கைவிடப்படும் தேவாலயங்கள்!









கைவிடப்படும் தேவாலயங்கள்!

அமெரிக்காவில் பல்வேறு நகரங்களிலும் அதிகரிக்கும் வாடகை, பராமரிப்பு செலவு ஆகியவற்றால் தொன்மையான பல்வேறு தேவாலயங்கள் மக்களால் கைவிடப்பட்டு வருகின்றன.

பத்தொன்பதாவது நூற்றாண்டு கட்டிடமான செயின்ட் வின்சென்ட் டி பால் தேவாலயத்தில் 2000 ஆம் ஆண்டு முதலாக மக்களின் வருகை குறைந்து வந்தது. வேறுவழியின்றி அதனை விற்றனர். இன்று அந்த இடத்தில் அபார்ட்மெண்ட் உயர்ந்து நிற்கிறது. அங்கு தங்க வாடகை 4 ஆயிரம் டாலர்களை வசூலிக்கின்றனர். கடவுளே இனி அங்கு காசு கொடுத்துத்தான் தங்கமுடியும்.

அமெரிக்காவில் ஆண்டுக்கு 6-10 ஆயிரம் தேவாலயங்கள் மக்களால் கைவிடப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 70 சதவிகித கிறிஸ்தவர்கள் இருந்தாலும் சர்ச்சுகளுக்கு நன்கொடை அளிப்பது மெல்ல தேய்ந்து வருகிறது. இவர்களை நோனெஸ் என்று  குறிப்பிடுகிறார்கள்.

தேவாலயங்கள் கண்முன்னே தூசி படிந்து இடிந்து போவதை தவிர்க்க மக்கள் அதனை ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் விற்று வருகின்றனர். விலை குறைவாக கேட்டாலும் அதனை காப்பாற்ற வேறுவழியே இல்லை. தெற்கு போஸ்டனிலுள்ள 140 ஆம் ஆண்டு வரலாறு கொண்ட செயின்ட் அகஸ்டின் சர்ச்சும் கூட இப்படித்தான் தர்மசங்கட நிலையில் மாட்டிக்கொண்டது. மக்களின் சென்டிமெண்ட் தாண்டி இவற்றை வீடுகளாக மாற்றும்போது பெரும் வரவேற்பை பெறுவது ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கே ஆச்சரியமாக வருகிறது.

சர்ச்சுகளை பல்வேறு நிகழ்வுகளுக்கான இடங்களாக மாற்ற மிஷனரிகள் முயற்சித்து வருகின்றன. கடவுள் நம்பிக்கை குறைகிறதா என்பதை விட பலரும் தொழில், வேலைவாய்ப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அகதிகள் போல இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதே நாம் இங்கு அறியவேண்டியது.


-ச.அன்பரசு
நன்றி: அட்லாண்டிக் இணையதளம்