முழுவதுமே நச்சுப்பருவினால் வேதனைப்பட்டார். ‘மூலதனத்தின்’ முதல்தொகுதியைப் படித்துவிட்டு ‘’இதில் நச்சுப்பருவின் துன்பம் நன்றாக தெரிகிறது’’ என்று சொல்லிச்சிரித்தார் ஏங்கெல்ஸ். முதலாளித்துவ வர்க்கம் தன் எஞ்சிய வாழ்க்கைமுழுவதும் என் நச்சுப்பருவை நினைவில் வைத்திருக்கும்’’ என்றார் மார்க்ஸ்.


அண்மையில் பாகிஸ்தானில் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது; லாகூரில் ஒரு புத்தகக்கடையில் ராணுவ அதிகாரிகள் சோதனையிட்டபோது ‘மூலதனம்’ புத்தகத்தை பறிமுதல் செய்துவிடலாமா? என்று ஒரு அதிகாரி ராணுவத்தளபதியிடம் கேட்டார். அவர் புத்தகத்தை வாங்கிப்பார்த்தார். கனமான புத்தகம். ஜெர்மன் பேராசிரியர் எழுதியிருக்கிறார். தலைப்போ ‘மூலதனம்’ பாகிஸ்தானுக்குத்தான் நிறைய மூலதனம் வேண்டுமே, சரி இந்தப்புத்தகத்தை பறிமுதல் செய்யவேண்டாம் என்று அவர் பதிலளித்தாராம். ஜார் காலத்திய ரஷ்யாவில் ‘மூலதனம்’ ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. மிகவும் சிக்கலான பொருளாதார விவரங்களைக்கொண்ட புத்தகம். இதை சாதாரண மக்கள் எளிமையாக புரிந்துகொள்ள முடியாது எனவே இதைத் தடை செய்ய வேண்டியதில்லை என்று ஜாராட்சி முடிவு செய்தது. ஆனால் இங்கிலாந்தில் அலட்சியத்தின் மூலம் புத்தகத்தை ஒழித்திட முயற்சி நடந்தது. இங்கிலாந்தில் வசித்தவரால் எழுதப்பட்ட இப்புத்தகத்தை அறிவுஜீவிகள் காணாதது போல் இருந்தார்கள்.


மூலதனம் கம்யூனிசத்தின் பைபிள் என்று அடிக்கடி சொல்லப்பட்டாலும் அது மனனம் செய்து ஒப்பிக்கக்கூடிய வேதப்புத்தகம் அல்ல. வர்க்கசமூகத்தின் கருப்பையிலே முதிர்ந்து கொண்டிருக்கும் புதிய, வர்க்கமற்ற சமூகத்தை வெளியே கொண்டுவரக்கூடிய, தத்துவம் மற்றும் செய்முறையின் வடிவமான கம்யூனிச தத்துவத்தை வகுப்பதையும் அதன் போராட்டத்தகுதியை விளக்குவதையும் பரப்புவதையும் மார்க்சும், ஏங்கெல்சும் தீவிரமாக செய்துகொண்டிருந்தார்கள். ஆகாயக்கோட்டைகளைக்கட்டுகின்ற சூட்சுமமான, வாழ்க்கையின் எதார்த்தமான நிகழ்வுப்போக்குகளால் கறைபடாத சிந்தனாமுறையைப்பற்றி அவர்கள் நினைத்துப்பார்த்ததே இல்லை. ‘’தத்துவஞானிகள் உன் உலகத்தைப் பற்றி வெவ்வேறு வழிகளில் விளக்கியிருக்கிறார்கள்; ஆனால் அதை மாற்றுவதே கடமை’’ என்று எழுதினார் மார்க்ஸ்.


மனிதகுலத்தின் வரலாற்றில் பொதிந்துள்ள சமூகப் போராட்டங்களிலிருந்து பெறப்பட்ட ஆதாரமான உண்மைகளை (அவை வெளிப்பார்வைக்கு சாதாரணமாக புலனாகாவிட்டாலும் ) கொண்ட வாழ்கின்ற வளர்ச்சியடைகின்ற விஞ்ஞானமே மார்க்சியம். கார்ல் மார்க்ஸ் போதித்த மார்க்சியத்திற்கும் எங்குமே இல்லாத ஒன்றை கற்பனை செய்து இதுதான் தெய்வீகமான உண்மை என்ற வறட்டுத்தனத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. ‘’உங்கள் போராட்டங்கள் எல்லாம் முட்டாள்¢தனமானவை.. சண்டையை நிறுத்துங்கள். போராட்டத்தின் தனிபெரும் கோஷ்த்தை நாங்கள் தருவோம் என்று நாம் உலகிற்கு கூறவில்லை’’ என்று மார்க்ஸ் எழுதினார். சமூகவளர்ச்சியின் கட்டளை விதி போன்ற பிரச்சனைகளை மார்க்ஸ் எப்போதும் ஸ்தூலமான வரலாற்று நோக்கில் எடுத்துக்காட்டினார். மூலதனத்தில் மட்டுமல்லாமல் அனைத்து மார்க்சிய லெனிய நூல்களிலும் மெய்யான வரலாற்றியல்பு ஊடுருவி கலந்திருக்கிறது. ஏனென்றால் வரலாற்று பிரச்சனைகளிலிருந்து மனிதன் விலகி நிற்க முடியாது. அவற்றை இயக்கவியல்ரீதியில் புரிந்துகொண்டு தீர்க்க முயலவேண்டும். கடந்த காலத்தை விளக்குவது மட்டுமல்லாமல்  எதிர்காலத்தை அச்சமில்லாமல் முன்¢னறிவிப்பது, அதை நிறைவேற்ற துணிவான செய்முறை நடவடிக்கையில் ஈடுபடுவது என்ற அர்த்தத்தில் அந்தக்கடமையை மார்க்ஸ் எப்பொழுதும் நிறைவேற்றினார். மனிதகுலத்துக்கு மார்க்ஸ் வகுத்துக்கொடுத்த கடமைகளை நிறைவேற்றும் மகத்தான பணியில் ஈடுபடுவது எழுச்சியை தருவதென்றாலும் அது எளியதல்ல கடினமான பணியே.


நாளை காலையில் சூரியன் உதிப்பது எவ்வளவு நிச்சயமோ அதைப்போல சோசலிசம் ஏற்படுவதும் நிச்சயமானதே என்று நாம் அடிக்கடி சொல்கிறோம். இது சரியானதே. மார்க்ஸ் ஒருவகையான விதியின் கட்டளைகளை வகுத்துக்கொடுத்திருப்பதாக யாரும் நினைக்கக்கூடாது. தொழிலாளி வர்க்கத்துக்கு மார்க்சின் அற்புதமான எச்சரிக்கையை நாம் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும். ‘’தொழிலாளி வர்க்கம் தன் விடுதலையை சாதிப்பதோடு நிகழ்கால சமூகம் தன்னுடைய பொருளாதார அமைப்புகளின் மூலம் தடுக்கமுடியாத முறையில் முன்னேற்றமடைந்து கொண்டிருக்கும் அந்த உயர்ந்த வடிவத்தையும் அவர்கள் நிறைவேற்றவேண்டும். அவர்கள் நெடும் போராட்டங்களை, சந்தர்ப்பங்களையும் மனிதர்களையும் மாற்றியமைக்கின்ற வரலாற்று நிகழ்வுப் போக்குகளைக் கடந்து வரவேண்டியிருக்கும்’’.


மனிதனுடைய சித்தத்துக்கும் நடவடிக்கைக்கும் சம்பந்தமில்லாதவகையில் எல்லாமே முன்னரே நிர்ணயிக்கப்பட்டவை; மனிதனுடைய வாழ்க்கை யாந்திரிகமாகவே ஒரு நெடும்பாதையில் போய்க்கொண்டிருக்கிறது; அதன் முடிவில் முதலாளித்துவம் தானாகவே அழிந்து தொழிலாளி வர்க்கம் வெற்றியடையும் என்பது ஒருக்காலும் மார்க்சின் கருத்தல்ல. மார்க்சுக்கு மனிதர்கள் வரலாற்றை உருவாக்குபவர்கள். ஆனால் அவர்கள் தாங்கள் விரும்புகின்ற விதத்தில் அதைச் செய்து விட முடியாது என்பதையும் அவர் கவனத்தோடு வலியுறுத்தியிருக்கின்றார்.’சுதந்திரம் என்பது தேவையைப்புரிந்து அங்கீகரிப்பதே’’ என்பது மார்க்சின் பிரபலமான மேற்கோளாகும். எந்த மனிதனும் வெறும் சிந்தனையின் மூலம் தன்னுடைய உயரத்தில் இரண்டு அங்குலத்தை அதிகப்படுத்திவிட முடியாது. பூமியில் மனிதனுடைய வாழ்க்கையை¤ன் வரைமுறைகளைக் கற்று அவற்றை வெற்றிகொள்ளாமல் மனிதன் வானத்தில் பறக்கமுடியாது. சமூக முன்னேற்றம் என்ற நீண்ட பாதையின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்களின் நடவடிக்கைகளும் அவர்களுடைய உணர்வுபூர்வமான சித்தம் மற்றும் ஸ்தாபனங்களும் அவர்களுடைய ஈடுபாடும் வீரமும் தியாகமுமே வெற்றி அடைந்திருக்கிறது என்று மார்க்ஸ் அடிக்கடி வலியுறுத்தியிருக்கிறார். சோசலிசம் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது என்று மார்க்ஸ் உறுதிப்படுத்தியது ‘’மனிதகுலத்தின் மீது அவருடைய மகத்தான நம்பிக்கையை, தொழிலாளி வர்க்கம் எத்தனை தவறுகள் செய்தாலும் நெடும்போராட்டங்களில் சிக்கினாலும் தடைகளைக் கடந்து வெற்றிகரமாக முன்னேறும் தகுதியைக்கொண்டது என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியதே’’ என்று ரஜினி பாமி¢தத் உணர்ச்சிகரமாக கூறினார்.


கார்ல் மார்க்சை பிரிட்டிஷ் மியூசியத்தின் ‘புத்தகப்புழு’ என்று அவதூறு செய்தவர்கள் உண்டு. ஆனால் உண்மை வேறு. அவர் மிக உயர்ந்த தத்துவச்சிந்தனைகளில் ஈடுபட்டிருந்ததோடு முதலாம் அகிலத்தை நிறுவியவர் என்ற முறையிலும் அதன் தானைத்தளபதி என்ற முறையிலும் அரசியல் மற்றும் செய்முறைத்தலைமையில் மிகக்கடுமையான பொறுப்புகளை நிறைவேற்றியவர். அவர் வகுத்தளித்த கொள்கைகளும் கோட்பாடுகளும் மற்றவர்களால் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியாக படைப்பாற்றலுடன் கையாளப்பட்டு தடைகளையும் சோதனைகளையும் கடந்து இன்று உலகரங்கில் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமானவர்கள் சோசலிசத்தின் கீழ் வாழ்வதற்கும் காரணமாக இருந்து வருகின்றன.


மார்க்சியம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதற்குக் காரணம் அது உண்மையாக இருப்பதே காரணம் என்று லெனின் கூறியதை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்டும் எதிரொலிக்கிறார். லெனின் பக்தி உணர்ச்சியினால் இவ்வாறு கூறிவிடவில்லை. நம் காலத்திய வரலாறு என்பது மார்க்ஸ் முன்னறிவித்த ‘எக்காலத்திலும் ஏற்பட்டிராத மாபெரும் புரட்சிக்கு’ சாட்சியமளிக்கிறது. ரஷ்யாவில் மகத்தான அக்டோபர் புரட்சி ஏற்பட்டதிலிருந்து அதன் பார்வைகள் உழைக்கும் மனிதகுலத்துக்கு முன்னால் அற்புதக்க்காட்சிகளாக அடுக்கடுக்காக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.


மார்க்சுக்கு மிகவும் பிடித்த மலர் ரோஜா; நிறம் சிவப்பு; பெயர் ஜென்னி(அவருடைய மனைவியின் பெயர்); உணவு மீன். ‘’மனிதத்தன்மை உள்ள எதுவும் எனக்கு அந்நியமல்ல’’ என்பது அவருக்கு மிகவும் பிரியமான மேற்கோள். மார்க்ஸ் ஒரு மனிதாபிமானி. இந்த சொல்லின் அடிப்படையான அர்த்தத்தில்; கருத்துமுதல் வாத அர்த்தத்தில் அல்ல. சமூகத்தில் உற்பத்திசாதனத்தில்  தனியுடைமை ஏற்படும்போது அங்கே போராட்டமும் முரண்பாடும் தோன்றுகின்றன என்பதை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். இந்த முரண்பாட்டைச் சுட்டிக்காட்ட ‘அந்தியமாதல்’ என்ற ஹெகலிய வார்த்தையை அவர் பயன்படுத்தினார். ‘மனிதனைப்பற்றி, பெருமை மிக்க மனிதனைப்பற்றியே’ அவர் அக்கறை கொண்டிருந்தார். அந்த மனிதனின் துன்பம் அவரை ஓய்ந்திருக்கவிடவில்லை.


முதலாளித்துவ உற்பத்திமுறையில் தொழிலாளி தன் உழைப்பினால், உற்பத்தி செய்யப்பட்ட பொருளை இழந்துவிடுகிறான். அந்த துன்பத்தை, அவனுடைய உழைக்கும் வாழ்க்கைக்கும், வாழ்கின்ற வாழ்க்கைக்கும் இடையே உள்ள பரிதாபகரமான நிலையை ‘அடிப்படையான துன்பம்’ என்றார் மார்க்ஸ். ‘கூலியுழைப்பும் மூலதனமும்’ என்ற கட்டுரையில் மார்க்ஸ் அதை வர்ணிக்கிறார்.


‘’அவன் வாழ்வதற்காக உழைக்கிறான். அவன் உழைப்பைத் தன்னுடைய வாழ்க்கையின் ஒருபகுதியாகக்கூட கருதுவதில்லை. அது அவனுடைய வாழ்க்கையை தியாகம் செய்வதே. அடுத்தவரிடம் அவன் ஒப்படைத்துவிட்ட பரிவர்த்தனைப்பண்டம் அது. ஆகவே அவனுடைய உழைப்பின் இலட்சியம் அல்ல. அவன் நெய்கின்ற பட்டுத்துணி தனக்காக அல்ல. சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டியெடுப்பது தனக்காக அல்ல. அவன் தனக்காக உற்பத்தி செய்து கொள்வது கூலியைத்தான். அவனைப்பொறுத்தவரை பட்டும் தங்கமும் மாளிகையும் பிழைப்புச்சாதனத்தின் திட்டவட்டமான அளவுகளாக உள்ளன( எ.கா பருத்தியுடையும் சில செப்புகாசுகளும் அவன் வசிக்கும் நிலவறையில் ஒரு மூலையாக) குறுகித்தேய்ந்துவிடுகின்றன.


…இந்த நடவடிக்கை முடிந்தபிறகுதான் உண்மையில் அவனுக்கு வாழ்க்கை ஆரம்பமாகிறது….பட்டுப்புழுவானது ஒரு புழுவாய்த் தொடர்ந்து வாழும்பொருட்டு நூற்றுக்கொண்டிருக்குமாயின் அது முழுக்க முழுக்க கூலித்தொழிலாளி ஆகிவிடும்.


மற்றவர்களுடைய இதயங்களைப் பிய்த்தல், தீச்செயல்களைச் செய்தல், செம்படவனைப்போலக் கொலை செய்தல் ஆகிய வினைகளால் மட்டுமே பெருஞ்செல்வத்தை அடையமுடியும்’’ என்று மகாபாரதம் கூறுகிறது. தொழில்துறை முதலாளியின் தோற்றத்தைப்பற்றிய தன்னுடைய சிறப்புமிக்க அத்தியாயத்தின் முடிவில் ‘’பணம் முதலில் கன்னத்தில் ரத்தக்கறையோடு தோன்றியதென்றால் மூலதனம் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் ரத்தமும் அழுக்கும் கொட்டியபடி முதலில் தோன்றுகிறது’’ என்று மார்க்ஸ் எழுதினார். அநீதிக்கும் கொடுமைக்கும் எதிரான இந்த மகத்தான ஆவேசமே மார்க்சின் தத்துவத்திற்கும் செயல்திட்டத்துக்கும் ஒரு தார்மீகப் பேரொளியைத் தருகின்றது. அது என்றும் குன்றாத பேரொளி. அதனால்தான் தெய்வீகத்தன்மை இல்லாத, எந்த தேவனாலும் அருளப்படாத மார்க்சியம் நம் சகாப்தத்தின் ஆகச்சிறந்த உணர்வாக இருக்கிறது.


மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி எழுதிய பிரபலமான கட்டுரைகள் 1853 ல் நியூயார்க் பத்திரிக்கையில் வெளியாயின. பிரிட்டனில் தொழிலாளி வர்க்கம் வெற்றியடைவதன் மூலமாகவோ (இந்த நம்பிக்கையை மார்க்ஸ் சுலபமாக கைவிடமுடியவில்லை) அல்லது ‘’பிரிட்டிஷ் நுகத்தடியைத்தூக்கியெறிகின்ற அளவுக்கு இந்தியர்கள் வளர்ச்சியடைந்த பிறகோ’’ இந்தியா சுதந்திரமடையும் என்று மார்க்ஸ் கூறினார். 1857-58 ம் ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட சிப்பாய்ப் புரட்சியை அவர் வரவேற்றார். ஐரோப்பாவையே மையமாகக்கொண்ட பார்வை அவரிடம் என்றும் இருந்ததில்லை. எனவே ‘’இந்த சிறு மூலையில் (மேற்கு ஐரோப்பாவில்) சோசலிஸ்ட் புரட்சிக்கான வாய்ப்பு மங்கலாகவே இருக்கிறது. ஏனென்றால் இதைக் காட்டிலும் பெரிய பிரதேசத்தில் முதலாளித்துவ சமூக முன்னேற்றம் இன்னும் செயலுரத்தோடு நிறைவேறிக்கொண்டிருக்கிறது’’ என்று மார்க்ஸ் ஏங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். ஒருவேளை சோசலிசஸ்ட் பயணத்தில் ரஷ்யா மேற்கு ஐரோப்பாவை முந்திவிடக்கூடும் என்றார். 1877 செப்டம்பர் இருபத்தேழாம்தேதியன்று  ஏங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் ‘’இதுவரையிலும் எதிர்ப்புரட்சியின் கோட்டையாகவும் சேமப்படையாகவும் இருந்த கிழக்கில் இந்தத் தடவை புரட்சி தொடங்குகிறது’’ என்று எழுதினார். மார்க்ஸ் தன்னுடைய வாழ்க்கையின் கடைசியில் சமஸ்கிருதத்தையும் அரபு  மொழியையும் கற்றுக்கொள்ள முயன்றார். ‘’இந்தியா ஒருவேளை அநேகமாகக்கூட புரட்சி செய்யும். அது மிகவும் சிறப்பானதென்பது நிச்சயம்’’ என்று எழுதினார்.


இந்தியர்களாகிய நாம் இந்த மாபெரும் எதிர்பார்ப்பை இன்னும் நிறைவேற்றவில்லை. ஆனால் மார்க்சின் எச்சரிக்கையும் முக்கியமானதே. ‘’நிச்சயமாகச் சாதகமான நிலைமைகளில் மட்டும் போராட்டம் நடத்துவது என்றால் உலக வரலாற்றை உருவாக்குவது மிகவும் சுலபமான காரியமாக இருக்கும்’’. மார்க்சின் ஆணையை மனதில் பதித்துக்கொள்ளவேண்டும். ‘’இருக்கின்ற நிலைமைகளை மாற்றுவதற்காகவும் உங்களை மாற்றிக்கொண்டு அரசியல் அதிகாரத்தை வகிப்பதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக்கொள்வதற்காகவும் 15, 20, 50 ஆண்டுகள் உள்நாட்டுப்போர்களில் , சர்வதேச யுத்தங்களில் ஈடுபடவேண்டியிருக்கும’’¢.


ளலகக் கம்யூனிசத்தின் மகத்தான சாதனைகளை இன்று நாம் அறிவோம். ஆனால் தன் காலத்தில் சில தகுதியற்ற நிகழ்ச்சிகளால் துன்பம் அடைந்த மார்க்ஸ் ‘’நல்லவேளை நான் மார்க்சியவாதி அல்ல’’ என்று கூறினார். இன்னொரு சமயத்தில் ‘’நான் புலிகளை விதைத்தேன்; கொசுக்களை அறுவடை செய்தேன்’’ என்று வேதனைப்பட்டார். வரலாறு என்பது ஈவிரக்கமற்ற கடவுள்; ஒவ்வொரு மக்களினமும் அதன் சோதனைகளைத்தாண்டியே வரவேண்டும் என்று ஏங்கெல்ஸ் கூறியது மிகப்பொருத்தமானதே.


இரண்டு தலைமுறைகளைச்சேர்ந்த இந்தியமார்க்சியவாதிகளின் ஆசானான ரஜினி பாமிதத் 1955 ம் ஆண்டு பின்வருமாறு எழுதினார். ‘’மார்க்ஸ் பிறந்த நூறாவது வருடம் முதல் பாட்டாளி வர்க்கப் புரட்சியையும் பாட்டாளிவர்க்க அரசையும் கண்டது. மார்க்ஸ் மரணமடைந்த நூறாவது வருடம் உலகப் பாட்டாளி வர்க்க அரசை காணுமா?’’


மார்க்சியவாதிகள் ஆரூடக்காரர்கள அல்ல. மந்திர தந்திரசாலிகளும் அல்ல. ஆனால் அதே ரஜினி பாமிதத்தின் வார்த்தைகளில் ‘’இன்றைய உலக வரலாறு என்பது வாழ்கின்ற மார்க்சியத்தின் வரலாறுதான்’’. ஆயிரம் தடவைகள் மார்க்சியத்தை ‘மறுத்திருக்கிறார்கள்’, ‘நிராகரித்திருக்கிறார்கள்’, ‘கிழடுதட்டிவிட்டது’, ‘காலாவதியாகிவிட்டது’, என்று நிரூபித்திருக்கிறார்கள். அதைப் பின்பற்றுவதாகச் சொல்பவரகளும் கூட அதில் தண்ணீரை ஊற்றி அதன் செறிவைக் குறைத்திருக்கிறார்கள். ஆனால் ‘’மார்க்சியம் நவீன உலகத்தை ஆட்சி செய்கிறது; ஏனென்றால் அந்த உலகத்தை விளக்குகின்ற திறவுகோல் அதுவே. அதை இயக்குகின்ற சக்தியும் அதுவே.

இந்தியப் பொருளாதாரத்தின் நேர்மையற்ற வளர்ச்சி



  பேராசிரியர். அமித் பாதுரி


தமிழில் : இ.ப தங்கராஜ்





பேராசிரியர் அமித் பாதுரியுடன் நேர்காணல்





அமித் பாதுரி ஒரு தேர்ந்த பொருளாதார நிபுணர். உலகமயமாக்கலுக்குப்பிறகு இந்தியாவிலும் பிற வளரும் நாடுகளிலும் உருவாகி நடைமுறைப்படுத்தப்படும் புதிய செவ்வியல் பொருளாதாரக்கொள்கைகளையும் பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் வளர்ச்சித்திட்டங்களையும் தொடர்ச்சியாக அவர் விமர்சித்து வருகிறார். வளர்ச்சிக்கான செயல்திட்டங்களில் பங்கேற்கும் உரிமை மறுக்கப்பட்ட பெரும்பான்மை ஏழை மக்களின் வலியையும் ஆற்றல்களையும் ஒன்று திரட்டி மாற்று வளர்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைக்கும் பணியை செய்து வருகிறார். Development with Diginity(2005), The Face you were Afraid to See (2009) ஆகியவை இவர் எழுதிய பிரபலமான நூல்கள். புதுதில்லியில் உள்ள Council For Social Development வருகைதரு பேராசிரியராக இருக்கிறார். இத்தாலியில் உள்ள Pavia University ல் பன்னாட்டு அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியராக இருக்கிறார்.


அமித் பாதுரி இந்தியப்பொருளாதாரத்தில் வேலைப்பகிர்வு, வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவை குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். அரை நிலப்பிரபுத்துவத்தின் கீழ் விவசாய பின்னடைவு குறித்து ஆய்வு செய்துள்ளார். தற்போதைய வளர்ச்சி மாதிரியை விமர்சிப்பதோடு பழைய பொருளாதார திட்டங்களின் குருட்டுத்தனத்தினால் காணத்தவறிய பகுதிகளை வெளிச்சமிட்டு காட்டுகிறார்.





நீதா தேஷ்பாண்டே: இந்திய அரசின் அண்மைக்கால பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய உங்கள் பார்வை என்ன?


 பொருளாதார கொள்கைகளைப் பொறுத்தவரை நம்ப முடியாத அளவுக்கு அனைத்து கட்சிகளின பார்வைகளும் ஏறத்தாழ ஒரே மாதிரிதான் உள்ளது. ஆட்சியிலிருக்கும் கட்சி சிபிஎம் ஆக இருந்தாலும் பிஜேபியாக இருந்தாலும் அவர்கள் ஒரே மாதிரியான பொருளாதாரக் கொள்கைகளைத்தான் பின்பற்றுகின்றனர். அதைப் புரிந்து கொள்வதற்கு இரண்டு காரணங்களைக் கூறமுடியும்.


ஒன்று ஏன் அனைத்து கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒரே கருத்தைக் கொண்டிருக்கின்றனர்? ஏனென்றால் புதிய முதல¦டுகள் நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் என்று அவர்கள் நம்புவதன் காரணமாக, புதிய முதல¦டுகளுக்கு வாய்ப்பான சூழலை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளார்கள். ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி ஆட்சிக்காலத்திலும் ஏன் வி.பி சிங் பிரதமராக பதவி வகித்த காலம் வரையிலும் கூட மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத்திட்டங்களுக்கும் அதன் கொள்கைகளுக்கும் அரசே பொறுப்பாக இருந்தது. ஆனால் இப்போது அதுவும் தனியார்மயமாகிவிட்டது. இந்த மாற்றம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு உகந்த முதல¦ட்டுச் சூழலை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பை அளித்தது.


முறையான சாலைவசதிகளோ மின்வசதிகளோ அற்ற, மிகக் குறைந்த வாங்கும் திறன் கொண்ட மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில், நல்ல முதல¦ட்டுச்சூழலைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்க வேண்டுமேயானால் உங்களுடைய கனிம வளங்களை அடிமாட்டு விலைக்கு தாரைவார்த்துக் கொடுப்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாகும். எனவேதான் தண்ணீர், மின்சாரம், நிலம் மற்றும் கனிமங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வாரி கொடுக்கிறது அரசு. இது இன்றைய பொது நிகழ்வாகிவிட்டது.


இரண்டாவது காரணம், அரசு அனைத்து லாபகரமான தொழிற் செயல்பாடுகளிலிருந்தும் தன்னை விலக்கிக் கொண்டதன் விளைவாக, அது இன்றைக்கு செயலற்று முடமாகிவிட்டது. மேலும் சமூக நலன் சார்ந்த அடிப்படைக் கல்வி, சுகாதாரம், குடிநீர், மற்றும் பொது வசதிகள் போன்ற துறைகள் தனியார்மயமாக்கப்பட்டு லாபம் கொழிக்கும் தொழில்களாக மாற்றப்பட்டுவிட்டன. அரசின் கொள்கை முடிவுகளில் இப்போக்கு விரிவடைந்துகொண்டே செல்வதால், ஒரு சிறப்பான வரவு செலவுத் திட்டத்தை உருவாக்குவதற்கோ அல்லது அரசின் வருமானத்தை அதிகப்படுத்தக்கூடியவகைகளில் ஒரு நடைமுறை சாத்தியமுள்ள செயல்திட்டத்தை வகுக்கவோ இயலாத நிலைமைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. நமது வரவு செலவுத்திட்டத்தில் உள்ள பற்றாக்குறை கூடுவதாலோ, குறைவதாலோ நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும் அல்லது குறையும் என்று நிரூபிக்க எந்த பொருளாதாரக் கோட்பாடுகளோ அல்லது பருண்மை தரவுகளோ கிடையாது. இல்லவே இல்லை என்றும் கூட உறுதியாக சொல்லமுடியும்.


அதிக அளவு முதல¦ட்டுக்கு வாய்ப்பான சூழலை உருவாக்கும்போது, நிதிப்பற்றாக்குறை விகிதம் குறைவாக இருக்கவேண்டும் என்பதான சூழலும் கூடவே உருவாக்கப்படுகிறது. இதன்மூலமாக கல்விக்கோ, வேலைவாய்ப்பை உத்திரவாதப்படுத்துவதற்கோ, தன்னால் தேவையான அளவு செலவழிக்கமுடியாது என்பதை அரசு மறைமுகமாக அறிவுறுத்திவிடுகிறது. அதுமட்டுமின்றி, இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை பரவலாக்குவதற்கு பதிலாக தன்னிடமே வைத்துக்கொள்வதற்கு காரணம், தேவைப்படும்போதெல்லாம் அவற்றை ஒரேயடியாக நிறுத்துவதற்கும் அல்லது நீர்த்துபோகச்செய்வதற்குமான அதிகாரத்தை தன்னிடமே தக்க வைத்துக்கொள்வதுதான்.


இந்த இரண்டு கொள்கைத்திட்டங்களைத்தான் ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்கின்றன. 2003 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட Fiscal Responsibilities மற்றும் பட்ஜெட் மேலாண்மைச்சட்டப்படி நாட்டின் மொத்தப்பற்றாக்குறை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது அரசின் கடமையாக வரையறுக்கப்பட்டுள்ளது. இது அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால் இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அவர்கள் உண்பதற்கு போதுமான உணவு கிடைக்கிறதா, இல்லையா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு அரசுக்கு கிடையாது. இதன்மூலம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப விகிதம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக பற்றாக்குறை உயர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ளும் அரசு தன் நாட்டு மக்களான ஏழைமக்களின் நலனில் அக்கறையின்றியிருப்பதை அறிந்து கொள்ளலாம்.





நீ.தே: நமது பொருளாதாரக் கொள்கையை உருவாக்கும் உரிமை அரசினுடையதா? அல்லது சந்தையினுடையதா என்பதை தீர்மானிக்கும் உரிமை நமக்கு இருக்கிறதா?





 இல்லை. இதில் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு கிடையாது. நான் இங்கு இரு வகை கருதுகோள்களை முன்வைக்கிறேன். என்னவகையான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது ஒன்று. என்ன வகையான மாற்றத்திற்கு நாம் போராட வேண்டும் என்பது மற்றொன்று. மூன்றாவதாக ஒரு சக்தி உருவாகி மேன்மேலும்  முக்கியத்துவமடைந்து வருகிறது என்பதுதான் இங்கு நிகழ்ந்துள்ள மாற்றம். வளர்ச்சித்திட்டங்களுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு இயக்கங்களைத்தான் இங்கு குறிப்பிடுகிறேன். இந்த எதிர்ப்பு இயக்கங்கள்தான் நியாயமற்ற கொள்கைகளை ஒரளவிற்கு மக்கள் மீது திணிக்கமுடியாது என்பதை அரசுக்கும், பெரும் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்துகின்றன.


விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவைப்பற்றி சற்று யோசித்துப்பார்ப்போம். பல மாநிலங்களின் கூட்டமைப்பாக இந்தியா திகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மத்தியில் ஒரு காங்கிரஸ் அரசு, ஒன்றிரண்டு மாநிலங்கள் நீங்கலாக மற்ற எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் அரசு என்பதுதான் அன்றைய நிலை. ஆனால் இன்று அப்படியில்லை. இன்று மாநிலங்களின் தனியுரிமைகள் அங்கீகரிக்கப்படுகின்றன. சரியோ, தவறோ இப்போதுள்ள கூட்டாட்சி அமைப்பில் மாநிலங்களின் உரிமைகளை நாம் அங்கீகரிக்கிறோம்.


அதே போல அதிகாரத்தை பஞ்சாய்த்துகளுக்கு பகிர்ந்தளிக்கும் ஒரு வரலாற்று நிகழ்முறை ஏற்படும் என்று நான் நினைக்கிறேன். பஞ்சாயத்து என்ற ஒரு சக்தி அரசுமல்ல, சந்தையுமல்ல, இப்புதிய சக்தி அரசு என்பதையும் அது குறித்த புரிதலையும் மறு உருவாக்கம் செய்யவல்லது. கார்ப்பரேட் நிறுவனங்களின் முகவராக மத்திய அரசு செயல்படும் இன்றைய கார்ப்பரேட் சார்பு வளர்ச்சி நிலையை மாற்ற வேண்டுமானால் இன்று நம்முன் உள்ள ஒரே வழி அதிகாரப்பரவலாக்கம்தான்.


கூட்டணி அரசியலின் விளைவாக மாநில அரசுகளும் தங்கள் சொந்த நலனை முன்னிறுத்தி அதிகாரம்  செலுத்த தொடங்கியுள்ளன. இந்திய அரசியலில் நிகழ்ந்துள்ள மிக முக்கியமான மாற்றமிது. ஒரு சிறிய கட்சி கூட அரசியலில் குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்தும் நிலை இன்றுள்ளது.  நமது கூட்டாட்சி தத்துவம் முன்பைவிட வலிமையாகியிருக்கிறது என நாம் கொள்ளலாம். பஞ்சாயத்துக்களுக்கான அதிகாரத்தை நாம் அங்கீகரிப்போமானால் இந்த வலிமை மேலும் அதிகரிக்கும். மத்தியிலும், மாநிலத்திலும் பஞ்சாயத்துகள் சுதந்திரமாக செயல்படும் நிலை வருமானால்  அப்பகுதிகளில் சிறப்பான வளர்ச்சி ஏற்படக்கூடும்.





நீ.தே: இந்தியப்பொருளாதாரத்தின் அதீத வளர்ச்சியைப்பற்றியும் அது சாமானிய மக்களிடம் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியும் உங்களுடைய பார்வை என்ன?


  பொருளாதார வளர்ச்சி எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும் அது சாமானிய மக்களின் நலனுக்கானதல்ல என்று இப்போது அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த அரசாங்கம் அதீத வளர்ச்சியின் மூலம் தன்னுடைய கொள்கைகள் சரியானது என்று நியாயப்படுத்திவிடலாம் என்று நம்புகிறது. தன்னுடைய சொந்த நாட்டு மக்களின் நிலங்களையும் மற்ற வாழ்வாதாரங்களையும் அவர்களிடமிருந்து பறித்துகொள்வதன் மூலமாகத்தான்  இது சாத்தியமாகும் என்ற போதிலும் அது பற்றிய எவ்வித கவலையுமற்ற அரசு நமது. இந்தியப்பொருளாதாரத்தின் வளர்ச்சி மிக அரிதாக கீழ்த்தட்டு மக்களை எட்டுகிறது என்பதால், ஜனநாயக நாடான இந்தியா இந்த வளர்ச்சி முறையை நியாயப்படுத்தவே முடியாது. ஒரு வாகன ஒட்டுநருக்கோ, ஒரு விவசாயிக்கோ நாட்டின் வளர்ச்சி எட்டு விழுக்காடா அல்லது ஏழு விழுக்காடா என்பதில் எந்த கவலையும் கிடையாது. பட்ஜெட்டில் பற்றாக்குறை இந்தாண்டு உள்ளதா என்று கூட அவர்களுக்குத் தெரியாது. ஒருவேளை பணவீக்கம் குறித்து கவலைப்ப்படக்கூடும். பட்ஜெட் பற்றாக்குறைக்கும் பணவீக்கத்திற்கும் தொடர்புண்டு என்று அறுதியிட்டு கூற இங்கு யாரும் தயாராக இல்லை.


நமது பொருளாதாரம் குறித்த பொருளாதார மேதைகளின் மயிர்பிளக்கும் விவாதங்கள் இன்னும் அந்தரத்திலேயே இருக்கின்றன. சாமானிய மக்களின் நலன் குறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படுவதேயில்லை. உணவு, மருத்துவம், கல்வி போன்ற மக்கள் நலன் சார்ந்ந அடிப்படை விஷயங்களை மேம்படுத்துவதே நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதை இங்கு யாரும் பார்ப்பதில்லை.


உலகளாவிய மக்கள் வளர்ச்சி அட்டவணையை எடுத்துப் பாருங்கள். அதில் இந்தியாவின் இடம் கடைசிதான். ‘'இந்தியா இரண்டுவகையானது. ஒன்று பணக்கார இந்தியா, மற்றொன்று ஏழை இந்தியா’’ என்று கூறும் கருத்து தவறானது. உண்மையிலேயே இரண்டு இந்தியா இங்கில்லை. வளர்ச்சியின் பெயரால் ஆதாயமடையும் மிகச்சிறுபான்மையான நபர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களும் போக மீதமிருப்பவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வரையில் எதைப்பற்றியும் கவலைப்படாதவர்களாகவும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறியாதவர்களாகவே உள்ளனர்.


தனியார்முதல¦ட்டுச்சூழலை பாதுகாக்கின்ற வளர்ச்சிமாதிரியை தொடர்ந்து தக்கவைக்கவேண்டுமானால் நாட்டின் இயற்கை வளங்களை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு நமது அரசு தள்ளப்பட்டுள்ளது. எனவேதான் நாடு முழுவதும் அரசு பெரும் மக்கள் போராட்டங்களை சந்திக்க நேர்ந்துள்ளது.


வளர்ச்சியின் பெயரால் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்களை மக்கள் எதிர்க்கிறார்கள். தங்கள் நிலம் தங்களிடமிருந்து வளர்ச்சியின் பெயரால் பறிக்கப்படுவதை எதிர்க்கிறாரகள். அந்நிலங்களில் உயர்நடுத்தரவர்க்கத்தினர் மட்டும் வீடு வாங்கி குடியேறும்வண்ணம் வீடுகள் கட்டி விற்பனை செய்யப்படுவதை ஏற்க அவர்கள் தயாராகயில்லை. இதுபோன்ற மக்கள் எழுச்சி போராட்டங்கள்தான் அரசியலின திசைவழியை தீர்மானிக்கின்றன.





நீ.தே: ஏன் வளர்ச்சியின் பயன்கள் அடிமட்டத்தில் உள்ள மக்களைச்சென்றடைவதில்லை?

            வளர்ச்சியின் பயன்கள் சமூகத்தின் அடித்தட்டுவரை செல்லவில்லை என்று முற்று முழுதாக நான் மறுக்கவில்லை. ஆனால் இந்திய அரசின் புள்ளிவிவரங்களை நோக்கும்போது பெரும் அளவில் ஆதாயமடைந்தவர்கள் உயர்மட்ட சமூகத்தினர் என்பதை எளிதில் அறியலாம். ஏனெனில், மிகக்குறைந்த விலையில் அனைத்து இயற்கை வளங்களையும் அவர்கள் தம் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதால் அவர்களால் எளிதில் ஆதாயமடைய முடிகிறது. உயர்நடுத்தரவர்க்கமும், உயர்வர்க்கமும் இந்த வளர்ச்சியினால்


பெரிதாக பாதிக்கப்படவில்லை என்று கூறுவது உண்மைதான். ஏறத்தாழ 30-40 விழுக்காட்டிற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் வாழ்நிலையில் பெரிய மாற்றம் எதையும் அடைந்துவிடவில்லை.


