மாற்றுத்திறனாளியின் வின்னிங் ஸ்டோரி!


 கேல்ரத்னா வீரரின் வெற்றிக்கதை!



Image result for devendra jhajharia

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவ்லின் த்ரோ விளையாட்டு வீரர் தேவேந்திர ஜாஜாரியா, இந்திய அரசின் கேல்ரத்னா எனும் உயரிய அங்கீகாரத்துக்கு தேர்வாகியுள்ளார். இதில் என்ன ஸ்பெஷல்? மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக ஈட்டி எறிதலில் 2 தங்கங்களை பெற்றுத்தந்துள்ள ஒரே வீரர் ஜாஜாரியா. 'கேல்ரத்னா' பரிந்துரை பட்டியலில் விசேஷ இடமும் அதற்காகத்தான்.

அங்கீகாரங்கள்,கௌரவங்கள் வலியின்றி கிடைத்துவிடுமா என்ன? 1980 ஆம் ஆண்டு பிறந்த ஜாஜாரியாவுக்கு மரம் ஏறி விளையாடுவது என்றால் கொள்ளைப்பிரியம். அன்றும் அப்படி ஒரு மரத்தில் ஏறி நண்பர்களுடன் விளையாடியபோதுதான் நடந்தது அந்த விபரீதம். விளையாட்டு மும்முரத்தில் அருகிலிருந்து மின்கம்பியை கிளையென நினைத்து தொட, தூக்கியெறியப்பட்டு நினைவிழந்து வீழ்ந்த ஜாஜாரியா, கண்விழித்தபோது மருத்துவமனையில் கிடந்தார். மூளையில் தீராத வலியின் குத்தல். தலை திருப்பி கையை பார்த்தபோதுதான், இடக்கை வெட்டப்பட்டிருந்தது தெரிந்தது.

Related image



"இடதுகை பொசுங்கி அகற்றப்பட்டபிறகு அனுதாப பார்வைகளுக்கு பயந்து நான் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தேன். என் அம்மா என்னை துணிச்சலாக வீட்டை விட்டு வெளியே கொண்டுவந்தாள். அவளின் ஊக்கம் இல்லையென்றால் நான் உங்கள் முன்பு இன்று நிற்க முடியாது. கேல்ரத்னா விருதை என் அம்மா ஜீவானிதேவிக்கு சமர்ப்பிக்கிறேன்" என நெகிழ்ச்சியாகி பேசுகிறார் ஜாஜாரியா.

கேல்ரத்னா பட்டியலில் பெயர் இடம்பெற்றவுடன் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் என நானோ நிமிடம் கூட அவரின் போனை உறங்கவிடவில்லை. அர்ஜூனா விருது(2004), பத்ம விருது(2012)  ஆகிய விருதுகளை தன் விளையாட்டுத்துறை சாதனைகளுக்காக வென்றுள்ள 2004 ஆம் ஆண்டு ஏதேன்ஸ் போட்டியிலும், 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்று சாதித்தவர். "என் தாய்நாடு எனக்களித்த மிகப்பெரிய கௌரவம் இது. 2004 ஆம் ஆண்டு ஏதேன்ஸில் ஈட்டி எறிதலில் சாதித்தபோது என் வயது 23. அதன்பிறகு 12 ஆண்டுகள் கழித்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன் என எனது நண்பர்களுக்கு நம்பிக்கை இல்லை. என் உழைப்பு என்னை கைவிடவில்லை" என தீர்க்கமான குரலில் பேசுகிறார் ஜாஜாரியா. 

இந்திய பிரதமர் மோடி ஜாஜாரியாவின் தங்கச்சாதனையை 'மனதின் குரல்' நிகழ்ச்சியிலேயே புகழ்ந்து பேசியுள்ளது இவரை இந்தியா முழுக்க கவனப்படுத்தியுள்ளது.

1997 ஆம் ஆண்டு பள்ளி விளையாட்டு தினத்தில் மாணவர்களிடையே உரையாற்ற வந்த துரோணாச்சார்யா ஆர்.டி. சிங், ஜாஜாரியாவின் தங்கச்சாதனைக்கு வழிகாட்டி. ஜாஜாரியாவின் உடலுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளை டிசைன் செய்த ஆர்.டி. சிங்கின் அறிவுரைகளும் பயிற்சியுமே ஜாஜாரியாவை லட்சியம் நோக்கி செல்ல பாதையமைத்தன.   2002 ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற FESPIC போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் ஏதேன்ஸில் நடந்த பாராஒலிம்பிக் போட்டிக்கு தகுதியானார் ஜாஜாரியா. கிடைத்த சான்ஸைப் பயன்படுத்தி 62.15 மீ. தூரம் ஈட்டியை எறிந்து முந்தைய ரெக்கார்டை உடைத்து நொறுக்கி தங்கமகனானார். 

