துர்க்கை பூஜை!




பரவச அருள் வழங்கும் துர்க்கை பூஜை! -.அன்பரசு

அகில உலகமே கவனிக்கும் 10 நாட்கள் நடைபெறும் ஆன்மிகத்திருவிழா. சாக்த மதத்தின் முக்கிய கொண்டாட்டமாக கருதப்படும் துர்க்கை பூஜை கொல்கத்தாவாசிகளின் ஸ்பெஷல் நிகழ்வு. தாக் ட்ரம்ஸ்கள் முழங்க, பண்டிதர்கள் மந்திரங்களை உச்சரிக்க, பாட்டும் இசையும் புல்லட் ட்ரெயின் வேகத்தில் பரபர விறுவிறு பக்தி பரவசம். செப். 21 - 30 வரை துர்க்கை பூஜை களைகட்டவிருக்கிறது.  

தீபாவளி போனஸ் போலவே கொல்கத்தாவில் துர்க்கை பூஜைக்கான போனஸ், லீவ் உண்டு. இரு மாதங்களுக்கு முன்பே விழாவுக்காக பஜார்களில் கலகலவென ஜரூர் பிஸினஸ் தொடங்கிவிடுவது வாடிக்கை.   
  
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் டூ அக்டோபர் மாதங்களில் மகாளய அமாவாசையில் தொடங்கி பத்து நாள் திருவிழாவாக களைகட்டும் துர்க்கை பூஜைக்கு நவராத்திரி, துர்க்கோஸ்தவம் என்ற பெயர்கள் உண்டு. ஆறாம் நாளுக்குப் பிறகே சஷ்டி, நவமி, தசமி தின அன்லிமிடெட் அமர்க்களம் ஆரம்பிக்கிறது. துர்க்கை, அவரது மகளான லஷ்மி, சரஸ்வதி, விநாயகர், கார்த்திகேயன் ஆகியோர் உருவங்களை ஒரே உருவங்களின் வடிக்கும் அலங்கார உருவங்களை மேற்சொன்ன நாட்களில் திகட்டத்திகட்ட தரிசிக்கலாம். ராமர் ராவணனை வென்று தீயூட்டிய தினமான தசமியில் துர்க்கை சிலைகள் நதியில், ஆறுகளில் கரைக்கப்படும்.   
வங்காள இந்துக்களின் துர்க்கை பூஜை, மகிஷாசுரனை கொன்ற நாள், தட்சனின் யாகத்தில் சிவனின் மனைவி சதி உயிர்துறந்த நாள், ராமர் ராவணனை கொல்வதற்கு முன் துர்க்கைக்கு பூஜை செய்த தினம் என புராணக்கதைகளில் பூஜையின் நதிமூலம் கூறப்படுகிறது. 1556-1605 ஆம் ஆண்டு அக்பர் ஆட்சியில் ராஜ்ஷாலி மாவட்டத்திலுள்ள தாஹிர்பூர் ராஜா காங்ஸாநாராயணன் மேற்கு வங்காளத்தில் துர்க்கா பூஜையை தொடங்கியதாக நம்பப்படுகிறது. 1710-1783 ஆம் ஆண்டு நாடியாவை ஆண்ட ராஜாவான கிருஷ்ணசந்திராராய் இவ்வழிபாட்டை பிரபலப்படுத்தினார் என்று கணிசமானவர்கள் நம்புகின்றனர்.

இதில் மக்களிடம் நன்கொடை பெற்று விழாவை சமத்துவமாக மாற்றியது கொல்கத்தாவின் ஹூக்ளியிலுள்ள குப்திபாரா என்ற இடத்தில் துர்க்கை பூஜையை கொண்டாடிய பனிரெண்டு நண்பர்களைக் கொண்ட டீம்தான். அப்போது இதன் பெயர் பாரோயாரி பூஜை. "கொல்கத்தா முழுமைக்குமான விழாவாக மாற்றியதில் சனாதன் தர்மோத்சாஹின் என்ற அமைப்புக்கு முக்கிய பங்குண்டு" என்கிறார் ஆய்வாளர் எம்.டி.முத்துக்குமாரசுவாமி. 1840 ஆண்டு ஆங்கிலேய அரசு இவ்விழாவில் பங்கேற்க தடைவிதிக்கும்வரை அரசு ஆடிட்டர் ஜான் சிப்ஸ் உள்ளிட்டோர் துர்க்கை பூஜையில் பங்கேற்றிருப்பதை சுகந்த சௌத்ரி எழுதிய Calcutta: living city Vol.1 என்ற நூல் குறிப்பிடுகிறது.