நாட்டின் வளர்ச்சிக்காக அதிக இழப்புகளைச் சந்தித்தவர்கள் அடித்தட்டு மக்களே. வளர்ச்சி என்ற பெயரில் நிலங்கள், மலைகள், ஆறுகள் என திரும்¢பப்பெற முடியாத இழப்புகள் அதிகம். பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடைவெளி அதிகரித்துவிட்டதால் வளர்ச்சியின் பயன்கள் அடிமட்டம் வரை எட்டிவிட்டதாக நாம் சொல்லவே முடியாது. ஆய்வு முடிவுகளும் ஏன் திட்டக்குழுத் துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவும் கூட இதனை மறுக்கமாட்டார். இந்தியாவில் ஏழைகள் எவ்வளவு என்று 30 அல்லது 40 என்று விளையாடிக்கொண்டிருக்கலாம். வலுவான புள்ளிவிவரங்களின் படி இந்தியா முன்னெப்போதையும் விட முன்னேறிக்கொண்டுள்ளது, அதே சமயம் மக்களின் வருமானத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மிகவும் அதிகரித்துள்ளன.


எப்போதெல்லாம் இது போன்ற ஏற்றத்தாழ்வுகள் மிகவேகமாக அதிகரித்துக்கொண்டு செல்கிறதோ. அப்போதெல்லாம் மேல்தட்டுமக்கள் பெரும் பயனடையவும் செய்கின்றனர். அதன்மூலமாக அவர்களிடம் அதிகரிக்கும் வாங்கும் சக்தியைக்கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருளை வாங்கிக் குவிக்கின்றனர். அது நவ நாகரீக ஆடையாகவோ அல்லது புதிய மகிழுந்தாகவோ இருக்கலாம். எதுவாகயிருந்தாலும் அது கிராமத்தில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. மேல்தட்டு மக்களின் ஆடம்பரத்தேவைகள் அதிகரித்தபடியே செல்வதால் அதற்கான உற்பத்தியும் அதிகரிக்கிறது. அந்த உற்பத்திக்கு தேவையான உழைப்பு சக்தியில் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக கிராமங்களில் வசிக்கும் மக்கள் இடம்பெயர்ந்து நகரச்சேரிகளில் வசிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். தொழிலாளர்களை இதுபோன்ற ஆடம்பர பொருளுற்பத்தியில் ஈடுபடுத்துவதால் அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி குறைந்து அவற்றின் விலை கூடுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடுகிறது. நகரங்களை நோக்கி இடம்பெயரும் அம்மக்களையும் இவ்விலையுயர்வு பாதிக்கிறது. எனவே அவர்களின் வருமானம் உயர்ந்தாலும் அவர்களுடைய வாங்கும் சக்தி உயர்வதில்லை. எப்படியிருந்தாலும் சாதாரணமக்களால் குளிரூட்டப்பட்ட பேரங்காடிகளுக்கு செல்லமுடியாது. பிறகு யார்தான் செல்வார்கள்? அவர்கள் எத்தனை விழுக்காடு? நாம் சில்லரை வர்த்தகம் பற்றி நிறைய பேசுகிறோம். ஆனால் யாரெல்லாம் அந்தப்பொருட்களை வாங்கமுடியும்? யாரெல்லாம் நடுத்தர வர்க்கத்திற்கு கீழே உள்ளார்களோ அவர்களால் அவற்றை வாங்க முடியாது. இதுதான் சந்தைவிதி.


உயர்தர பெரு அங்காடி ஒன்றைக் கட்டும்போது உங்களால் மரபான தொழிற்திறன்களை அங்கே பயன்படுத்த முடியாது. இதனால் இந்த வளர்ச்சி நிகழ்முறைகளிலிருந்து பெரும்பாலான இந்தியர்கள் விலக்கி வைக்கப்படுகின்றனர். இதுபோல பெரு அங்காடிகளையும், நிலத்தரகுத்தொழிலையும் தக்கவைப்பதற்காக சமனற்ற வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதால் இந்தியாவில் வளர்ச்சி என்பது நியாயமற்றதாக உள்ளது. அதிகரித்துக்கொண்டே செல்லும் ஏற்றத்தாழ்வினால் வளர்ச்சி அதிகரிக்கும். இதற்கு நேர்மாறாக குறைந்து கொண்டே வரும் ஏற்றத்தாழ்வினால் வளர்ச்சியின் விகிதம் குறையும் என்பதே ஒரு நச்சு சூழல்தான்.





நீ.தே: வறுமைக்கோடு என்ற கருத்தாக்கத்தைப்பற்றி உங்களுடைய பார்வை என்ன?





வறுமைக்கோடு என்பது முட்டாள்களின் விளையாட்டு. முதலில் ஒருவர் ஒருரூபாய்க்கும் குறைவாக சம்பாதித்தால் அவர் ஏழை என்றும், ஒரு ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்தால் அவர் ஏழையில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆக, வறுமைகோட்டிலிருந்து எவ்வளவு தொலைவு வந்தால் அவர் வறுமைக்கோட்டிற்கு மேல் இருப்பதாக கருதவேண்டும் என்கிற நிர்ணயம் இங்கில்லை. எனவே இந்த கருத்தாக்கமே தவறானது. உடற்கூறு ஆய்வைப்பொறுத்தவரை அவர் வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளவரா அல்லது கீழுள்ளவரா என்பதை எளிதில் கண்டறிந்து விடலாம். மனிதன் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை அளவிட்டால் அவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா இல்லையா என்று தெரிந்து விடும். ஆனால் திட்டக்குழுவும் பொருளாதார நிபுணர்களும் புள்ளியலாளர்களும் பயன்படுத்தும் வறுமைக்கோடு என்கின்ற கருத்தாக்கம் மக்களை முட்டாளாக்க மட்டுமே பயன்படும்.


இரண்டாவதாக வறுமைக்கோடு முழுக்க முழுக்க ஊகத்தரவுகளின் அடிப்படையில்  திரட்டப்பட்ட தரவுகளைக் கொண்டே உருவாக்கப்பட்டது என்பதை கண்டுபிடித்துவிடலாம். அவர்களால் திரட்டப்பட்ட தரவுகளையும் அவை திரட்டப்பட்ட வழிமுறைகளையும் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ளும் வகையில் இருப்பதைக் கண்டுகொள்ளலாம். ஜனநாயகம், வளர்ச்சி, முன்னேற்றம், போன்ற பூடகமான கருத்தாக்கமாகத்தான் வறுமைக்கோட்டினையும் பார்க்கவேண்டும். வறுமை என்னவென்று வரையறுத்துவிட்டால் அது குறைகிறதா அல்லது அதிகரிக்கிறதா என்று அறுதியிட்டு கூறிவிடலாம் என்று அரசு கருதுகிறது. வறுமைக்கோட்டிற்கு பதில் பஞ்சாயத்திற்கு அதிகாரப்பரவல் முறையை கொண்டு வந்து அதில் ஏழைகளை பங்கேற்கச் செய்ய முடியும். அவர்களுடைய உற்பத்திப்பொருட்களுக்கான சந்தையை ஏற்படுத்துவது போன்ற நேர்மையான வழிமுறைகளின் மூலமாக அவர்களின் வறுமையை ஒழிக்கமுடியும். நகரமயமாதலின் விளைவாக ஒவ்வொரு நாளும் அதிக அளவு பாசனநீரை நகர்புறத்தேவைகளுக்கு மடை மாற்றி விடுவது இயற்கைக்கு முரணானதும், அபாயகரமானதும் ஆகும். அடிப்படை பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்தினாலே இவை தானாகவே தீர்ந்துவிடும்.


இந்தியாவைப் போன்ற நாட்டில் வேலைவாய்ப்பு விகிதம் அடிமட்டத்திலிருந்து வளர்ச்சியடையாமல் வறுமை ஒழிப்பு என்பது சாத்தியமேயில்லை. மேலும் நம் நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. ஏனெனில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் எட்டு விழுக்காடாக இருந்தது. வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் ஒரு விழுக்காடாகத்தான் இருந்தது. நாட்டின் மொத்த வளர்ச்சி விகிதம் இரண்டு விழுக்காடாகத்தான் இருந்தது. ஜவஹர்லால் நேரு ஆட்சிக்காலத்திலும் கூட இதன் வளர்ச்சிவிகிதம் அதிகமாக இருந்தது. நாட்டின் மொத்த வளர்ச்சி விகிதம் நான்கு விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தபோது கூட வேலைவாய்ப்பு விகிதம் இரண்டு விழுக்காடாக இருந்தது. இப்போதுள்ள நடுத்தர வர்க்கம்  முழுமையும் உருவாகி நிலைகொண்டது அந்த காலகட்டத்தில்தான். ஆனால் இன்று நாட்டின் வளர்ச்சி விகிதம் உச்சத்தில் உள்ளது. ஒவ்வொரு தொழிலாளியும் மிக அதிக அளவில் உற்பத்தி செய்கிறார். ஆனாலும் பெரும்பாலான மக்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு விகிதம் உயர்வதினாலோ, குறைவதினாலோ எந்த மாறுதலும் ஏற்படுவதில்லை. ஒருவகையில் பார்த்தால் போதுமான அளவிற்கு வேலைவாய்ப்பினை பெருக்கவில்லையென்றால் அதனை யதார்த்தத்தில் வளர்ச்சி என்றே கணக்கிடமுடியாது.





நீ.தே: வறுமைக்கோடு என்பதின் வரையறை இல்லாமையாலும் அரசின் பொது உணவுப்பங்கீட்டுத்திட்டங்களிலும் நல்வாழ்வுத்திட்டங்களிலும் பயனாளிகள் யார் என்ற தெளிவான வரையறை இல்லாமையாலும் நாட்டின் வளமும், நிதியும் வீணடிக்கப்படுகின்றன என்ற கருத்து நிலவுகிறது. அது பற்றி கூறுங்கள்.





ஏழைகளுக்கு வழங்கவேண்டும் எனக்கூறி கிடங்குகளில் நீண்ட நாட்களாக உணவு தானியங்களை மக்கவைத்து வீணாக்குவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இந்தியாவைப் பொறுத்தவரை தலைவிரித்தாடும் ஊழலையும் நமது அரசியல்வாதிகளின் இயல்பையும் கணக்கில் கொண்டு பார்க்கும்போது ஒரே வழிதான் இருக்கிறது. அது யார் பயனடைகிறார்களோ அவர்கள்தான் பணம் செலவழிக்கவேண்டும். பெரும் கூட்டு நிறுவனங்கள் அதிகப்பயனடைவதால் அவர்கள்தான் உண்மையான வளர்ச்சிக்காக பெருமளவு செலவழிக்கவும் வேண்டும். இந்நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு குறித்து வெறுமனே ஏதாவது பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. ஆனால் ஏழைகளின் நலனுக்கான செயல்பாடுகளில் உண்மையான முன்னேற்றம் ஏற்படவேண்டுமானால் அதற்கு அடிப்படை முடிவெடுக்கும் உரிமையை அந்நிறுவனங்களிடம் விடுவதல்ல. அதிகாரப்பரவலாக்கம்தான். உள்ளூர் சுகாதார நிலையங்களை அவற்றில் பயனடையும் மக்களே நடத்த அனுமதிக்கவேண்டும்.


நீ.தே: தற்போதுள்ள பணவீக்கத்தின் தன்மை குறித்து உங்களுடைய கருத்தை சொல்லுங்கள்?





பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பட்டினியாலும் அல்லது பட்டினிக்கு தள்ளப்படும் நிலையிலுள்ள நமது நாட்டில் உணவுப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே இருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தனியார்மயமாக்கல் பெருமளவு முன்னோக்கிச் சென்றுவிட்ட நாடுகளை விட்டுவிடுவோம்.


நம்மை ஒத்த சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கூட இந்த அளவிற்கு வறுமை இல்லை. இங்குள்ள கட்டிடத் தொழிலாளி ஒருவர் 1900 கலோரி அளவுள்ள உணவை உட்கொள்கிறார் என்றால் உணவுப்பொருட்களின் விலை சிறிது அதிகரித்தால் கூட அவருடைய நுகர்வு 1700 கலோரிகளாக குறைந்து விடும். இந்நிலை இரண்டு ஆண்டுகளுக்கு தொடருமானால் அவரின் வாழ்நாள் பத்து பதினைந்து ஆண்டுகள் குறைந்து விடும். இத்தகைய பட்டினி விகிதத்தை கொண்டு பார்க்கும்போது இந்தியாவில் பணவீக்கத்தை கொண்டு பார்க்கும்போது இந்தியாவில் பணவீக்கம் ஏற்படுவது தவிர்க்கவே முடியாததாகும். இதன் காரணமாகத்தான் இந்தியாவில் பணவீக்கம் என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அரசியல் பிரச்சனையாக இருந்து வருகிறது.





தேர்தல்களில் எக்கச்சக்கமான பணத்தை செலவிடுவது என்றைக்கு நடைமுறைக்கு வந்த்தோ, நாட்டில் உள்ள அனைத்து தேர்தல் கட்சிகளும் என்றைக்கு ஒரே பொருளாதார கொள்கையை என்றைக்கு ஆதரிக்கத் தொடங்கினவோ அன்றைக்கு நாட்டு மக்களிடமிருந்து அரசு அந்நியப்பட்டுவிட்டது. அதனால்தான் பணவீக்கத்தினால் மக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி அதி கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பத்து விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பணவீக்க விகிதத்தைப் பற்றி யாரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்க முடியாது. அப்படியே அந்நிலை ஏற்பட்டிருந்தால் கூட அன்றைய அரசும் கூட அதைக்குறித்து உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கும். இன்றைய நமது ஜனநாயகம் இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து   தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுவிட்ட ஒன்று. அரசும் கூட தனக்கு இதில் தொடர்பில்லை என்று கூறுகிறது. மக்களின் அவலங்களுக்கு பதில் சொல்லத்தேவையில்லாத நிலை உறுதிபட, உறுதிபட நமது அரசின் மதிப்பு Standard & Poor போன்ற தர நிர்ணயம் செய்யும் நிறுவனங்களிடம் மேன்மேலும் அதிகரிக்கிறது. இது பணவீக்கத்திற்கான அடிப்படைக் காரணம்.


பணவீக்கத்தைப்பற்றி அரசிற்கு சற்றேனும் கவலை இருந்திருக்கவேண்டும். அவ்வாறு இருந்திருந்தால் இந்நேரம் உணவு வழங்கல் முறையை பரவலாக்குவது தொடர்பான கொள்கையை வகுத்திருக்கும். அதுதான் நாகரீகமடைந்த சமூகத்தின் அரசு செய்யவேண்டிய கடமை. வழங்கப்படும் உணவு தானியங்களை சேமித்து வைக்கத் தேவையான கிடங்குகளை கட்டிக்கொள்ளத்தேவைப்படும் நிதியை மக்களுக்கு அரசே வழங்கவேண்டும். இவ்விஷயத்தில் அரசு சோதனை முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இதைவிட்டால்  அதிகரித்துவரும் பணவீக்கத்திலிருந்து மக்களைக் காப்பதற்கும், அதைக் கட்டுப்படுத்துவதற்கும் வேறு வழியே கிடையாது.





நீ.தே: குறுகிய கால முதலீடுகளால் இந்தியா எவ்வாறு பாதிக்கப்படும்?





குறுகிய கால முதல¦டுகளால் இந்தியா இரண்டு வழிகளில் பாதிக்கப்படும். ஒன்று, நேரடியாக. அண்மையில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது போன்ற நிகழ்வுகளின் மூலமாக நாம் பாதிக்கப்படலாம். இம்முதல¦டுகள் எந்நேரமும் நம்நாட்டை விட்டு வெளியேறிவிடக்கூடும்.


மற்றொன்று இது போன்ற முதல¦டுகள் ஏற்படுத்தும் தாக்கம் மிக முக்கியமானது. ஏனென்றால் கூட்டணிக்கட்சிகளினால் ஏற்படும் பாதிப்பை விட அதிக பாதிப்பை இது அரசுக்கு ஏற்படுத்துகிறது. முன்பு இந்தியா அந்நிய செலவாணி நெருக்கடியில் சிக்கித்தவித்தது. இப்போது அந்த நிலை இல்லை. ஆனால் இப்போது அரசு இது போன்ற முதல¦டுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் தன்னுடைய கொள்கைகளை வகுத்துக்கொண்டுள்ளது. இம்முதல¦டுகள் வேலைவாய்ப்புகளுக்கு எதிரானவையாகவே இருக்கின்றன. எனவே அரசு மக்கள் நலத்திட்டங்கள் எதையும் செயல்படுத்தமுடியாமல்  முடங்கிப்போயுள்ளது. முதல¦ட்டாளர்கள் தங்களுடைய முதல¦டுகளுக்கு உகந்த பாதுகாப்பான சூழல் நிலவுகிறதா என்பதைப்பொறுத்தே முதல¦டு செய்கின்றனர். ஆனால் யார் இந்த உத்திரவாதத்தை யார் கொடுப்பது? முதலில் பன்னாட்டு நாணய நிதியமும், உலக வங்கியும் செய்து வந்தன. இப்போது ஸ்டேண்டர்டு அண்ட் புவர் எனும் அமெரிக்க கடன் தரக்குறியீட்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது. உங்களுடைய ஜனநாயகம் சிறந்தது என்று அவர்கள் கூறினால்  அது சிறந்தது, இல்லை என்றால் இல்லை. இன்றுவரை நமது பொருளாதாரக்கொள்கைகளும், வளர்ச்சியும் இதைச் சார்ந்தே தீர்மானிக்கப்படுகிறது. உறுதியான முடிவுகளை(பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக) எடுக்கவல்லவர்தான் நம்நாட்டின் பிரதமராக வரவேண்டும் அல்லது அப்படி ஒருவரைத்தான் நியமிக்கவேண்டும் என்று இப்போது அவர்கள் வெளிப்படையாகவே கூறுகின்றனர். கடன்தர குறியீட்டு நிறுவனங்கள்தான் நமது ஜனநாயகத்தை தீர்மானிக்கும் ஒரே சக்தியாக இன்றுள்ளன.





நம் காலத்திற்கேற்ற புதிய அம்பேத்கர் தேவை

                         ஆனந்த் டெலும்டே              

                                              தமிழில்:ஜீவா






அருந்ததிராய் ‘நவயானா’ வெளியிட்டுள்ள ‘ஜாதி ஒழிப்பு’ நூலுக்கு 164 பக்க முன்னுரையை எழுதியுள்ளார்.


அது பற்றிய தனது அவுட்லுக் இதழின்  நேர்காணலில் அம்பேத்கர் இன்று அவசரத்தேவை என்று கூறியுள்ளார்.


அருந்ததிராயின் முன்னுரை தலித் வட்டத்தில் பெரும் கருத்து மோதலை உண்டாக்கியுள்ளது. தலித் இலக்கியத்தை தலித் அல்லாதவர் எழுதலாமா என்று 1970 ல் எழுந்த விவாதம் ஒத்த ஒன்றாக இத புறப்பட்டுள்ளது. தலித்தாகப் பிறந்த  ஒருவரே தலித் இலக்கியத்தைப் படைக்கமுடியும் என்றனர் தீவிர தலித்தியக்கத்தியவாதிகள். அம்பேத்கரைப்பற்றிப் பேசவோ, அவரது படைப்புகளைப் பற்றி எழுதவோ தலித் சான்றிதழ் தேவை என்கின்றனர். ஆனால் அம்பேத்கர் பற்றி தலித்தல்லாதவர் பலர் ஏற்கனவே எழுதியபோது எழாத எதிர்ப்புகள் அருந்ததிராய் எழுதியபோது மட்டும் எழுந்துள்ளது ஏன்? இந்த எதிர்ப்புக்கு அவரது புகழ் காரணமா? மத்தியதர தலித்துகள் அவரை ஒரு மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்று கருதுவது காரணமா? அவர்கள் கம்யூனிசத்துடன் தொடர்பு கொண்ட எதையும் வெறுத்து ஒதுக்குபவர்களாக இருப்பதே காரணம் எனலாமா?


காரணம் எதுவானாலும் அது தேவையற்றது. மோசமான ஒருவரி எதிர்ப்புகள் ஒதுக்கத்தக்கன. அருந்ததிராய் அம்பேத்கரை அறிமுகம் செய்ய தேவையற்ற அளவு காந்தியைக் கையாண்டிருப்பது ஏற்புடைய எதிர்ப்புதான். அவர் அதைச் செய்ய ஏற்றவர் என்ற போதும், அது புத்தகத்தின் உள்ளடக்கத்திற்கான அறிமுகமாக இல்லை. எதிர்ப்பவர் நிலைப்பாடு சரியானதெனினும், அதில் ஏன் இத்தனை வேகம், வெறுப்பு? அது குறித்து ஒருவர் மாறுபட்ட கருத்து கொண்டால், அதை அத்தனை தீவிரமாக எதிர்மறையாக எதிர்க்கத் தேவையில்லை. படைப்பிலக்கியவாதியாக அருந்ததிராயை வரிக்கு வரி எடுத்துக்கொள்ளாமல் காந்தி, அம்பேத்கர் என இருவரிடையே காந்தியின் ஹரிஜன் கட்டுரையைக்கொண்டு முரண்பாடுகளை ஆராய்கிறார். அவர்  இதன் மூலம் ஜாதி குறித்த பிரச்சனைகளை இன்றும் அழுத்தமாக்கி காட்ட முடியுமென்று முயன்றுள்ளார்.  காந்தி மிதவாத இந்துசமூகப் பிரதிநிதி, என்ற முறையில் அவரை முன்னிறுத்தி விவாதிப்பது வறட்டுத்தனமான, எந்திரகதியிலான அணுகுமுறையை தவிர்க்கும். அவர் தான் கையாள எடுத்துக்கொண்ட பொருள் பற்றி மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டு படித்து புரிந்து பேசும் தகுதி பெற்றவர். அவரது முயற்சி எவ்வித கொள்கை ஒளிவட்டமும் இல்லாத அணுகுமுறை. எனவே அவரது அணுகுமுறை அறிவுஜீவிகளைவிடவும், சாமானிய மக்களுக்கே அதிகம் ஈர்ப்புடையதாக இருக்கும்.


அம்பேத்கரின் இரு முகங்கள்


அருந்ததிராயின் கட்டுரை பற்றி சுவாரசியமான விமர்சனம் ஒரு தலித்திடமிருந்து கூட வரவில்லை என்பது வியப்பளிக்கிறது. ஜி. சம்பத் எனும் தலித்தல்லாத பத்திரிக்கையாளர், ‘’அம்பேத்கர் அருந்ததிராய் அரசியல் பொருத்தப்பாடு’’ என்ற விமர்சனக் கட்டுரை எழுதியுள்ளார். நியமகிரியை ஆதிவாசிகளுக்கு விட்டுவிட வேண்டும் என்று வாதிடும் அருந்ததிராய் தலித்தான அம்பேத்கரை தலித்துகளுக்கே ஏன் விட்டுவிடவில்லை என்று கேட்கிறார். ஜாதி அடிப்படையிலான வாதம் பொருத்தமற்றது எனத் தள்ளிவிடலாம். இத்தகைய வாதம் மிகவும் ஆபத்தானது. அம்பேத்கர் பண்பாட்டு உயர்வை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். அவரை தலித்துகளுக்கு மட்டுமே உடமையானவர் என்று காட்டும் போக்கு சரியானதல்ல. இந்தப்பார்வை தலித்துகளுக்கே பேரிழப்பாகும். நியமகிரி ஆதிவாசிகளுக்கு என்பது வளர்ச்சிப்போக்கு எவ்விதம் உள்ளது என்பதைக்காட்டுகிறது. அம்பேத்கரை தலித்துகளுக்கு மட்டுமேயானவர் என்பது அவரின் ஜாதி ஒழிப்பு லட்சியத்திற்கு எதிரானது.


விவாதம் முக்கியப்புள்ளியை விட்டு விலகிச்சென்று விட்டது. நூலின் பதிப்பாளர் விற்பனை நோக்கம் கொண்டே அருந்ததிராயின் முன்னுரையை பெற்றிருக்கிறார். புக்கர் பரிசு பெற்றவர், அச்சமற்ற கருத்துக்களை பகிர்ந்துகொள்ளக்கூடியவர், விவாதத்திற்குரிய பல கட்டுரைகளை எழுதியவர் எனும் புகழ் அவரது முன்னுரைக்கு பெரும் கவனத்தைப்பெற்றுத்தரும். உற்சாகமான முரண்பாட்டை எழுப்பும். ஒரு நூல் வெளியீட்டாளருக்கு இதைவிட விற்பனையை வளர்த்துக்கொள்ள பெரிய காரணம் என்ன வேண்டும்? வியாபாரத்தின் இயல்பை யார் தவிர்க்க முடியும்? ஜாதிய எதிர்ப்பு முத்திரை ஏற்க விரும்பாத நவயானா நூல்வெளியீட்டாளருக்கான புகழையும், அம்பேத்கர் நூல் எனும் சிறப்பையும் பயன்படுத்திக்கொள்வது ஜாதி ஒழிப்பிற்கு உதவாத ஒன்றாகும். பின்னர் பெரும்பான்மை தலித்துகள் அருந்ததிராய் போன்ற புகழ் பெற்றவர்கள் கூட தம்மைப்போல அம்பேத்கர் வழிபாட்டில் இணைந்து கொண்டார்கள் என்று பெருமைப்படக்கூடும். அத்தகைய அம்பேத்கர் புகழ்பாடல் ஜாதிய நிறுவலே.


அம்பேத்கர் ஏற்பு என்பது ஜாதி எதிர்ப்புடன் இணையான ஒன்றாக இருக்கத் தேவையில்லை. இன்று பிற தலைவர்களைப்போல் அம்பேத்கரும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரிசையில் சேர்ந்துவிட்டார். எந்த தலைவருக்கும் அவரளவுக்கு சிலைகளிலில்லை. படங்கள், கூட்டங்கள், நூல்கள், ஆய்வுகள், அமைப்புகள், பாடல்கள், கூட்டங்கள் என அத்தனை விளம்பர யுக்திகள் வேறு என மிளிரும் தலைவர் அம்பேத்கரே. எனினும் ஜாதி வெறி, மோதல்கள், தீண்டாமை, ஜாதிஅமைப்புகள், ஜாதி விவாதங்கள் இணையாக வளர்ந்து வருவதும் உண்மையே.


அம்பேத்கரை வழிபாட்டு உருவத்திலிருந்து பிரித்து காண்பதன் மூலம் தலித் மனங்களின் முளை விட்டு வரும் தீவிரவாத எண்ணமாற்றங்களை தடுக்க முடியும். மகத்தான தேசியவாதி, உறுதியான கம்யூனிஎதிர்ப்பாளர், இட ஒதுக்கீட்டின் தந்தை, அரசியல் சாசன கர்த்தா, தாராள ஜனநாயகவாதி, தலித்காவலர், போதி சத்துவர் என்ற அடையாளங்கள் அவர் மீது சூட்டப்படுகின்றன. இத்தகைய புகழ்பாடும் வழிபாட்டு ஆராதனைகளின் மேகக்கூட்டத்தில், உண்மை அம்பேத்கரின் புரட்சிகரமான தோற்றம், கருத்துக்கள், சிந்தனைகள் மறைக்கப்படுகின்றன.


உண்மை அம்பேத்கர் யார்?


சுயநலக்காரர்கள் உருவாக்கிய வழிபாட்டுஅம்பேத்கர் உருவகம், ஆளும் வர்க்க ஆதரவு பெற்றது. ஆனால் நடைமுறைவாதியாக பரிணாமவளர்ச்சி பெற்றவர் அம்பேத்கர். இத்தகைய அலங்கார உருவகங்களை மறுப்பவராகவே தமது வாழ்நாளில் வாழ்ந்துள்ளார். பல மாற்றங்களைப் பெற்ற அம்பேத்கரை புரிந்துகொள்வது சற்று சிக்கலானது.


இளம் அம்பேத்கர் ஜாதி என்பது வர்க்கப்போர்வை போர்த்தியது என்ற கொள்கை கொண்டவர். ஜாதியத் திருமணங்கள் எனும் போர்வையால் அது தன்னைக் காத்துக்கொண்டது. மாபெரும் இந்து சமூகம் விழிப்புணர்வு பெற்று, ஜாதிக் கலப்பு திருமணங்களை அனுமதிப்பதன் மூலம், ஜாதிகளைத் திறந்துவிட்டு, வர்க்க வடிவம் பெற வேண்டுமென்றார்.


பிந்தைய அம்பேத்கர், ஜாதிய இந்துக்களின் போக்கால் விரக்தியுற்று, தனது பார்வையை அரசியல் பக்கம் திருப்பி தன் லட்சியத்தை நிறைவேற்ற நினைத்தார். தனித்துவம் மிக்க அரசியல் அடையாளம் பெற இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்யப்போவதாக அச்சுறுத்தி, ஜாதி இந்துக்களின் மன மாற்றத்திற்கு முயற்சித்தார்.

1930 ல் அம்பேத்கர் தமது பரப்பை உழைக்கும் வர்க்கத்தை நோக்கி விரிவாக்க முயன்றார். ஜாதிப்பேச்சுக்களை விட்டு சுதந்திர தொழிலாளர் கட்சியை உருவாக்கினார். இதுவே இந்தியாவின் முதல் இடதுசாரி அரசியல் கட்சி எனலாம். கம்யூனிஸ்டுகளின் கைபிடித்து நடந்தார். அதே சமயம் ஜாதியத்திலிருந்து தப்பிக்க மதம் மாறுவேன் என்று அறிவித்தார்.


1940 ல் அம்பேத்கர் சுதந்திர தொழிலாளர் கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் ஜாதிக்கு திரும்பி ஒடுக்கப்பட்ட ஜாதிகளின் கூட்டமைப்பினைத் தொடங்கினார். போராடும் அரசியலைக் கைவிட்டு காலனியாதிக்க அரசில் தொழிலாளர் அமைச்சர் பொறுப்பை ஏற்றார். ‘அரசும் சிறுபான்மையினரும்’ என்ற நூலை எழுதினார். அரசு சோசலிசம் என்பதை முன் மொழிந்து அதைப்பின் சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தில் புகுத்தினார்.


காங்கிரசின் உறுதியான எதிரியான அம்பேத்கர், காங்கிரசுடன் ஒத்துழைத்து, அனைத்துக்கட்சி கூட்ட அரசில் பங்கேற்று, பாராளுமன்ற உறுப்பினரானார். பிரதிநிதித்துவ சிந்தனையை முன்மொழிந்து, இட ஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தார். தலித் சமுதாயத்தில் பலன் பெற்று முன்னுக்கு வருவோர், சமுதாய மேன்மைக்கு உதவுவார் என்று எதிர்பார்த்தார். ஆனால் படித்து முன்னேறிய தலித்துகள் தன்னை ஏமாற்றி விட்டதாக வெளிப்படையாகவே புலம்பினார்.


அரசியல் சாசன சிற்பியான அம்பேத்கர், தலித்துகள் அரசியல் சாசன வழிகாட்டலுக்கு கட்டுப்பட்டே போராட வேண்டுமென அறிவுரை கூறினார். பின் அதைக் கைவிட்டு, அரசியல் சாசனத்தை எரிக்கும் முதல் நபராவேன் என்று கடுமையாக எச்சரித்தார்.


கடைசியில் மார்க்சை மேற்கோள் காட்டி, தமது முடிவுகளுக்கு மதிப்புகூட்டமுயன்றார். பின் புத்தமதத்திற்கு மாறி மார்க்சியத்திற்கு பெரும் தடையாக இந்தியாவில் எழ முயன்றார் என்று அம்பேத்கர் பற்றி அறிஞர் இலனோர் ஜில்லியட் கூறுகிறார். தமது மரணத்திற்கு  சில நாட்களுக்கு முன் புத்தரையும், மார்க்சையும் ஒப்பிட்டு இருவருடைய இலக்குகளும் ஒன்றே. அடையும் பாதைகள் வேறுபட்டன. மார்க்சை விட புத்தர் மேல் என்று முடிவளித்தார். இவையாவுமே அம்பேத்கரின் பல்வேறு பரிணாம மாற்றங்கள். அவரை எந்த எல்லைகளுக்குள்ளும் அடைக்க இயலாது. அவருள் இன்னும் ஆழமாக சென்றால் கடும் சிக்கலாகவே முடியும்.


ஜாதி எனும் விஷக்கிருமி இந்த மண்ணில் உள்ளவரை அம்பேத்கரின் தேவை முடியாது. அது அவதார புருஷரான அம்பேத்கர் அல்ல. அருந்த்திராய் அவசரப்பட்டு தவிர்க்கமுடியாது தேவையெனும் அழைக்கும் அம்பேத்கரும் அல்ல. அந்த அம்பேத்கர் அவரது காலத்தை விட சிக்கலாக மாறியுள்ள தற்கால ஜாதிய மோதல்களுக்கு விடைகாண வேண்டியவராக மறுகட்டுமானம் செய்யப்படும் புதிய அம்பேத்கராகவே இருப்பார்.

மார்க்சும் சூழலியலும்

                                 வசந்தகுமார்.






‘மார்க்சும் சூழலியலும்- பொருள்முதல்வாதமும் இயற்கையும்’ என்னும் நூல் கோவையில் விடியல் பதிப்பகத்தால் ஆகஸ்ட் மாதம் 2012 ல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் ஆங்கில மூல ஆசிரியர், ஜான் பெல்லமி ஃபாஸ்டர். அந்நூல் முதன்முதலாக ‘மன்த்லி ரெவ்யூ’ நிறுவனத்தால் 2000 ம் ஆண்டு நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கத்தை தமிழில் தந்துள்ளவர் மு.வசந்தகுமார் சூழலியல் பற்றிய ஒரு சிறந்த கோட்பாட்டிற்கான வளமான தத்துவத்தை மார்க்சியம் எவ்வாறு அடிப்படையாகக்கொண்டுள்ளது என்பதை ஆழமாகவும், அழகாகவும் விளக்கும் சிறந்த நூலாக இது விளங்குகிறது. இந்நூல் எடுத்தாளப்பட்டுள்ள மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் பிற புகழ்பெற்ற மார்க்சியர்களின் மேற்கோள்களையும் அவர்தம் கருத்துக்களையும் சுருக்கமாக தொகுத்தளிக்கிறது இக்கட்டுரை.





முதலாளித்துவம் இயற்கையின் எதிரி


 கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையிலான பிரிவினை உடலுழைப்பிற்கும், மூளை உழைப்பிற்குமான முக்கியமான பிரிவினையாகும். உழைக்கும் மக்களை அறிவு சார்ந்த தேவைகளிலிருந்து விலக்கி வைக்கிறது. மற்றொரு பகுதியை பொருள் சார்ந்த தேவைகளிலிருந்து விலக்கி வைக்கிறது. புரட்சியின் முதல் கடமை கிராமங்களுக்கிடையேயான பிரிவினையை ஒழிப்பதே. இதற்கு பொருள் இயற்கையை வெறுத்து ஒதுக்குவதல்ல. மக்கள் தொகையை பரவலாக்கவேண்டும். மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான நீடித்த உறவை வளர்க்க வேண்டும். எந்திரம், தொழில்மயம் ஆகியவை  கொண்ட எந்திரரீதியிலான  புரோமிதியனிசமல்ல மார்க்சின் நோக்கம். முதல் பிரிவில் முதலாளியத்தின் சாதனைகளை புகழ்ந்து அவர்களை வீரர்களாக காட்டுவது, உலகமயத்தை பாராட்டுவது என்பது அவற்றின் மீதான விமர்சனக்கண்ணோட்டத்தை விட்டுவிட்டார் என்பது பொருளல்ல. இயற்கையில் இருந்து மனிதன் அந்நியமாதலை அவர்கள் புரிந்திருந்தார்கள்.


விலங்குகளின் கழிவு மண்ணை சேரும்போது அது மண்ணை வளப்படுத்தும். அதை இடிப்பது பயன்றற விரயமாகும். விலங்குகள், மனிதர்களின் கழிவுகளை மண்ணில் சேர்க்கும்போது உரத்தின் தேவை குறைகிறது. லண்டன் தனது வளத்தில் ஆதாரமான பூதாகரமான கழிவுகளை தினமும் தேம்சில் சேர்க்கிறது. அது செல்லும் வழியெல்லாம் தன் துர்நாற்றத்தால் துன்புறுத்துகிறது-ஆண்டர்சன். முதலாவது வேளாண்மைப்புரட்சி படிப்படியாக பல நூற்றாண்டுகளில் நடந்தேறியது. நிலம் பிடித்தல், உரமிடல் , பயிர்சுழற்சி, நீர் பாசனம், கால்நடை, சந்தை போன்றவை வளர்ந்தன.


இரண்டாவது வேளாண்மைப்புரட்சி 1830-1880 க்கு இடையில் செயற்கை உரம், மண் வேதியியல் பிளவு கொண்டது. மூன்றாவது வேளாண்மைப்புரட்சி இருபதாம் நூற்றாண்டில் எந்திரங்கள் விலங்குகளின் இடத்தைப்பிடித்தல், கால்நடைகளை இறைச்சிக்காக கொழுக்கவைத்தல், மரபீனி மாற்றம், தீவிர வேதியல் உரம், பூச்சிக்கொல்லி பயன்பாடு கொண்டது. 1860 ல் மார்க்சுக்கு முதலாளிய வேளாண்மையின் உயிரின வாழ்க்கைச் சூழல் கேடு பற்றிய புரிதல் இருந்தது.


1837 ல் வேதியியலுக்கும் வேளாண்மைக்கும் உள்ள உறவு பற்றி ல¦பிக் எழுதினார். தாவர வளர்ச்சியில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றின பங்கை விளக்கினார். 1842 ல் கரையும் பாஸ்பேட் தயாரிக்கப்பட்டது. 1846 ல் சூப்பர் பாஸ்பேட் உற்பத்தி தொழிற்சாலையைக் கட்டினர். முதலில் இவை நல்ல பயனை அளித்தபோதும் பின்னர் மண்வளம் குறைந்தது. பெரு கடற்கரைகளில் கடற்பறவை எச்சத்தால் உரமூட்டப்பட்ட மண்ணை கப்பலில் ஏற்றிவர அமெரிக்காவும், ஐரோப்பியநாடுகளும் போட்டியிட்டன. உரத்தேடலில் எந்தத்தீவும் மிஞ்சவில்லை. கடற்பறவைகளின் எச்சம் தீர்ந்து உரத்தட்டுப்பாடு உண்டானது. நைட்ரஜன் பற்றாக்குறையை எதிர்கொள்ள செயற்கை நைட்ரஜன் தயாரிக்கவேண்டிய சூழலுண்டானது. 1913 ல் ஃபிரிட்ஸ் ஹாபர் என்பவர் போருக்கான வெடிமருந்து நரம்ப வாயுக்களின் கலவையாக நைட்ரஜன் உரத்தொழிற்சாலையை தொடங்கினார். 1832 ல் நியூயார்க் வேளாண்மைச்சங்கம் தொடங்கப்பட்டது. 1834 ல் சாகுபடியாளர் என்ற இதழ் ஜோஸ் பூயலால் தொடங்கப்பட்டது. நவீன விவசாயமுறைகளை பிரிட்டனிடமிருந்து கற்றுப்பரப்பியது. இங்கிலாந்தின் ல¦பிக் என ஜேம்ஸ் எஃப் டபிள்யூ.ஜான்சன் வட அமெரிக்காவில் பயணம் செய்து மண்ணின் வளம் பற்றி ஆய்வு செய்தார்.