2015 ஆம் ஆண்டு கத்தாரின் தோகாவில் நடந்த IPC தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் குவா ஷின்லியாங்கிடம் முதலிடத்தை பறிகொடுக்க வெள்ளி பதக்கத்தோடு இரண்டாமிடம் கிடைத்தது. 2016 இல் பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் வீறுகொண்டெழுந்து 63.97மீ. எனும் உலக சாதனையோடு தங்கம் ஜெயித்து அவநம்பிக்கைகளை தூள் தூளாக்கினார் ஜாஜாரியா.


Related image

"கேல்ரத்னா பரிந்துரை மகிழ்ச்சி என்றாலும் இது 12 ஆண்டுகளுக்கு முன்பாக, 2004 ஆம் ஆண்டே கிடைத்திருக்க வேண்டும். 20 ஆண்டுகால உழைப்பு வீணாகவில்லை என்பதையே கேல்ரத்னா நிரூபிக்கிறது. என் குழுவினரின் ஒத்துழைப்பும் இதில் குறிப்பிடவேண்டியது அவசியம்" என புன்னகையுடன் பேசுகிறார் ஜாஜாரியா. இந்தியாவின் பாராஒலிம்பிக் கமிட்டிக்கு 2006 ஆம் ஆண்டு சுனில்தத் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது அங்கீகாரம் கிடைத்தது. அப்படியும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுவேலை வாய்ப்புகள் எட்டாக்கனியாக இருந்துள்ளதை ராஜஸ்தான் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. எம்.பி, எம்எல்ஏ ஆகியோரிடம் நிதி கோரியும், வங்கிகளிடம் கடன் பெற்றும் போட்டிகளில் விளையாட மாற்றுத்திறனாளி வீரர்கள் வெளிநாடு சென்று வந்த அவலங்கள் இன்று குறைந்துள்ளது." மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு நான் கூறுவதெல்லாம் ஒன்றுதான். கவனத்தோடு கனவு காணுங்கள். அர்ப்பணிப்போடு கவனமாக உழைத்தால் உங்களை இவ்வுலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" என நம்பிக்கையோடு பேசுகிறார் தேவேந்திரா ஜாஜாரியா.


பாராஒலிம்பிக் ஹிஸ்டரி!

பாரா ஒலிம்பிக் போட்டிகள் 1960 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் வீரர்களுக்காக தொடங்கப்பட்டது. 1988 தென்கொரியாவின் சியோலில் நடந்த ஒலிம்பிக்கிலிருந்து, பாராஒலிம்பிக்கை தொடர்ச்சியாக ஒலிம்பிக்கோடு இணைத்து நடத்துவது, இன்டர்நேஷ்னல் பாராலிம்பிக் கமிட்டி(IPC). 10 வகை உடல்குறைபாடுகளை கொண்டவர்கள் பாராஒலிம்பிக்கில் திறமை காட்டலாம். 

வீல்சேரிலுள்ள வீரர்களுக்காக தொடங்கிய பாராலிம்பிக்கை முறைப்படுத்தி தனி விளையாட்டு விழாவாக மாற்றியவர் சர் லுட்விக் கட்மேன்.1976 பாராலிம்பிக்கில் பல்வேறு உடல் குறைபாடுகளுள்ளவர்களுக்கும் சான்ஸ் கிடைத்தது. 2016 ரியோ பாராலிம்பிக்கில் 159 நாடுகளிலிருந்து 4,342 மாற்றுத்திறனாளி வீரர்கள் 22 விளையாட்டுபோட்டிகளில் பங்கேற்றனர். போட்டியில் இரானிய சைக்கிள் வீரர் பாமன் கோல்பர்நெஸாத் இறந்தது பாராலிம்பிக் வரலாற்றில் துயர நிகழ்வு. 2018 ஆம் ஆண்டு பாராலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பீயான்சாங்கில் நடைபெறவிருக்கிறது.

பாராஒலிம்பிக் கமிட்டி!

இந்திய வீரர்களை செலக்ட் செய்து பாராஒலிம்பிக் போட்டுக்கு அனுப்பும் பாரா ஒலிம்பிக் கமிட்டி 1992 ஆம் ஆண்டில் உருவானது. 1994 ஆம் ஆண்டில் பெங்களூருவில் சொசைட்டியாக பதிவு செய்யப்பட்டு  Physically Handicapped Sports Federation of India.] என்ற பெயரில் இவ்வமைப்பை எம்.மகாதேவா உருவாக்கினார். மாற்றுத்திறனாளிகளை உலகளவிலான போட்டிகளில் பங்கேற்க வைக்கும் அமைப்பான இதனை 2005 ஆர்டிஐ சட்டப்படி அரசு அமைப்பாக்கினர். 1968 ஆம் ஆண்டு இஸ்‌ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற பாராஒலிம்பிக்கில் இந்தியா முதன்முறையாக பங்கேற்றது.

-ச.அன்பரசு
தொகுப்பு: கா.சி.வின்சென்ட், ராஜதுரை