பூமி ஸ்போர்ட்டிங் கிளப், மித்ரோ சாங்கோ, தேஷ்பிரியா கிளப் ஆகியவை துர்க்கைக்கான களிமண் சிற்பங்களை கலைநயத்துடன் தயாரிப்பதில் முன்னணி வகிக்கின்றன. இமாலயத்தின் மகளான துர்க்கையின் போர்வெற்றியை கொண்டாடி, பூமாரி பொழிந்து திரும்ப அவளை கயிலாய மலைக்கு அனுப்பி வைக்கும் திருவிழாவின் இறுதிநாள் தசமி. அக்ஷரபியாச எனப்படும் இத்தினத்தில் குழந்தைகளின் கல்விப்பயணத்திற்கு பிள்ளையார் சுழி இடப்படுகிறது. மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தசமியன்று தேசிய விடுமுறை உண்டு.
பாக்ஸ் 1
நவராத்திரி ஸ்பெஷல்!
காஷ்மீரில் அம்பா, குஜராத்தில் ஹிங்குலா,ருத்ரானி, பீகாரில் உமா, மேற்குதொடர்ச்சி பகுதிகளில் அம்பிகா, தமிழகத்தில் கன்யாகுமாரி என துர்க்கா பூஜை கொலு, சுண்டல் என அமர்க்களப்படும். மார்ச் -ஏப்ரலில் நடைபெறும் பூஜைக்கு பசந்தி பூஜை, அக்டோபர்-நவம்பரில் நடைபெறும் பூஜைக்கு சாரதீய பூஜை என்றும் பெயர். துர்க்கை பூஜையில் மூன்று வகை உண்டு. சாத்விக் பூஜையில் சைவ உணவுகளோடு, மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு தியானம் நடைபெறும். ராஜஷிக் முறையில் விலங்கு பலியிடப்பட்டு அசைவ உணவுகள் பரிமாறப்படும். தாமஷிக் முறை மந்திரம் முழங்க சாராயமும், கறிவிருந்தோடும் கொண்டாடப்படும் கீழ்ஜாதியினரின் பூஜை. எட்டாவது நாளில் நடைபெறும் குமாரி பூஜையில் 8 வயது சிறுமிகள் வாழும் தேவியாக ட்ரஸ் அணிந்து பங்கேற்கும் நிகழ்வு ஆசம். துர்க்கை சிலை தயாரிக்க உதவும் களிமண் ரூ. 200-250 ரூபாயும்(முன்னர் ரூ.175), மூங்கில், வைக்கோல் ரூ. 150-175 எனவும் ஜிஎஸ்டியால் விலை எகிறியுள்ளது.  


டோண்ட் மிஸ் இட்!

வெள்ளி மற்றும் செம்பு பாத்திரங்களில் அரிசி, பருப்பு, பாலில் செய்த கீர்,மஞ்சள் பூசணி, பீன்ஸ் ஆகியவை தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. துர்காஷ்டமி அன்று நடைபெறும் துனுசி நாச் எனும் நடனம் ரொம்ப ஸபெஷல். ஷோவா பஜார் ராஜ்பாரி, சாட்டுபாபு லாட்டுபாபு பாரி ஆகிய நூற்றாண்டு கடந்த இல்லங்களை துர்க்கா பூஜையில் காணும் வாய்ப்பு இந்த சீஸனில் மட்டுமே கிடைக்கும். ஜோத்பூர் பூங், குமார்துலி ஆகிய இடங்களில் அலங்கார துர்க்கா சிற்பங்களை கண்குளிர தரிசிக்கலாம். தாக் ட்ரம்ஸில் மெய்மறந்தபடி கங்கையில் கரைக்க துர்க்கை சிலைகளை எடுத்துச்செல்லும் நிகழ்வு, ஆட்டம் பாட்டம் என உங்களை மெய்மறக்கச்செய்யும்.

தொகுப்பு: ஜெய் கௌரி,மகேஷ்வரி நாதன்