மனிதன் என்பதன் பூமியிடமிருந்து கடன் பெற்றவன். அவன்தான் பெற்ற கடனைத் திரும்ப செலுத்தாதபோது, கடன் கொடுத்தவன் போல நிலம் அவனை வெளியேற்றுகிறது என்றார் அமெரிக்க பொருளாதார அறிஞர் ஹென்றி கிரே.


நமது பூமியை பலியிட்டும், ஊதாரித்தனம் மூலமும் ஆண்டுதோறும் மண்ணின் உள்ளார்ந்த உயிராற்றலை இழந்து வருகிறோம். எவ்வளவு உற்பத்தி செய்தோம் என்ற பொருளாதார கேள்விக்கு பதில் நம் உற்பத்தியில் எவ்வளவு மண்ணுக்கு கொடுக்கிறோம் என்பதாகவே இருக்கவேண்டும். பூமியின் மூலதன இருப்பை கொள்ளையிட பயன்படுத்தும் உழைப்பு, வீணாக்கப்பட்ட உழைப்பே. வறுமையை நம் தலைமுறைக்கே வழங்குவதாகும். மனிதன் பூமியின் குத்தகைதாரன். மதிப்பு குறைந்த பூமியை தனது வாரிசுகளுக்கு வழங்கினால் அவன் குற்றம் செய்தவனாகிறான்.


நிலத்தை சூறையாடும் சாகுபடி வறுமைக்கு வழிவகுக்கும் அமெரிக்க உழவரின் உயர் வேளாண்மை வெளிப்படையான இயற்கை சூறையாடல், மண் வளம் இடித்தல், மனித விலங்கு கழிவுகளால் நகரம் அசுத்தமடைவதுடன் பிணைக்கப்பட்டது. சாக்கடை நீரில் உள்ள ஊட்டச்சத்தை மண்ணுக்கு வழங்கும் மறு சுழற்சி அவசியம். நகரங்களில் வசிப்போரின் திட, திரவக் கழிவுகள் எந்த இழப்புமின்றி சேகரிக்கப்பட்டு, உழவர்கள் நகருக்கு வழங்கிய உணவுப்பொருட்களுக்கு இணையான கழிவைப்பெற முடியுமானால் அவரது நிலத்தின் உற்பத்தித் திறன் குறையாமல் காக்கப்படும். தேம்ஸ் நிலை பற்றி ல¦பிக்கின் கருத்து நவீன வேளாண்மையின் அழிக்கும் பகுதி பற்றிய பார்வை அழிக்கமுடியாத அவரது சிறப்பு ஆகும் என்கிறார் மார்க்ஸ். முதலாளித்துவத்தின் கீழ் வேளாண்மை தன்னைத்தானே காத்து பேணும் தன்மையை இழந்துவிட்டது. இயற்கையான தன்னெழுச்சியானதை தனக்குள் இனியும் சுதந்திரமாகக் கொண்டிருக்கமுடியாது என்கிறார் மார்க்ஸ்.


பெரும் நிலவுடைமை வேளாண்மையில் உள்ள மக்கள் தொகையை எப்போதும் குறைந்தபட்சமாகக் குறைத்துவிடுகிறது. தொழிற்துறை மக்களுடன் முரண்படவைக்கிறது. மண்ணின் உயிராற்றல் கொள்ளையடிக்கப்படுகிறது. பெருவீதத் தொழிற்துறையும், பெருவீத வேளாண்மையும் ஒரே விதமான விளைவுகளையும் கொண்டுள்ளன. கழிவை உண்டாக்குகிறது. மனித உழைப்பை அழிக்கிறது. மனிதனின் இயற்கை ஆற்றலை அழிக்கிறது. மண்ணின் இயற்கை ஆற்றலை அழிக்கிறது என்ற மூலதனத்தில் குறிப்பிடுகிறார் மார்க்ஸ்.


முதலாளிய முன்னேற்றம் என்பது தொழிலாளியைக் கொள்ளையடிக்கும், மண்ணைக்கொள்ளையடிக்கும் கலையின் முன்னேற்றமாகும். மண்ணின் வளத்தை நீடிக்கும் வளத்தின் மூலாதாரத்தை அழிக்கும் முன்னேற்றமாகும்.


லாபத்தின் மீதான ஆசை, இங்கிலாந்து மண்ணை வெறுமையாக்கிவிட்டது. பெருவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பறவைகளின் எச்சத்தைக்கொண்டு இங்கிலாந்தின் வயல்களை வளப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.


உழைப்பு என்பது மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையிலான ஒரு நிகழ்வுப்போக்காகும். அதன் மூலமே தனது சொந்தநடவடிக்கைகள் மூலம் இயற்கையுடன் உயிர்ப்பொருளாக செயல்பட்டுத் தொடர்பு கொள்கிறான்.முறைப்படுத்துகிறான். உடலின் செயல்பாடு மூலம் இயற்கை மீது செயல்பட்டு மாற்றுகிறான். இந்த உழைப்பு மனித இருக்கைக்கான இயற்கையின் நிரந்தர நிபந்தனையாகும். உண்மையான உழைப்பு என்பது மனிதனின் தேவைகளை நிறைவு செய்வதற்காக இயற்கையை தனதாக்கிக்கொள்ளும் செயல்பாடாகும் பொருளாதாரம் மற்றும் தத்துவக்குறிப்புகள்.


மண்ணின் ஊட்டச்சத்துக்களை மீண்டும் மண்ணுக்குத் தர தவறியதன் விளைவுதான் நகரத்தின் அசுத்தங்கள். நவீன சாக்கடை முறைகள் அறிவுக்கு முரணானவை. லண்டனின் 45 லட்ச மக்களின் கழிவுகளை பெரும் பொருட்செலவில் தேம்சை மாசுபடுத்தியதை விட பெரிதாக அவர்கள் எதனையும் செய்துவிடவில்லை என்கிறார் மார்க்ஸ்.


நாட்டின் மக்கள் தொகையை கூடுமானவரை சீராகப் பரவியிருக்கும் வகையில் தொழிற்துறையையும், வேளாண்மையையும் நெருங்கிய தொடர்பு கொண்டதாக மாற்றவேண்டும்.


நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலான பகை கொண்ட உயிர்ப் பொருளாக்க செயல்பாட்டுப்பிளவை உலக அளவில் பார்த்தார். குடியேற்ற நாடுகளின் மண்ணும், மூலாதாரங்களும் ஏகாதிப்பத்திய நாடுகளின் தொழில்மயமாக்கலுக்காக கொள்ளையடிக்கப்பட்டன. இங்கிலாந்து அயர்லாந்து மண்ணை மறைமுகமாக ஏற்றுமதி செய்கிறது. எதிர்காலத்தலைமுறைகளின் தேவைகளுக்கான மூலதனத்தை பாதிக்காத வகையில் இன்றைய தலைமுறை நிறைவு செய்து கொள்ளும் வளர்ச்சி தேவை.


ஒரு நாடோ, சமூகமோ, புவியின் உடமையாளர்களல்ல. புவியை பயன்படுத்துபவர்கள் அதனை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லவேண்டும்.


முதலாளியம் உருவாக்கிய திறன்களை தனக்குள் வாங்கி, முதலாளியம் போன்று மண்ணை சுரண்டி கொள்ளையடிக்கும் பண்பை சோசலிசம் பெற்றிருக்காது. முதலாளிய வேளாண்மை அறிவார்ந்த வேளாண்மைக்கு எதிரானது.


நம்முடைய ஆற்றல்களை நிலக்கரி, கனிம வளங்களை ஊதாரித்தனமாக செலவு செய்து வருகிறோம். பொதுவாக நாகரிக வளர்ச்சியும், தொழில்வளர்ச்சியும் வளங்களை அழிப்பதில் முன்நிற்கின்றன. நிலவுடையாளர்களின் பேராசை மூலம் வளமான மண்ணை ஃபிர் மரங்களை மட்டும் வளர்க்க முடியும் என்றளவுக்கு வெறுமையாக்கிவிட்டார்கள் - ஏங்கெல்ஸ்.


இங்கிலாந்தில் உள்ள வளங்கள் உண்மையானவை அல்ல. வனங்களில உள்ள மான்கள் கூட வேட்டையாடுபவர் தேவைக்காக வீட்டு கால்நடைகள் போல, பருத்த அடக்கமானவைகளாக வளர்க்கப்பட்டு உள்ளன.வனத்திற்கான மான்களாக அவையில்லை. பிற விலங்குகளுக்கு மேலாக மனிதனைத்தெய்வ நிலைக்கு உயர்த்தும் கருத்து முதல்வாதத்தை ஏங்கெல்ஸ் எதிர்த்தார். விலங்குகளை எந்திரத்திற்கு மாற்றாக காணும் பார்வை மார்க்சிடம் இல்லை.


மூலதனம் இயற்கை இலவசமாக தரும் பரிசு எனக்குறிப்பிட்டதன் மூலமாக செல்வத்தை உருவாக்குவதில் உள்ள இயற்கையின் பங்களிப்பை மார்கஸ் உணரவில்லை என்ற விமர்சனம் உண்டு. புவி மூலதனத்திற்கான இயற்கையின் பரிசு, நிலத்திற்கு உற்பத்தி விலை இல்லை. இது மீண்டும் உற்பத்தி செய்யமுடியாத இயற்கையின் பரிசு.


இயற்கை எந்திரங்களையோ, தொடர்வண்டிப் பாதைகளையோ, மின்சாரத்தையோ, தானியங்கி நூற்புக் கருவிகளையோ உருவாக்குவதில்லை. இவை இயற்கை மீது செயல்படும் மனித உறுப்புகளின் நீட்சியாக மாற்றப்பட்ட இயற்கைப்பொருட்களே மனிதக்கரங்களால் படைக்கப்பட்ட மனித மூளையினால் படைக்கப்பட்ட, புறநிலையாக்கப்பட்ட அறிவின் ஆற்றல். உழைப்பு என்பது உயிர்வாழும் வடிவத்தை வழங்கும் நெருப்பு. பொருட்களின் மாறுகின்ற தன்மை, அவற்றின் நிரந்தரமற்ற தன்மைகள் அவற்றின் வாழ்நாள் ஆகியவற்றை மாற்றுகிறது உழைப்பு. உழைப்பு பொருள்வகைப்பட்ட செல்வத்தின் தந்தை பூமி, இயற்கை அதன் தாய்.


முதலாளியம் விவசாய உற்பத்தியில் ஒரு நீண்ட சிக்கலில் அகப்பட்டுள்ளது. அதற்குக் காத்து பேணும் உற்பத்திமுறையை பின்பற்றாததே காரணம். உணர்வுபூர்வமான முறைப்படுத்தலின்றி, தன்னெழுச்சி வழியில் முன்னேறினால் பாலைவனங்களே மிஞ்சும். இதற்கு உதாரணம் மெசபடோமியா. பெர்சியா. கிரிஸ் போன்ற நாடுகள். உற்பத்தியில் வீணாகும் பொருட்களை குறைத்தல், பயன்படுத்துதல், மீண்டும் பயன்படுத்துதல் என்ற தலைப்பில் மூலதனம் மூன்றாவது தொகுதியில் மார்கஸ் எழுதுகிறார். காத்துப்பேணும் முறையில் ஆழ்ந்த அக்கறை காட்டுகிறார். சோசலிசத்துடன் இயற்கையை காத்துப்பேணும் உறவு தானாகவே வந்து விடும என்று அவர் நம்பவில்லை. மாறாக, வளர்ச்சி பசுமைப்பிளவை அகற்றுதலில் திட்டமிடுதலின் அவசியத்தை வலியுறுத்தினார். அதை மக்கள் தொகை சீராக பரவச்செய்தல், வேளாண்மை இணைப்பு, மண் ஊட்டச்சத்து மேம்படுத்தும் மறு சுழற்சி, பூமியுடனான மனித உறவில் புரட்சிகரமாற்றம் பற்றி விவாதித்தார். இயற்கையின் உயிர்ப்பொருளாக்க செயல்பாட்டை அறிவார்ந்த வழியில் நிர்வாகிக்க வேண்டுமென்றார்.


முதலாளிய வர்க்கம் பிளவுப்பண்பு கொண்டது. மக்களுக்கும் பூமிக்கும் பிளவில் வேர் விட்டுள்ளது. மக்களுக்கும் மண்ணுக்கும் உள்ள உறவை அறுத்து, பலவந்தமாக வெளியேற்றுவதன் மூலமாக தனிவுடமை தோன்றுகிறது. தொழிலாளியின் இயற்கையான பணிமனையான மண்ணிலிருந்து அவனை பிரிக்கிறது. இந்ந உயிர் உறவை அழிப்பதில் முதலாளியம் முன்னிற்கிறது. வேளாண் உற்பத்தியாளர்கள், உழவர்களிடமிருந்து உடமைகள் பறிக்கப்பட்டதில் முதலாளியும், முதலாளிய பண்ணையாளர்களும் தோன்றினர். சாகுபடி நிலங்கள் செம்மறியாடு வளர்க்க மாற்றப்பட்டன. உழைப்பாளிகள் உடமை இழந்தனர். நகரங்களில் உற்பத்திசக்தியை விற்கும் தொழிலாளர்களானார்கள். இங்கிலாந்து ஒரு வினோத பூமி. செம்மறியாடுகள் மனிதரை விழுங்குகின்றன. கத்தோலிக்க திருச்சபை இங்கிலாந்தின் பெரும்பகுதி நிலங்களை வாங்கியது. நிலம் அபகரிக்கப்பட்டதால் விவசாயிகள் விரட்டப்பட்டனர். 18 ம் நூற்றாண்டில் சிறு நில உரிமையாளர்கள் முற்றிலும் காணாமல் போயினர். 19 ம் நூற்றாண்டில் நிலத்திற்கும், உழைப்பாளிக்குமான உறவு மறந்தே போனது.


சுதர்லாந்தின் கோமாட்டி 1814 ல் அப்பகுதியை செம்மறியாடு வளர்ப்பு நிலமாக்க 3000 குடும்பங்களில் 15000 பேரை வேட்டையாடி வெளியேற்றி, கிராமங்களை தீ வைத்து எரித்தாள். எட்டு லட்சம் ஏக்கர் நிலத்தை மக்களிடமிருந்து பறித்துக்கொண்டு, பயன்பாடற்ற 9000 ஏக்கர் நிலத்தை கடற்கரையில் தந்து குடியேற்றினாள். பல்லாண்டுகளாக விவசாயம் செய்து வந்த பூமியை ஏக்கர் இரண்டரை ஷில்லிங் குத்தகைக்கு பிடுங்கினாள். 1825 ல் கேல் ஸ்காட்லாந்து பழங்குடி மக்களின் இடத்தை 1,31,000 ஆடுகள் பிடித்துக்கொண்டன. கடலில் மீன் பிடித்து வாழச் சிலர் ஓடினர. நீரிலும், நிலத்திலும் வாழ முடியாமல் தவித்தனர் மக்கள்.


முதலாளிய பண்ணையாளர்கள், தொழில்துறை முதலாளிகள் தோற்றம் பற்றி மார்க்ஸ் எழுதினார். 14 ம் நூற்றாண்டில் பண்ணை முதலாளிகள் மெல்லத்  தோன்றினர். பதினைந்தாம் நூற்றாண்டில் வேளாண்மைப்புரட்சியும், நில அபகரிப்பும் நிகழ்ந்தன. ஆனால் தொழில்துறை முதலாளிகள் திடீரென எழுந்தனர். அமெரிக்காவில் தங்கம், வௌ¢ளி கண்டுபிடிக்கப்பட்டது. அக்கண்டத்தில் மக்கள் வேட்டையாடப்பட்டு, நிலம் பிடுங்கப்பட்டு, அடிமைகளாக்கப்பட்டனர்.சுரங்கங்கள் அவர்களின் கல்லறையானது. இந்தியா கொள்ளையடிக்கப்பட்டது. ஆப்பிரிக்கா வணிக வேட்டைக்களமானது. கருப்பின மக்கள் அடிமைகளாக உற்பத்தி கருவிகளாக்கப்பட்டனர். இது முதலாளிய உற்பத்தி சகாப்தத்தின் ஆரம்பமானது.


மலிவான கூலிக்கு தொழிலாளர்களை வரவைக்க ஒரே வழி செயற்கையாக நிலத்தின் மதிப்பை உயர்த்துவதுதான். தொழிற்சாலையிலிருந்து ஏழைகள் விலகி விவசாயிகள் ஆகி விடாமல் இருக்க செய்த சதி இது. மண்ணிலிருந்து மனிதர்களை அந்நியமாக்குவது தவறு. இது ஒழிக்கப்படவேண்டும். (க்ரண்ட்ரிசில்- மார்க்ஸ்)


மனிதனை வெற்றிடத்தில் அடைப்பதற்கு சமமானது இது. அவனை பிரிப்பது, பின் அவனை உங்கள் விருப்பப்படி வாழ்வதைத் தவிர்த்து அவனுக்கு வேறு வழிகள் இல்லை. நகரத்தையும் கிராமத்தையும் இணைப்பதன் மூலம் காற்று, நீர், நிலம், மாசுபட்டு வருவதை கட்டுப்படுத்த முடியும். அது நகரமக்கள் நோயுற்று, ஆற்றல் இழக்கும் நிலையை மாற்றும். நகரின் கழிவுகள் மாசுபடுத்தி நோய் உண்டாக்குவதற்கு மாற்றாக பயிர் உற்பத்திக்கு பயன்படும் - ஏங்கெல்ஸ்.


வில்லியம் மோரிஸ் சிறந்த வடிவமைப்பாளரும், கைவினை கலைஞரும், மார்க்சிய சோசலிச ஆதரவாளரும் இங்கிலாந்தில் பசுமை சிந்தனை உருவாக்கியவரும் ஆவார். எங்குமில்லாத இடத்திலிருந்து ஒரு செய்தி என்ற நூலில் சந்தையை தூக்கியெறிந்த சமூகம் ஒன்று பற்றி எழுதுகிறார். செயற்கையான தேவையற்ற, லாபத்திற்கு மட்டுமேயான எனும் உற்பத்தி குறையும். உண்மையான கலைத்திறனுக்கு நேரம் கிடைக்கும். வேலை என்பது படைப்பாக்கம் கொண்டதாகிறது. மக்கள் நகரங்களை விட்டு கிராமங்களில் வந்து குடியேறுகின்றனர். கிராமம் நகரம் வேறுபாடு குறைகிறது. நகரங்களில் நாற்றம், சூதாட்டமன்றங்கள், மாறி எதையும் வீணடிக்காத, சுத்தமான, பசுமை நிறைந்த மக்கள் தொகை பரவலாகி மாறுகிறது என்கிறார். இது மார்க்சின் கருத்துக்கு நெருங்கியது.


டார்வின்


டார்வின் உயிரினங்களின் உருமாற்றம் பற்றிய தனது கோட்பாட்டினை சுருக்கத்தை 1842 ல் மென்மையான பென்சில் கொண்டு எழுதினார். இரண்டு ஆண்டுகளுக்கும் பின் 50000 வார்த்தைகள் கொண்ட விளக்கவுரையை எழுதினார். தனது கண்டுபிடிப்பின் இருபது ஆண்டுகளுக்கும் பிறகு 1858 ல் தனது ஆய்வுப்போட்டியாளர் ஆல்பிரட் ரஸ்சல் வாலஸ் உடன் இணைந்து கட்டுரைகளாக வெளியிட்டார். வாலஸ் தன்னை முந்திவிடுவாரோ என்ற அச்சம்தான் இதற்கு காரணம்.


வரலாற்றை மாற்றும் சிந்தனை கொண்ட நூலை எழுதுவதில் தாமதம் காட்டிய டார்வின் சிப்பிகள் பற்றிய பல தொகுதி நூல்களை எழுதிக்கொண்டிருந்தார். தனது ஆங்கலிகன் புராட்டஸ்டண்ட் மதக்கோட்பாடுகளுக்கு ஏற்றபடி தனது ஆய்வை வெளியிடமுடியுமா என்று தாமதித்த, மேல்தட்டு மக்களின் மதிப்பை இழக்கவிரும்பாத தயக்கமுள்ள புரட்சிக்காரர் எனலாம். டார்வின் தன்னுடைய மற்றும் மனைவியின் பணத்தை புதிதாக போடப்பட்டு கொண்டிருந்த இருப்புப்பாதையில் நல்ல லாபம் வரும் என்ற நம்பிக்கையில் முதல¦டு செய்தவர். அறிவியல்ரீதியில் புரட்சிகரமானவர், சமூகரீதியில் அல்ல.


டார்வின் கால இங்கிலாந்து அதிருப்தி, கோபம், மத எதிர்ப்பு, சமூக சீர்திருத்தம், கிளர்ச்சிகள் என கொதிகளன் போல இருந்தது. வரும் முன் உரைக்கும் பகுத்தறிவு ஏட்டை மத நம்பிக்கை எதிர்ப்பவர்கள் நடத்திக்கொண்டிருந்தனர். டார்வினும், எம்மாவும் மகத்தான வேலை நிறுத்தப் போராட்டக் குழப்பச் சூழலிலிருந்து தப்பிக்க லண்டன் நகரை விட்டு கிராமத்து வீட்டுக்கு சென்று விட்டனர்.


திருச்சபையின் அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் பொருள் முதல்வாதச் சூழலில் மீளாப் பழிக்கு ஆளாகும் ஆய்வுகளை வெளியிடத்தயங்கினார். மனிதனையும் குரங்கையும் இணைக்கும் ஆய்வு மத நம்பிக்கைக்கும், திருச்சபைக்கு எதிரானவர் என சபிக்கப்படும் ஆபத்தை உணர்ந்தவர் அவர். தமது சமூக மதிப்பை இழந்துவிடக்கூடும் என அஞ்சினார். தனது ஆய்வை வெளியிடுவது பழையமத ஒழுங்கை காட்டிக்கொடுக்கும் துரோகமாகிவிடக்கூடும் என்று பயந்து தமது பழமைவாத நண்பருக்கு கடிதம் எழுதினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் மிருகம் வாழும், அல்லாதன ஒதுக்கப்படும் என்ற பரிணாம வளர்ச்சிக்கருத்து ஏற்கனவே லூக்ரட்டிசிடம் இருந்தது.(கி.மு 55)


கேம்பிரிட்ஜ் நாட்களின் டார்வின் ஆழ்ந்த மதப்பற்றுள்ள கிறிஸ்தவர். தாத்தா எராஸ்மஸ் பலவீனமான இறை நம்பிக்கைவாதி. தந்தை ராபர்ட் நாத்திகர். அக்கால இயற்கைவாதிகள் அனைவரும் மதகுருமார்களே. பீகல் பயணத்தில் தனது உயிரின உருமாற்ற கருத்துகளை கட்டியமைத்தார். பீகல் கப்பல் பயணம் பற்றிய இதழ் வெளியீடு அவருக்கு புகழ் சேர்த்தது. நுணுக்கமான ஆய்வுகள் செய்யாத எவரும் உயிரினங்களின் தோற்றம் பற்றி ஆய்வு செய்ய உரிமை இல்லை என்ற ஹூக்களின் கருத்து தயக்கம் தந்தது. சிப்பி பற்றி ஆய்வு செய்து தன்னை அறிவியலாளராக நிலைநிறுத்திக்கொண்டார். பின் 1856 ல் உயிரின உருமாற்றம் பற்றி எழுதினார். காலம் கனிந்தது. பொருள் முதல்வாத விவாதம் சமூக மையம் பெற்றது. தாமஸ் ஹக்ஸ்லியின் தோற்றம் நூல் வெளிவந்தது. 1850 ல் உருமாற்றம் பற்றிய படைப்பு பற்றிய இயற்கை வரலாற்றின் சுவடுகள் நூல் ஆசிரியர் பெயரின்றி வெளிவந்தது. 1858 ல் வாலசின் இயற்கைத்தேர்வு பற்றிய நூல் வெளிவந்துவிடுமோ என பயந்த டார்வின் தனது கோட்பாட்டை வெளியிடவும், வாலசுடன் கூட்டறிக்கை வெளியிட்டார். முடிவுறாத நீண்ட பணியில் சுருக்கம் என்ற குறிப்புடன் உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை வெளியிட்டார்.


தகுதியுள்ளதே வாழும் என்ற இயற்கைத் தேர்வு மூலம் மால்தூசின் மக்கள் தொகைக் கொள்கைக்கு டார்வின் நெருங்கினார். அது சமூக டார்வினியம் எனப்பட்டது. அமெரிக்காவில் வில்லியம் கிரஹாம்  சம்ளர் கோடீஸ்வரர்கள் இயற்கைத் தேர்வின் விளைவு என்று வாதாடினார். பெரு முதலாளிகளின் வளர்ச்சி, தகுதியானது வாழும் என்பதாகும் என்பதால் அமெரிக்க கோடீஸ்வரர்கள் ஆதரித்தனர். இதை டார்வின் விரும்பவில்லை என்ற போதும் இன்று வரை செல்வர்களுக்கு உதவும்வகையில் பயன்படுகிறது. படிமுறை வளர்ச்சி என்பது முதல் பதிப்பில் வலியுறுத்தப்படவில்லை. எனினும் டார்வின் தனது படைப்பின் சுவடுகள் குறிப்பேட்டில் உயர்வானது, தாழ்வானது என்று ஒன்றுமில்லை என்று எழுதியுள்ளார்.


உறுதியான பொருள் முதல்வாத கருத்து கொண்டிருந்தபோதும் டார்வின் தனது சிந்தனையை மறைத்துக்கொள்பவராக இருந்தார். 1867 ல் மூலதனம் முதல் தொகுதி வெளியானது. அதில் டார்வினின் படைப்பை, சகாப்த்த்தை உருவாக்கும் பணி என்று போற்றினார்.


உயிரினங்களின் தோற்றம் நூல் 1859 ல் நவம்பரில் வெளியானது. 1200 பிரதிகளும் அன்றே விற்றுப்போனது. ஏங்கெல்ஸ் அந்நூல் பற்றி டிசம்பரில், டார்வினின் நூல் மிகச்சிறப்பாக உள்ளது, இயற்கையின் படிமுறை வளர்ச்சியை விளக்க இத்தகைய பெரும் முயற்சி இதுவரை இல்லை. ஆனால் கரடுமுரடான ஆங்கிலத்தை பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று மார்க்சுக்கு எழுதினார்.


டார்வினின் நூல் மிக முக்கியமானது. எனது நோக்கத்திற்கு பொருத்தமானது வர்க்கபோராட்டத்திற்கான அடிப்படையை இயற்கை அறிவியல் வழங்குகிறது இயல்திட்ட வாதத்திற்கு மரணஅடி என்றார் மார்க்ஸ்.


குரங்கிலிருந்து மனிதனாக மாறுவதில் உழைப்பின் பங்கு பற்றி ஏங்கெல்ஸ் எழுதினார். மனிதனின் கைகள் அதிக முழு வளர்ச்சி பெற்றுள்ளன. அதன் விளைவே ராஃபெல்லியின் ஓவியங்கள், வால்ட்சனின் சிற்பங்கள், பாகனினியின் இசை என்கிறார் ஏங்கெல்ஸ்.


டார்வின் 1873 ஜூன் 16 மார்க்ஸ் எழுதிய கடிதத்திற்கு பதில் எழுதினார். மூலதனம் பற்றிய உங்களது மாபெரும் படைப்பு எனக்கு அனுப்பியதன் மூலம் என்னை மரியாதை செய்துள்ளீர்கள். நன்றி. ஆழமான முக்கியப்பொருளான அரசியல் பொருளாதாரத்தை மேலும் அதிகமாக புரிந்து கொள்வதன் மூலம்ம அந்த நூலைப்பெறும் தகுதியுடையவாக்கி கொள்ள முயல்கிறேன். நம் ஆய்வுகள் வேறுபட்டதாக இருந்தாலும், நாம் இருவரும் அறிவை விரிவடையச் செய்வதில் மிகவும் உள்ளவர்களாக உள்ளோம். இது நீண்ட காலப்போக்கில் உறுதியாக மனிதகுலத்திற்கு மகிழ்ச்சியைச் சேர்க்கும் எனக்குறிப்பிட்டிருந்தார்.


1881 செப்டம்பர் 28 அன்று நடைபெற்ற விருந்தில் டார்வின் தான் இறுதியாகத் தனது நாற்பதாவது வயதில் கிறிஸ்தவ மதத்தை முழுமையாக கைவிட்டதாக ஒப்புக்கொண்டார். மதத்தை தாக்கவிரும்பவில்லை என்றும் கடவுளை அறிவொண்ணாக் கொள்கை கொண்டவராகவும் கூறினார். 1882 ஏப்ரல் 19 டார்வின் இறந்தார். 1883 மார்ச் 14 அன்று மார்க்ஸ் இறந்தார்.


வரலாற்றை இயற்கை பற்றிய வரலாறு, மனிதன் பற்றிய வரலாறு எனப்பிரிக்க முடியும். அந்த இரண்டும் தனித்தனியே சுதந்திரமாக உள்ளன என்று கூற முடியாது. மனிதன் வாழும் வரை இயற்கையும் மனிதனும் ஒன்றின் மீது ஒன்று செயல்புரிந்து கொண்டே இருக்கும் - மார்க்ஸ், ஏங்கெல்ஸ்(ஜெர்மன் சித்தாந்தம்). மார்க்ஸ் ஏங்கெல்சுக்குப்பின் அவர்களின் தத்துவவேர்களை அங்கீகரிக்கத்தவறியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.


இயற்கையின் மீது மனிதன் கொண்ட வெற்றிகள் மீது நாம் நம்மை புகழ்ந்து கொள்ளத்தேவையில்லை. அத்தகைய ஒவ்வொரு வெற்றிக்கும், இயற்கை நம்மை பலமுறை பழிவாங்கி விடுகிறது. இயற்கையை அழிக்கும்போது, முதலில் சாதக விளைவுகளும் பின் பெரும் அபாயமாக அந்நிலை மாறி, முதலில் பெற்ற பலன்களை அழித்துவிடுகிறது.


கிரீஸ், மெசபடோமியா, எகிப்து போன்ற பகுதிகளில் விவசாயத்திற்கான நிலம் பெறுவதற்காக வனங்களை அழித்தனர். அத்துடன் நீர்நிலைகளும் அழிந்தன. அதுவே இன்றைய நிலைக்கு அடித்தளமானது என்பதை அவர்கள் கனவு கூட கண்டிருக்கமாட்டார்கள். இத்தாலியர்கள் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியல் பைன் மரங்களை அழித்தார்கள். வட பகுதியில் பைன் மரங்களை வளர்த்தார்கள். அதுவே அவர்களின் பால்பண்ணைகளின் அழிவுக்கு காரணமாகப்போகிறது என்பதை அவர்கள் உணரவில்லை. ஆல்ப்ஸின் நீரூற்றுகள் வலைகளை அழித்ததால் வறண்டன. மழைக்காலங்களில் பெரும் வௌ¢ளத்திற்கு காரணமானது.


இம்முறை ஒரு அந்நிய எதிரியை வென்று ஆட்சி செலுத்துவது போல இயற்கையை வெல்ல முடியாது. நாம் இயற்கைக்கு வெளியே நிற்பவர்கள் அல்ல. நாம் நமது தசை, எலும்பு, மூளை, இதயம் ஆகியவை இயற்கையுடன் இணைந்தவை. இயற்கையுடன் வாழ்பவர்கள், இயற்கையைப் புரிந்துகொண்டு கற்று, சரியாகப் பயன்படுத்துவதில் மற்ற எல்லா உயிரினங்களைவிட நமக்கு அனுகூலமும், கடமையும் உள்ளது என்பதில்தான் நமது இயற்கையின் செயல்பாடு அமைகிறது என்கிறார் ஏங்கெல்ஸ்.


மனிதனுக்கு உணவு எப்படியோ மண்ணுக்கு உரம். அப்படி உணவு போல உரமும் பலவகைப்பட்டது. பயிர் மண்ணிலிருந்து எவ்வளவு வேதியல் பொருட்களை எடுத்ததோ, அதே அளவு திருப்பித்தரவேண்டியது அவசியம். நகரங்கள் ஏராளமான உணவை மண்ணிலிருந்து பெறுகின்றன. எனவே கால்நடைகள், மனிதர்களின் கழிவை மண்ணின் வேதியல் ஊட்டச்சத்தை மேம்படுத்த மீண்டும் தரப்பட வேண்டும். இதைச் செய்யாததால் நகரிலிருந்து தொலைவில் உள்ள பண்ணைகள் உரமின்றி துயருகின்றன. கிராமங்களில் இது போதுமான அளவு இல்லை. இதனால் மண்வளமிழக்கிறது. விளைச்சல் குறைகிறது. கையருகில் கிடைக்கும் உரத்தைவிட்டு விட்டு அப்பாலிருக்கும் உரத்தை இறக்குமதி செய்வது தலைகீழானது.


கார்ல் காவுட்ஸ்கி தனது வேளாண்மை பிரச்சனை என்ற நூலில் கிராமப்புறத்தின் மீதான நகரத்தின் சுரண்டல் என ஒரு பகுதியை எழுதியுள்ளார். மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சத்தை மண்ணுக்கு மீண்டும் தருவது. பூச்சிக்கொல்லி பயன்பாட்டால் பறவைகள் இறத்தல், இலை உதிர்க்கும் மரங்களை வெட்டிவிட்டு வேகமாக வளரும் கூம்பு மரங்களை வளர்த்தல் பற்றியெல்லாம் எச்சரித்தார். லெனின் வேளாண்மை பிரச்சனைகளையும், மார்க்ஸ் பற்றிய விமர்சனங்கள் நூலில் இயற்கை உரங்களுக்கு பதிலாக செயற்கை உரப்பயன்பாடு செய்யப்படுகிறது. இயற்கை உரங்களை வீணடிப்பது அறிவுக்கு பொருந்தாது. இதனால் ஆறுகளும், நிலங்களும், காற்றும் மாசுபடுகின்றன. நகரங்கள் அருகில் கழிவு நீர்ப்பண்ணைகள் உள்ளன. அவை முறையாக பேணப்படுவதில்லை என எழுதுகிறார்.


ரோசா லுக்சம்பர்க்(1917) சிறையிலிருந்த காலத்திலும், இயற்கை அறிவியல் குறித்து ஆர்வம் காட்டினார். ஜெர்மனியிலிருந்து பாடும் பறவைகள் மறைந்தன ஏன்? செயற்கையான காடுகள் உருவாக்கம், தோட்டம், வேளாண்மை ஆகியன புதர்கள், மரப்பொந்துகள், உதிர்ந்த இலைகள் என பறவைகள் கூடு கட்டுவதற்கும், இனவிருத்தி செய்வதற்கும் இடங்களை அழித்தது பற்றி நான் வேதனையுற்றேன். அவை பாடிய பாடலை இழந்ததை விடவும், அந்த சின்னஞ்சிறு உயிரினங்கள் பாதுகாப்பின்றி எதிர்ப்பின் மறைவுக்குள்ளானது என்னைக்கதற வைத்தது. வட அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் அழித்தொழிக்கப்பட்டது பற்றி பேராசிரியர் சீபர் எழுதிய நூல் என் நினைவுக்கு வந்¢தது. படிப்படியாக அவர்களது நிலங்களிலிருந்து நாகரிக மனிதர்களால் விரட்டப்பட்டனர். கொடூரமான முறையில் அழித்தொழிக்கப்பட்டனர் என்று எழுதினார்.


கடவுள் மனிதனுக்காக இயற்கையை படைத்தார். அனைத்து பொருட்களும் மனிதனின் தேவைகளுக்காகவே தகவமைக்கப்பட்டுள்ளன என்ற இயல் திட்டப்பார்வையில் இயற்கையை பார்ப்பதைவிட தவறான ஒன்று இருக்கமுடியாது. விலங்கின் வடிவமான மனிதன் இயற்கையின் விளை பொருளே. முடிவற்ற இயற்கையின் பகுதியே. இயற்கையிலிருந்து எப்போதும் தப்ப முடியாது. மனிதன் வெற்றிடத்தில் வாழமுடியாது. இயற்கை நம்மை எப்போதும் சூழ்ந்துள்ளது என்கிறார் புகாரின்.


உலகை மாற்றியமைப்பது, இயற்கையின் விதிகளுக்கு இயைந்ததாகவே இருக்கவேண்டும். இதைத் தனியுடமை முதலாளிகளால் செய்யமுடியாது. அவர்கள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளன. இயற்கை வளத்தை வீண்டித்து மலட்டுத்தன்மை கொண்ட மண்ணையும், மலைகளையும் விட்டுச்செல்கின்றனர்.




















சமுதாயத்தை எப்படி மாற்ற முடியும்?


ஆங்கில மூலம்: கிறிஸ் ஹார்மன்


தமிழில்: நிழல்வண்ணன்





வன்முறையான புரட்சி இல்லாமலே சமுதாயத்தை மாற்றியமைக்க முடியும் என்று பிரிட்டனில் சோசலிசவாதிகள் மற்றும் தொழிற்சங்கவாதிகளின் அறுதிப்பெரும்பான்மையினர் பொதுவாக வாதிட்டுள்ளனர். தேவைப்படுவதெல்லாம் பாரம்பரிய அரசியல் நிறுவனங்களின் பாராளுமன்றம் மற்றும் உள்ளூர் பேரவைகள் மீது கட்டுப்பாட்டை செலுத்துவதற்கு போதுமான வெகுமக்கள் ஆதரவை சோசலிசவாதிகள் வென்றெடுப்பதுதான் என்று அவர்கள் கூறுகின்றனர். அதன் பின்னர் நிலவும் அரசைக்கொண்டு ஆட்சிப்பணி, காவல்துறை, நீதித்துறை, ஆயுதப்படைகள் ஆகியவற்றைக்கொண்டு முதலாளிய வர்க்கத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் சட்டங்களை நடைமுறைப்படுத்தி சமுதாயத்தை மாற்றியமைக்கும் நிலைக்கு வந்து விடுவார்கள்.


