வானமே கூரை

                                         வானமே கூரை









                 சென்னையில் நீங்கள் நடைபாதையில் ஏதோ ஒரு மரத்தின் அடியில் பேருந்து நிறுத்தத்தின் அருகில் இருப்பவர்களைப் பற்றி எப்போதேனும் நினைத்திருக்கிறீர்களா? நாமோ இஎம்ஐ வாங்கி அதைக்கட்டுவதற்கென்றே பிடிக்கிறதோ இல்லையோ வேலைக்கு போகின்ற ஆட்கள். ஆனால் இது போன்ற எந்தக்கவலையும் இல்லாமல் எப்படி அவர்கள் அழுக்குத்துணியோடு, அடுத்தவேளை உணவு, மலம் கழிப்பது போன்ற அவசியமான எந்த கவலைகளும் இல்லாமல் உட்கார்ந்திருக்க முடிகிறது? என்னைப் பொறுத்தவரையில் சென்னை வந்தாலே வயிற்றுக்குள் பல உருட்டல் மிரட்டல் சத்தங்கள் கேட்கத்துவங்கிவிடும். எங்கே போகவேண்டும்? சரியான பேருந்தில்தான் ஏறுகிறோமா? எங்கே போனாலும் அங்கே கழிவறை இருக்குமா? தண்ணீர் வைத்திருப்பார்களா? குழாயில் காற்றுக்குப்பதில் நீர் வர சாத்தியம் இருக்குமா? என பல கேள்விகள் எழும். முடிந்த அளவு சில முன்னேற்பாடுகளுடன் எழுந்து கவனமாக தயாராவேன். 

                  ஒரு பத்திரிகை ஒன்றின் நேர்காணலுக்கு சென்னை வந்துவிட்டு தங்க இடமில்லை. அப்போது அன்பரசின் சகோதரர் கூட இடம் கேட்க முடியாத சூழல். அப்போது எல்டாம்ஸ் சாலையில் இருந்த பத்திரிகை ஒன்றில் நேர்காணல். அங்கு வந்து சேர்ந்தால் என்னை அழைத்தவர் அன்று 12 மணிக்கு மேல்தான் வருவாராம். நான் காலை 7 மணியில் இருந்தே காத்திருந்தேன். அவர் புதுச்சேரியிலிருந்து வரவேண்டும். அவர் வார்த்தைக்கு வார்த்தை ஆண்டவா என்று கூறி அழைப்பை துண்டித்தார். நாகேஸ்வர ராவ் பூங்காவில்தான் இறுதியில் எனது இருப்பு. அங்கேயும் கழிவறை செல்ல கடும் போட்டி.  வெளியிலிருந்து வாடிக்கையாக வரும் நபர்களுடன் எப்படி நான் போட்டியிட முடியும்? காத்திருந்துதான் செல்லவேண்டியிருந்தது. ஏதோ ஐயங்கார் கம்பெனிதான் பராமரிப்பாம். தண்ணீர் குடிக்க அந்தகாலத்து அடிபம்புபோல ஒன்றைக் கைகாட்டினார் அங்கிருந்தவர். இரண்டு அடிக்கு ஒருதடவை கழன்றுவந்தது அந்த பம்பு. 

                   பல பாதுகாப்புடன் நாம் வந்தாலும் அடுத்த கணம் குறித்த கவலை இல்லாமல் பலரும் இருக்கிறார்கள் என்பதை அங்கே பார்த்ததும்தான் தெரிந்தது. நிற்க நிழல் தேடுவதே நகரத்தில் பெரும் பாடு. ஏழைகள், வீடற்றவர்கள் என்றால் பலரும் தம் குழந்தைக்கு அவர்கள் குறித்த என்ன கூறி விளக்குவார்கள் என்று தெரியவில்லை. பூங்காவிற்கு வந்தவர்கள் தனித்தனி அடுக்குகள்போல அமர்ந்திருந்தார்கள். அப்போது மழைபெய்திருந்தது என்பதால் அங்கங்கே மழைக்குளம் கட்டியிருந்தது. ஏறத்தாழ ஒவ்வொரு சமூகமும் இதுபோல ஒரு கட்டத்தில் நாடோடி சமூகமாகத்தான் இடம்பெயர்ந்து வந்திருக்க கூடும். அம்மா உணவகத்தால் இன்று பாதிப்பேர் வெறும் வயிற்றோடு இல்லாமல் சாப்பிடமுடிகிறது. அதுவும் இல்லையென்றால் எப்படி இருக்குமோ? நகரம் நரகம் என்றார் நண்பரொருவர் நிச்சயமாக பணம் இல்லாவிட்டால். 

கருத்துகள்