ஐரோப்பாவில், ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது!

 



டெங்கு மலேரியா பரவலை காலநிலை மாற்றம் ஊக்கப்படுத்துகிறதா?

நவீன மருத்துவத்தின் உதவியால் டெங்கு, மலேரியா இறப்புகள் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. அதைத் தாண்டி அவை பரவுகின்றன, உயிர்ப்பலி வாங்குகின்றன என்றால் அதற்கு காரணம் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருக்கும் பகுதிகளாக இருக்கலாம். ஆனால், ஐரோப்பாவில் ஏடிஸ்  மூலம் பரவும் டெங்கு வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவுவதற்கு தட்பவெப்பநிலையும் முக்கியமான காரணம்.  ஒருவர் வெளியில் பயணித்து டெங்கு, மலேரியாவுடன் வந்தாலும் கூட ஐரோப்பாவில் உள்ளவர்களுக்கு நோய் பெரிய பாதிப்பை தருவதில்லை. வீட்டில் ஓய்வெடுத்தாலே அவர் நோயிலிருந்து மீண்டு வந்துவிட முடியும். கடந்த 2015 -19 காலகட்டத்தில் மூன்றாயிரம் டெங்கு நோயாளிகள் பற்றிய பதிவுகள் உள்ளன. இவை அனைத்துமே பயணம் சார்ந்து ஏற்பட்டவை. இதில் ஒன்பது நோயாளிகள் மட்டுமே உள்ளூர் அளவில் நோய் வந்து பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.

ஆனால் நிலைமை அப்படியே இருக்கவில்லை. கடந்த 2022, 2023 ஆண்டுகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கூடத் தொடங்கியது. 2022இல் மட்டும் பிரான்சில் 65 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது எழுபது ஆண்டுகளில் இல்லாத அளவு என்றால் பாதிப்பைப் புரிந்துகொள்ளலாம். 2023ஆம் ஆண்டில், 130 நோயாளிகள் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு, வெளிநாடுகளிலிருந்து டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் உள்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் முழுமையான தகவல் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளது. டெங்கு பரவல் அதிகமுள்ள நாடுகளுக்கு மக்கள் பயணித்து திரும்புவது நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும், உள்நாட்டிலும் நோய் அபாயத்தை கூடுதலாக்குகிறது என நோய்தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் ஆண்ட்ரியா அம்மோன் கூறியுள்ளார்.

டெங்கு நோய் ஐரோப்பாவில் பெரிய நோய்த்தொற்றை ஏற்படுத்தவில்லை. இதற்கு காரணம், வைரஸ் வாழ்வதற்கு அதற்கென உடல் தேவை. தனியாக வாழ முடியாது. கொசு கடித்து டெங்கு வருகிறது என்றால், அவருடைய உடலில் உள்ள ரத்தத்தில் வைரஸ் இருக்கும். பொதுவாக, டெங்கு ஏடிஸ் கொசு மூலமே அதிகம் பரவுகிறது. வெப்ப மண்டல நாடுகளில் தாக்குப்பிடித்து வாழும் ஏடிஸ் குளிர் நாடுகளில் வேகமாக பரவ முடியவில்லை. அதற்கு அங்கு நிலவும் காலநிலை, தட்பவெப்பநிலை முக்கியமான காரணம். ஏடிஸ் கொசு தன்னை நிலைநிறுத்தி வாழ பழகிவிட்டால் டெங்குவதை பரப்புவது எளிதாகிவிடும். ஐரோப்பாவில் வாழும் ஏடிஸ் இனத்தைச் சேர்ந்த கொசுவிற்கு ஏடிஸ் அல்போபிக்டஸ் என்று பெயர். வெப்பநிலை பதினைந்து தொடங்கி முப்பத்தைந்து டிகிரி செல்சியஸ் இருந்தால் கொசு உயிர் பிழைத்துவிடும். வெயில் காலங்களில் ஏடிஸ் கொசு எளிதாக பரவலாகிறது.

கடும் காய்ச்சல், தலைவலி, குமட்டல் ஆகியவை டெங்கு நோயின் அறிகுறிகள். சிகிச்சை அளிக்கப்படாத சூழலில் மரணம் நேரிடலாம். அதுவும் அரிதுதான். பெரும்பாலும் அறிகுறிகள் இல்லாமல் நோய் தீவிரமாகும். ஐரோப்பாவின் தெற்குப்பகுதியில் பகல் மட்டுமல்ல இரவு நேரத்தில் வெப்பநிலை கடுமையாக இருப்பதால், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏதுவான நிலை உருவாகிறது. மத்திய தரைக்கடல், மத்திய ஐரோப்பா ஆகிய இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏடிஸ் கொசுவின் பரவல் அதிகரித்து வருகிறது. ஏடிஸ் ஆல்போபிக்டஸின் இருப்பு, 2000ஆம் ஆண்டிலேயே ஐரோப்பாவில் கண்டறியப்பட்டுவிட்டது. இந்த கொசு இனப்பெருக்கம் செய்யும் இடத்திலிருந்து நூறு மீட்டர் தொலைவுக்குள்தான் வாழ்கிறது. பிற கொசுக்கள் போல அதிக தொலைவுக்கு செல்வதில்லை.

உலகம் முழுக்க டெங்கு பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 400 மில்லியன் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. 2019ஆம் ஆண்டு 5.2 மில்லியன் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். 2023ஆம்ஆண்டு நோயாளிகளின் எண்ணிக்கை 4.5 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளனர். டெங்கு பாதிப்பு கொண்ட நாடுகளுக்கு செல்லும் பயணிகள், டெங்குவால் பாதிக்கப்பட்டு நாடு திரும்புகிறார்கள். இவர்களை முறைப்படி சோதித்து மருந்துகளை வழங்குவதே சரியான தீர்வாக இருக்கும். கொசுக்களின் பரவலை கணித்து அதற்கேற்ப மருந்துகளை தெளித்து கட்டுப்பாட்டில் கொண்டு வருவது முக்கியம். காலநிலை மாற்றம் காரணமாக கொசுக்களின் பரவல் அதிகரித்தால், ஐரோப்பாவிலும் டெங்கு நோய் பாதிப்பு தீவிரமாகவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஐஇ
HOW CLIMATE CHANGE IS HELPING THE SPREAD OF DENGUE IN EUROPE
_

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்