இந்த வழியில் வன்முறையில்லாமல், தற்போதைய அமைப்பை சீர்திருத்துவதின் மூலமாக சோசலிசம் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட முடியும் என்று கூறிக்கொள்ளப்படுகிறது.


இந்தக்கண்ணோட்டம் வழக்கமாக ‘சீர்திருத்தவாதம்’ என்று குறிப்பிடப்படுகிறது. இருந்தாலும் அவ்வப்போது அதை திருத்தல்வாதம்(மார்க்சின் கருத்துக்களை முழுமையாக திருத்துவதை உள்ளடக்கியது), சமூக ஜனநாயகம் (1914 வரை இது புரட்சிகர சோசலிசம் என்று பொருள்பட்டது) அல்லது பேபியனியம்(பிரிட்டனில் நீண்டகாலமாக சீர்திருத்தவாத கண்ணோட்டத்தை பிரசாரம் செய்து வந்த பேபியன் சங்கம் சார்ந்து இப்பெயர்) என்று கேட்டிருப்பீர்கள். இதனை இடது சாரிகளும், தொழிலாளர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.


முதல் பார்வைக்கு சீர்திருத்தவாதம் மிகவும் நியாயபூர்வமாகத் தோன்றுகிறது. அதாவது பாராளுமன்றம் நாட்டை ஆள்கிறது என்றும் மக்களின் ஜனநாயக விருப்பங்கள் அடிப்படையில் பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்றும் நமக்கு பள்ளியில், செய்தித்தாள்களில், தொலைக்காட்சியில் சொல்லிக்கொடுத்ததற்கு பொருத்தமாக இருக்கிறது. இருப்பினும் அதற்கப்பால் பாராளுமன்றத்தின் மூலம் சோசலிசத்தை அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. பிரிட்டனில் 1945 க்கும் 1979 க்கும் இடையில் தொழிலாளர் கட்சியின் மூன்று அரசுகள், 1945 ம் 1966 ம் மிகப்பெரும்பான்மையுடன் இருந்தன. இருப்பினும் 1945 ல் இருந்ததைவிட சோசலிசத்திற்கு அருகாமையில் கூட செல்லவில்லை.


அயல்நாடுகளிலும் அனுபவம் இதுவே. 1970 ல் சிலியில் சோசலிசவாதியான சால்வடார் அலந்தே குடியரசு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சோசலிசத்திற்கு செல்வதற்கு இது ஒரு புதிய வழி என்று மக்கள் கூறிக்கொண்டார்கள். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அரசில் சேர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்த தளபதிகள் அலந்தேவை தூக்கியெறிந்தனர். சிலியின் தொழிலாளர் வர்க்க இயக்கம் அழிக்கப்பட்டது.


ஏன் சீர்திருத்தவாதம் எப்போதும் தோல்வியையே அடையும் என்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று காரணங்கள் இருக்கின்றன.


முதலாவதாக, பாராளுமன்றங்களில் சோசலிச பெரும்பான்மையினர் படிப்படியாக சோசலிச நடவடிக்கைகளை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில் உண்மையான பொருளாதார அதிகாரம் பழைய ஆளும் வர்க்கத்தின் கரங்களிலேயே இருந்து வருகிறது. தொழில்துறையின் ஒட்டுமொத்த பிரிவுகளையும் மூடுவதற்கும், வேலையில்லாத திண்டாட்டத்தை உருவாக்குவதற்கும், ஊக வணிகம், பதுக்கல்கள், ஆகியவற்றின் மூலம் விலைவாசியை வலுக்கட்டாயமாக உயரச்செய்வதற்கும், பணம் செலுத்தும் சமநிலை பராமரிப்பில் நெருக்கடியை அனைத்திற்கும் சோசலிச அரசு தான் காரணம் என்று குற்றம் சாட்டுவதற்கு ஊடகப்பிரசாரங்களை தொடுப்பதற்கும் அவர்கள் இந்த பொருளாதார அதிகாரத்தை பயன்படுத்திக்கொள்ளமுடியும்.


இவ்விதமாகத்தான் ஹெரால்டு வில்சனின் தொழிலாளர் கட்சி அரசு 1964 ம், பின்னர் 1966 ம் தொழிலாளர்களுக்கு பயனுள்ள நடவடிக்கைகளை கைவிட நிர்பந்திக்கப்பட்டது. செல்வம் படைத்த தனிநபர்களும், நிறுவனங்களும் பணத்தை அயல்நாடுகளுக்கு அனுப்பிவைத்தனர். இது பற்றி வில்சன் தன் நினைவுக்குறிப்புகளில்,


‘’எந்த கொள்கையின் அடிப்படையில் போட்டியிட்டோமோ, அதனை நடைமுறைப்படுத்தமுடியாது என்று சர்வதேச ஊகவணிகர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கூறுகின்ற நிலையை எட்டியுள்ளோம். பிரிட்டனில் தேர்தல் என்பது போலி நாடகம்… பிரிட்டிஷ் மக்கள் கொள்கைகளுக்கிடையில் தெரிவு செய்து கொள்ள முடியாது என்ற கோட்பாட்டை ஒப்புக்கொண்டு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு மூடுவிழா நடத்துமாறு மகாராணியின் முதலாவது அமைச்சர் கேட்டுக்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்.


வில்சன் கோபப்பட்டாலும், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவர் உண்மையில் ஊக வணிகர்கள் கோரிய வகைப்பட்ட கொள்கைகளைத்தான் பின்பற்றினார் என்று சேர்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.


அதே போல வேண்டுமென்றே பணம் செலுத்துகை சமநிலையில் நெருக்கடியை உண்டாக்கித்தான் 1974 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் கட்சி அரசு பொதுமக்களுக்கான செலவினத்தில் மூன்று அடுத்தடுத்த வெட்டுக்களை மருத்துமனைகள், பள்ளிகள், சமூக சேவைகள் ஆகியவற்றில் அறிமுகப்படுத்த நிர்பந்திக்கப்பட்டது.


பெருந்தொழில் நிறுவனங்களின் கரங்களில் இதைவிட பெரிய சீர்குலைவை அலந்தேயின் அரசு எதிர்கொண்டது. முதலாளிகளின் வேலை நிறுத்தத்தினால் இருமுறை தொழில்துறையின் ஒட்டுமொத்தப் பிரிவுகளும் மூடப்பட்டன. ஊகவணிகம் விலைகளை மிகப்பெரும் அளவுக்கு உயர்த்தியது. தொழில்வணிகர்கள் பொருட்களை பதுக்கி, வாழ்க்கைத் தேவைகளைப் பெறுவதற்கு மக்களை நீண்ட வரிசையில் காத்திருக்கச் செய்தனர்.


முதலாளித்துவத்தைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான இரண்டாவது காரணம், நிலவும் அரசு இயந்திரம் நடுநிலையாக இருப்பதில்லை. மாறாகம அது மேலிருந்து கீழ் வரை முதலாளித்துவ சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.


ஏறத்தாழ, உடல்ரீதியான பலாத்காரத்தை பயன்படுத்துவதற்கான அனைத்துச் சாதனங்களையும் அதாவது வன்முறைச் சாதனங்களை அரசு கட்டுப்படுத்துகிறது. அரசின் அமைப்புகள் நடுநிலை வகிப்பவையாக இருந்திருக்குமானால் முதலாளிய அரசோ சோசலிச அரசோ எந்த ஒரு குறிப்பான அரசு கூறியதையும் அவை செய்திருக்குமானால் பின்னர் அரசு பெருந்தொழில் நிறுவனங்கள் செய்த பொருளாதார நாசவேலையைத் தடுத்து நிறுத்தப் பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால அரசு எந்திரமோ செயல்படும் முறையைப் பாருங்கள். யார் உண்மையாக உத்தரவிடுகிறார் என்பதைப்பாருங்கள். அது நடுநிலைமையாக இல்லை என்பதை நீங்கள் பார்க்கமுடியும்.


அரசு எந்திரம் என்பதை வெறும் அரசு மட்டுமல்ல அது மிகப்பெரும் அமைப்பு அதற்கு பல்வேறு கிளைகள் இருக்கின்றன. காவல்துறை, ராணுவம், ஆட்சிப்பணி, மற்றும் தேசியமயமாக்கப்பட்ட தொழில்துறைகளை நடத்துவோர் அதில் அடங்குவர். அரசின் இந்தப் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுவோரில் பலர் தொழிலாளர் வர்க்கத்திலிருந்து வருகின்றனர். அவர்கள் தொழிலாளர்களைப் போலவே வாழ்கிறார்கள், ஊதியம் பெறுகிறார்கள். ஆனால் முடிவுகளை எடுப்பவர்கள் அவர்களல்ல. யுத்தங்களில் எங்கு சண்டையிட வேண்டும் அல்லது வேலை நிறுத்தங்களை முறியடிக்க வேண்டுமா என்பதை படைவீரர்கள் அணி தீர்மானிப்பதில்லை. ஏணியின் ஒரு படியில் இருப்பவர், அவருக்கும் மேல் படியிலிருப்பவருக்கு கீழ்படியவேண்டும என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தான் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் அமைந்துள்ளது.


தரைப்படை, கடற்படை, விமானப்படை, காவல்துறை ஆகிய உடல் ஆற்றலை பயன்படுத்தும் அரசு இயந்திரத்தின் பிரிவுகளில் இதுதான் சாராம்சமான நிலையாகும். படைவீரர்கள் படையில் சேர்த்துக்கொள்ளப்படும் போது முதலில் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுவது உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே அந்த உத்தரவுகள் பற்றிய சொந்தக்கருத்துக்களை எண்ணக்கூடாது. அதனால்தான் அவர்களுக்கு அபத்தமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் பயிற்சிக் களத்தில் பைத்தியக்காரத்தனமான ஆணைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அதைப்பற்றி சிந்திக்கக் கூடாது. சுடுமாறு உத்தரவிட்டால் அதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிராமல் சுடவேண்டும்.


எந்த ஒரு படையிலும் மிகமோசமான குற்றம் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பதுதான். மறுத்தால் அது கலகம். அந்தக்குற்றம்ம அவ்வளவு தீவிரமானதாகக் கருதப்படுகிறது. யுத்த நேரத்தில் கலகம் என்பது பிரிட்டனில் இன்னும் மரணதண்டனைக்குரிய குற்றமாகும்.உத்தரவுகளை இடுவது யார்?


பிரிட்டிஷ் படையில் படைத்தலைமைப் படிநிலையைக் காண்பீர்களானால் பின்வருமாறு செல்கிறது. ஜெனரல்-பிரிகேடியர்-கர்னல் லெப்டினென்ட்- என்.சி.ஓ - தனியாள். எந்தக் கட்டத்திலும் இந்த படிநிலை வரிசையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் - பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது உள்ளூர் பேரவை  உறுப்பினர்கள் கண்காணிப்பு இருப்பதில்லை. தனியாட்களின் ஒரு குழு தமது வட்டாரப் பாராளுமன்ற உறுப்பினரை எதிர்ப்பதை விட மேலதிகாரிகளை எதிர்ப்பது கலகமாகும். படை என்பது ஒரு பெருந்திரள்  கொலைகார எந்திரமாகும். அதை நடத்துவோர், பிற படைவீரர்களை படைத்தலைமைப் பதவிகளுக்கு உயர்த்தும் அதிகாரம் பெற்றவர்கள், தளபதிகளே ஆவர். உண்மையில் கோட்பாட்டளவில் தளபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பொறுப்பாக இருக்கவேண்டியவர்கள் ஆவர். ஆனால் படைவீரர்கள் தளபதிகளுக்கே கீழ்ப்படிந்தவர்கள் தவிர அரசியல்வாதிகளுக்கு அல்ல. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் விருப்பங்களுக்கு மாறுபட்ட உத்தரவுகளை படைவீரர்களுக்குப் பிறப்பிப்பதற்கு தளபதிகள் முடிவு செய்வார்களானால் அதை அரசு எதிர்க்க முடியாது. தளபதிகள் மனதை மாற்றிக்கொள்ள இணங்கச் செய்ய முயற்சி மட்டும் மேற்கொள்ள முடியும். அரசுக்கு கொடுக்கப்படும் உத்தரவுகளின் வகை பற்றித்தெரியும். ராணுவ விவகாரங்கள் மாற்றத்துக்கு இடமின்ற ரகசியமானவை. தாங்கள் விரும்பாத அரசிடமிருந்து தாங்கள் செய்வதை மறைப்பது மிகவும் எளிதாகும்.


அரசு அவர்களிடம் சொல்வதை தளபதிகள் வழக்கமாக, அல்லது எப்போதுமே புறக்கணிக்கிறார்கள் என்று அதற்கு பொருளல்ல. பிரிட்டனில் அவர்கள் வழக்கமாக அரசு சொல்வதுடன் இணங்கிப் போவதை வசதியாக பார்க்கிறார்கள். ஆனால் வாழ்வா, சாவா என்ற ஒரு சூழலில் தளபதிகள் அரசு சொல்வதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் தமது கொலைகார எந்திரத்தை விருப்பம் போல் இயக்கமுடியும். அரசு அதில் ஒன்றும் செய்யமுடியாது. இதைத்தான் சிலியில் அலந்தே தூக்கியெறியப்பட்டபோது தளபதிகள் இறுதியாக செய்ததாகும்.


எனவே படையை நிர்வகிப்பது யார்? என்ற கேள்வி, உண்மையில் தளபதிகள் யார்? என்பதே ஆகும். பிரிட்டனில் முதுநிலை அதிகாரிகளில் எண்பது விழுக்காட்டினர் கட்டணம் செலுத்தும் பொதுப்பள்ளிகளுக்கு சென்றவர்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே விகிதத்தில் தான் இருந்தனர்.(17 ஆண்டுகால தொழிலாளர் அரசு இதை மாற்றவில்லை). அவர்கள் பெரும் தொழில்நிறுவனங்களின் உறவினர்களாக இருக்கிறார்கள். அதே பணம் படைத்த வர்க்கத்தினருக்கான பொழுதுபோக்கு மன்றங்களில் இருக்கிறார்கள். அதே சமூக நிகழ்வுகளில் பங்களிக்கிறார்கள்(டெய்லி டெலிகிராப் கடிதப்பகுதியை காணவும்) ஆட்சிப்பணியில் இருப்பவர்கள், நீதிபதிகள், காவல்துறை உயர்பதவி வகிப்பவர் விஷயத்திலும் இதுதான் உண்மையாகும்.


மக்களவையின் வராந்தாக்களில் 330 பேர் நடைபயிலுவதாலேயே பெரும் தொழில்நிறுவனர்களாக இருக்கும் அவர்களுடைய நண்பர்கள், உறவினர்களிடமிருந்து பொருளாதார அதிகாரத்தைப் பறிக்கும் அரசு உத்தரவுகளுக்கு இந்த மனிதர்கள் கீழ்ப்படிவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அரசு உத்தரவுகளை குப்பையில் போட்டுவிட்டு, பின்னர் சரியான நேரம் வந்ததும் ஆட்சியை தூக்கியெறிந்த சிலியின் தளபதிகள், நீதிபதிகள், முதுநிலை ஆட்சிப்பணியில் உள்ளோரின் அதே எடுத்துக்காட்டை பின்பற்றமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?


நடைமுறையில் பிரிட்டனில் உள்ள குறிப்பான நமது அரசியலமைப்பு அரசு எந்திரத்தை கட்டுப்படுத்துவோர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இடது சாரி அரசின் விருப்பத்தை சீர்குலைத்து அதைத் தூக்கியெறிய இயலும் என்பதை பொருள்படுத்துகிறது. அத்தகைய ஒரு அரசு தேர்ந்தெடுக்கப்பட்டால், அது முதலாளி வர்க்கத்தால் (தொழிற்சாலை மூடல்கள், பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுதல், அத்தியாவசிய பொருட்களைப் பதுக்குதல், விலையேற்றத்தை அதிகரித்தல் ஆகிய வழிகளில்) சட்டங்களை இயற்றுவதன் மூலம் சரிசெய்ய அரசு முயற்சி செய்தால் அதன் கரங்கள் பின்புறமாக கட்டப்பட்டிருப்பதை காணவேண்டி வரும்.


பிரபுக்கள் அவை அத்தகைய எந்தச்சட்டத்திற்கும் ஒப்புதலளிக்க உறுதியாக மறுக்கும். குறைந்தது அந்த சட்டத்தை ஒன்பது மாதங்களுக்கு தாமதப்படுத்தும். நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு அதன் அதிகாரங்களை தடுக்கும் வகையில் நீதிபதிகள், விளக்கமளிப்பார்கள். ஆட்சிப்பணித்தலைமை அதிகாரிகள் ஆகியோர் நீதிபதிகளின், பிரபுக்களின் அவை முடிவுகளை பயன்படுத்திக்கொள்வார்கள். அமைச்சர்கள் சொல்வதை செய்யமறுக்கும் அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வார்கள். அவர்களுக்கு ஒட்டுமொத்த ஊடகங்களும் ஆதரவளிக்கும். அரசு சட்டவிரோதமாக அரசியலமைப்புக்கு விரோதமாக நடந்துகொள்வதாக அவை ஓலமிடும். பின்னர் தளபதிகள் சட்டவிரோத அரசை தூக்கியெறிவதற்கான தயாரிப்புகளை நியாயப்படுத்துவதற்கான மொழியை பயன்படுத்துவார்கள்.


ஆட்சிப்பணி, காவல்துறை, படைவீரர்கள் ஆகியவற்றின் ஊழியர்களை அவர்களுடைய உயரதிகாரிகளுக்கு கீழ்ப்படியாமல் எதிர்த்து நிற்க அறைகூவல் விடுப்பதற்கும், உண்மையில் அரசியலமைப்புக்கு எதிராகச் செயல்படுவதற்கும் ஆயத்தமாக இல்லாவிட்டால் அரசு பொருளாதாரப் பெருங்குழப்பத்தைக் கையாளும் ஆற்றலற்றுப்போகும்.


இது அனைத்தும் மோசமான கற்பனை என்று ஒருவர் நினைக்கிறார் என்றால் அவருக்கு அண்மையில் பிரிட்டிஷ் வரலாற்றில் குறைந்தது இரண்டு நிகழ்வுகளில் தாம் விரும்பாத அரசாங்கத்தின் முடிவுகளை தளபதிகள் சீர்குலைத்தனர் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.


1912 ல் மக்கள் ஒன்றுபட்ட அயர்லாந்தை நிர்வகிக்க ஹோம் ரூல் பாராளுமன்றத்திற்கு அனுமதியளிக்கும் வரைவுச்சட்டத்தை நிறைவேற்றியது. டோரி கட்சித் தலைவர் போனார் லா உடனடியாக (லிபரல்)அரசை சட்டவிரோதக் கும்பல் என்றும், அரசியல் சாசனத்தை விற்றுவிட்டார்கள் என்றும் கண்டித்தார். பிரபுக்கள் அவை இயல்பாகவே முடிந்தவரை இரண்டு ஆண்டுகள் தாமதித்தது. அதேவேளையில் முன்னால் டோரி அமைச்சர் எட்வர்ட் கர்சன் அந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்காக அயர்லாந்தில் வடக்கில் ஒரு துணை ராணுவப்படையை ஒழுங்கமைத்தார்.


அப்போது இந்தப்படையை சமாளிப்பதற்கு, அயர்லாந்தில் பிரிட்டிஷ் படைக்குத் தலைமை தாங்கிய தளபதிகள் அவர்களுடைய படைகளை வடக்கு நோக்கிக் கொண்டு செல்வதற்கு பணிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் அதை மறுத்துவிட்டு, தங்களுடைய பதவிகளை விட்டு விலகுவதாக எச்சரித்தனர். வழக்கமாக கராக கலகம் என்று குறிப்பிடப்படும் இந்த நடவடிக்கை காரணமாகத்தான் வடக்கு மற்றும் தெற்கு அயர்லாந்து 1914 ல் ஒரே பாராளுமன்றத்தைப் பெறவில்லை. மேலும் இன்றும் கூட பிரிக்கப்பட்ட தேசமாக இருந்து வருகிறது.


1974 ல் 1912 ம் ஆண்டின் நிகழ்வுகள் சிறியளவில் திரும்பவும் நிகழ்ந்தன. வடக்கு அயர்லாந்தின் வலதுசாரி குறுங்குழுவாத விசுவாசிகள், வடக்கு அயர்லாந்தில் ஒரு புரோடஸ்டன்ட் கத்தோலிக்க கூட்டு அரசை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டதை எதிர்த்து, தொழில்துறையை நிறுத்திவைக்கும் பொது வேலை நிறுத்தத்தை ஒழுங்கமைத்தனர். தடைகளை அகற்றி, வேலைக்குச் செல்வதைத் தடுக்கும் தடைகளை அமைத்தார்கள். தடைகளை அகற்றி, வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு பிரிட்டிஷ் படையையும் வடக்கு அயர்லாந்து காவல்துறையான ராயல் உல்ஸடர் கான்ஸ்டபுளரியையும் பிரிட்டிஷ் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டார்கள். முதுநிலைப் படை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் இது அறிவுறுத்த உகந்ததல்ல என்று அரசிடம் கூறினார்கள். மேலும் படைவீரர்களோ காவல்துறையினரோ விசுவாசிகளுக்கு எதிராக செல்லவில்லை. புராடஸ்டன்ட் கத்தோலிக்கக் கூட்டு அரசாங்கம் பதவி விலக நிர்பந்தப்படுத்தப்பட்டது. படை அதிகாரிகளின் கருத்துக்கள் பிரிட்டிஷ் அரசின் கருத்துக்களை விட மிகவும் சக்திவாய்ந்தவை என்று நிரூபணமானது.


மென்மையான நடவடிக்கைகளை எடுக்க முயற்சி செய்யும் மிதவாத அரசாங்கங்களுக்கே 1914 ம்,1974 ம் இது நிகழமுடியுமென்றால் ஒரு போர்குணமிக்க சோசலிச அரசு தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன நாடாகும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். பாராளுமன்றத்தில் எந்தத் தீவிரமான சீர்திருத்தப் பெரும்பான்மையும் விரைவிலேயே ஒன்று தொழில்துறையை சொந்தமாக்கிக் கொண்டுள்ளவர்களையும், அரசில் முக்கியப் பதவி வகிப்பவர்களையும் சாந்தப்படுத்துவதற்காக சீர்திருத்தங்களைக் கைவிடவேண்டும் அல்லது ஒட்டுமொத்த மோதலுக்கு தயாராக வேண்டும். அது தவிர்க்கமுடியாத வகையில் பதவிகளைக் கட்டுப்படுத்துவர்களுக்கு எதிராக ஒருவகை பலவந்தத்தை பயன்படுத்துவதில்தான் முடியும்.


சீர்திருத்தவாதம் என்பது ஒரு முட்டுச்சந்து என்பதற்கு மூன்றாவது காரணம், பாராளுமன்ற ஜனநாயகத்தில் எந்த ஒரு புரட்சிகர இயக்கமும் அதன்வழியே வெளிப்படுவதைத் தடுப்பதற்கான அமைப்புகள் அதற்குள்ளேயே கட்டப்பட்டுள்ளன என்பதாகும்.


அரசு எந்திரத்தில் முக்கியமான பதவிகளைக் கட்டுப்படுத்துவோரின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வழி இடதுசாரிகள் முதலில் பாராளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மையைப் பெறுவதுதான் என்று சில சீர்திருத்தவாதிகள் வாதிடுகிறார்கள். பாராளுமன்றங்கள் எப்போதும் மக்கள்தொகையின் புரட்சிகர உணர்வு நிலையின் மட்டத்தை குறைவாகவே வெளிப்படுத்துகின்றன என்பதால் இந்த வாதம் விழுந்துவிடுகிறது.


போராட்டத்தின் மூலம் சமுதாயத்தை மாற்றுவதை நடைமுறையில் அவர்களே தொடங்கும்போதுதான் மக்களின் பெருந்திரளினர் தாங்களே சமுதாயத்தை நிர்வகிக்க முடியும் என்று நம்புவார்கள். பல லட்சக்கணக்கான மக்கள் அவர்களுடைய தொழிற்சாலைகளையும் கைப்பற்றும்போதுதான், அல்லது பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்போதுதான் புரட்சிகரசோசலிசத்தின் கருத்துக்கள் உண்மையாகத் தோன்றும்.


ஆனால் பழைய ஆளும்வர்க்கம் ஆளும்வர்க்கம் அதிகாரத்திலிருந்து அகற்றப்படாவிட்டால், போராட்டத்தின் அத்தகைய ஒரு மட்டம் முடிவுற்ற காலத்திற்கு நிலைநிறுத்தப்பட முடியாது. அது அதிகாரத்தில் இருந்து கொண்டிருக்குமானால், தொழில்களோ, வேலை நிறுத்தங்களோ வீழும்வரை அது காத்திருக்கும், பின்னர் படை, காவல்துறை ஆகியவற்றின் மீதான அதன் கட்டுப்பாட்டை போராட்டத்தை முறியடிக்கப் பயன்படுத்தும்.


மேலும் வேலை நிறுத்தங்கள் அல்லது கைப்பற்றல்கள் வலுவிழக்கத் தொடங்கியதும், தொழிலாளர்களிடம் ஒற்றுமை உணர்வும் நம்பிக்கையும் பலவீனமடையத் தொடங்குகிறது. நம்பிக்கையிழப்பும் கசப்புணர்வும் வரத் தொடங்குகிறது. சிறந்த தொழிலாளர் கூட சமுதாயத்தை மாற்றுவது ஒரு அடிப்படையற்ற கனவே என்று நினைக்கத் தொடங்குகிறார்.


அதனால்தான் தொழிலாளர் வீட்டில் இருக்கும்போதே அவர்களாகவே வேலைநிறுத்த வாக்கெடுப்பு நடத்துவதை முதலாளிகள் எப்போதும் விரும்புகிறார்கள். அவர்களுடைய கருத்துக்களை தொலைக்காட்சி வாயிலாகவும், செய்தித்தாள்கள் வாயிலாகவும் பெற்றுக் கொள்கிறார்கள். சகதொழிலாளர்களின் வாதங்களைக் கேட்கும் வாய்ப்புள்ள அவர்களுடைய ஒன்றுபட்ட பெருந்திரள் கூட்டங்களில் வாக்கெடுப்பு நடத்துவதை விரும்புவதில்லை.


அதனால்தான் தொழிற்சங்க விரோதச் சட்டங்களில் ரகசிய மற்றும் அஞ்சல் வாக்கெடுப்பு நடத்தும்போது வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற நிர்பந்திக்கும் விதியை எப்போதும் ஏறத்தாழ சேர்த்துகொள்கிறார்கள். அத்தகைய விதிகள் ஆறப்போடும் காலகட்டங்கள் என்று துல்லியமாக குறிப்பிடப்படுகின்றன. அவை தொழிலாளர்களின் நம்பிக்கைகளையும் ஒற்றுமையையும் குறையச் செய்கின்றன.


பாராளுமன்றத் தேர்தல் முறையில் உள்ளார்ந்த ரகசிய வாக்கு சீட்டுகளும் ஆறப்போடும் காலகட்டங்களிலும் அடங்கியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு பெரும் வேலை நிறுத்தம் மூலம் பணியச் செய்யப்படுகிறது என்றால், அது நல்லது இந்தப் பிரச்சனையை ஜனநாயக முறையில் தீர்க்கக் கூடிய ஒரு பொதுத்தேர்தல் வரை, மூன்று வாரங்கள் காத்திருங்கள் என்று கூறலாம். அந்த இடைக்காலத்தில் வேலைநிறுத்தம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் என்று அது நம்புகிறது. தொழிலாளர்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் மங்கி விடும். முதலாளிகள் தொழிலாளர்களில் போர்குணமிக்கவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க முடியும். முதலாளித்துவ செய்தித்தாள்களும் தொலைக்காட்சியும் தமது நடவடிக்கைகளை இயல்பாகத் தொடங்கி, அரசு ஆதரவுக் கருத்துக்களைத் திணிக்கலாம். காவல்துறையினர் தொல்லைகொடுப்போரை கைது செய்யலாம்.


பிறகு, இறுதியாக தேர்தல் வரும்போது, வாக்களிப்பு தொழிலாளர்களின் போராட்டத்தின் உயர்ந்த கட்டிடத்தை பிரதிபலிக்கிறது, மாறாக வேலைநிறுத்தத்திற்கு பிந்தைய வடிந்து போன நிலையையே பிரதிபலிக்கும்.


பிரான்சில் 1968 ல் தளபதி தி காலேயின் அரசு தேர்தல்களை மிகத் துல்லியமாக இந்த வழியில்தான் பயன்படுத்துகிறது. சீர்திருத்தவாதத் தொழிலாளர் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களிடம் வேலை நிறுத்தத்தை முடித்துகொள்ளுமாறு கூறின. டிகாலே தேர்தலில் வெற்றிபெற்றார்.


1974 ல் சுரங்கத்தொழிலாளர்களின் மிகப்பெரிய வெற்றிகரமான வேலைநிறுத்தத்தை எதிர்கொண்டபோது பிரிட்டிஷ் பிரதமர் எட்வர்ட் ஹீத் அதே தந்திரத்தை பயன்படுத்த முயற்சி செய்தார். ஆனால் இம்முறை சுரங்கத்தொழிலாளர்களை ஏமாற்ற முடியவில்லை. அவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்தார்கள். ஹீத் தோற்றுப்போனார்.


தொழிலாளர்கள் வர்க்கப்போராட்டத்தின் முக்கிய பிரச்சனைகளைத் தீர்மானிப்பதற்கு தேர்தலுக்காக காத்திருப்பார்களானால், அவர்கள் ஒருபோதும் உயர்மட்டத்தை எட்டமுடியாது.



கட்டுப்பாடு கொண்ட வளர்ச்சியே தேவை


சரள் சர்க்கார்


தமிழ்: ஜீவா





2008 ல் தொடங்கிய இந்தப்பொருளாதார நெருக்கடி இன்னும் உலகில் அரசியல்வாதிகளையும், பொருளாதார நிபுணர்களையும் ஆட்டிப்படைத்துவருகிறது. 1930 ன் மாபெரும் சரிவுக்குப் பின் நிகழ்ந்துள்ள மகத்தான சரிவு இது.


முந்தைய நெருக்கடிக்கும், தற்போதைய நெருக்கடிக்கும் பல ஒற்றுமைகள், வேற்றுமைகள் உண்டு. முந்தைய நெருக்கடியில் அளவற்ற முன்னேற்றம் சாத்தியம் என்ற நம்பிக்கை முதலாளிகளிடம் இருந்தது. ஆனால் இன்று பல முன்னணி அரசியல், பொருளாதாரவாதிகள் நமது பூமியின் இயற்கைச்சூழல் பற்றியும், சமூக இருப்பின் இயற்கை வள ஆதாரங்கள் குறித்தும் பெரும் கவலைகொண்டுள்ளனர். கிளப் ஆப் ரோமின் முதல் அறிக்கை ‘Limits to Growth” 1972 லேயே இத்தகைய நிலை உண்டாகக் கூடும் என்று எச்சரித்திருந்தது. முதலில் இது பற்றிய அலட்சியம் இருந்தபோதும், பின் பல உலகத்தலைவர்கள் இதுகுறித்து அக்கறை காட்டினர். முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஏ.ஐ கோர் உலகம் சூடாதல் பற்றிய எச்சரிக்கையையும், கவலையையும் வெளிப்படுத்தினார். ஒபாமா தனது முதல் பதவியேற்பு உரையிலேயே(2008) பூமி பெரும் சிக்கலில் சிக்கித்தவிக்கிறது என்று கூறினார்.


பூமி சூடாதல் மட்டுமல்ல, உலக வளங்கள் யாவும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன. பூமியின் உயிரான மழைக்காடுகள் சரிந்து வருகின்றன. பல்லுயிர்ப்பெருக்கம் அழிந்து மாசுபடுதல் அதிகரிக்கிறது. மனிதப் பேராசையினால் இயற்கைவளங்கள் வளர்ச்சி என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக உறிஞ்சி எடுக்கப்படுகின்றன. உணவின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பொருளாதாரச் சரிவின் விலை சற்று குறைந்தபோதும், 2000 த்தின் எல்லையைத் தொடவில்லை. 2010 ல் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் எண்பது டாலராக இருந்தது.


இன்றைய விலைவாசி உயர்வு பணவீக்கத்தால் உண்டானதல்ல. தொழிலாளர்களின் கூலி உயர்வும் காரணமல்ல. சீனா, இந்தியா, பிரேசிலில் உண்டான தேவை அதிகரிப்பும் காரணமல்ல. இவை காரணமானால் மூலப்பொருள் உற்பத்தி அதிகரிப்பு மூலம் பணவீக்கத்தை தடுக்கமுடியும். மூலப்பொருளைத் தோண்டி எடுக்க அதிக செலவும், உழைப்பும், ஆற்றலும் செலவாகின்றது.


இயற்கையின் பங்களிப்பு சமுதாய இருப்பின் ஆதாரம். மனிதன் உருவாக்கும் கழிவுகளைத்தூய்மை செய்வது இயற்கையே. மண்ணை வளமாக்குவதும், காற்றை தூய்மையாக்குவதும், நீரைத்தருவதும் இயற்கையே. இயற்கை தரும் வளங்களைத் தொழில் யுகத்தில் பாதுகாப்பதுகூட பெரும் செலவாகிறது. தூய இயற்கைச்சூழல் மனிதர்களுக்கு கிடைப்பது அரிதாகிவருகிறது. பணக்காரர்களுக்கு கிடைக்கும் நீர்,காற்று ஏன் வாழ்வும்கூட  ஏழைகளுக்கு இல்லை. வேலை நேரம் குறைவது, வேலை பறிபோவது, வருமானம் குறைவது என்பது அவற்றுக்கான மூலங்கள் குறைவதையே காட்டுகிறது.


பொருளாதார வளம் பெற்ற பணக்கார நாடான ஜெர்மனியில் கூட தொழிலாளர் வருமானம் குறைந்துகொண்டே போகிறது. பலருக்கு வேலை கிடைக்காமல், பகுதிநேர வேலை, தற்காலிக வேலை என்றே கிடைக்கிறது. அமெரிக்காவில் 2006 ல் தொழிலாளர்களின் உண்மைக்கூலி குறைந்ததென மூன்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மத்தியதர வர்க்கம் தேசிய பொருளாதார வீழ்ச்சியை பெரிதும் அனுபவிக்கின்றனர். தொழிலாளர் நிலை அடிமட்டத்தை நோக்கி வீழ்ந்துகொண்டுள்ளதென தொழிற்சங்கத் தலைவர்கள் புலம்புகின்றனர். குறைந்த சம்பளம், அதிக வேலை, மருத்துவப்பாதுகாப்பின்மை, கல்வித்தகுதிக்கு குறைவான வேலை என்பன இயல்பாகி வருகிறது.


2007 ல் அமெரிக்காவில வீடு வணிகம் வீழ்ச்சி கண்டது. வீட்டுக்கடனை கட்டமுடியாது, தொழிலாளர்களும், மத்தியதரமக்களும் வீட்டை இழந்து சாலைக்கு வர நேர்ந்தது. தொழிலாளர் நிலை வீழ்ச்சிக்கு காரணம் முதலாளிகளின் சுரண்டல் வெறி, தொழிலாளர்களின் பலவீனம், வங்கிகளின் பேராசை, யூக வணிகர்கள், மலிவுக்கூலிக்காக மூன்றாவது உலக நாடுகளுக்கு பெருந்தொழில்களை மாற்றியது என பல்வேறு காரணங்களை தொழிற்சங்கத்தலைவர்கள் கூறக்கூடும். கூர்ந்து பார்த்தால் பகிர்ந்து கொடுப்பதற்கான மூலவளங்கள் குறைவு, வளர்ச்சிக்கான இயற்கை வளங்களை எடுப்பது தொடர்பான சிக்கல்கள், செலவுகள் தான் முக்கியக்காரணம் என்று தெரியவரும்.


வசதியான நிலையில் உள்ள முதலாளித்துவ நாடுகளிலும், வலிமைவாய்ந்த தொழிற்சங்க இயக்கங்கள் உள்ள நாடுகளிலும் கூட இந்த சரிவு உள்ளது. வளர்ச்சியை கட்டுப்படுத்தல் என்ற பார்வை தேவைப்படுகிறது.


உழைப்பாளர்கள் பொருளை உற்பத்தி செய்கின்றனர். மூலவளங்கள், உழைப்பு, கருவிகள், எந்திரங்கள் உற்பத்தியின் அடிப்படை. மூலவளங்கள் கிடைப்பது அரிதானால் தொழிலாளர்கள் வேலை இழப்பது, பணிநேரம் குறைவு போன்றவை தவிர்க்கஇயலாததாகிறது. குறைவான தொழிலாளர்களுடன் சுயமாகவே உற்பத்தியை செய்துமுடிக்கும் எந்திரங்கள் பொருட்களை குப்பைகள் போல் செய்து குவிக்கின்றன.


க்ரூக்மன் தனது கட்டுரையில் கூலித்தேக்கம், கூலியின் வீழ்ச்சி, ஒருபுறமும் திருப்தி அளிக்கும் தேசியப் பொருளாதார வளர்ச்சி என இரண்டும் தொடர்பற்று உள்ளன என்கிறார். தொழிற்சங்கங்கள் பொருளாதார வளர்ச்சியை தமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு போராடும் வலிமையற்றனவாக உள்ளன என்பதே இந்த தொடர்பற்ற நிலைக்கு காரணம் என்கிறார். உற்பத்தி உச்சத்தை எட்டிவிட்ட குழப்பமான நிலை இது.


உண்மைக்கூலி குறைந்துவரும் நிலையில் குத்தகைக்கூலி உயர்கிறது. உண்மையான ஜிடிபி உயரும்போது தேசியவருமானம் வீழ்கிறது. ஜிடிபி என்பது நாட்டின் வள மேம்பாட்டையே குறிக்கிறது என்றாலும் தேசத்தின் உண்மை வருமானத்தையோ, வளமேம்பாட்டையோ காட்டுவதாக இல்லை. வெறும் ஆண்டிற்கான பொருள், சேவை உற்பத்தி உயர்வை மட்டுமே காட்டுகிறது. பொருள், சேவை உற்பத்தியாகிறது என்றாலும் இது பொருளாதார மூலமான பரிமாற்றமில்லை. எ.கா ஒரு பெண் தனது குடும்பத்திற்கு செய்யும் பணிகள் ஜிடிபியில் சேர்க்கப்படுவதில்லை. ஏனெனில் சந்தையில் அது விலைக்கு விற்கப்படுவதில்லை. ஆனால் தேவையானால் அதை சேர்த்துக்கொள்ளலாம்.


