நோயாளிகளுக்கு இலவச உணவுதரும் முஸ்லீம்!







தெலங்கானா மகாத்மா! 

தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்திலுள்ள தபிபுரா காந்தி அரசு பொதுமருத்துவமனை நோயாளிகளுக்கு தினசரி இலவச உணவு வழங்கிவருகிறார் அசார் மக்சூஸி.

சிறுவயதில் குடும்பத்தை காப்பாற்றி வந்த தந்தை இறந்துபோக, பசியும் பட்டினியுமாக கிடந்த வாழ்க்கை அசாருக்கு பிறரின் பசி, தாகம் போக்க தூண்டியுள்ளது ஆச்சர்யமான கதை. “குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்கு செல்லும்போது பெரும்பாலான இரவுகளில் வெறும் வயிற்றுடன்தான் தூங்குவேன்” என இறந்தகாலத்தை கண்ணீர்மல்க பேசுபவர், சாலையில் உணவுக்கு கையேந்திய ஆதரவற்ற பெண்ணுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்த தினத்திலிருந்து வாழ்க்கை மாறியிருக்கிறது.

தபிபுராவில் முதல் மூன்றாண்டுகள் சொந்தப்பணத்தில் ஏழைகளுக்கு உணவு வாங்கிக்கொடுத்தவர், ஏழாண்டுகளாக இச்சேவையை் தொடர பல்வேறு நல் இதயங்களிடமிருந்து வந்த நன்கொடைகள் உதவியுள்ளன.
“பெங்களூரு, ராய்ச்சூர், தந்தூர், ஜார்க்கண்ட், அசாம் ஆகிய இடங்களிலும் ஆயிரத்து இருநூறு பேர்களுக்கு இலவச உணவை அளிக்க முயற்சித்து வருகிறேன். ஏழைகளின் கண்களில் பசி நெருப்பு தீர்ந்து அமைதி படருவதை காண்பதே இறைவனைக் கண்ட திருப்தி” என நெகிழ்கிறார் அசார் மக்சூஸி.