ஜிடிபி மட்டுமின்றி சொத்து, செல்வம், நலவாழ்வு, நாட்டின் நலத்திட்டம் பற்றி சிந்திப்போர் பொருள்,சேவை உற்பத்தியின் தன்மை பற்றி சிந்திக்கவேண்டும். பெரும்பாலானோர் நாட்டின் வருமானம், செல்வம் பற்றி சேர்க்காமல் தனிநபர், நிறுவனங்களின் வருமானம் மட்டும் சேர்த்துக்கொள்கின்றனர். ராணுவ வீரனுக்கு போர் இல்லாதபோதும் சம்பளம் தரப்படுகிறது. மருத்துவர்கள், ஆயுதம் செய்வோர், வௌ¢ள இழப்பு பணிசெய்வோர் என இவர்களின் சேவைகள் ஜிடிபியில் சேர்க்கத்தக்கன. வருமானமல்ல செலவும்கூட செல்வமே. இதனை பாதுகாப்புவிலை என்பார்கள்.


வௌ¢ளத்தில் அழிக்கப்படும் வீடுகள் மீண்டும் கட்டித்தரப்படும்போது அது தேசிய வருமானத்தில் கூட்டப்படுவதில்லை. இழப்பு ஈடு செய்யப்படுகிறது. அதற்கு செலவழித்த ஆற்றல், உழைப்பு, பொருட்கள் இவையே உண்மை விலை. சீர்செய்யப்படுபவை ஈட்டு விலை என ஜிடிபியில் சேர்க்கப்படும். பிரிட்டிஷ் பெட்ரோலியக் கம்பெனியின்  எண்ணெய்க் கசிவை சரி செய்ய ஆன செலவு 32 பில்லியன். இது அமெரிக்கா, பிரிட்டனில் 2010 ஜிடிபியில் சேர்க்கப்பட்டது. இவ்வாறு ஜிடிபி வளத்தைக்காட்டும் குறியீடு என்ற தரத்தை இழக்கிறது.


இயற்கைச் சீர்கேடினாலான இழப்பு, செல்வ உருவாக்கம் எனும் பெயரால் நடக்கிறது. சீனாவில் 2004 ல் இயற்கை பாதிப்பின் மதிப்பு அவ்வருட ஜிடிபியில் மூன்று விழுக்காடு அதாவது 106 பில்லியன் யூரோ சுற்றுச்சூழல் சீர்கேட்டை சரிசெய்ய ஆகும். இது 2004 ன் ஜிடிபியில் ஏழு விழுக்காடு. பளபளக்கும் வளர்ச்சியெல்லாம் உண்மையானதல்ல.


2010 ல் சீனாவில் பருவநிலைச்சீர்கேட்டால் உண்டான இழப்புகளான வறட்சி, மிகை மழை, நிலச்சரிவு, வௌ¢ளம் ஆகியன பூமி சூடாதலின் விளைவே. இவை உண்மை தேசிய வருமானத்தைக் குறைக்கும். ஒரு ஆண்டில் நடக்கும் ஒரு பாதிப்பை மட்டும் கணக்கிலெடுக்காமல் அதனால் உண்டான நோய்கள், மரணம், பல்வேறு துயரங்கள், ஈடு செய்யமுடியாத இயற்கை இழப்புகள், பற்றியும் கணக்கில் கொள்ளவேண்டுமென்கிறார் அறிஞர் வில்லியம் காப்.


அமெரிக்காவின் சம்பளத்தேக்கம், உண்மை சம்பளத்தின் வீழ்ச்சி ஆகியன ஜிடிபி திருப்தி தருமளவு 1970 ல் வளர்ந்திருந்தபோது காப் இந்த தனது கணிப்பை எழுதினார்.சமூகத்தின் இழப்பு, அதன் உறுப்பினர்களால் ஏற்கப்படவேண்டும். முதலாளித்துவ அமெரிக்காவில் இந்த இழப்பையும் பணக்காரர்கள் ஏற்காமல் தொழிலாளர்கள், ஏழைகள் மீதும் சுமத்துகிறார்கள். 1980 ல் தொழிலாளர்களுக்கு தரப்படும் அலவுன்ஸ் 1880 ல்குறைக்கப்பட்டதென எழுதுவது வளரும் சமூகவிலை, தேக்கம், உண்மை சம்பள வீழ்ச்சி ஆகியவற்றைக் காட்டுகிறது.


ஜெர்மனியில் மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருகிறது. முதலாளிகள் மருத்துவக் காப்பீடுத்தொகையை உயர்த்த மறுக்கின்றனர். மருந்து விலையைக்குறைக்கவும், மருத்துவக்கட்டணம் உயர்வதைத் தடுக்கவும் முடியவில்லை. இதுதான் தொழிலாளர்களின் உண்மை வருமானம் வீழ்ந்ததற்கு காரணம்.


பிரிட்டன் தனது பசுங்குடில் வாயுக்கள் வெளியீட்டை எண்பது விழுக்காடு வரும் நாற்பது ஆண்டுகளில் குறைக்கவேண்டும் எனவே அதற்காக அணு, காற்று, மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கு பிரிட்டிஷ் மக்கள் தலைக்கு 300 பவுண்ட் ஷில்லிங் செலவழித்தாக வேண்டும்.


மகத்தானதன் மறைவு-நெருக்கடிக்கோட்பாடுகள்


இதுவரை தந்த தகவல்கள் இக்காலகட்டத்தில் ஆழமான நெருக்கடியைக் கூறுகின்றன. உலகப் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இதுவரை மகத்தான பொருளாதாரக் கோட்பாடுகள் என கருதப்பட்ட மார்க்ஸ், கீனிஸ், சும்பீட்டர் ஆகியோரின் கோட்பாடுகள் இன்றைய நிலைக்குப் பொருத்தமானவையாக இல்லை. அவை கடந்த காலத்தில் எத்தனை ஒளி மிக்கவையாக இருந்தபோதிலும் அவை மகத்தானவை ஆனால் தவறானவையும் கூட அவையாவும் வளர்ச்சி சார்ந்த கொள்கைகள் உண்மையானவை போலத் தோன்றலாம். சுயமான உண்மை விளக்கம் பெற்றன. மதிக்கத்தக்கன. ஆனால் இன்று வளர்ச்சிக்கொள்கை போலி நம்பிக்கையாகியுள்ளது.


மார்க்ஸ், ஏங்கெல்ஸ் கோட்பாடுகள் மகத்தான கோட்பாடுகளில் மூத்தவை. தலைமுறை தலைமுறையாக அவர் சீடர்கள் அதை உறுதியுடன் பரப்பி வருகின்றனர். எல்லைக்குட்பட்ட வளர்ச்சி என்பது பேசப்படும் முன்னரே, மார்க்சின் கோட்பாடுகளின் பயன்பாட்டுத்தன்மை குறித்த சந்தேகங்கள் மார்க்சிய அறிஞர்களால் எழுப்பப்பட்டதுதான்.


அது குறித்து இரு தொடர்புடைய கூற்றுகள் உண்டு.



1. பொருளாதார நெருக்கடிகள் பெரிதும் முதலாளித்துவம் சார்ந்தவையே. ஏனெனில் லாபம் எப்போதும் வீழ்ச்சியடையும் தன்மை கொண்டது.


2. இது முதலின் வளரும் தன்மை சார்ந்த இயல்புத்தன்மை சார்ந்தது. மார்க்சும், மார்க்சியர்களும் அனைத்தும் புதிய மதிப்பீடுகளும் உழைப்பால் உருவாக்கப்பட்டன என எண்ணுகின்றனர். எந்திர நுட்பம், மூலப்பொருட்கள் எவ்விதம் புதிய மதிப்பையும் உருவாக்குவதில்லை எனக்கருதினர்.

இந்த எண்ணம் எளிதில் கிடைக்கும், மலிவான இயற்கை வனமூலாதாரங்களின் மதிப்பு பற்றி உணராததன் விளைவு.

மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இருவருமே தொழில்மயம் செய்த இயற்கை அழிவுகளை அறிவர். ஆனால் மூலதாரங்களான மண் உழைப்பாளி ஆகியவற்றை உறிஞ்சி கொழுக்கிறது(மார்க்ஸ் 1954-506) இதிலிருந்து முதலாளித்துவத்தை வென்றுவிட்டால் இந்த நெருக்கடியை வென்று விடலாம் என்ற முடிவை ஒருவர் எடுக்கமுடியும். அறிவியல் மீதும் தொழில்நுட்பம் மீதும் அளவற்ற நம்பிக்கை, அனைத்துப்பிரச்சனைகளுக்கும் பின்னர் தீர்வு கண்டுவிட முடியுமென்ற நம்பிக்கையூட்டுகிறது. இதனால்தான் மார்க்சும்,ஏங்கெல்சும் இது பற்றி கவலைப்படவில்லை. இயற்கை நம் தவறான செயல்களுக்கு நம்மைப் பலிவாங்கும் என்று சொன்ன ஏங்கெல்ஸ் கூட ‘’ இந்த நூற்றாண்டில் இயற்கை விஞ்ஞானத்தின மகத்தான முன்னேற்றங்களின் பின், நமது தினசரி உற்பத்தி நடவடிக்கைகளின் மோசமான இயற்கை பாதிப்பு விளைவுகளை சரிசெய்து விட முடியும் என்று நம்புகிறோம்’’ என்றார்.


மூலப்பொருட்களின் தேவை மார்க்சின் காலத்தில் கிடைப்பது பெரிய சிரமமானதாக இல்லை. இயற்கை தரும் மூலப்பொருட்கள் தீரும், கிடைப்பது அரிதாகும் என்று எவரும் கற்பனை கூடச்செய்வதில்லை. எனவே மார்க்ஸ் போன்றோர் கட்டுப்பாடற்ற உற்பத்தியின் மறுபக்கம் பற்றிப் பெரிதும் கவலை கொள்ளாதது வியப்பில்லை.


மெக்சிகோ கடலில் மஞ்சள் கடலில் எண்ணெய் கசிவு, காட்டுத்தீ, பஞ்சம், வறட்சி, பெருவௌ¢ளம், சுனாமி, பூமி சூடாதல், செர்னோபில் அணுவுலை விபத்து, போபால் விஷவாயுக்கசிவு போன்றவற்றை அன்று அறிந்திருக்கவும் முடியாது. 19 ம் நூற்றாண்டு மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இதை அறியாதது குறையல்ல. ஆனால் இன்றைய மார்க்சியர்கள் இவற்றை ஆராய மறுப்பது மன்னிக்க முடியாத தவறாகும். அறிவியலின் எல்லை, தொழில்நுட்பத்தின் ஆற்றல், வளர்ச்சிக்குக் கட்டுப்பாடு என்பனவற்றை அவர்கள் உணர்ந்து உலகை எச்சரிக்காதது தவறு.


மார்க்சியர்களின் மற்றொரு தவறு மால்தூசின் மக்கள்தொகைக் கொள்கையை ஏற்காதது, மார்க்ஸ் மால்தூசின மக்கள் தொகைக்கொள்கை மனித இனத்தையே அவமானப்படுத்துவது என்று கூறினார். ஏங்கெல்ஸ் ‘’பொருளாதார விதிகள் வரலாற்று விதிகள், அவை எழுந்து மறைவன’’ என்றார். ஏங்கெல்சும் லெனினும் அளவற்ற அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்ப சாதனைகளும், குறையும் வரவுகள் எனும் விதியை மால்தூசின் அடிப்படையை சரி செய்துவிடும் என்றனர். மக்கள்தொகை பெருக்கம், தனிமனித இயற்கை வள ஆதாரம் குறைவது, தேக்கநிலையடைவது, குறிப்பாக உணவு, நீர் கிடைப்பது என்பன இன்று பெரும் நெருக்கடியாகி உள்ளன. மக்கள் உணவுக்கும், நீருக்கும் அதிகம் செலவிடவேண்டியுள்ளது. இதைத்தொடர்ந்து பிற வாழ்க்கைத்தேவைகளுக்குமான செலவு அதிகரிப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். மார்க்சியத்தின் மற்றொரு விதியான முதலாளித்துவத்தின் நெருக்கடி என்பது குறைவான நுகர்வு. இது மனித உற்பத்திக் கோட்பாடு எனவும் கூறலாம். நெருக்கடி குறித்த கினிஸ் கோட்பாடும் இத்தகையதே அவரும் பொருளாதார வீழ்ச்சி தனிப்பட்ட தேக்கநிலை என்பன அடிப்படைத் தேவைக்குறைவின் கூட்டு விளைவே என்கிறார். அவர், ‘’தொழில்மய சமூகத்தில் அதிகமானவர்கள் பணக்காரர்களானால், அவர்கள் தேவைகளுக்கெனச் செலவளிக்கும் பங்கு குறைவாகும். இது தொழில் முனைவோரின் முதல¦ட்டின் பங்களிப்பை குறைக்கும்’’ என்கிறார். சிக்கனத்தின் குழப்பநிலையால் பணக்கார நாடுகளின் அரசும் மக்களும் அதிகம் செலவளிக்கவும் குறையாக சேமிக்கவும் வேண்டுகின்றன. கடன்வாங்கி செலவுசெய்து நுகர்வை அதிகரிக்க வேண்டும். பின் அதிகம் சம்பாதித்து கடனை கட்டலாம் என்கின்றனர். துரதிருஷ்டவசமாக கீனிசியர்கள் இன்றும் அதையே பரிந்துரை செய்கிறார்கள். அதிக வருமானம் எதிர்காலத்தில் எப்படி வரும்? உற்பத்திக்கான இயற்கை வன மூலம் பொருட்கள் கிடைப்பது குறைந்து, விலை அதிகமாகும் போது இது எப்படி சாத்தியம்?


இன்றைய சூழலில் கீனிசியக்கோட்பாடும், மார்க்சிய குறைநுகர்வுக்கோட்பாடும் பயனற்றதென ஒதுக்க வேண்டியன. இதற்கு இரு காரணங்கள். முதலில் இன்றைய நெருக்கடிக்கு அவை சரியான தீர்வைக்கூறவில்லை. பணக்கார நாடுகளின் மக்கள் குறைவாகவே நுகர்கிறார்கள். அதிகம் சேமிக்கிறார்கள் என்பது ஏற்புடையதாக இல்லை. அமெரிக்காவில் இன்றைய நெருக்கடிக்கு முன் சேமிப்பு அளவு குறைவாக இருந்தது. தொழிலாளர்களும், ஏழைகளும் அதிகம் நுகர்வுச்செலவு செய்து வந்தனர். மிகை நுகர்வுக்காரர்களாக கடன் வாங்கியும் செலவு செய்பவர்களாகவே இருந்தனர். கடன் வாங்கி வீடு வாங்கினர். அதிகக் கடன் வாங்கியும் ஆடம்பர வீடுகள் வாங்கினர். இதுபோலவே மிகை செலவும், குறை சேமிப்பும் அனைத்து பணக்கார நாடுகளிலும் காணப்படுகிறது. அமெரிக்காவின் வீட்டுக்கடன் நெருக்கடிக்கு மிகை வீடு உற்பத்தி காரணமல்ல. கட்டிய வீடுகள் எல்லாம் அப்போது விற்றுத்தீர்ந்தன.


இரண்டாவதாக கீனிசியர்களும், மார்க்சியர்களும் இன்னும் கூட இந்த பணக்கார நாடுகளின் மிகை நுகர்வு நிலை பூமி சூடாதலின் முக்கிய காரணம் என்பதை உணரவில்லை. உலகின் இயற்கையாக அழிவுக்கும், மாசுபடலுக்கும் அவர்களே காரணம். அதிர்ஷ்டவசமாக விரைவாக மனிதகுலம், மூலப்பொருட்கள் பற்றாக்குறையும், பொருளாதாரத்தேக்கமும், இந்த இயற்கை பேரழிவு எல்லை தாண்டாது காத்தன எனலாம். 1990 களின் தொடக்கத்தில், தொழிற்சாலை உற்பத்தி முற்றாக சோவியத், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வீழ்ச்சி கண்டன. இதனால் சூழல் கெடுக்கும் பசுங்குடில் வாயுக்கள், மாசுகள், மிகவும் குறைந்தன. இங்கு தொழிற்சாலை உற்பத்திக்கும் உலகின் சூழலின் நலனுக்கும் இடையே ஒரு முரண்பாடு உள்ளது.


சும்பீட்டர் பொருளாதார நெருக்கடியும், வீழ்ச்சியும் முன்னேறும் பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத இரு பக்கங்கள் என்கிறார். அவர் பொருளாதார நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான எந்த வழிமுறைகளையும் அவர் கீனிஷ் போல கூறவில்லை. மாறாக அவற்றிற்கு சில பயன்தரும் பங்களிப்பும் உண்டு என்று கருதினார். ஆக்கப்பூர்வமான அழிவு இன்றி பொருளாதார வளர்ச்சி, வன மேம்பாடு ஆகியன நடவாது என்று கருதினார். சும்பீட்டர் இன்றைய பொருளாதார நெருக்கடியைப் பெரும் வாய்ப்பு எனவே கருதுகிறார். அழிவைத் தொடர்ந்து ஆக்க அலைகள் எழும் என்கிறார். தொலைநோக்குள்ள, ஆக்கபூர்வமான புதிய தொழில் முனைவோர் தோன்றுவர் என்றார் புதிய பெரும் அலையுடன் துவங்கும் முதற்கட்டம் பெரும் வளர்ச்சியடையும் வளம் பெருக்கத்தையும் காணுமென அவர்கள் நம்புகின்றனர்.


பெட்ரோலிய எரிபொருள் சார்ந்த ஆற்றல், தொழில் வளர்ச்சியின் ஆதாரமாக உள்ளது. தீர்ந்துபோகும் இன்றைய அச்சுறுத்தல், கரிக்காற்று குவிப்பு காரணமான பூமி சூடாதல், இவை குறித்துச்சிந்திக்கிறார்கள். புதிய ஆய்வுகள், ஆர்வம் மிகக கண்டுபிடிப்பாளர்களின் முயற்சியால் மறு ஆக்கம் செய்யக்கூடிய ஆற்றல் மூலங்களான சூரிய ஒளி, காற்று, இயற்கைக் கழிவுகள், பூமியின் அடித்தள வெப்பம் போன்றன இப்போதுள்ள மாசுபடுத்தும் ஆற்றல் உற்பத்தி முறைகளுக்கு மாற்றாக வரக்கூடும். புதிய பசுமைத் தொழிற்புரட்சிக்கான அறிகுறிகள் ஏற்கனவே நமது வானில் தென்படுகின்றன.


சில ஆண்டுகள் முன் அமெரிக்காவின் மூன்று பெரும் கார் நிறுவனங்கள் திவாலாகும் நிலையைத்தொட்டன. சும்பீட்டரிய பொருளாதாரவாதிகள் இது ஆக்கத்திற்கு உதவும் அழிவு எனவே அமெரிக்க அரசு அவர்களின் மறு எழுச்சிக்கு உதவாமல், திவாலாகி அழிய விட்டு விட வேண்டுமென்றனர்.


ஜெர்மனிய பொது நிலையாளர் தாமஸ் ஸ்டீன்பில்ட், ‘’சும்பீட்டர் முதலாளித்துவத்தின் நெருக்கடியை உணர நமக்கு உதவியுள்ளார். கடந்த காலத்தில் பல நிறுவனங்கள் திவாலாகி அழிந்து போயுள்ளன. அதன் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று புதிதாகப் பல நிறுவனங்கள் திவாலாகின்றன. இதில் வியப்படையவோ, உதவவோ ஏதுமில்லை. கார் கம்பெனியின் வீழ்ச்சியின் கவலையில் வீழ்ந்துள்ள ஸ்டீன்பில்ட் ‘’இன்றைய பொருளாதாரத்தில் ஒவ்வொருவரும் தம்மைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டியுள்ளது. அரசியல்வாதிகள் இதில் தலையிடத் தேவையில்லை. முதலாளித்துவத்திற்கு எத்தகைய உதவியும் தேவையில்லை. அதற்கு மூலவளங்கள் கிடைத்துக்கொண்டிருந்தால் போதும். எண்ணெய் கூட தேவையில்லை. எண்ணெய் வணிகத்தில் ஈட்டிய பணத்தில் எதை வேண்டுமானாலும் வாங்கிவிடுவார்கள். அனைத்திலும் லாபம் தேவை அவ்வளவே. இந்த முதலாளித்துவத்தின் மூலவளம் பற்றிய அக்கறையின்மை, தொழில் முனைவோரைக் கையாளுதல் இவற்றில் பெரும் நம்பிக்கை உள்ளது’’ என்கிறார்.


திக்குத்தெரியாத காட்டில் திசைதேடி….


ஆங்கிலத்தில்:  ரவி சின்ஹா


தமிழில்: ஜீவா


2013 அக்டோபர் 27 ‘கத்தர் எதிரொலி’ எனும் தலைப்பில் நியூயார்க் SOUTHASIAN SOLDARITY INITIATIVE ல் பேசியதன் சுருக்கம்.





இந்த முதலாளித்துவ காலகட்டத்தில் மாற்று அரசியல் என்பதை இடதுசாரி அரசியல் எனலாம். மார்க்சியம் என்பதைப் பல்வேறு வழிகளில் பொருள் கொள்ளமுடியும். இடது சாரிகளின் சாதனை மிக்க வரலாறு, உலகுதழுவியதன்மை, ஆகியவற்றை மீறி சிறப்பானதாக செயல்படவில்லை. மாறாக முதலாளித்துவம் அதன் தொடர்ந்த நெருக்கடிகள், இடதுசாரிகளின் சாடல்கள் மீறி வெற்றிகரமாக நடைபோடுகிறது. இதுவே இடதுசாரிகள் முன்னுள்ள பெரும் சவால்.


இருபதாம் நூற்றாண்டு சோசலிசத்தின் மாபெரும் வீழ்ச்சியின் பின் மார்க்சிய இடதுசாரி அரசியல் முடிந்துபோனதா? பின் மார்க்சிய காலகட்டத்தில் மாற்று அரசியல் சிந்தனை என்பது மார்க்சியத்திற்கு மட்டுமுள்ளதா? பழைய பொருளாதாரவாதம், குறுகிய வர்க்கவாதம், முன்னோடித்தனம் எனும் பழமைகளையே தொடரப்போகிறோமா? புதிய சமூக மாற்று இயக்கங்களின் வானவில்லிலும் உலகம் நுழைந்துள்ளது என்பதைக்காண மறுத்து செயல்படுவதா?


இரண்டு முக்கியமான கேள்விகள் ஏன் இடதுசாரிகள் மோசமான நிலையிலுள்ளனர்?, நெருக்கடிகளின் பின்னும் முதலாளித்துவம் சிறப்பாக உள்ளது எப்படி? இவை பற்றி இடதுசாரிகள் சிந்திப்பது அவசியம்.


இடதுசாரிகளின் பிறப்பு மூன்றாம் உலக நாடுகளின் காலனியாதிக்கம், நிலப்பிரபுவத்துவச் சூழலிலே நிகழ்ந்தது. அது இடதுசாரிகளின் ஒளிமிகுந்த காலம். அதற்கு நிலப்பிரபுத்துவத்தை மன்னர்களை, அந்நிய ஆட்சியாளர்களை எதிர்த்து போராடுவது எப்படி என்று நன்றாகவே தெரியும். ஆனால் அவர்களுக்கு முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுவது, வெற்றி பெறுவது என்பது அறியாத ஒன்று. முதலாளித்துவத்தை நேரடியாக எதிர்த்துப் போராடி இடதுசாரிகள் வென்றதில்லை. பூர்ஷ்வா ஜனநாயக அமைப்பில் நின்று முதலாளித்துவத்தை வெற்றி கண்டதும் இல்லை. அண்மையில் நேபாளத்தில் மாவோயிஸ்ட்களின் வெற்றி கூட மன்னராட்சியை எதிர்த்து பெற்றதே. வெற்றியை எப்படி முன்னெடுத்துச் செல்வது  என்று திகைத்து நின்றதையும் பார்த்தோம். இந்திய கிராமப்புறங்களை நிலச்சுவான்தார்களும், நகரங்களை பன்னாட்டு முதலாளிகளும், அவர்களின் உள்நாட்டு தரகர்களும் பிடியில் வைத்துள்ளனர் என்று விளக்கம் கூறுகின்றனர். இந்தியாவில் குறிப்பிட்ட எதிரியை அடையாளம் காணும் மாற்று அரசியல் வாய்ப்புகள் இல்லை. இங்கு முதலாளித்துவத்தை எதிர்த்து எப்படி போரிடவேண்டும் என்று இடதுசாரிகள் பயிலவேண்டும். நாடாளுமன்ற அரசியலில் நழுவிப்போகாமலும், காடுகளிலும், ஒதுக்குப்புறங்களிலும் ஒதுங்கிப்போகாமல் உத்திகளை வகுக்க வேண்டும். இது பெரும் முதற் சவால்.


இது நேரத்தையும், சிந்தனையையும் கோரும். எதிர்காலத்தில் இளம் இடதுசாரிகள் முன்னால் உள்ள சவால். மூத்த இடதுசாரகள் தோல்வி பெறவுமில்லை. களத்தைவிட்டு அகலவுமில்லை. பெரிய இடைவெளி உள்ளது. மாறுதலின் காலத்தில் சிக்கித்தவிக்கின்றனர். உலகின் நிதர்சன நிலை ஒருபுறம். மறுபுறம் எதிர்நோக்கியுள்ள மாற்றங்கள் இதைக்கடப்பது எப்படி என்ற சிந்தனையில் பழையபாதையே போதுமென நடப்பவர் பலர்.


புதிய சவால்களை எதிர்கொண்டு வெல்ல, புதிய உத்திகள் தேவை. உலகமெங்கும் சிதறிக்கிடக்கும் அனுபவங்களை திரட்டி புதிய வழிகாணும் வல்லமை தேவை. இந்தியாவில் உழைக்கும் தொழிலாளர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் சங்க ஒருங்கிணைப்பில் இடம்பெறாதவர்கள். இவர்கள் நிலமற்ற விவசாயிகள், விவசாயக் கூலிகள், கைவினைஞர்கள், சிறு உற்பத்தி சாதன உரிமையாளர்கள், என நகர்புறச் சேரிகளில் குவிந்து கிடக்கின்றனர். இவர்கள் முதலாளித்துவச்சுரண்டல்,  பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகத்திரட்டுவதோ, சங்கமாக்குவதோ, விழிப்புணர்வாக்குவதோ, மிகவும் கடினமான பணியாகும். இதற்கு அவர்கள் வாழ்நிலையை மாற்றுவது முக்கியமான பணியாகும். இதனை இடதுசாரிகள் சீர்திருத்தமென்று புறக்கணிக்கிறார்கள். இது இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகளின் காலத்திற்கு உகந்ததாக இருக்கலாம்.


இன்றைய சூழலில் மாற்று அரசியலானது அரசு அதிகாரத்தை பிடிப்பதாக உள்ளது. முதலாளித்துவ சமூகத்தில் அரசு அதிகாரத்தைப் பிடிப்பது முதலின் மேலாதிக்கத்திலிருந்து மக்களை மாற்றி வழிநடத்தும்  நீண்ட சிக்கலான ஒன்றாகும். கூட்டுறவு என்பது கண்களுக்கெட்டாத பொன்னுலகக் கனவாகவே உள்ளது. இடதுசாரிகள் கூட்டுறவு என்பதை புரட்சிப்பாதையாக ஏற்கவில்லை. கூட்டுறவு என்பது தொழிலாளி வர்க்கம் தமது சிறு கடமைகளை, சுமைகளை இன்று ஏற்பதன் மூலம் நாளை பெரிய நிர்வாக, ஆட்சி சுமைகளையும் பொறுப்புகளையும் ஏற்பதற்கான பயிற்சியாகும்.


அடுத்த சவால் முதலாளித்துவத்தைப் புரட்டி வீசிய பின், எத்தகைய அமைப்பை அங்கு உருவாக்குவது என்பதை பற்றிய செயல்பாடுகள் முக்கியம். முதலாளித்துவத்தால் வாழ்விழந்தவர்களின் உடனடி நிவாரண தேவை எதிர்கால புரட்சிக்கான உத்திக்கான தேவையாகும். நிலப்பிரபுத்துவத்தின் கீழ் காலனியாதிக்கத்தில் வாடுபவர்கள் நிலங்களைப் பெறவும், சுதந்திரம் பெறவும் போராடமுன் வருவார்கள். ஆனால் அவை பெரிதும் ஒழிந்த இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் அதனை அழித்தவுடன் என்னதருவாய் என சுகமாய் வாழும் மக்களும், உழைப்பாளிகளும் கேட்கிறார்கள். இடதுசாரிகள் தோல்விகண்ட இருபதாம் நூற்றாண்டு சோசலிசத்தைக் காட்டி மனநிறைவு கொள்ள முடியாது. இடதுசாரிகள் இந்த தோல்வியிலிருந்து படிப்பினைகள் பெறாமல் ஆட்சியாளர்களின் மேல் குற்றம் சுமத்திவிட்டு தப்பிக்க முனைகின்றனர். இது பொறுப்புள்ள பொருள்முதல்வாத விளக்கமாகாது.


இருபதாம் நூற்றாண்டின் சோசலிசம் இன்றைய முதலாளித்துவத்தை வெல்வதற்கான மாற்றல்ல என்பதை மார்க்சியவாதிகள் திறந்த மனதுடன் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்குவது ஏன்? முதலாளித்துவத்தின் கீழ் பணி, வாழ்வினைப்பெற்று தன்தேவைகள், பாதுகாப்பு என வாழும் மக்கள் எப்படி அரசியல், வாழ்வு மாற்றை உறுதி செய்யாத இன்னொரு அமைப்பை ஏற்பார்கள்? மக்கள் முதலாளித்துவத்தின் கீழ் உண்மையான பாதுகாப்பையோ, உரிமைகளையோ பெறவில்லை என்பதை மறந்துவிடுகின்றனர். சரியோ, தவறோ பழக்கப்பட்டுவிட்ட அவர்களை ஐயமுறும், நிலையற்ற, முடிவற்ற ஒன்றை எப்படி ஏற்க முன்வருவார்கள்?


இடதுசாரிகள் இதனை வெளிப்படையாக பேசுவதற்கு தயங்குகின்றனர். உண்மைகளை வெளிப்படையாக பேச வேண்டியுள்ளது. இனிவரும் பொருளாதார முறை, பழைய அரசு மையப் பொருளாதார மேலாண்மையாக இருக்கமுடியாது. அது ஒன்றும் தொழிலாளர் சொர்க்கம் இல்லை. தொழிற்சாலையை, நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு ஏற்காமல் பொருளாதாரத்தையும், நல்ல தலைவர்களின் கையில் ஒப்படைத்துவிட்டு பொறுப்பின்றி மகிழ்ச்சியாக வாழ்வோம் என்பது இனி நடவாத ஒன்று. அத்தகைய பொறுப்பின்மை, மகிழ்ச்சி இன்மைக்கும், வறுமைக்குமே வழிவகுக்கும்.


எப்படி அத்தகைய பொருளாதாரத்தைத் தொழிலாளர்கள் ஏற்க முடியும்? பணம் பணத்தை ஆயிரம் வழிகளில் பெற்றெடுக்கும் என்பது முதலாளித்துவ விதி. சமூக உற்பத்தியின் உபரி என்பது உருவாக அனுமதிக்கமுடியாது. அது சுரண்டலாகும் என்பது மார்க்சிய வார்தை ஜாலமாகும். கூலி உழைப்பு ஒழிக்கப்படும் என்கிறது. எனினும் கூலியிலும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது தவிர்க்க முடியாததாக தொடரும். இதனால் கூட்டுறவு என்பது சோசலிசப்பொருளாதாரத்தின் அடிப்படை அது தனியார் முதல¦டல்ல. அரசு முதலும் அல்ல.


எதிர்கால சோசலிச அரசில் அரசின் பொருளாதார ஏகாதிபத்தியம் தொடரமுடியாது. ஒரு கட்சி ஏகபோகமே நடவாது. மக்களே அரசை முடிவு செய்யும் காலம் அது. இது எவ்வளவு குறையுள்ளதாக, பணத்தின் ஆளுமையிலிருந்து காப்பாற்ற முடியாததாகப்போனாலும், அதுவே உண்மையானது. சோசலிசத்தின் அதிகாரமும், பொறுப்புகளும் மேல் மட்டங்களின் கையில் ஒப்படைக்கப்படுமென்பதில்லை. சோசலிச அரசியலில் மக்கள் முடிவு செய்யும் அரசு எப்படி உருவாக்கும்?.


மக்களின் வாழ்வுசூழ்நிலை மேலும் மேலும் தன் கட்டுக்குள் வைத்திருப்பது எதிர்கால சோசலிச அரசாக இருக்க முடியாது. மாறாக அதிக கட்டுப்பாடற்ற சுதந்திரமான பரந்த வாய்ப்புகளை மக்களுக்கு தருவதாக இருக்கவேண்டும். இது இருபதாம் நூற்றாண்டு சோசலிசம் அறியாத ஒன்று. அனைத்து நிலைகளிலும் தொழிலாளிவர்க்கப் பண்பாடு, வாழ்வுமுறை பற்றியெல்லாம் கூட அரசியல் கட்டுப்பாடும், வழிகாட்டலும் இருந்தது.


சோசலிசம் என்பது கட்டுப்பாடு, ஒழுங்கு, ஒரே தன்மை, ஒரே வாழ்வுமுறை, பன்முகத்தன்மை மறுப்பு என்ற தவறாக கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதுவும் அடிமைத்தனமே. சுதந்திரம் என்பதற்கான விளக்கத்தை இடதுசாரிகள் உருவாக்க வேண்டியுள்ளது. அதுவே மார்க்சியப்புரிதலும், இலக்குமாகும். நல்ல மாற்று அமைப்பு, நல்ல மாற்றை உருவாக்கத் தேவை. அது மேம்பட்ட சுதந்திரத்தை அனுமதிப்பதாக இருக்கவேண்டும்.


தீவிர இடதுசாரிகள் இதை ஏளனம் செய்யக்கூடும். கூட்டுக்குள் வசதியாக அமர்ந்து சிந்திக்கும் அறிவுஜீவிகள் சிந்தனைகள் வெளியுலகிற்கு பொருந்தாத ஒன்றாகும். கற்பனையும், கனவும், வறட்டுக்கோட்பாடுகளும் புரட்சியாகிவிடாது. எதிர்கால சோசலிசம் மாறுபட்டது. அது அன்றைய உலகின் தேவைக்கேற்பவே அமையவேண்டும். உலகுக்கு எதிராகச் செயல்பட்டுத் தோல்வி கண்டு, உலகம் செய்த தவறு என்று புலம்புவது சரியாகாது.


பலர் இந்த வீழ்ச்சியை தவறாக கணித்து தவறான முடிவுகளுக்கு வருகின்றனர். அனைத்தையும் பொருளாதார, வர்க்க விளைவுகளே என்று சுருக்குவது குறுகல்வாதமே. பாலியம், ஜாதி, இனம் போன்ற பல்வேறு சமூக ஒடுக்குமுறைகள் குறித்த நமது கருத்து என்ன? இவற்றை புறக்கணித்துவிட்டதுதான் இடதுசாரிகளின் பெரும் தவறு. பின் மார்க்சிய காலமெனும் மாற்று அரசியல் பல்லாயிரம் புதிய இழைகள் பாவும், ஊடுமாகப்பின்னப்பட்ட புதிய இயக்கங்களின் கூட்டு நெசவாகும். இடதுசாரிகளின் முன் பல வினாக்கள் வீசப்பட்டும், அவர்கள் அதைக்காண மறுத்து குருடர்களாகவே உள்ளனர். பல அமைப்புகள் எழுகின்றன. ஆனால் அனைத்தையும் வழிநடத்தும் தலைமை இல்லை. இந்தியாவில் தலித்துகளின் நலனுக்காக சிந்தித்து அவர்களின் நலனுக்காகப்போராடும் அமைப்பு இடதுசாரிகளே. வெறும் நிலம், கூலியுயர்வு என்றில்லாமல் அவர்களின் வாழ்வுரிமைக்கான முதல்குரலாக இருந்தது இடதுசாரிகளே. இந்தியாவில் ஜாதியும், வர்க்கமும் பிரிக்கமுடியாத நிஜமும், நிழலும் போன்றன. பல நிலையை மாற்றிக்கொண்டு அனைத்து இடதுசாரி கட்சிகளும் ஜாதி பற்றியும், தலித்துகள் பற்றியும் சிந்திக்கத் தொடங்கியுள்ளன.


இதுபோலவே பாலினம், பெண்ணியம், ஆணாதிக்கம் பற்றிய நிலைப்பாடுகள் பரிசீலனைக்குரிய ஒன்றாகவே இடதுசாரிகளுக்கு உள்ளன. இடதுசாரித்தலைமை நிர்வாகம் யாவும் ஆண்மையம் கொண்டது. ஆனால் ஆணாதிக்கம் இடதுசாரிகளின் விதியல்ல. குறிப்பாக இந்தியாவில பெண்ணுரிமைகளின் முன்னோடிப்போராளியாக இடதுசாரிகள் உள்ளனர்.


இந்தப்பழிகளை எப்படி பிறர் மீது போடுவதல்ல. எப்படி சமூக இயக்கங்கள் ஒன்று சேர்ந்து மாற்று அரசியலுக்கு வித்திடுவது என்பதே கேள்வி. இடதுசாரிகள் இந்தப் பல்வேறு சமூக இயக்கங்களின் சங்கமத்திற்கு தடையாகாமல் ஒன்றிணைக்க வேண்டும்.


பொது சிவில் சட்டம் பற்றி இடதுசாரிகள் குழப்பமான முடிவையே எடுத்துள்ளனர். பண்பாட்டு மத உரிமை என்பன உலகு தழுவிய பெண்ணின் உரிமைக்கு முரண்பட்டதாக உள்ளது. யார் இஸ்லாமியர்களுக்காக, பெண்களுக்காக, ஒடுக்க்ப்பட்டவர்களுக்காக, பழங்குடிமக்களுக்காக பேசப்போகிறார்கள்?


சமூக இயக்கங்கள் முக்கியத்துவத்தை யாரும் மறுக்க முடியாது. ஒவ்வொரு அமைப்பும் மதிக்கத்தக்க பணியை செய்து வருகின்றன. மாற்று அரசியல் பண்பாடு, மரபு, சமூக பழக்கவழக்கங்கள் பற்றிய பிற்போக்குத் தனத்திற்கு மாற்றாக அமையக்கூடும். ஆனால் முதன்மை மாறுபாடு அடிப்படை அமைப்புக்கான மாற்றே. காதல் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு எதிரான ஜாதிப்பஞ்சாயத்து அவர்களை கொல்லுமானால் அதற்கு எதிர்நிலை எடுக்கவேண்டும். அரசு கொலைகாரர்களை காக்கும் நிலையை எடுப்பது சமூகத்தின் மோசமான நிலையின் தவிர்க்க முடியாத நிலையாகிறது.


ஆயிரக்கணக்கான சமூக இயக்கங்கள் பல அற்புதமான பணிகளைச் செய்து வாழ்வின் தரத்தை உயர்த்தி வருகின்றன. ஆனால் மாற்று அரசியல் மூலம் புரட்சிகர உத்திகளுக்கு உதவ வேண்டும். சமூக இயக்கங்கள் மக்களுக்கும் இடதுசாரிகளுக்கும் கோரிக்கைகளை முன்வைத்து உதவுகின்றன. இடதுசாரிகளுக்கு மக்கள் நேயம் கொண்ட புரட்சிகர உத்திகளை உருவாக்கும் கடமை உண்டு. அவை மக்களின் கோரிக்கை, அரசியல் அமைப்புக்கு தேவையான கோரிக்கைகளை உருவாக்கும் புரட்சிகர உத்தி கொண்டதாக வேண்டும். இதை சமூக இயக்கங்கள் செய்ய முடியாது. குறிப்பிட்ட பிரச்சனைகள், குறிப்பிட்ட பகுதி மக்கள், குறிப்பிட்டநோக்கம் கொண்டனவே சமூக இயக்கங்கள் அவை சுயமாக எவ்விதமான புரட்சிகர உத்திகளையும் முன்னிலைப்படுத்த முடியாது. அவர்கள் இடதுசாரிகளுடன் ஒத்துழைப்பதும், இடதுசாரிகள் அவர்களுடன் கைகோர்ப்பதும் தவிர்க்க முடியாத தேவைகளாகும்.


இடதுசாரிகள் வறட்டுகொள்கைவாதம் பேசுபவர்கள் என்ற கருத்து உள்ளது. சமூக இயக்கங்கள் மக்கள் மையச் செயல்பாடு கொண்டன. தெளிவான வேறுபாட்டுக்கோடு இல்லை. கொள்கையும் மக்கள் மையச் செயல்பாடும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஒன்று மற்றொன்றைச் சார்ந்து அதுபோல இவ்விரு அமைப்புகளும் ஒன்றை ஒன்று சார்ந்தனவே. எனினும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டது.


மாற்று அரசியல் என்பது மக்கள் பெருங்கடலிலிருந்து ஆற்றலும், ஊக்கமும் பெறுவது என்பது உணரப்பட வேண்டும். அதே போல வரலாறும், அதற்கான மூல ஆற்றல் தருவதே அவற்றிலிருந்து பெறும் மதிப்பும், உள்ளாற்றலும் அதை பலப்படுத்துகிறது. வரலாற்றில் கடந்த தலைமுறைகள் ஆழப்பதிந்துள்ளன. இனிவரும் எதிர்காலத்தலைமுறை இன்றைய தலைமுறையுடன் ஆழ்ந்த உறவு கொண்டது.


வியத்தகும் வகையில் இனப்படுகொலைகள் எனும் மனித குலத்திற்கெதிராக குற்றமிழந்த குற்றவாளியை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்க கோரும் கொடுமை நடக்கிறது. இது 1933 ல் ஜெர்மனியின் மறுபதிப்பாகவே தெரிகிறது. இந்த அவலத்தை தடுப்பதே மாற்று அரசியல், இதில் இடதுசாரிகளின் பங்கு மகத்தானது. சமூக இயக்கங்களின் பங்கைவிடப் பெரிய பங்கு இடதுசாரிகளுக்கு உண்டு. இந்த மகத்தான வரலாற்றுக் கடமையை அவர்கள் செய்வார்களா, மாட்டார்களா என்பது வேறு விஷயம். உலகக் கோட்பாடும் உள்ளூர் அரசியலும் இதை முடிவு செய்வதில் பெரும் பங்காற்றக் கூடும். இந்த மாற்று அரசியலின் தேவையும், ஆற்றலும் ஒதுக்க முடியாத பேராற்றல் கொண்டது.

மதம் பற்றி மார்க்ஸ்-மார்க்சிஸ்ட் அறிவுஜீவிகள் விவாதம்


தமிழில்: ஜீவா





கார்ல் மார்க்சின் நூற்றாண்டு உலகு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தியாவில் கருத்தரங்கங்கள், பொது விழாக்கள், அவர் புகழ்பாட மட்டுமல்ல, அவரது போதனைகளை ஆழமாக ஆராயமாகவும், இன்றைய உலகத் தேவைக்கும், நமது நாட்டின் தேவைக்கு ஏற்ப பொருத்திப்பார்க்கவும் முயற்சிகள் தொடர்கின்றன.


மார்க்சியத்தை மறுப்போரும், எதிர்ப்போரும் கூடத்தமது கருத்துக்களைக் கூற இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றனர். இன்றைய உலகின் குறிப்பாக நம்நாட்டின் தேவைக்கு மார்க்சியம் எவ்விதம் பொருத்தமற்றது என்பதை நிலைநாட்ட முயல்கின்றனர். ஐரோப்பாவின் உழைக்கும் வர்க்க மேம்பாட்டிற்கு மார்க்சியம் கடந்த நூற்றாண்டில் பெரிதும் உதவியுள்ளது. ஆனால் இன்றைய இந்தியாவுக்கு அது பயன்படாது.


இந்தியாவின் பொருளாதாரம், பண்பாடு, அரசியல் ஆகியன மாறுபட்டன. எனவே இந்தியாவுக்கு மார்க்சியம் பயன்படாத  காலாவதியான தத்துவமே என்கின்றனர். நமக்கான தனித்துவம் மிக்க வரலாறு, பண்பாடு உள்ளது. அது மார்க்ஸ் அறிந்த ஆராய்ந்த ஐரோப்பாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்கின்றனர்.


இத்தகைய மார்க்சியத்திற்கு எதிரான கல்வியாளர்கள் மார்க்சியர்களின் நீண்ட அரும்பணிகள் பற்றியோ, புரட்சிகர செயல்பாடுகள் பற்றியோ, இந்தியச்சூழலை கற்றறிந்து அதை மார்க்சியத்துடன் இணைக்கும் முயற்சியில் உள்ளனர். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் பாதச்சுவட்டைப் பின்பற்றிக் கற்ற மார்க்சியர்களை விமர்சித்து சிறுமைப்படுத்த இந்த நூற்றாண்டு விழாவைப்பயன்படுத்துகின்றனர்.


இப்போது திருவனந்தபுரம் கல்வியாளர்  கே.என் ராஜ் அவர்களின் ஒரு உரை பற்றிய விமர்சனத்தை மட்டும் மேற்கொள்கிறோம். அகில இந்திய மக்கள் அறிவியல் மாநாட்டில் அவர் நிகழ்த்திய உரை மார்க்சியம், மார்க்ஸ், லெனின் குறித்த அப்பட்டமான தாக்குதலாகவே இருந்தது.


மரு.ராஜ் சிறந்த பொருளாதார மேதை எனவும், கொடிய அவசரநிலை காலத்தில்  கூட துணிவுடன் எதிர்த்து நின்றவர் எனவும் கொண்டுள்ள மதிப்பை நினைவூட்ட விரும்புகிறோம். நமது மரியாதை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. ராஜின் மீதான மதிப்பு, அறிவு குறித்த மரியாதையை விவாதங்கள் பாதிக்க முடியாது.


தற்போது அவர் எம்போன்ற மார்க்சியர்களுடன் நேரடித்தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என்பதுடன், லெனின் மார்க்சின் மதம் பற்றிய கருத்தை சிதைத்துள்ளார் எனவும் குற்றம் சாட்டுகிறார். மார்க்சின் எழுத்துகளை முழுமையாக படிக்காதவர்கள், சுருக்கப்பதிப்புகளை மட்டும் படித்து வாதிப்பவர்கள் என்றும் சாடுகிறார்.


‘’நான் என்னை மார்க்சியன் என அழைத்துக் கொள்ள தயங்காதவன். அதே வேளையில் எனது கீனிசிய பொருளாதாரவாதி என்பதில் பெருமிதம் கொள்பவன் என்று அவர் பெருமையுடன் அறிவிக்கிறார். ஹெக்ஸ் தத்துவத்தின் மீதான விமர்சனம் என்ற நூலின் ஒரு பத்தியை ராஜ் மேற்கோள் காட்டுகிறார்.’’மதத்துயரம் என்பது உண்மைத்துயரின் உணர்த்தல், உண்மைத்துயருக்கு எதிரான கலவரம், மதம் ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சு, இதயமற்ற உலகின் இதயம், ஆன்மா அற்ற உலகின் ஆன்மா, அது மக்களின் அபின்’’


‘’லெனின் கூட இதை முழுதாகப்படித்து புரிந்துகொள்ளவில்லை. கடைசிவரியை மட்டும் படித்துவிட்டு மதம் பற்றிய மார்க்சின் கருத்தை சிதைக்கிறார்கள்’’ என்கிறார் ராஜ்.


ஆனால் தமது முழுமையற்ற மேற்கோளால் ராஜ் மார்க்சுக்கும், அவரது வாசகர்களுக்கும் அநீதி இழைத்துவிட்டார். எனவே நாம் அதன் முழுமையான வடிவத்தை மாஸ்கோ மொழிபெயர்ப்பின்¢ மூலத்திலிருந்து அப்படியே வழங்குகிறோம். மதவெறுப்பு விமர்சனத்தின் அடித்தளம் மனிதன் மதத்தை உருவாக்கினான். மதம் மனிதனை உருவாக்கவில்லை. வேறு வழியில் சொல்வதனால் மதம் தன் ஆழ்மனஉணர்வு, தன்னை அறியாத தன்னை இழந்த மனிதனின் தன்னுணர்வு, மனிதன் உலகை விட்டு எங்கோ வான்முகட்டில் உட்கார்ந்திருப்பவனல்ல. மனிதன் மனித உலகின், நாட்டின், சமூகத்தின் அங்கம். இந்த அரசும், சமூகமுமே மதத்தை படைத்தன. மதிக்கத்தக்க உலக ஆழ்உணர்வை உருவாக்கின. ஏனெனில் அதுவே உலகை மாற்றியது. மதம் அந்த உலகின் பொதுக்கோட்பாடு அறிவுத் தொகுப்பின் சுருக்கம். தர்க்கவாத மக்கள் பதிப்பு. ஆன்மிக மதிப்பீட்டுக்குறி, மன ஆறுதலுக்கும், நியாயப்படுத்தலுக்குமான அற அங்கீகாரம், புனித நிறைவு, ஆறுதலுக்கான பிரபஞ்ச ஒப்புதல் அடித்தளம், மனித சாரத்தை உணர்த்தலின் வெறித்தனமான உணர்த்தல், ஏனெனில் மனித சாரம் உண்மை நிலைபாடற்றது. எனவே மதத்திற்கு எதிரான போராட்டமென்பது மறுஉலகுடனான போராட்டத்தின் சமரசம். அதில் மரணமே மூலமான நறுமணம்’’


ராஜ் மேற்கோள் காட்டும் பகுதியைத் தொடர்ந்து, மக்களின் மாய மகிழ்ச்சியான மதத்தை ஒழிப்பது, உண்மை மகிழ்ச்சியின் தேவை. இந்த மாயையை விட்டொழிப்பதென்பது, மாயத்தின் தேவையை உருவாக்கும் நிலையைக் கைவிடுவதன் தேவை. எனவே மதத்தின் மீதான விமர்சனமென்பது துயரின் மூடாக்கை விமர்சிப்பதன் கரு. அத்துயரின் ஒளிவட்டமே மதம்’’


இந்த மூன்று பத்திகளையும் தொடர்ச்சியாக படிக்கும் போது மார்க்ஸ் மதம் எப்படி உருவானது என்பதை விளக்குவது புரியும். இயற்கையின் முன் வலிமையற்ற துரும்பாக நின்ற ஆதி மனிதன் உருவாக்கிய உலகில், இந்த அந்தக்கோட்பாடுகளும், கருத்துக்களுமே, இந்த அந்த கடவுளாயின.இயற்கை முன் வலிமையிழந்து கையறு நிலையில் நின்ற மனிதன் ஒடுக்குமுறையும், சுரண்டலும் மலிந்த பிற்கால உலகில் அதே நிலையை தொடர நேர்ந்தது. எனவேதான் மார்க்ஸ், மதம் ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சு என்றெல்லாம் குறிப்பிட்டார். மதம் ஏன் மக்களை மயக்கும் அபினானது?


இந்த மூன்று பத்திகளை காட்ட மறுத்ததன் மூலம் ராஜ் அறிவுச்சிதைவுக்கு வழி வகுத்தது. மார்க்ஸை காந்தியின் ஏற்புக்குரியவராகிவிட்டார். இதன்மூலம் அவர் மார்க்சுக்கு மட்டுமல்ல, காந்திக்கும் துரோகமிழைத்துவிட்டார். காந்தியின் பார்வையில் மதம் ஒருபோதும் அபினியாகாது. மார்க்சின் மதக் கொள்கை, ஆழ்மன உணர்வின் மறுப்பு என்பது காந்திக்கு ஏற்புடையதாக இருக்குமென ராஜ் ஏற்கிறாரா?


‘’லெனின் தனது அரசியல் செயல்பாடுகளில் மார்க்சின் மதக்கொள்கையின் ஒருபகுதியை மட்டும் எடுத்து மேற்கோள்காட்டினார்’ என்ற ராஜின் குற்றச்சாட்டு பற்றி ஆய்வு செய்வோம். மதம் மக்களுக்கு அபின் என்ற ஒரு வரிக்கு மாற்றாக ராஜ் ஒரு பத்தியை காட்டியுள்ளார்.அதே முழுமையான வாதத்தை காட்டாமல் காந்தியும் மார்க்சும் வேறுபாடற்ற மதக்கருத்து கொண்டவர்கள் என்று போலக் காட்டியுள்ளார்.


லெனினது எழுத்துக்களை கூர்ந்து கவனிக்கும்போது ராஜ் மார்க்சை மட்டுமல்ல லெனினை கூடத் தவறாகப் பொருந்தாதபடி மேற்கோள் காட்டி உள்ளார் என்பது தெளிவாகிறது. மார்க்சை நம்பிக்கையுடன் மதம் பற்றிய அபின் கருத்தை சொல்லி லெனினும் மார்க்ஸ் போல மதம் பற்றிய அனுசரனையான கருத்தை லெனினும் கொண்டவர் என்று காட்டியுள்ளார். மார்க்ஸ், லெனின் இருவருமே ‘’மதம் பற்றிய விமர்சனம் என்பது துயரின் மதகு, மதத்தின் ஒளிவட்டம் எனும் விமர்சனங்களில் உள்ளது’’.


லெனின் உன்னதப்படைப்புகளின் நாற்பது தொகுதிகளை மாஸ்கோ வெளியிட்டுள்ளது. லெனினின் முந்தைய படைப்புகளில் கிராமப்புற ஏழைமக்களுக்கு என்ற பகுதியில்,


ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யா, துருக்கி மட்டுமே பழமைவாத மதத்தை தவிர செஸ்மேட்டிக்ஸ், செக்டேரியன், யூதர்களுக்கு எதிராக அவமானகரமான சட்டங்களை கொண்டுள்ளன. இது ஒரு சில நம்பிக்கைகளை முற்றாக தடை செய்கிறது. ஒருவர் தனக்கு பிடித்தமான மதத்தை கடைபிடிக்கவும், பிரசாரம் செய்யவும், மாற்றவும் உரிமை பெற்றவர். எந்த அதிகாரிக்கும் ஒருவரின் மதம் என்னவென்று கேட்கும் அதிகாரம் இல்லை. அதிகாரப்பூர்வ மதம், கோவில் என்று எதுவுமிருக்கக்கூடாது. அரசு எந்த மதத்தையும் ஆதரித்து தன்நிதியை செலவளிக்கக்கூடாது. இதற்காகவே சமூக ஜனநாயகவாதிகள் போராடி வருகின்றனர். இந்தவிதிகள் எவ்வித தயக்கமுமின்றி, கண்காணிப்புமின்றி பயன்படுத்தாதவரை, மக்கள் அவமானகரமான மதகண்காணிப்புகளிலிருந்து, விடுதலை பெற முடியாது. குறைந்த கேவலமாக காவல்துறை ஒரு மதத்தின் கையாளாவதை தடுக்கமுடியாது.(லெனின் தொகுப்பு ஆறாவது தொகுப்பு-பக்கம் 404).


இதுவே மதச்சார்பின்மை என்பதற்கு சரியான விளக்கமாக எந்த ஜனநாயக வாதியும் ஏற்றுக்கொள்ளக் கூடியது. மாறாக இந்தியாவில் காங்கிரசிஸ் கட்சி கூறும் மதச்சார்பின்மைக்கு எதிராக மார்க்சிய லெனினியர்கள் மதச்சார்பின்மையாளர்கள், அரசு மதநம்பிக்கைகளில் தலையிடுவதை எதிர்க்கிறார்கள். அது அனைத்து மதங்களுக்கும் சமமான வழிபாட்டு சுதந்திரம், மதமறுப்பாளர்களுக்கான சுதந்திரமும் வழங்குகிறது. இதே நிலைப்பாட்டை லெனின் தன் இறுதிநாள்வரை கடைப்பிடித்தார் என்பதை அவரது 1918 திட்ட வரையறுப்பும் காட்டுகிறது.


‘’ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மதக்கொள்கை, மதத்தை அரசிடமிருந்து பிரித்து வைப்பதுடன் நில்லாது, பள்ளி நிர்வாகமும், தேவாலயத்திலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்பதே. பூர்ஷ்வா ஜனநாயகவாதிகள் வாயளவில் இதைப் பேசினார்களேயன்றி, எங்கும் செயல்படுத்தவில்லை. இதற்கு காரணம் தேவாலயத்தோடு அவர்களுக்கு உள்ள உறவு பல்வேறுவழிகளில் தொடர்வதே.


கட்சியின் முழுமையான இலக்கு, சுரண்டும் வர்க்கத்திற்கும் நிலைபெற்ற மதப்பிரசாரத்திற்கும் உள்ள தொடர்பை ஒழித்து மதத்தின் பிடியிலிருந்து உழைக்கும் மக்களை மக்களை விடுவிப்பதே. இதற்கான லட்சியம் கொண்ட அறிவியல் கல்வியை பரவலாக்குவது, மத எதிர்ப்பு பிரசாரத்தை மேற்கொள்வது அவசியம் எனினும் மத உணர்வை புண்படுத்தவோ, நம்பிக்கையாளர்களைத் துன்புறுத்தவோ கூடாது. அது மாற்றாக மதவெறியையே வளர்க்க உதவும்.(தொகுப்பு 29, ப29-1965 மாஸ்கோ)


இவ்விரு மேற்கோள்களிடையே லெனின் பற்றிய ஆழ்ந்த ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வு மாணவர்கள் பல மேற்கோள்களை கண்டெடுக்கமுடியும். நாம் குறிப்பிடுவது சோசலிசம் மதம் எனும் குறிப்பு தொகுதி 10, மதம் குறித்த உழைக்கும் மக்களின் அணுகுமுறை தொகுதி15, ஆகியவற்றில் உள்ளனவற்றை மட்டுமே. ‘’மார்க்சை கவனமுடன் படிக்கும் அக்கறை கொள்ளவில்லை. சுருக்கமாக குறிப்புகளை மட்டும் படித்து பேசுபவர்கள்’’ என்று குற்றம்சாட்டும் ராஜ், தம்மை மார்க்சை ஆழமாக பயின்றவர் என்று கூறிக்கொண்ட போதும், லெனினின் இந்த எழுத்துக்களை படிக்காமல் அவர் மார்க்சின் மதம்பற்றிய கருத்துக்களை தேவைக்கேற்ப கிழித்துப் படிப்பவர் என்று குற்றம்சாட்டமுடியும்?


லெனின் ‘மதம் குறித்த உழைப்பாளர் கட்சியின் அணுகுமுறை’ என்ற நூலிலிருந்து ஒரு மேற்கோளை காண்போம். ‘’நாம் மதத்தை எதிர்கொள்ளும் இயங்கியல்தத்துவத்தின் அரிச்சுவடி. அதுவே மார்க்சியத்தின் சாரமும் அதுவே. அந்த அரிச்சுவடியுடன் மார்க்சியம் நின்று விடுவதில்லை. மார்க்சிஸ்ட் அதற்கு மேலும் சென்று மதத்தை எவ்விதம் எதிர்கொள்வது, நம்பிக்கையின் ஊற்றுக்கண் எது, மதம் மக்களிடம் பதிந்துள்ள ஆழமான வேர்கள், ஆகியவற்றை இயங்கியல் பார்வையில் காணவேண்டியிருக்கிறது. மதத்தை எதிர்கொள்வது என்பது, தத்துவப்பிரசாரத்தோடு நின்றுவிடாது, செயல்பாட்டுடன் ஆக்கபூர்வமாக இணைப்பை பெற்றாக வேண்டும். வர்க்க இயல்பை மதத்தின் சமூக வேர்களை களையும் லட்சியம் கொண்டதாக இருக்கவேண்டும். எந்த நூலாலும் மதத்தை மக்கள் மனதைவிட்டு அகற்றிவிட முடியாது.


முதலாளித்துவத்தின் கடுமையான உழைப்புச்சரண்டல் மக்களை கசக்கிப் பிழிந்து முதலாளித்துவத்தின் குருட்டுத்தனமான அழிவுப் பிடியில் அதன் கருணையை எதிர்நோக்கி மண்டியிட வைத்துள்ளது. மக்கள் மதத்தின் கொடிய வேர்களை எதிர்த்து போராடக் கற்றுக்கொள்ளாதவரை உடமையின் அனைத்து விதிகளையும் எதிர்த்து ஒருங்கிணைந்து திட்டமிட்டு உணர்வுடன் போராட முன்வராதவரை எந்த நூலும் போதனையும் பயன்தராது.


நம்முன் எழும் கேள்விகள் ராஜ் பரிதாபமான நம்மைப் போன்ற மார்க்சியர்களை மட்டுமல்ல, லெனினையையும் கூட மார்க்சின் போதனைகளை அறியாதவர் என்று இழிவுபடுத்த முயல்வது ஏன்? இதற்கு சரியான பதிலை தருவாரென எதிர்பார்க்கவில்லை. எனினும் சில உண்மைகளை அவர்முன் வைக்கிறோம்.



1. கேரளாவின் இடதுசாரி ஜனநாயக அரசு அமைந்த நாள் தொட்டு, கடந்த பத்தாண்டுகளாக எல்டிஎப், யூடிஎப் இவை இரண்டிற்கும் வேறுபாடில்லை என்ற நிலையை அவர் எடுத்துள்ளார். அதையே தனது பிப்ரவரி வரையில் வெளிப்படுத்தியுள்ளார்.


2. இரண்டு அணிகளிலிருந்தும் சமமான விலகல் என்ற நிலையிலிருந்து இடதுசாரிகள் மீது இந்திய அளவில் எதிர்ப்பை துவக்கியுள்ளார். இடதுசாரிகளின் விவசாயிகளுக்கான போராட்டம், கட்டுப்படியான விலை ஆகியவற்றுக்கான போராட்டங்கள் மார்க்சியத்திற்கு முரணானவை என்று சாடுகிறார்.


3. பல்வேறு அறிஞர்கள், கல்வியாளர்கள் சர்வதேச நிதியத்தின் ஆபத்தான நுழைவை எதிர்த்துள்ள போதும், அதை ராஜ் ஆதரிக்கிறார்.


4. கடைசியாக அவர் காங்கிரஸ் கட்சியின மத்திய அரசு அமைத்துள்ள பொருளாதாரக் குழுவில் இடம் பெற்றுள்ளார். அதையொட்டிய தனது இடதுசாரி எதிர்ப்புக் கருத்துக்களை பொருளாதார அரங்கில் கூறியுள்ளார்.

இவை யாவும் அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் ஆதாரமற்ற பொய்மொழியாகப்படலாம். அப்படியானால் அதை மறுக்கும் பொறுப்பு அவர்களுடையதே. ராஜ் மார்க்ஸ், லெனினின் மதம் பற்றிய மேற்கோள்களுக்கு உண்மையுடன் பொறுப்பேற்று நிரூபிக்க வேண்டிய கடமையும் அவர்களுடையதே.



மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் கல்வி குறித்த கருத்துக்கள்



· அகிலன்



கார்ல் மார்க்சும் ஃபிரீட்ரிக் ஏங்கெல்சும் இணைந்து எழுதியவற்றுள் கம்யூனிஸ்ட் கட்சியின அறிக்கை பிரபலமானது. அந்த அறிக்கை கல்வியைப் பற்றி மூன்று இடங்களில் குறிப்பிடுகிறது. முதலாவதாக பூர்ஷ்வா வர்க்கத்தினுடைய எழுச்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது மார்க்சும் ஏங்கெல்சும் இவ்வாறு கூறுகின்றனர்.


தான் ஒரு தொடர்மோதலில் சிக்குண்டிருப்பதை பூர்ஷ்வா வர்க்கம் உணர்ந்துள்ளது. தொடக்கத்தில் பிரபுத்துவத்துடனான மோதல்; பின்னர், தொழில்துறையின் முன்னேற்றத்திற்குப் பாதகமான அக்கறைகள் கொண்ட தன்னுடைய சொந்தப்பிரிவினருடன் மோதல்; அயல்நாட்டு பூர்ஷ்வாக்களோடு காலத்திற்கும் நீடித்திருப்பதற்கான மோதல். இவ்வகையான அனைத்து மோதல்களிலும் அவ்வர்க்கம் தொழிலாள வர்க்கத்தை யாசித்து அதனுடைய உதவியை நாடி அவ்வர்க்கத்தையும் அரசியல் களத்திற்குள் இழுத்துவிட எத்தனிக்கிறது. ஆக தனக்கே உரித்தான அரசியல், பொதுக்கல்விக்கூறுகளை பூர்ஷ்வா வர்க்கமே தொழிலாள வர்க்கத்திற்கு வழங்குகிறது. மாற்றிக் கூறுவதென்றால் பூர்ஷ்வா வர்க்கத்தோடனான தொழிலாள வர்க்கத்தின் மோதலுக்குத் தேவைப்படும் ஆயுதங்களை பூர்ஷ்வா வர்க்கமே தொழிலாள வர்க்கத்திற்கு வழங்குகிறது.


மனிதர்களைத்தான் கூறுகள் என்று சித்தாந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. மேலும் சீர்திருத்தச் சட்டம் நிறைவேற்றப்ப்பட்ட 1832 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் நிலவிய சூழ்நிலையையே இங்கு மார்க்சும், ஏங்கெல்சும் குறிப்பிடுவதாக யூகிக்கலாம். மார்க்சும், ஏங்கெல்சும் குறிப்பிடும் கல்வி குழந்தைகளுக்கான கல்வி முறையைப்பற்றியதாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இங்கிலாந்து நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை(1844) எனும் கட்டுரையில் இங்கிலாந்து நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி குறித்து ஏங்கெல்ஸ் விவரிக்கிறார். ‘’தொழிலாளர் வர்க்கத்தினருக்கு கிடைக்கும் கல்வியினால் பூர்ஷ்வா வர்க்கம் அதிகப் பயன் பெற வாய்ப்பில்லை, மாறாக அச்சப்படவே வாய்ப்புண்டு’’ என்று அவர் நிறுவுகிறார். ஆக கல்வி குறித்து பேசும்போது வயதடைந்தவர்களுக்கான கல்வியையே மார்க்சும், ஏங்கெல்சும் குறிப்பிடுகிறார்கள் என்று கருத இடமுள்ளது. எ.கா தொழில்நுட்பப் பயிற்சிக்கூடங்கள் வாயிலாக, தொழிலாளர்கள் மத்தியில் கற்றுத்தேர்ந்த வயதடைந்தோர் குழு ஒன்றைத் தொழில்துறை பூர்ஷ்வாக்கள் உருவாக்குகின்றனர்.


ஆளும் வர்க்கத்தினருக்காகப் பேசுபவர்கள் கம்யூனிசத்திற்கு எதிராக எழுப்பும் குற்றச்சாட்டுகளைப் பற்றி விவாதிக்கும் பொழுது கல்வியைப்பற்றி வெளிப்படையான இரண்டாவது குறிப்பு அறிக்கையில் காணக்கிடைக்கிறது.


‘’வீட்டில் பயிற்றுவிக்கும் கல்விக்கு மாற்றாகச் சமுதாயக் கல்வியைக் கொடுப்பதன் மூலம் மிகத்தூயதான உறவுகளை நிலை குலையச் செய்கிறோம் என்று நீங்கள் கூறலாம். உங்கள் கல்விமுறை அதுவும் கூட சமூகக் கல்விதானே?  அதை நிர்ணயிப்பதும் நீங்கள் கற்பிக்கும் சமூகச்சூழல்தானே? பள்ளிகள் மூலமாகவும், நேரடியான மற்றும் மறைமுகமான சமூகக் குறுக்கீடுகள் மிகுந்த சூழலில்தானே?’’


கல்விமுறையில் சமூகத்தின் குறுக்கீடு என்பது கம்யூனிஸ்டுகள் புதிதாக உருவாக்கிய அம்சமில்லை. மாறாக, அப்படிப்பட்ட குறுக்கீட்டின் குணாம்சத்தை மாற்றி ஆளும் வர்க்கத்தின் பாதிப்பிலிருந்து கல்வியைக் காப்பாற்ற அவர்கள் விரும்பினார்கள். பாட்டாளி வர்க்கத்தின் குடும்ப பிணைப்புகள் எல்லாமும் குதறிப் போடப்பட்டு அவர்களின் குழந்தைகள் எல்லாம் வணிகத்தின் எளிள பண்டங்களாகவும் உழைப்பின் சாதனங்களாகவும் உருமாற்றப்பட்டு நிற்கின்றார்கள். இந்நிலையில் குடும்ப விழுமியங்கள் இயைந்த கல்வி முறை பற்றிய மற்றும் பெற்றோருக்கும் குழந்தைக்குமான புனிதமான உறவுமுறை பற்றிய பூர்ஷ்வா வர்க்கத்தின் பிதற்றல்கள் நவீனத்தொழில்முறையின் செயல்பாடுகளால் அருவருப்புக்கு உள்ளாகின்றன.


1847 ல் இங்கிலாந்து நாட்டில், பாதிநேரமுறை எனும் அடிப்படையில் தாங்கள் வேலைக்கமர்த்திய சிறார்களுக்குத் தொழிற்துறை முதலாளிகள் பள்ளிகளுக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டுமென்ற சட்டரீதியான நிர்பந்தம் இருந்தது. இந்த நிர்பந்தத்தை அலட்சியமாக புறக்கணித்த தொழிலகங்களில் நாள் முடியும்போது, மூத்த தொழிலாளி ஒருவர் மூலம் வேலை பார்க்கும் தொழிலகத்திலேயே கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. மதம் சார்ந்த அறிவில் சிறார்கள் பயிற்றுவிக்கப்பட்டது. மதம் சார்ந்த அறிவில் சிறார்கள் பயிற்றுவிக்கப்படவேண்டும் என்பது இதன் நோக்கமாய் இருந்தது.


இது தவிர, தொழிலாளர்கள் வர்க்க குழந்தைகளுக்கு என்று தனியார் நடத்திய பள்ளிகளும் இயங்கின. சட்டரீதியான, ஒன்பது வயதுக்கு மிகாமல் குழந்தைகள் கல்வியைத் தொடங்க வேண்டும். அப்படிப்பட்ட குழந்தைகளும், தம் குழந்தைகளை வேலைக்கு அனுப்பத் தேவை இல்லாத பெற்றோர்களின் குழந்தைகளும் இப்பள்ளிகளில் பயின்றனர். தங்கள் வளாகங்களில் பள்ளிகளை வைத்துக்கொள்ள முடியாத தொழிலகங்களில் வேலை பார்க்கும் சிறுவர்களும், பகுதி நேர விடுப்பில் இப்பள்ளிகளில் பயின்றனர்.


இந்நிலைக்கு மாறாக பிரான்சிலும், ஜெர்மனியிலும் அரசே பள்ளிக்கல்வியை ஏற்ற நடத்தியது.


திட்டமிட்ட வகையில் குழந்தைகள் குழுக்களாய் கல்வி பயிலும் நிலையை சோசலிசஸ்ட்கள், கம்யூனிஸ்ட்களும் ஆதரித்தனர். ஆனால் கல்வி புகட்டப்படும் முறையை அவர்கள் விமர்சித்த வண்ணம் இருந்தார்கள். பூர்ஷ்வா பாதிப்பிலிருந்து கல்வியைக்காப்பாற்ற தொழிலாளர்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றி அறிக்கையின் மூன்றாவதும், இறுதியானதுமான கல்வி குறித்த பார்வை பேசுகிறது. அரசுப் பள்ளிகளில் எல்லாக்குழந்தைகளுக்கும், இலவசக் கல்வி தொழிற்சாலைகளில் நடைமுறைகளில் இருக்கும் சிறார் உழைப்பு அடியோடு ஒழியவேண்டும். தொழிற்துறை உற்பத்தியுடன் இயைந்த கல்விமுறை இன்னபிற.


அறிக்கையில் கல்வி குறித்துக்காணப்படும் மூன்று வெளிப்படையான குறிப்புரைகளில் இரண்டு குறிப்புரைகள் கல்வியின் நிறுவன வரைச்சட்டங்களைப் பற்றியதாக இருக்கிறது. இதன் மீதான கருத்தாக சிறார்களுக்கான கல்வி தொழில் உற்பத்தியுடன் இயைந்தாக இருக்கவேண்டும் எனும் நிலைப்பாட்டை மார்க்சும், ஏங்கெல்சும் எடுத்திருந்தனர். அவர்கள் 1840 களின் இடைக்காலத்திலிருந்து தங்களுடைய வாழ்நாளின் இறுதிவரை இந்த நிலைப்பாட்டை தக்கவைத்துக் கொண்டிருந்தனர்.


அவர்கள் ஏன் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இதற்கு ‘தங்களுக்கே உரித்தான அரசியல் மற்றும் பொதுவான கல்விக்கூறுகளை பூர்ஷ்வாக்கள் வர்க்கத்திற்கு வழங்குகிறார்கள்’ என்ற கூற்றின் பின் பொதிந்திருக்கும் செய்திகளைப் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.


கருத்து என்றால் ஒரு கருத்து எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்று மார்க்சும், ஏங்கெல்சும் கொண்டிருந்த பார்வைகளோடு இச்செய்திகள் எவ்வாறு மிக நெருக்கமாக இணைந்திருக்கின்றன என்பதையும் நாம் காணலாம்.


பகத்சிங்கின் காணாமற்போன கடிதம்


தியாகத்தை லட்சியத்திற்கெனவே முழுமையாகப் பயன்படுத்துவோம்


ஆங்கிலம்: பேரா. சமன்லால்


தமிழில்: ஜீவா





பகத்சிங் வாய்ச்சொல் வீரரல்ல. புரட்சியே அவரது வாழ்வு. ஆனால் அண்மையில் கிடைத்த சில ஆவணங்களே அவரை இளமையிலே முதிர்ச்சி பெற்ற அரசியல் சிந்தனையாளராகவும் காட்டுகிறது. 1931 மார்ச் 23 அன்று தூக்குக் கயிற்றைத் தழுவும் முன்வரை சிறையிலிருந்த இரண்டு ஆண்டுகளிலும் அவர் இந்திய விடுதலைப்போராட்டம், சோசலிசப்புரட்சி, இந்திய அரசியல் போக்குகள் பற்றி ஆழ்ந்த கவனம் கொண்டவராக தனது கருத்துக்களையும், விமர்சனங்களையும் தொடர்ந்து வெளிப்படுத்திவந்தார். அவரது பல கருத்துக்களும், எழுத்துக்களும் அழிக்கப்பட்டன அல்லது மறைக்கப்பட்டன. மறைக்கப்பட்டவை மெல்ல வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளன. 2011 ஆகஸ்ட் 15 இந்து ஏட்டில் பகத்சிங் பிரிட்டிஷ் அரசுடனும், நீதித்துறையுடனும் மேற்கொண்ட தகவல் பரிமாற்றங்கள் பற்றி எழுதியிருந்தேன்.


பகத்சிங்கின் அறியப்படாத கடைசிக்கடிதத்தை வெளிக்கொணர்கிறேன். இதுவரை வெளிவராத இக்கடிதத்தை பால்வாவிலிருந்து டாக்டர்.ரகுவீர்சிங்கும், பீனாவிலிருந்தும் ராம் சர்மாவும் எனக்கு அனுப்பியுள்ளனர். இக்கடிதங்கள் ஹரிகிஷன் வழக்கை குறித்தவை.


ஹரிகிஷன் 1930 டிசம்பர் 23 அன்று பஞ்சாபின் கவர்னரை சுட்ட இளம் புரட்சியாளர். லாகூர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. ஹரிகிஷன் இன்று பாகிஸ்தானில் உள்ள மார்டனில் வாழ்ந்த செல்வந்தர் குருதாஸ் ராம் தல்வாரின் மகனாவார். ஹரிகிஷனின் வழக்கறிஞரின் வழிகாட்டலை பகத்சிங் சரியில்லை என்று கருதினார். இது குறித்து பகத்சிங் அறிவுரை கூறி எழுதிய கடிதம் ஹரிகிஷனைச் சென்றடையவில்லை. இதுபற்றி பகத்சிங் தனது இரண்டாவது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இதுவரை தொலைந்துபோனது என்று கருதப்பட்ட முதல் கடிதத்தின் ஹிந்தி வடிவம் 1931 ஜூன் 18 அன்று ‘ஹிந்து பஞ்ச்’ ஏட்டில் ஹரிகிஷன் தூக்கிலிடப்பட்டபின் வெளிவந்தது. ஹரிகிஷனின் தந்தை இறுதிவரை அவருக்கு துணையாக நின்றார்.ஹரிகிஷனின் சகோதரர் பகத்ராம் தல்வார் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காபூலிலிருந்து ஜெர்மனி தப்பிச்செல்ல உதவினார். பகத்சிங்கின் எழுத்துக்கள் இரண்டாம் முறையாக மொழியாக்கம் செய்யப்பட்டது. நாட்டுப்பிரிவினையின் போது, பகத்சிங்கின் முக்கியமான கட்டுரை ‘’நான் ஏன் நாத்திகனானேன்?’’ ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, 1931 செப்டம்பர் 27 ‘ப்யூபிள்’ ஏட்டில் வெளியானது. அதுவும் காணாமல் போனது. அந்த ஆங்கிலக் கட்டுரையை தோழர். ப. ஜீவானந்தம் மொழிபெயர்க்க, பெரியார் ஈ.வெ.ரா தனது குடியரசு ஏட்டில் 1934 ல் வெளியிட்டார். இன்றும் பல இணையதளங்கள் இந்த மறு மொழிபெயர்ப்பையே வெளியிட்டு வருகின்றன. ‘ப்யூபிள்’ ஏட்டில் மொழிபெயர்ப்பில் மிகத்தாமதமாகவே இந்தியா வந்தடைந்தது நேரு நினைவு நூலகத்தில் அதன் நுண் பதிப்பு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆங்கில மூலம் பின் ஒருநாளில் வெளிவரக் கூடும்.


பகத்சிங்கின் முதல் வடிவம் மறைக்கப்பட்டதற்கு காரணம் அதில் ஹரிகிஷனின் வழக்கறிஞர் அசப் அலி, ஒரு புரட்சியாளருக்காக வழக்காட அதிகமான தொகை கேட்டதை விமர்சனம் செய்து எழுதியதே காரணமாக இருக்கக்கூடும். ‘’அசப் அலி, ஒரு புரட்சியாளருக்காக வழக்காட பெருந்தொகை பெற்றதுடன் இரண்டு முதல் வகுப்புப் பயணத்திற்கான கட்டணத்தைவும் கேட்டுள்ளது எனக்கு வியப்பளிக்கிறது’’ என்று பகத்சிங் எழுதியுள்ளார். ஆனால் பகத்சிங்கும், தோழர்களும் அசப் அலி மீது எவ்விதமான மனக்குறையும் கொண்டவர்களல்ல. அசப் அலி, பகத்சிங் குறித்து உயர்வான கருத்து கொண்டவர்.


இன்றைய சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் பகத்சிங்கை வரித்துக்கொள்ள முயல்கின்றன. எனவே அவரது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவது அவசியம். பகத்சிங்கைத் தமது விருப்பத்திற்கும், தேவைக்கும் ஏற்ப கற்பனையாகக் காட்டுவது அவரது நினைவுக்குச் செய்தும் துரோகமாகும். இக்கடிதங்கள் பகத்சிங்கை எவ்வித போலித்தனமான திரைகளின்றி உண்மை வடிவில் காட்டும் ஆவணங்கள் இவை.


பகத்சிங்கை தமது வழிகாட்டியாக கொள்ளும் கட்சிகள், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளின் வழக்கறிஞர்கள் பகத்சிங் எதிர்பார்த்த நேர்மையுடன் தமது தொழிலை நடத்துவார்களா என்பதை ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.


பகத்சிங்கின் ஆங்கிலக்கடிதத்தின் மொழிபெயர்ப்பின், ஆங்கில மறுமொழிபெயர்ப்பின் சுருக்கம்:


ஜனவரி 1931


அன்பு சகோதரா,


ஹரிகிஷன் சட்டமன்ற குண்டுவீச்சு வழக்கில் பயன்படுத்திய அதே வாதத்தை தனது பாதுகாப்புக்கென நீதிமன்றத்தில் பயன்படுத்தியது எனக்கு மிகுந்த வியப்பளிக்கிறது. டெல்லியிலிருந்து வழக்கறிஞர் வாதிட அழைக்கப்பட்டுள்ளதும், அவருக்கு இரு மடங்கு கட்டணம் அளிக்கப்பட்டும், முதல்வகுப்பு பயணக்கட்டணம் வழங்கப்பட்டதும் பெரிதும் எனக்கு வியப்பளிக்கிறது. லாகூரிலுள்ள எந்த நல்ல வழக்கறிஞரும் இந்தப்பணியைச் செய்திருக்க முடியும். எனினும் இக்கடிதம் அதுபற்றியல்ல. நீதிமன்ற வாதம் பற்றியதே.


சட்டத்தின் மிக உச்ச தண்டனையான மரணதண்டனையை பெறக்கூடிய இளைஞரின் பிரச்சனையில் குறுக்கிடவோ, குழப்பவோ எனக்கு உரிமை ஏதுமில்லை. அவர் நிச்சயமாக தூக்குக்கு அனுப்பப்படுவார் என்ற நிலையில் அது பற்றிய அரசியல் பகுதி பற்றிப்பேச விரும்புகிறேன். தனிநபர் கருத்தை விட்டுவிட நினைக்கிறேன்.


இந்த வழக்கின் நிகழ்வுகள் தெளிவாக உள்ளன. அதற்கான பின்விளைவுகளும் தெளிவாக உள்ளன. குற்றம் சாட்டப்ப்பட்டவரும் அதை நன்றாக அறிவார். தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை தருவார்; தரவேண்டும். அவர்தரப்பு வழக்கறிஞர் அவரைத் தனக்கு கவர்னரை கொல்லும் நோக்கம் ஏதுமில்லை; அவரை எச்சரிக்கும் வகையில் தாக்கவே முயன்றதாகவும், கூற அறிவுறுத்தியுள்ளார்.


ஒரு நபரின் தனிப்பட்ட முயற்சியை அது எத்தனை பாராட்டத்தக்க முயற்சியாக, தொடர்பற்று, சிதறி ஒழுங்கற்றதாக இருந்தபோதும், அம்மனிதரின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளமுடியும் என்பதை நான் ஆழ்ந்த கவனத்துடன் பரிசீலனை செய்து முடிவுக்கு வந்துள்ளேன். நமது ஒவ்வொரு செயல்பாடும் நமது இயக்கத்தை வலிமைப்படுத்துவதற்கானது என்பதே என எவரும் உறுதி செய்யத் தேவையில்லை.


அரசியல் தொலைநோக்கின்மை காரணமாக, அவரது வழக்கறஞர் இத்தகைய அறிவுரை தந்துள்ளார். பாதுகாப்பான முயற்சிகளை மேற்கொள்வது தவறு என்று கூற மாட்டேன். எனினும் எனது கருத்து முரண்பாடானது. வழக்கறிஞர் உண்மைப்பிரச்சனையை புரிந்துகொள்ளாமல் புரட்சிக்காரர்களைக் குழப்பி, மனத்துணிவை சிதைக்கும் வகையில் அறிவுரை வழங்கக் கூடாது என்பது எனது கருத்து.


பொதுவாக வழக்கறிஞர்கள் குறிப்பாக பஞ்சாபில் உள்ளவர்களம், பொது நிகழ்வில் பங்கேற்பது தவிர வேறு எவ்வித புரட்சிகரச் சிந்தனையுமற்றவர்கள். அவர்களுக்கு புரட்சியாளர்களைப் புரிந்து கொள்ளவோ, அவர்கள் மனநிலையினை அறியவோ இயலாது.


பொதுவாகப் பேசுவதை விட்டு, குறிப்பிட்ட விஷயத்தை மட்டும் பேசுவோம். ஹரிகிஷனின் லட்சியம் வெறும் எச்சரிக்கை விடுவது மட்டுமே என்று ஏற்றுக்கொள்ள முடியாது. தனது எதிர்ப்பின் அடையாளமாகவே கவர்னரைத்தாக்கினார் என்பதும் சரியாகாது. அவரது உணர்வின் சரியான வெளிப்பாடு தேவை.


பம்பாய், அமிர்தசரஸ் பகுதிகளின் அரசு தனது வலிமையைக் காட்ட, தடியடிப்பிரயோகம் செய்கிறது. பெண்களைக் கைது செய்வது, தடியடி நடத்துவது, துப்பாக்கி பிரயோகம் செய்வது போன்றவை அவரை அவ்விதம் செய்யத்தூண்டியது. லாகூர் சதிவழக்கில் ஒரு சார்பாக நீதிக்குழு செயல்பட்டு மரணதண்டனை வழங்கியதைத் தொடர்ந்து நிகழ்ந்த புரட்சிகர இயக்கத்தின் செயல்பாடுகளை முன்மாதிரியாகக் கூறலாம்.


இப்போதைய சூழலில் இதுவே அவர் தரக்கூடிய சிறந்த வாக்குமூலமாக இருக்கும். தான் ஒரு லட்சியவாதியாக, ஒரு தனிநபரைக்கொல்வதற்கு மாறாக அரசின் வன்முறைச்செயல்பாட்டை ஒழிப்பதற்கான வழியாகவே அச்செயல்பாட்டை மேற்கொண்டேன். இது தவிர தனக்கு வேறு வழியில்லை என்று கூறலாம். புரட்சியின் பலிபீடத்தில் தனிநபர்கள் தமது உயிரைத் தியாகம் செய்வது தேவையாகிறது.


ஹரிகிஷன் ஒரு தனிநபரே. அவர் ஒரு மூத்த காவல் அதிகாரியைக் கொன்றதற்கு வருத்தம் தெரிவிக்கலாம். அவரைக்கொல்வதே அவனது நோக்கம். தாக்குதலை மீறித் தப்பித்ததற்கு அவன் கவர்னரைப் பாராட்டலாம். ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை செய்வதற்கான உன்னத பணியில் ஒருவரைக் கொல்வது பெரிதல்ல என்றவன் கூறலாம்.


ஒருவரது செயலை அவர் சார்ந்த இயக்கத்திலிருந்து பிரித்துவிட்டால் அது தனது முக்கியத்துவத்தை, சாரத்தை இழந்துவிடுகிறது. ஒரு தியாகம் செய்தால், அதை அந்த லட்சியத்திற்கு முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். எதிர்காலத்திலும் இத்தகைய தியாகங்கள் மக்களியக்க லட்சியத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதில் சிறந்தவழி ஒரு வழக்கறிஞர் குழுவை அழைத்து…(கடிதம் முடியவில்லை)

சிரிலங்காவின் தேசிய இனப்பிரச்சனை - மார்க்சியத்தீர்வு


ஆங்கிலத்தில்: சிவராஜேந்திரன்


தமிழில்: ஜீவா





இன்றைய அரசின் மோசமான செயல்பாடுகளால் சிரிலங்காவின் அனைத்து மக்களும் சொல்லவொண்ணாத துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.


தமிழ்மக்களுக்கு எதிரான தாங்க முடியாத துயரங்கள் தேசிய ஒடுக்குமுறையால் உருவாகின. பொருளாதார வீழ்ச்சியால் நாட்டின் பொருளாதாரமும், மக்கள் வாழ்க்கைத்தரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.


ராணுவச் செலவு நாளொன்றுக்கு இரண்டு கோடி மக்கள் மீது பெரும் சுமையாக அழுத்துகிறது. ஆனால் போரால் தேசியக்கேள்விக்கு விடைகாண முடியாதென அனைவரும் உணர்கின்றனர்.


அனைத்து இலங்கை மக்களும், தமிழர்களும் சமாதானமே தேவை என ஏங்குகின்றனர். தற்காலிகத்தீர்வு முதலில் எட்டப்பட வேண்டும். அதுவே நிரந்தரத்தேர்வாகாது என்பதை அனைவரும் அறிவர். இன்றைய நெருக்கடிகள் ஏதோ வெறும் சிங்கள, தமிழர்களுக்கிடையேயான இனப்பிரச்சனை மட்டுமே என்று கருதுவது சரியாகாது.


இன்றைய இனவாத சிங்கள அரசின் செயல்பாடுகள், இலங்கையின் சுதந்திரத்திற்கும், இறையாண்மைக்கும் ஆபத்தானது. யூஎன்பி அரசு 1977 முதல் மெல்ல மெல்ல இலங்கையின் இறையாண்மையை அமெரிக்காவிடம் அடகு வைத்துகொண்டுள்ளது. இந்திய அரசு இருதரப்பும் ஏற்கும் அரசியல் தீர்வைக் காண உதவவேண்டும். தனது அரசியல் லாபத்திற்கான தீர்வைத் திணிக்கக் கூடாது.


இலங்கையின் இறையாண்மையையும்ம, சுதந்திரத்தையும் காக்க விரும்பும் அனைவரும் உடனடியான அரசியல் தீர்வு, பேச்சு வார்த்தை மூலம் காண முன்வரவேண்டும். ராணுவ சர்வாதிகார அரசு உருவாவது தடுக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு எதிரான ராணுவத்தாக்குதல் முடிவு பெறவும், ஜனநாயக சக்திகளை வளர்க்கவும், வலதுசாரி யூஎன்பியின் நாடாளுமன்ற சர்வாதிகாரத்தை தடுத்து நிறுத்தவும் முன்வரவேண்டும்.


தமிழர்களுக்கான பாரம்பரிய தாயகம் அங்கீகரிக்கப்பட வேண்டும். தமிழர்கள் தனி தேசிய இனம் என்பது ஏற்கப்படவேண்டும். சிங்கள ஆக்கிரமிப்பு தமிழர் பகுதியில் தடுக்கப்பட வேண்டும்.


சிரிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி இதற்கென முன்வைக்கும் தற்காலிகத்தீர்வுகள்:



1. தமிழர்களின் பாரம்பரியத் தாயகமான வடகிழக்குப்பகுதிக்கு மாநில சுயாட்சி வழங்கப்பட வேண்டும். மாநில தன்னாட்சிக்குழு அமைக்கப்பட வேண்டும்.


2. அதற்கு இணையவும், பிரியவுமான உரிமை வழங்கப்பட வேண்டும்.


3. தன்னாட்சிக்குழுவுக்கு அதிகப் பட்ச சுதந்திரத்துடன் தனது பொருளாதாரம், வேலைவாய்ப்பு, உள்நாட்டுப்பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், பண்பாடு, சமூகசேவை ஆகியவற்றை எவ்விதமான மைய அரசின் குறுக்கீடுமின்றி மேற்கொள்ளும் உரிமை வேண்டும்.


4. இஸ்லாமியர் மற்றும் இப்பகுதியில் வாழும் சிங்களவர்களுக்கு தன்னாட்சி உரிமை, அடிப்படை மனித உரிமைகள், மொழி, பண்பாடு, காப்பு உரிமைகள் வழங்கப்படவேண்டும்.


5. தன்னாட்சி அமைப்பு வெளிநாட்டுப் படையெடுப்பு தவிர மற்ற வேளைகளில் பாதுகாப்பை மேற்கொள்ளும் உரிமை பெற்றனவாக அமைய வேண்டும்.


6. குடியேற்ற உரிமை வேண்டும். மைய அரசின் குடியேற்ற திட்டத்தை ஏற்கவும், மறுக்கவும் உரிமை வேண்டும்.


7. மதம், மொழி, இனம் சார்ந்த ஒதுக்கல் ஒழிக்கப்பட வேண்டும்.


8. வடகிழக்குப்பகுதியில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள், இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கவும், உள் தன்னாட்சிக்குழு அமைக்கவும் உரிமை வேண்டும்.


9. அரசு ராணுவத்தலையீடற்ற உள்ளாட்சி, தேசியத் தேர்தல்கள் நடத்த உறுதி வழங்கப்பட வேண்டும்.


10. ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட பகுதியினருக்கு சலுகைகள், முன்னுரிமைகள் பொருளாதாரம், வேலை வாய்ப்பு, கல்வி, ஆகியவற்றில் வழங்கி உயர்த்த வேண்டும்.

போரால் உண்டான பாதிப்புகள், இழப்புகள், நெருக்கடிகளுக்கான தீர்வு காணக் கீழ்கண்ட செயல்பாடுகள் அவசியம்.


1. பயங்கரவாதச் தடுப்புச்சட்டம், அவசரநிலை, திரும்பப்பெற வேண்டும். அவற்றின் படி கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும்.


2. அச்சட்டங்களின்படி தேடப்படுவோரை நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும்.அவர்கள் மீதான குற்றங்கள் திரும்பப்பெற வேண்டும்.


3. தமிழர்களின் பேச்சு, எழுத்து, உணர்வு உரிமைகள் காக்கப்படவேண்டும். அரசியல் சட்ட ஆறாவது பிரிவு திருத்தம் திரும்பப்பெற வேண்டும்.


4. ராணுவம் தமிழர் பகுதியிலிருந்து திரும்பப்பெற வேண்டும். உள் காவல் பிரிவினரில் ஆயுதங்கள் திரும்பப் பெற்று கலைக்கப்படவேண்டும்.


5. கொலை, கொள்ளை மற்ற பாதிப்புகளுக்கு ராணுவம், உள் காவல் படைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும்.


6. வீடுகளிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் துரத்தப்பட்ட மக்களை மீண்டும் குடியேற்றவும், மறுவாழ்வு பெறவும் அனைத்து உதவிகளையும் வழங்கப்பட வேண்டும்.


7. தமிழர்களின் உயிர், உடமைகளுக்கான முழுமையான பாதுகாப்புக்கு அரசு உறுதியளிக்க வேண்டும். அரசின் அடியாட்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.


8. அத்துமீறல், அராஜகங்களில் ஈடுபட்ட ராணுவத்தினர், காவல்படையினர் பாரபட்சமற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்கப்பட வேண்டும்.

இந்த தற்காலிக தீர்வுகள் மீண்டும் இத்தகைய அராஜகங்கள், அநீதிகள், வன்முறைகள் எழாமலும் நிரந்தரமான சமாதனம், சகவாழ்வு, சமத்துவம் நிலவுவதற்கான நிரந்தர தீர்வுகளுக்கான முயற்சிகள் தொடர சிரிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி(இடது) தொடர்ந்து தனது செயல்பாடுகளால் முயலும்.




கே.எஸ் சுப்பிரமணியம்


பொது செயலாளர், SLCP left


15/1 பவர்ஹவுஸ் சாலை


ஜாப்னா.








ஏழை இந்தியனுக்கான நீதியும், அரசியலும் எப்போது?


ஆங்கிலத்தில்: வி.ஆர் கிருஷ்ணய்யர்


தமிழில்: ஜீவா





சட்டஆட்சியின் முதுகெலும்புகளாகவும், அரசியல் சட்டத்தை மக்களுக்கு உணர்த்துபவர்களாகவும் இருப்பவர்கள் நீதிபதிகளே. அவர்களின் தீர்ப்புகள் சமூக பொருளாதார நீதிக்கு வழிவகுப்பன. ஆனால் அவர்களின் தவறுகளைக் குறித்து, ‘’மனிதர்கள் என்ற வகையில் நீதிபதிகளும், அமைப்பு என்ற வகையில் நீதிமன்றமும் எவ்விதமான சிறப்புப் பாதுகாப்புக்கும் உரியன அல்ல. ஒருவர் நீதித்துறைப் பதவியை வகிக்கிறார் என்பதால் நீதியின் மீது ஆர்வம் கொண்டவராக அவர் அடையாளம் காணப்படுகிறார். அவர் தங்களது சாதாரண மனிதர் என்ற அடையாளத்தையும், தவறு செய்யும் இயல்புகள் கொண்டவர் என்பதையும் மறந்துவிடக்கூடாது’’ என்று கூறப்படுகிறது.


இந்தியாவில் இத்தகைய நீதித்துறை சார்ந்த தவறுகள் பல நமது கவனத்திற்கு வருகின்றன. ஒரு அடிப்படையான தீவிர மாற்றம் கருப்பங்கிச் சகோதரர்களிடம் உருவாவது அவசியம்.


அரசியல் சட்டத்திற்கும், அதன் அமைப்பிற்குமான மரியாதை, அது ஏழை வறிய மக்களிடமிருந்து பெறும் நம்பிக்கை கொண்டே நிர்ணயம் செய்யப்படும். இக்கருத்தை பேராசிரியர் க்ரிபித் தகை Politic & Judiacary நூலில் இரு மேற்கோள்கள் மூலம் உணர்த்தியுள்ளார்.


வின்ஸ்டன் சர்ச்சில், ‘நீதிமன்றம் உயர்ந்த மதிப்பை பெற்றுள்ளது. இணையற்ற மரியாதையை பெற்றுள்ளது. சிவில், கிரிமினல் வழக்குகள் மனிதர்களிடையே தீர்ப்பதன் மூலம் பெற்றுள்ளது. அனைத்து மக்களின் மதிப்பும், மரியாதையும் பெறத்தக்கவர்களே அவர்கள். ஆனால் வர்க்கப் பிரச்சனைகள் வரும்போது நீதிமன்றம் அதே அளவு மரியாதையும் நம்பிக்கையும் பெற்றது என்று கூற முடியாது. பெரும்பான்மை மக்கள் ஐயமின்றி சார்பு கொண்டதாகவே நடப்பதாகவே நினைக்கிறார்கள்’’ என்றார்.


லார்ட் ஸ்ரூடன், ‘’நீதிபதிகளே நீங்கள் எங்கே பாகுபாடற்ற நீதியுள்ளவர்களாக உள்ளீர்கள்? முதலாளிகளின் உறவு வட்டத்தில் வாழ்பவர்கள், அவர்களுடன் படித்து பழகி வருபவர்கள். உங்களிடம் எப்படி ஒரு தொழிலாளியோ, தொழிற்சங்கவாதியோ நீதிமிக்க, சார்பற்ற தீர்ப்பை பெற முடியும்? உங்கள் வர்க்கத்திற்கும், அதற்கு எதிரான மற்றொரு வர்க்கத்திற்கும் இடையிலான வழக்கில் நீங்கள் முற்றிலும் நியாயமான வழங்குவது எப்படி உங்களுக்கு சாத்தியம்? என்று கேட்கிறார்.


நாம் சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு நீதித்துறையை, அனைத்து மக்களுக்கும் சமமான, சார்பற்ற தீர்ப்பைப் பெறும்வகையில் பெற்றிருந்தால் நல்லது. மரியாதையும், நீதியும், ஆன்மிக ஒருமைப்பாடும் கொண்ட தீர்ப்பை ஒவ்வொருவரும் பெற முடிந்தால் நல்லது. அத்தகைய நிர்வாகம் புனிதமானது. சட்டமுடிவுகள் எவ்விதமான வர்க்க, ஜாதி, மத, பண்பாட்டுச்சார்பற்றதாக அதன் தீர்ப்புகள் இருப்பது மதிப்புமிக்கதாகும்.


முதலாளித்துவம் சோசலிசம் என்பன உள்ளவன் இல்லாதவன் அடிப்படையானவை. உழைக்கும் வர்க்கம் முதலாளித்துவத்தால் சுரண்டப்படுகிறது. பணக்கார வர்க்கம் சார்ந்தவர்கள் பெரும்பாலும் நிர்வாகிகளாக வருகின்றனர். ஜனநாயக அமைப்பிலும், பணம், அதிகாரம் கொண்டு ஆளும் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இயல்பாகவே வர்க்க சார்பு நீதிபதிகள் தேர்விலும் நுழைந்து விடுகிறது. நீதித் துறையும் கூட வர்க்க சார்பு கொண்டதாகவே பெரும்பாலும் அமைந்து விடுகிறது.


உண்மையான சோசலிச குடியரசில் நீதித்துறை அதிகாரம் உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும். நீதித்துறை அதன் வர்க்கப் பின்னணியில் உள்ளவர்கள் சார்பாகவே இயங்குகிறது. சட்டம், நீதி, நிர்வாகம் என அனைத்தும் அரசியல் பண்பு கொண்டனவாக செயல்படுகின்றன. உழைக்கும் மக்கள் கட்சி ஆட்சிக்கு வரும்போதுதான் இந்திய சுதந்திர சட்டம் விடுதலை பெற முடியும். அப்போது சட்டமன்றம் அரசியல்சட்டத்தை வகுக்கும். ஆனால் இது இந்திய சமூகத்தின் பொருளாதார அடிப்படையை மாற்றிவிடாது. அதற்கு ஒரு புரட்சிகர மாற்றம் தேவை. அறுபத்தாறு ஆண்டுகால பின்னும் ஏழை ஏழையாகவே உள்ளான். அரசியல் சாசனம் ஆசையின் குரலாகவே உள்ளது. இன்னும் நடைமுறையாகவில்லை.


ஊழலை ஒழிக்கும் லட்சியத்துடன் வந்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. ஒருவேளை அது மாற்றத்தின் தொடக்கமாக அமையுமா? கீழை வானில் செவ்வொளி படர்கிறது. புத்தர், விவேகானந்தர், காந்தி ஆகியோரின் லட்சியங்கள் நாளை அரசியலின் அடிப்படை லட்சியங்களாக ஏற்கப்பட்டால், நீதித்துறையும், அரசியலும் வறுமையை ஒழிப்பதாக, ஏழை இந்தியனின் வாழ்வுரிமையை உறுதி செய்வதாக அமையும்.

கல்வியும் - சோசலிசமும்


தமிழில்: ஜீவா





கல்வி தனிநபர் நலனுக்கும், நாட்டின் நலனுக்குமான அடிப்படை உரிமை, தனது குடிமக்கள் அனைவருக்கும் கல்வி தருவது அரசின் கடமை. எனவே மக்களிடமிருந்து பெறப்படும் வரித்தொகையில் ஒரு பகுதியை மக்களின் கல்விக்காகச் செலவிடுவது அவசியம். உலகின் பல நாடுகளின் அரசுகள் மக்களின் கல்வி மேம்பாட்டுக்கான போதிய நிதியை ஒதுக்குவதில்லை. மனிதவள மேம்பாட்டை ஒதுக்குவது பெரும் பொருளாதாரப் பின் விளைவுகளை உருவாக்குகிறது. வறுமை, வேலையின்மை, மனித வளர்ச்சி ஆகியவையும் இதனால் பாதிக்கப்படுகின்றன.


கல்வியில் செய்யப்படும் முதல¦டு பொருளாதார வளர்ச்சி, உற்பத்தி, சமூக முன்னேற்றம், சமத்துவ சமூகம் ஆகியவற்றை அடைய உதவுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார, கல்விக்கொள்கைகளை அந்நாட்டின் தேசிய உற்பத்தி மேம்பாட்டிற்கும், கல்வி மேம்பாட்டிற்கும் அடிப்படையாகிறது. உலகின் மிகச்சில நாடுகளே தமது பொருளாதார, கல்விக்கொள்கைகளை அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் வகுக்கின்றன.


இன்று உலகமய முதலாளித்துவம் கல்வியையும் சந்தைச்சரக்காக்கியுள்ளது. வணிகமயமாக்கப்பட்ட கல்வி வசதியற்ற அடித்தட்டு மக்களை நிச்சயம் எட்டாது. இளைஞர்களின் எதிர்காலம் கல்வி வியாபாரிகளின் கைகளில் சிக்கித்தவிக்க நேரிடும். இருபதாம் நூற்றாண்டில் சோசலிச நாடுகளின் கல்வித்திட்டம், சமுதாயத்தின் பொருளாதார, சமூகத் தேவைகளைக் கருத்தில் கொண்டு அறிவையும், தொழிற்திறனையும் வழங்கியதுடன் சமூகப் பொறுப்புணர்வையும், கடமை உணர்வையும் வளர்த்தது.


கல்விக்கான முதல¦ட்டைக் குறைப்பது, பொருளாதார வளர்ச்சியைக் குறைப்பதுடன் சமுதாயத்தின் பண்பாட்டு, சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் மோசமாக்கி விடுகிறது. அத்தகைய நாடுகள் பெரும் மானுடச் சீரழிவுகளுக்கு உள்ளாகின்றன. கல்வி மேம்பாட்டுக்கு உதவும் திட்டங்களை ஏற்கும் அரசு, சமூக, பொருளாதாரப் பண்பாட்டு மேம்பாட்டுக்கு இயல்பாக வழிவகுக்கிறது. மக்கள் நல விரோதக் கொள்கைகளும் திட்டங்களும் சமூகத்தில் முரண்பட்ட விளைவுகளையே உருவாக்கும்.


நீண்டகால குறுகியகால கல்வித்திட்டங்கள் வடிவமைப்பு, அவற்றின் செயல்படுத்தல், தொழில் நுட்பங்கள், கல்வி மேம்பாடு முயற்சிகள், ஆய்வுகள், நிர்வாகம், ஆகியவற்றிற்கு தேவையான முதல¦டும், கொள்கைகளும் தேவை. சில நாடுகளின் மொத்த உற்பத்திக்குறியீட்டில் கல்விக்கான நிதி ஒதுக்குதல்கள் என்ன என்பதைக்காட்டும் பட்டியல் தரப்பட்டுள்ளது.


க்யூபா 18.7%


கயானா 8.4%


ஜமாய்க்கா 6.1%


இந்தியா 4.1%


சிரிலங்கா 1.9%


லெசோதோ 10.4%


ஸ்வீடன் 7.7%


அமெரிக்கா 5.7%


நேபாளம் 3.4%


மங்கோலியா 9%


கென்யா 7%


பிரிட்டன் 5.3%


வங்கம் 2.4%


எனகிறது யுனெஸ்கோ வெளியீடு.





கல்வி முதல¦டு உழைப்பு ஆற்றலை வளர்க்கிறது. இதனால் உற்பத்தியின் தரம் மேம்படுகிறது. கல்வி உழைப்பாளிகளின் அறிவை மேம்படுத்துவதுடன், தொழிலாளர்களை ஊக்குவிக்கிறது. இவற்றின் கூட்டு விளைவாக ஆராய்ச்சி, வளர்ச்சி, அதிகமுதல¦டு ஈர்ப்பு ஆகியவற்றுக்கு வித்திடுகிறது.சோசலிச அரசுகளிலேயே கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகமாக உள்ளது. பொருளாதாரநிலை குறைவாக உள்ள சோசலிச நாடுகளில் கூட கல்வி தரும் பொருளாதார சமூக நன்மைகளை கணக்கில்கொண்டு கல்விக்கு அதிக நிதி ஒதுக்குவதை காண்கிறோம். குறிப்பாக சீனா, தனது நிதி ஒதுக்கீட்டில் 9.5 விழுக்காடு கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் வழங்குகிறது. புதுமை பெற்ற கல்வியால் புத்துலகம் உருவாக்கமுடியும் என சோசலிசம் நம்புகிறது. 2050 ல் உலகின் முன்னணி அறிவியல் நாடாகச் சீனா உயர வேண்டுமென்பது அவர்களின் குறிக்கோள். அதுபோல வியட்நாம் தனது கல்வி நிதியை மூன்று மடங்கு உயர்த்தி 16 விழுக்காடாக அதிகரித்துள்ளது.


க்யூபா 275 கோடி டாலர் கல்விக்காக செலவிடுவதன் மூலம் முழுமையான கல்வியைத்தந்து நாட்டுமக்கள் உயர வழிகாட்டியுள்ளது. ஒரு வகுப்பிற்கு 25 குழந்தைகள் பயிலும் க்யூபாவில் வசதியற்ற குழந்தைகளின் கல்விச்செலவு முழுமையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. பள்ளி செல்லமுடியாத குழந்தைகளுக்கு வீடு சென்று கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் கொண்ட கல்வி வாகனங்கள் இயக்கப்படும் ஆச்சர்யமும் க்யூபாவில் நிகழ்கிறது.


இந்தியாவின் கல்விகற்ற ஆண்கள் 72 விழுக்காடு, பெண்கள் 58 விழுக்காடு 86 விழுக்காடு கிராமப்புற குழந்தைகள் கல்விபெற வாய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்ற போதும், அது எவ்விதம் நிறைவாக செயல்படுகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. மொத்த தேசிய உற்பத்தியில் ஜிடிபியில் போதுமான அளவு கல்விக்கு ஒதுக்காத நாடுகளில் தரமான கல்வி தரப்படுவதில்லை. இது குழந்தைகளின் அடிப்படை கல்வி உரிமையை மறுப்பதாகும்.


2013 செப்டம்பர் கணக்கெடுப்பு 77 கோடி 15 வயதிற்கும் குறைவானவர்கள் கல்வி பெறாதவர்களாக உள்ளனர் என்றும், அதில் மூன்றில் இரு பங்கினர் பெண்கள் என்றும் கூறுகிறது. கல்வியின்மையால் வேலையின்மை, அறியாமை, மூடத்தனம், வறுமை, சமூக அநீதி, பெண்கள்மீதான வன்முறைகள், நோய், பண்பாட்டுச் சீர்குலைவு போன்ற சமூகக்கேடுகள் வளர்கின்றன. ஆட்சியாளர்கள் நாட்டின் மேன்மை பற்றிய அக்கறையற்றவர்கள் என்பதையே இது காட்டுகின்றது.


அறிவியல், ஆராய்ச்சி, கணிதம் ஆகிய பள்ளிக்கல்வியில் முன்னணியில் நிற்கும் நாடுகளின் பட்டியலில் முதலாளித்துவ நாடுகள் சிறப்பான இடத்தை பிடித்துள்ளபோதும், நான்கு இளம் சோசலிச நாடுகள் சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டுள்ளன.


உலகத்தரம் அறிவியல் கணிதம்





சிங்கப்பூர் 1 3 1


தைவான் 2 1 2


தென்கொரியா 3 2 4


ஜப்பான் 4 5 3


ஹாங்காங் 5 4 5


ஹங்கேரி 6 6 6


பிரிட்டன் 7 7 5


செக் 8 11 7


ரஷ்யா 9 8 10


ஸ்லோவினியா 10 12 6



இலங்கை அரசு 98 விழுக்காடு கல்விநிலை பெற்றுள்ளதாக அரசு கூறியதை, இது ஐயத்துக்குரிய ஒன்று என்கிறார் பேராசிரியர் சந்திரா குணவர்தனே. இலங்கை தனது மொத்த உற்பத்திக்குறியீட்டில் 1.9 விழுக்காட்டையே கல்விக்கு ஒதுக்கும் நிலையில் இது சாத்தியமில்லை. கல்வியின்மையின் வெளிப்பாடான வறுமை, வேலையின்மை, பண்பாட்டுச் சீர்குலைவு, போதை அடிமைப்பழக்கம், குழந்தைகள் பயன்பாடு போன்ற சமூகக் கேடுகள் கல்வியின்மையின் வெளிப்பாடாகத் தெரிகின்றன.


மனித ஆற்றல், உயர்திறன் இவற்றை மேம்படுத்த கல்வி தேவை. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், மனித மாண்புகள் மேன்மைக்கும் கல்வியே ஆதாரம். கற்றோர் தலைமை தாங்கும் சமூகம் அமைய வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் கல்வி உரிமை பெறுவது அடிப்படை மனித உரிமையாகவேண்டும். சமத்துவமான, பொறுத்தமான, பயனுள்ள, கல்வியை ஒவ்வொரு குழந்தையும், இலவசமாகப் பெறச் செய்வதே சோசலிசமாகும்.

மௌனவசந்தம் பின்னுரை


-லிண்டா லியர்





எனக்கு சில நூல்கள்தான் வரலாற்றின் போக்கையே மாற்றுகின்றன, அப்படி மாற்றிய நூல்களில் கார்ல்மார்க்சின் டாஸ் காப்பிடல், ஆடம் ஸ்மித்தின் தி வெல்த் ஆப் நேஷன்ஸ், சார்லஸ் டார்வினுடைய தி ஆரிஜின் ஆப் ஸ்பீஷியஸ், அமெரிக்காவின் ஹாரியட் பீச்சர் ஸ்டவின் அங்கிள் டாம்ஸ் கேபின்  ஆகியவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம். ரெய்ச்சல் கார்சனுடைய சைலண்ட் ஸ்பிரிங்கும் அவற்றில் ஒன்று. 1962 ல் நியூயார்க்கில் மூன்று இதழ்களில் வெளியிடப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பரில் நூலாக வெளியானது. அக்டோபரில் மாதத்தின் சிறந்த நூல்ப்பட்டியலில் தேர்வு பெற்றது. அப்போது அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி வில்லியம் டக்ளஸ், ‘’அங்கிள் டாம்ஸ் கேபினுக்குப் பிறகு மிகுந்த புரட்சிகரமான நூல்’’ என்று அதனை அழைத்தார். அன்றைய சுற்றுச்சூழல் இயக்கத்தை தொடங்கியது இந்நூல்தான். ஒவ்வொரு நாட்டின் சமுதாயக் கருத்தாக்கத்தை இது உருவாக்குகிறது. ஒர் அமெரிக்க எழுத்தாளர், ‘’ரெய்ச்சல் கார்சனின் ஒரு சில ஆயிரம் சொற்கள் உலகத்தையே புதிய திசையில் கொண்டு சென்றுவிட்டது’’ என்றார்.


மௌன வசந்தம் ஒரு படைப்பாளரின் கடைசி  நூல். தனது ஆய்விற்காகச் செய்திகளைத் திரட்டிய போது, பல லட்சம் பவுண்டு வேதிப்பொருட்களை, அதனால் ஏற்படப்போகும் நீண்ட காலப் பாதிப்புகளைத் தெரிந்துகொள்ளாமல் பரப்புவோரின் கவனக்குறைவைக் கண்டார். கார்சன் மிகக் கோபமடைந்தார். அவரது மன உறுதியும் அதிகமாயிற்று.


சுற்றுச்சூழலின் மூலக்கருத்தை மௌனவசந்தம் படம் பிடித்துக்காட்டியது. இயற்கையில் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றோடு தொடர்புடையது. செயற்கைப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினால் அல்லது வேறு ஏதாவது உயிரியல் தொழில்நுட்பத்தின் உற்பத்தியினால் நாம் எதிர்பார்க்கும் ஒரு விளைவுக்கு மாறானது நடக்கும்.


கார்சனுடைய சிந்தனை அவர் பணியாற்றியபோது நிலவிய பனிப்போர் காலத்தில் இறுக்கங்களால் பாதிக்கப்பட்டிருந்தது. அவர் அரசியலில் புதுமைக்கருத்து கொண்டிருந்தவர். ஆட்சித்துறை அலுவலர், பாதுகாப்பு அலுவலர். அமெரிக்க அரசின் பொதுவுடைமை எதிர்ப்புக்கொள்கைகள் ஆபத்தான ஒரு இறுக்கமான சூழலில், அவர் தனது ஆய்வைத் தொடங்கினார். அறிவியலும், தொழில் நுட்பமும், இத்துறைகளில் பணியாற்றுவோரும் சுதந்திர உலகின் மீட்பர்களாக, வனத்தின் பாதுகாவலர்களாக மதிக்கப்பட்ட காலம் அது. மௌன வசந்தத்தில் கார்சன் இந்த உலகின் முன் நிறுத்தினார். அவர்கள் தங்களுடைய பணியை சரியாகச் செய்யவில்லை அல்லது உண்மையை மறைக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தினார். கவலையற்று செல்வச்செழிப்பில் திளைத்துக்கொண்டிருந்த, போருக்கு பிந்தைய ஒரு தலைமுறையை, அரசு தங்களைப் பாதுகாக்கும் என்று நம்ப வேண்டாம் என்று நம்ப வைத்தவர்களில் கார்சன் முதன்மையானவர். அரசாங்கக் கொள்கைகளின் தாக்கத்தை புரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது என்றும் தவறான வழியில் செல்பவர்களைத் தட்டிக் கேட்க வேண்டியது அவசியம் என்றும் மக்களை தூண்டிவிட்டார்.


‘’வரலாற்றில் முதல்முறையாகக் கருவறையிலிருந்து கல்லறை வரையில் ஆபத்தான வேதிப்பொருட்களின் ஆதிக்கத்திற்கு ஒவ்வொருவரும் உட்படுத்தப்படுகிறார்கள்’’ என்று கார்சன் குற்றம் சாட்டினார். அவருடைய தெளிந்த வாதம், அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியை கவர்ந்தது. தன்னுடைய அறிவியல் ஆலோசனைக் குழுவைப் பூச்சிகொல்லிகளைத் தவறாகப் பயன்படுத்துவதை ஆராயுமாறு கட்டளை இட்டார். ஆனால் ரெய்ச்சல் கார்சன் அறிவியல் சமுதாயத்திற்கு அறைகூவல் விட்டு புதிய பூச்சி மருந்து கொள்கையை நடைமுறைப்படுத்தச் செய்ததோடு நிறுத்திக்கொள்ளவில்லை. பல அரசு அலுவலர்களும், தொழிற்சாலை முதலாளிகளும் அறிவியல் அறிஞர்களும் புதிய பூச்சிக்கொல்லிகளின் நன்மைகளைப் பற்றிக் கொண்டிருந்த முடிவுகளை எதிர்த்து கேள்வி எழுப்பியதோடு இல்லாமல் கார்சன் அவர்களுடைய ஒழுக்கத்தையும், தன்மையையுமே கேள்விக்குள்ளாக்கினர். சம்பந்தப்ப்பட்ட பலரின் எதிர்ப்பிலிருந்து இது தெளிவானது. அமெரிக்கா அறிவியலின் பால் கொண்டிருந்த கண்மூடித்தனமான நம்பிக்கையைக் கவிழ்த்துப் போட்டு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இட்டுச்செல்லும் திசை பற்றி பொதுமக்களை விவாதிக்குமாறு செய்தார்.


சமுதாயம் அப்போதுதான் கதிர்வீச்சின் உண்மை நிலையினைப் புரிந்துகொள்ளத்தொடங்கியிருந்தது. கார்சன் தனது நூலில் சுற்றுச்சூழலியலின் பரிணாமங்களை விளக்கினார். அவர் தனது நூலில் குறிப்பிடும் முதல் வேதிப்பொருள் DDT இல்லை. மாறாக கதிர்வீச்சுத் தனிமமான ஸ்ட்ரான்சியம் 90. ரகசிய அணுச்சோதனை மற்றும் அணு ஆயுதப் பதுக்கலின் பின்னணியில் கார்சன் மௌனவசந்தத்தை எழுதினார். பிக்கினித் தீவுகளில் அமெரிக்க ராணுவம் நடத்திய சோதனைகளின் விபரங்களை மறைக்க முயன்ற போது, அவர் தனது ஆய்வைத் தொடங்கினார். கியூபா ஏவுகணைப்பிரச்சனையில் உலகம் போரின் விளிம்பிற்கு தள்ளப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு வெளியிட்டார். அவருடைய செய்தியின் மூலம், உயிர்வாழ்க்கை மொத்தத்தையும் காக்கவும், இயற்கையை ஆணவத்துடன் அணுகாமல், தாழ்ச்சியோடு பார்க்கவேண்டும் என்று மனித இனத்தை வற்புறுத்தவும், தங்களை அதன் பிரிக்க முடியாத பகுதியென்று பார்க்கவும் செய்யவேண்டும் என்று விரும்பினார்.


பூச்சிக்கொல்லியைத் தவறாகப் பயன்படுத்துவதன் ஆபத்தைப் பற்றி பார்க்கும் முதல் எழுத்தாளர் கார்சன் இல்லை. அது பற்றி முதலில் எடுத்துச் சொன்னதும் அவரில்லை. ஆனால் அவரது குரலைத்தான் மக்கள் கேட்கிறார்கள். அவருடைய தொலைநோக்குதான் சமுதாய இயக்கம் பிறக்க காரணமானது. அறிவியல் சமூகத்தின் மிக உயர்வாகக்கருதப்பட்ட கொள்கைகளை அவர் கேள்வி கேட்டார். மனிதர்கள் இயற்கைக்கு எதிரான தங்களுடைய போரில் செய்யும் அறிவற்ற மிருகத்தனமான செயல்களைப்பற்றி அடங்காத கோபம் கொண்டார். நாம் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் செய்து கொண்டிருப்பவற்றை திரும்பிப்பார்க்க வைத்தார். இதனை உயிருள்ள உலகின் பாலுள்ள அன்பினாலேயே செய்தார். மக்களின் வாழ்வின் வியப்பினையும், புதிரையும் அறிந்து கொண்டால் அதனை அழிக்கும் பசி குறையும் என்று நம்பினார். மௌனவசந்தத்திற்கான விளைவுகள் முதலில் எச்சரிக்கையோடேயே இருந்தன. வேளாண் வேதியியற் தொழிற்சாலையும், அரசில் அதன்  ஆதரவாளர்களும்ம இது பொது மக்கள் தொடர்பு பற்றிய பிரச்சனை என்று கருதினார்கள். வேதியியல் சார்ந்தவர்கள் கார்சனுடைய பதிப்பாளரான ‘நியூயார்க்கரை’ வழக்கு மன்றத்திற்கு இழுக்கப்போவதாக அச்சுறுத்தினார். நூலை வெளியிடுவதையும் நிறுத்த முயன்றனர். அது முடியாமல் போனதும், கார்சனுடைய அறிவியலை குறை சொல்லி விளம்பரம் செய்ய இரண்டரை லட்சம் டாலர்கள் செலவு செய்தனர். பூச்சிக்கொல்லிகள் நன்மை தரக்கூடியன, அமெரிக்க வேளாண்மைக்கு மிகத்தேவையானவை என்றும் கார்சனுடைய முடிவுகள் நாகரிகத்தை இருண்ட காலத்திற்குக் கொண்ட சென்றுவிடும் என்றும் நம்ப வைக்க முயன்றனர். ஆனால் அவர்களுடைய விளம்பர உத்திகள் கார்சனுக்கும், அவரது நூலுக்கும் விளம்பரம் தேடித்தந்தன.


அதிபரின் அறிவியல் ஆலோசனைக்குழு 1963 மே 5ம் நாள் தனது அறிக்கையை அளித்தது. அறிக்கை கார்சனின் ஆதாரங்களை ஏற்றுக்கொண்டது. மௌனவசந்தம் வெளிவருவதற்கு முன்னால் மக்கள் பூச்சிக்கொல்லிகளின் நச்சுத்தன்மை பற்றி ஒன்றும் அறியாதிருந்தனர். அரசின் கடும் நடவடிக்கைகளால் தங்களுக்கு பணத்தை அள்ளித்தருகின்ற தொழிற்சாலை பாதிக்கப்படும் என்பதாலும், ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதின் அபாயமின்மையை மக்கள் நம்பவில்லை என்பதால் ஏற்படும் இழப்பை ஏற்க வேண்டியதிருக்கும் என்று அஞ்சியும், வேளாண் வேதிப்பொருள் தயாரிப்பாளர்களும் அவர்களது துணைவர்களும் நேரடியாக கார்சனைத் தாக்க முடிவு செய்தார்கள்.


கார்சனை எளிதில் தாக்கமுடிந்ததற்கான காரணம், அவர் முனைவர் பட்டம் பெறாத விஞ்ஞானி. அவருக்கென்று எந்தக் கல்வி நிறுவனச் சார்பும் இல்லை. அவருடைய ஆராய்ச்சிக்கு ஆதரவு தர உடன் பணியாளர்கள் இல்லை. அவரைத் தூற்றுவோரின் மறைமுகத் திட்டங்களை எதிர்த்துப் பேச ஒரு பாதுகாப்பான அமைப்பு இல்லை. ஆதரவாளர்களை ஒன்றிணைக்க ஒரு அமைப்பு இல்லை.


பெண்கள் அறிவியல் அமைப்பில் இடம் பெற முடியாத சூழல் அது. ஆய்வு விஞ்ஞானிகளையோ, சமூக சிந்தனையாளர்களையோ, அப்போது யாரும் மதிப்பதில்லை. அந்தக் காலகட்டத்தில்தான் கார்சன் அறிவியல் துறைகளில் கால்பதிக்கவேண்டிய நிர்பந்தம். பெண் என்பதால் மதிப்பில்லை என்பது ஒரு புறம். இன்னொரு புறம் அவருடைய பொருளாதார நிலை. 1960 க்குப்பிறகு அவருக்கு மார்பகப் புற்றுநோய் வேகமாகப் பரவிவந்தது. மௌன வசந்தம் வெளியான பதினாறு மாதங்களில் அது அவருடைய உயிரைக் குடித்துவிட்டது.


இறுதியாக, அவருடைய முடிவுகளை மதிக்காததற்கு காரணம் அவர் சாதாரண மக்களுக்காக எழுதிய விஞ்ஞானி. இப்படி எழுதுப்பவர்களை அறிவியல் குழு மதிப்பதில்லை. அவருடைய இலக்கிய வெற்றி என்று விற்பனையில் சாதனை புரிந்த மூன்று நூல்களை அவருடைய எதிர்ப்பாளர்கள் சுட்டிக் காட்டுவார்கள். அவை அண்டர் தி சிவிண்ட், தி சீ அரவுண்ட் அஸ், தி எட்ஜ் ஆப் த சீ என்ற மூன்று நூல்கள். இத்தகைய நூல்களை எழுதியதாலே அவர் விஞ்ஞானியாக இருக்க முடியாது என்று சாதித்தார்கள். சிக்கலான உயிரியல், வேதியியல் கோட்பாடுகளை விளக்கியிருப்பது இலக்கிய நயத்துடனும், மக்கள் புரிந்து கொள்ளும்படியாகவும் இருப்பதால் சரியாக இருக்க முடியாது என்பது அவர்கள் வாதம்.


பத்திரிக்கையாளர்களும் விமர்சகர்களும் கார்சனை இசிவு நோய் வந்த பெண் என்றும், உணர்ச்சியைத் தூண்டும் சொற்களைப் பயன்படுத்துபவர் என்றும், அவருடைய நூல் பூச்சிக்கொல்லிகளை விட நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும் கூறினார்கள்.


வில்லியம் மீன் என்ற மருத்துவ விமர்சகர் ‘’பெண்ணோடு விவாதம் இடுவதை மௌனவசந்தம் நினைவுபடுத்தியது.. பெண்ணை எதிர்த்து விவாதத்தில் வெற்றி பெற முடியாது’’ என்று எழுதினார். தேவையின்றி பீதியைக் கிளப்புவர் என்றும் அறிவியலுக்கு புறம்பான கட்டுக்கதைகளை பரப்புபவர் என்றும் கூறினார்கள். அவர் பூனைகளை வளர்த்தார். பறவைகளிடம் அன்பு காட்டினார். அவர் இயல்பான இயற்கை எழுத்தாளர். ஒரு உள்ளொளியாளர். உணர்ச்சி மிக்க ஒரு பெண். அவரின் அறிவுக்கும் மீறிய ஒரு கோட்பாட்டை எடுத்துக்கொண்டார் என்றும் குறை சொன்னார்கள். ரசாயனத் தொழிற்சாலையின் முதன்மை ஆதரவாளர் ஒருவர், ‘’இயற்கையின் சமநிலை என்ற பழங்கொள்கையின் தீவிர ஆதரவாளர்’’ என்று வர்ணித்தார். அமெரிக்க வேளாண்துறையின் முன்னாள் செயலர் ஒருவர், ‘’குழந்தைகள் இல்லாத திருமணம் செய்து கொள்ளாத ஒருவர் மரபணுத்துறையில் ஏன் இவ்வளவு அக்கறை காட்டவேண்டும்?’’ என்று கேட்டார்.


இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்கள் கார்சனை காயப்படுத்தின. ஆத்திரமூட்டின. எனினும் அவர் அமைதியாக மறுக்கமுடியாத ஆதாரங்களை முன் வைத்தார். பெண்களின் தேசியப்பத்திரிக்கையாளர் சங்கத்தில் பேசியபோது அவர் அடிப்படை அறிவியல் உண்மைகள் லாபம், உற்பத்தித் தெய்வங்களுக்காக காவு கொடுக்கப்படுகின்றன என்று பேசினார். அறிவியலுக்கும், தொழிற்சாலைக்கும் உள்ள உறவை அம்பலப்படுத்தினார். ‘’ஒரு அறிவியல் அமைப்பு பேசும்போது யாருடைய குரலைக்கேட்கிறோம். அறிவியலுடைய குரலையா, அல்லது தொழிற்சாலையின் குரலையா?’’ என்று கேட்டார் கார்சன்.


மௌனவசந்தம் நூலிற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. 1964 ஏப்ரலில் கார்சன் இறப்பதற்கு முன்னர் நூல் பத்து லட்சம் பிரதிகள் விற்றன. அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் வினாக்களுக்கு பதிலளிக்கும்போது மிக கவனமாக பதிலளித்தார். ஒரு மாதத்திற்குப் பிறகு அமெரிக்க செனட் சபையின் துணைக்குழுவின் முன் அவர் அளித்த சாட்சியும், சட்டரீதியான சீர்திருத்தங்களை வலியுறுத்துகிறது. அரசு முன்னின்று நடத்தவேண்டிய ஆய்வுகள் தோன்றின. பல மாநிலங்களில் பூச்சிக்கொல்லிகளால் வன விலங்குகளும் மனிதர்களும் பாதிக்கப்படுவது பற்றி தெரியும்வரை அவற்றைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த சட்டங்கள் இயற்றப்பட்டன.


கண்ணால் பார்க்க முடியாத, ஆபத்தை விளைவிக்கக் கூடிய நச்சுப் பொருட்கள் காற்று, நீர், நிலம் ஆகியவற்றில்  ஊடுருவி அமைதியாக மனித உடலிலும் தேங்கி இருப்பது பற்றித் தெளிவான விளக்கங்களை அவர் மக்களுக்கு கொடுத்தார். சுற்றுச்சூழலியலின் ரகசியங்களை கார்சன் விவரித்தது எல்லாம் சரியாகவே இருந்தது. எனவே ஆழமான ஆய்விற்கு அவற்றை உட்படுத்தவேண்டியது அவசியமாயிற்று. மக்கள் கதிர்வீச்சின் தீயவிளைவுகளைத் தெரிந்து வைத்திருந்தார்கள். எனவே மனித உடல் நலத்தில் பூச்சிக்கொல்லிகளின் உடனடி, நீண்டகால பாதிப்புகள் என்னவென்று அவர்களால் அடையாளம் காண முடிந்தது. புற்றுநோய், வகை மாற்றங்கள், பிறப்பு தொடர்பான ஊனங்கள் ஏற்படும் என்று அவர்களுக்குத் தெரியும். இன்றைய சுற்றுச்சூழல் இயக்கத்தின் அடையாளச் சின்னங்களால் சுற்றுச்சூழல் சீரழிவு பற்றி அச்சமும் அவற்றால் மனித உடல் நலமும் பாதிக்கப்படும் என்ற கவலையும் இருக்கின்றன.


ரசாயன மாசுக்கள் பற்றி கார்சனுடைய எச்சரிக்கையை எந்த அளவு ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றால் ஒவ்வொரு குழுமத்தின் சுற்றுப்புற நலமும் மனித இனத்திற்கு அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். புதிய நூற்றாண்டின் தொடக்கத்தில் அதிக சேதத்தை உண்டாக்கக் கூடிய ரசாயனப் பொருட்கள் புதிதாக வந்துவிட்டன. DDT,BHC சில நாடுகளில் தடை செய்யப்பட்டுவிட்டன எனினும் மாசுக்களை சேர்க்கும்போது மிகுந்த வீரியமடைகின்றன. நம்முடைய சட்ட, அரசியலமைப்புகள் பூமியை சுத்தப்படுத்தவும், வருங்காலத்தில் உயிர் வாழ்க்கையைப் பாதுகாக்கவும் எந்தவழியையும் காட்டத்தவறி விட்டன. தொழில் உலகில் ரசாயனத்தொழிற்சாலை, வேளாண்துறை, நலத்துறையினர் ஒருவருக்கொருவர் அர்த்தபூர்வமாக செய்தி பரிமாறிக்கொள்ளவில்லை. இந்தக் காரணங்களால் நான் ரெய்ச்சல் கார்சனையும் மௌன வசந்த்த்தையும் மீண்டும் கண்டுபிடிப்பதும், அவருடைய எச்சரிக்கையையும் நம்பிக்கைச் செய்தியையும் மனதில் இருத்தவும் வேண்டும்.


வேறு எந்த அறிவியல் இலக்கியத்தையும் விட, சுற்றுப்புறத்தின் நடைமுறைச் செயல்பாடுகளையும், மாற்றத்தை உண்டாக்கும் தனி நபரின் சக்தியையும் மௌன வசந்தம் நம்முடைய நினைவிற்கு கொண்டு வருகிறது. ரெய்ச்சல் கார்சன் அவர் நேசித்த உலகைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் நமக்கு மன உறுதியையும், மாறா உண்மையையும் வாரிசுரிமையாக விட்டு சென்றிருக்கின்றன.


இன்றைய உலகை ஒரு கொந்தளிப்பான இடமாக அவர் புரிந்து கொண்டார். வனங்களை வேகமாக அழித்து வருகிறது மனித இனம். இயற்கையை ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட, உயிருள்ள முழுமையான அமைப்பாகப் பார்க்காமல் வியாபாரப்பொருளாக எண்ணுகிறார்கள். இதனை கார்சன் வெறுக்கிறார்.


கட்டுப்பாடற்ற தொழில்நுட்பம், விளைவுகள் என்ன என்று தெரியாமல் தொடங்கிய செயல்களின் விளைவுகள் பற்றியும், எந்தச் சிக்கலுக்கும் உடனடி நிவாரணம் தேடும் பண்பாட்டு நிலை பற்றியும் கார்சன் அச்சம் கொண்டிருந்தார். இவ்வுயிர் உலகின் புரிபடாத புதிரான சுற்றுச்சூழல்  உறவுகள் பற்றி வியப்பிற்கும், அவற்றிற்குரிய மரியாதைக்கும் இத்தகைய மனப்போக்குகள் எதிரிகள் என்பதைக் கார்சன் அறிந்திருந்தார். மௌன வசந்தம் நூலில் கார்சன் இந்த பண்பாட்டுக் கூறுகளுக்கு ஒரு வரலாற்றுச் சூழல் தருகிறார். அவற்றின் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். மெத்தனத்திற்கு எதிராக எச்சரிக்கை தந்தார். ஒரு புதிய வாழ்வியலை நம்பிக்கை ஒளியைக் கொடுத்தார். இந்த இருப்பத்தோராம் நூற்றாண்டில் அவருடைய செய்திக்கு செவிமடுக்க நமக்கு துணிவு வேண்டும்.

நான் வேண்டுவது சமாதனமே!



நசீம் ஹிக்மெல் ரேன்


தமிழில்: ஜீவா





நான் உங்கள் வீட்டின் முன் நிற்கிறேன்;


நான் வந்து நிற்பதை எவரும் உணரவில்லை;


நான உங்கள் கதவைத் தட்டுகிறேன்


என்னை எவரும் காணவில்லை.


நான் என்றோ மரித்துப்போனவன்.





நான் இறந்தபோது என்வயது ஏழு


ஹிரோஷிமாவின் அன்று நான் கருகிப்போனேன்


இன்றும் என்வயது ஏழுதான்.


மரித்த குழந்தைகள் வளர்வதில்லையே!





நெருப்பில் கருகிய நெடியுடன் என் தலைமுடி


என் கண்கள் பொசுங்கிக் குருடாகிப்போனது;


பெரு நெருப்பில் என் எலும்புகள் வெந்துபொடியானது;


வறண்ட காற்றில் என் சாம்பல் சிதறிப் பறக்கிறது.





எனக்குச் சோறு வேண்டாம்; பழம் வேண்டாம்


எனக்கு ரொட்டி வேண்டாம்; மிட்டாய் வேண்டாம்


எனக்கென கேட்க ஏதுமில்லை.


மரித்தவன் கேட்க என்ன இருக்கிறது?





நான் வேண்டுவது சமாதானம் ஒன்றே.


நீங்கள் தினம் தினம் அங்கும் இங்கும் போரிடுகிறீர்கள்.


ஏன்? நாளை உம் பிள்ளைகள் வாழவும் வளரவும்


சிரிக்கவும் விளையாடவும் போரிடுகிறீர்கள்


மீள நான் வேண்டுவது சமாதானம் ஒன்றே!.








சிகரம் தொடுவோம்!



மா சேடுங்


தமிழில்: ஜீவா











நீலவானைத் தொட்டு தழுவவும்


சிங்காங்ஷான் சிகரம் ஏறவும்


நீண்டகால ஆசைதான் எனக்கு


இளமை ஆசைகள் அவற்றை


மீண்டும் காண நீண்ட பயணம்


பழையன மறைந்து புதியன எங்கும்


வானம்பாடிகள் பாடித் திரிந்தன;


சிட்டுக்குருவிகள் தத்திப் பறந்தன.


அருவி கல்லிடை தாளம் போட்டது


நீண்ட வளைந்த நாகப் பாதை


நெளிந்து நெளிந்து வானம் தொட்டது.


ஹூஹாங்ஜியாங்சிக் கடந்தபின்


கவனம் கோரும் குறுகிய பாதை


சூறைக்காற்று சுழன்றடித்தது


பேரிடி முழங்கி எதிரொலித்தது.


வண்ணப் பதாகைகள் காற்றிலாடின.


வாழ்விடமெங்கும் வண்ணக்கோலம்


நாற்பதாண்டுகள் ஓடிக் கழிந்தன


சொடுக்கிடும் பொழுதில் காலம் கழிந்தது


வானநிலவை நம்கையில் பிடிக்கலாம்


ஆழ்கடல் ஆமையைக் கைகளில் பிடிக்கலாம்


வெற்றிக் களிப்புடன் பாடி மகிழ்வோம்.


முடியாதென்பது இங்கெது உள்ளது?


துணிந்தவன் காலடி மிதிபடும்.





 மஞ்சள் நிறமாய் ஒரு உலகம்


-ஷேக்ஸ்பியர்





மஞ்சள் நிறமாய் மின்னும் தங்கம்


அருமை பெருமைகளை கூடிய தங்கம்


இமியளவாயினும் விந்தைகள் செய்யும்


கருப்பை வௌ¢ளையாய் ஆக்கிக் காட்டிடும்


தவறைக்கூடச் சரியென மாற்றும்


இழிந்ததை உயர்வாய் போற்றச் செய்யும்


கிழவனைக் குமரனாய் ஆடிடச் செய்யும்


கோழையை வீரனாய் மாற்றிக் காட்டிடும்


என்ன விந்தை தெய்வமே தெய்வமே


உம் அடியாரை கவர்ந்து இழுக்கும்


உம் அச்சகரையும் தன் வசமாக்கும்


மஞ்சள் பிசாசு எதனையும் செய்யும்


மதங்களைக் கூட இணைக்கும்; பிரிக்கும்


படுபாவிகளையும் புனிதர்களாக்கும்


தொழுநோயாளியுடனும்  குலவச் செய்யும்


கொள்ளையர்களையும் அரியணை அமர்த்தும்


பட்டம் பதவிகளைப் பெற்றுத்தந்திடும்


மூத்த விதவையை மணக்கச் செய்திடும்


வஞ்சகம் மண்டிய மஞ்சள் மங்கை நீ


மனிதரை மயக்கும் மின்னும் வேசி நீ!

முதலாளித்துவம் தனது மூலதனத்திற்கான லாபம் இல்லை அல்லது குறைவான லாபம் என்பதைத் தவிர்க்கிறது. பத்து விழுக்காடு லாபம் வருமென்றால் எங்கு வேண்டுமானாலும் மூலதனம் செய்ய முன்வருகிறது. இருபது விழுக்காடு லாபம் வருமென்றால் ஆர்வத்துடன் நிச்சயமாக முதல¦டு செய்ய ஓடுகிறது.


ஐம்பது விழுக்காடு லாபம் வருகிறது என்றால் எதையும் செய்யத்துணிவு கொள்கிறது. நூறு விழுக்காடு லாபமென்றால் அனைத்து சட்டங்களையும் காலில் மிதிக்கும் துணி பெற்றுவிடுகிறது.


முந்நூறு விழுக்காடு லாபம் என்றால் அதற்கான எந்தக் குற்றத்தையும் செய்யும். தூக்கிலிடப்படுவோம் எனினும் துணிந்து எதையும் செய்யும். சமூகக் கொந்தளிப்பும், மோதலும் லாபம் தருமென்றால் அதையும் ஊக்குவிக்கும்.


இன்று நிகழும் கள்ளக்கடத்தலும், ஊழலும், அடிமை வணிகமும் அதை நிரூபிக்கின்றன.



· மார்க்ஸ் மூலதனம் தொகுதி

சர்வோதயமும் சோசலிசமும்



-ஜே.சி குமரப்பா





சர்வோதயம் என்பது அனைவரையும் உயர்த்துவது என்று பொருள்படும். எனவே சர்வோதய சமூகத்தில் வர்க்கப்போரட்டத்திற்கு இடமில்லை. ரஷ்யாவில் காணப்படும் வர்க்கப்போராட்டம் வரலாற்றுச்சூழலின் விளைவே. ஜார் மன்னனின் கொடுங்கோன்மை, அடக்குமுறை காரணமாகவே அது உண்டானது. இந்தப் போராட்டத்தில் மிகப்பலர் பலியாயினர். பலர் காணாமற் போயினர். எனவே சோவியத் சோசலிசம் என்பது சர்வோதயத்திலிருந்து வெகுதூரம் விலகியது. வன்முறை சார்ந்த சர்வோதயத்திலிருந்து வெகுதூரம் விலகியது. வன்முறை சார்ந்த எந்த இயக்கமும் சர்வோதயமாகாது. சர்வோதயம் அகிம்சை, சத்தியம் என இரு அடித்தளங்களின் மீது கட்டப்படுவதே.


சர்வோதயத்திற்கும் சோசலிசத்திற்கும் உள்ள ஒரு பொதுத்தன்மை அவை இரண்டும் அடித்தட்டில் வாழும் வறியவர்களுக்காக கவலைப்படுவன என்பதே. ஆனால் சர்வோதய ஊழியர்கள் என அழைத்துக்கொள்ளும் நம்மிடம் ரஷ்ய அமைப்பில் உருவாக்கியுள்ள உணர்வு இல்லை. சர்வோதயம் பற்றி இந்தியாவில் வெகுவாகவே பேசப்படுகிறது. ஆனால் ரஷ்யாவில்  காணப்படும் உன்னத ஆர்வமும், ஒருமனப்பட்ட ஈடுபாடும் நம்மிடமில்லை.


நமது சமூகநீதி உணர்வு உற்பத்தி, விநியோகம், நுகர்வு என அனைத்து நிலைகளிலும் காணப்பட வேண்டும். எ.கா நமது பால் பயன்பாட்டில் கூட, நமது அகிம்சையும், சத்தியமும் வெளிப்பட வேண்டும். பாலை உற்பத்தி செய்யும் பசு சரியானபடி தீவனம் தந்து பேணப்படுகிறதா? அப்படி அது சரியானபடி பேணப்படாது கறக்கப்படும் பாலைக் குடிப்பது கூட வன்முறையை நாம் ஆதரிப்பதாகிவிடும். பாலை முதலில் குடிப்பது யார் என்ற உரிமை அருந்தும் முதலுரிமை கன்றுக்கே உண்டு. எனவே கன்று முழுமையாகப் பசி தீரும் வரைப் பாலைக் குடிக்காமல், நமக்காக அதைக்கறப்பது கூட நேர்மையற்றதும், வன்முறையுமாகும்.


கன்றுக்குப் பின் பாலின் உரிமை அந்த மாட்டின் உரிமையாளரின் குழந்தைகளுக்கு உண்டு. பொருளாதாரத் தேவைக்காக பால் குழந்தைகளுக்கு மறுக்கப்பட்டு விற்கப்படுமானால் அதை வாங்குபவர் வன்முறைக்குத் துணை போனவராவார். பாலுக்குத் தரும் விலை, பாலின் மதிப்புக்கு இணையானதல்ல. எனவே சரியான சர்வோதயம் என்பது சகமனிதன் மீது மட்டுமல்ல, நம்முடன் வாழும் விலங்கினங்களின் மீதும் காட்டப்படும் பரிவும், மேம்பாட்டு உணர்வுமே ஆகும்.


ரஷ்யாவில் பொருளாதாரத் துறையில் சர்வோதயம் பின்பற்றப்படுகிறது. ஒரு பொருளின் விலையை நிர்ணயிப்பதில் உழைப்பாளியின் தேவை என்பது முதன்மையாக மதிக்கப்படுகிறது. இந்தியாவில் அரிசி விளைவிக்கும் விவசாயி பெரும்பாலும் பட்டினியில் வாட, அது உழைக்காமல் வாழும் நகர்ப்புற பணக்காரர்களின் அடிவயிறு கொழுப்பாக மாறுகிறது. இது பொறுத்துக்கொள்ளமுடியாத ஒன்று. அரிசி உற்பத்தியாளரின் பசி முதலில் தீர்க்கப்பட வேண்டும். அரிசியின் விலை உற்பத்தியாளரை ஆண்டு முழுவதும் பட்டினியின்றி வாழ்விக்கும் அளவுக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும். எனவே நமது பல அடிப்படை நுகர்வுப் பொருட்களின் விலை சற்று அதிகமாகவே இருப்பது தவிர்க்கமுடியாததாகிறது.


ரஷ்யாவில் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி, ஒரு திறமையான தொழிலாளி பெறும் சம்பளத்தை பெறுகிறான். ஒரு கல்லூரிப் பேராசிரியர் 3000 ரூபிள் பெறுவார் என்றால், திறமைமிக்க தொழிலாளி போல செருப்புத் தைப்பவரும் 3000 ரூபிள் பெறுகிறார். ரஷ்யாவில் செருப்பின் விலை இந்தியாவில் உள்ளதை விட அதிகமாகவே இருக்கும். மலிவாக வாங்கி, அதிக விலைக்கு விற்று லாபம் பெறும் முதலாளித்துவ சுரண்டலுக்கு அங்கு இடமில்லை. பொருளாதாரத்தில் இந்த செயல்பாடு வராதவரை நாம் சர்வோதயத்தை விட்டு வெகுதூரம் தள்ளியே நிற்பவர்களாவோம்.


கூலி உழைப்பை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தில் உழைப்பாளியின் தேவை பற்றிய அக்கறை இருப்பதில்லை. நமது ஆலைத்தொழிலாளிகள் கூலி, பொருளின் விற்பனை விலைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. ரஷ்யாவிலும் விலை நிர்ணயம் உண்டு என்ற போதும், சமூக நலன், அணுகுமுறை, ஆலையின் செயல்பாட்டு முறை இவற்றின் மூலமாகத் தொழிலாளிக்கு நீதி வழங்கப்படுகிறது. ஆலையின் போர்மென் மாதம் 2000 ரூபிள் சம்பளம் பெறுகிறார் என்றால் அவருக்கு இரண்டு அறைகள் கொண்ட வீடு 200 ரூபிள் வாடகைக்கு தரப்படுகிறது. ஆனால் அவருக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளி 2500 ரூபிளை அதிகம் உற்பத்தி செய்வதால், அதே வாடகைக்கு நான்கு அறைகள் கொண்ட வீடு தரப்படுகிறது. தொழிலாளியின் தேவையே அவரது சம்பளத்தை நிர்ணயிப்பதைப் பார்க்கிறோம். இவ்வகையில் கூட நம்நாடு சர்வோதயத்திற்கு நெருக்கமாக இல்லை. சர்வோதயம் நமது உதட்டில் உள்ளது. இதயத்தில் இல்லை. செயல்பாட்டில் குறைவாகவே உள்ளது. சர்வோதயத்தின் சமூக அளவீடும் மாறுபடுகிறது. காந்திய இயக்கங்களில் பழங்குடி மக்கள், ஹரிஜனங்களின் நலம் பற்றிய இடம் என்ன? ரஷ்யாவில் நிறம், மதம், வர்க்கம் சார்ந்த வேறுபாடுகள் முற்றாக இல்லை. இந்தத்துறையில் அவர்கள் நம்மை விடப் பலபடிகள் முன்னேறிஉள்ளனர். மனிதனை அவர்கள் மனிதனாகவே மதிக்கிறார்கள். பிற வேறுபாடுகளுக்கு அங்கு இடமில்லை.


அரசியலில் கூட சர்வோதயம் என்பது இங்கு சரியாகவே உணரப்படவில்லை. அனைவருக்கும் வாக்குரிமை என்பதும், கட்சிரீதியிலான ஜனநாயகம் என்பதும் மட்டும் சர்வோதயத்தை உருவாக்கிவிடாது. உண்மையான சர்வோதயம் என்பது சமுதாயத்தின் கடைநிலை மனிதனின் குரலும் நாடாளுமன்றங்களில் வலிமையுடன் ஒலிப்பதாக இருக்கவேண்டும்.


நமது நாட்டில் கட்சிக்கு விசுவாசமாக இருப்பது கட்சி ஜனநாயகமாக உள்ளது. இதில் சாமானியனின் உணர்வுக்கும், குரலுக்கும் தொடர்பில்லை. நாட்டின் நலத்திட்டங்களில் கிராமங்களின் தேவை மேம்பாடு என்பன முன்னிலைப்படுத்தப்படுவதில்லை.


சர்வோதயம் என்பது செயலற்ற வெற்றுவார்த்தையல்ல. இது செயலூக்கம் மிக்க ஆற்றலின் வடிவம். இது தவறு புரிவோரைத் திருத்தி சரி செய்வது. கிராமத்தின் ஒட்டு மொத்த மக்கள் உணர்வுக்கு மாறாக நடப்பவர்கள், பண்டைய கிராமங்களில் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, கிராம துரோகி என்று முத்திரை குத்தி சமுதாய விலக்குக்கு உள்ளாக்கப்படுவார்கள். இன்றைய நவீன சமூக வழக்கில் இதைச் சமூகப் புறக்கணிப்பு எனலாம். எ.கா கொரியா மீது நேபாம் குண்டுகள் எனும் நச்சு ரசாயனத்தைப் போடுவதும், அப்பாவி மக்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கொல்வதும் தவறு என்று முடிவு செய்துவிட்டால், அத்தகைய தவறு செய்யும் நாட்டை உலகத்துரோகி என ஒதுக்கிவிடலாம். இது வன்முறையற்ற அகிம்சை வழி ஒத்துழையாமையாகும்.


தன்னை விற்றுக்கொள்ள அறிவித்தது. வறட்சி என்பது பஞ்சாபை பூதமாக விரட்டுகிறது. எங்கள் பயணம் இதை உறுதி செய்தது. டாக்டர் ஆசாத் சொன்ன கற்பனையல்ல. பஞ்சாப் மெல்லச் செத்துக் கொண்டுள்ளதைக் கண்டோம்.


நதியின் உற்பத்திப் பகுதிகளும், மேல் பகுதிகளும் அழியும்போது நதி அழியும். நதி வறண்டால், நிலத்தடி நீர் வறளும். நீர் வற்றும் போது நீரின் தரம் கெடுகிறது. இதன் விளைவாக பல்லுயிரினச் சூழல் கெடுகிறது. மக்களின் ஆரோக்கிய வாழ்வு பாதிக்கப்படுகிறது. நீர்வழி நோய்கள், மலட்டுத்தன்மை, நோய்த்தடுப்பு சக்திக்குறைவு, புற்றுநோய், உடற் தளர்ச்சி, மரணம், என மனித வாழ்வே அச்சுறுத்தப்படுகிறது.


மனிதரைப்போலவே கால்நடைகளும் நோய்களுக்கும், பாதிப்புகளுக்கும் ஆளாவதால் அது விவசாயத்தை மேலும் பாதிக்கிறது. உற்பத்திக் குறைவு, இடுபொருள் செலவு, கடன், தற்கொலை, தன்மான இழப்பு என விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். நிலத்தை விற்று இடம் பெயர்வது தொடர்கிறது. பஞ்சாப் இடம் பெயரும் மாநிலமாகிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. ‘’தண்ணீர் பஞ்சம், நிலத்தை விற்று ஓடச் செய்கிறது’’ என்கிறார் மிசாபூர் கிராமத்தலைவர் சுரீந்தர்சிங்.


‘’70 அடி, 150 அடி ஆழம் கொண்ட இரு கிணறுகள் வறண்டு விட்டன. பத்தாண்டுகள் முன் கிராமத்திற்கே தண்ணீர் வழங்கிய இவை ஆண்டுக்கு 15-20 அடி ஆழம் தோண்ட வேண்டியதானது. காகர் நதி வறளத்தொடங்கியது. எங்கள் வாழ்வும் வறண்டு போனது’’ என்கிறார் கிராமக் கூட்டுறவு சொசைட்டியின் தலைவர் ஹர்பஜன் சிங்.


இப்போது 400 அடி ஆழக்கிணற்றை நம்பி வாழ வேண்டியுள்ளது. இதன் தண்ணீரோ குடிப்பதற்கு மட்டுமல்ல, விவசாயத்திற்கும் ஏற்றதாக இல்லை. இதுவும் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தாங்குமோ? எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. ‘’கடின நீரில் கோதுமை, காய்கறிகள் எதுவும் பயிர் செய்யமுடிவதில்லை. எங்கள் தேவைக்கான காய்கறிகளை விளைவித்த நாங்கள் இப்போது நகர சந்தைகளில் காய்கறிகளை வாங்கி உண்கிறோம். நாங்கள் காய்கறிகளை ஒரு காலத்தில் நகரங்களுக்கு கொண்டு சென்று விற்றோம். சுற்றியுள்ள பல கிராமங்களின் நிலையும் இதுவே. இது பெரும் பொருளாதாரச் சுமையாகிறது’’ என்கின்றனர் மண்டலி கிராம மக்கள்.


சில ஆண்டுகள் முன் ஏக்கருக்கு 14-16 குவிண்டால் கோதுமை விளைந்த நிலத்தில் இப்போது வெறும் 6 குவிண்டாலே விளைகிறது. தண்ணீரின் தரம் குறைவதுடன், ரசாயன உரம் பயன்பாட்டால் செலவு அதிகமாகிறது. விவசாயமே கட்டுபடியாகாததாகி வருகிறது. இதன் விளைவாக விவசாயி பெரும் கடனாளியாகிவிட்டான்.


ஆனால் புரட்சியின் போது ரஷ்யாவில் இத்தகைய புறக்கணிப்பு சமூக துரோகிகள் மீது மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் உடலளவில் முற்றாக சமுதாயத்திலிருந்தே அப்புறப்படுத்தப் பட்டார்கள். இத்தகைய செயல்பாடு சர்வோதயத்திற்கு ஏற்புக்குரியதல்ல. சர்வோதய சமுதாயத்தில் தவறு செய்தவரும் குறிப்பிட்ட வரையறைக்குள் வாழ உரிமை பெற்றவராகிறார். உடலளவிலான கொடுமைகளுக்கு அங்கு இடமில்லை.


வன்முறையற்ற சர்வோதயம் என்பது நம்மிடம் லட்சிய அளவிலேயே உள்ளது. ரஷ்யா சர்வோதயத்தை கடைபிடிக்கிறது என்று சொல்லிக்கொள்ளாவிட்டாலும், அவர்கள் சர்வோதயத்தின் பல்வேறு கூறுகளை செயல்வடிவமாக்கியுள்ளார்கள். நாம் உண்மையான சர்வோதயத்தை இந்தியாவில் நிலைநாட்ட முயற்சிப்போம். இதற்கு ரஷ்யாவின் ஒருமுகமான ஈடுபாடும், திறந்த மனச் செயல்பாடும், உறுதியான அர்ப்பணிப்பையும் நாம் பின்பற்றுவோம். இதன் மூலம் சர்வோதயத்தை நம் மண்ணில் நாம் உருவாக்க முடியும்.

கருத்துகள்