பழமொழியைக்கூட கவனித்து எழுதி வருகிறேன்!






Image result for writer benyamin
benyamin/indian express



எனக்கு கிடைத்த விருது பிராந்திய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்


பென்யாமின், மலையாள எழுத்தாளர்.

பென்யாமின் எழுதிய அல் அரேபியன் நாவல் ஃபேக்டரி, ஜாஸ்மின் டேஸ் ஆகிய இரு நாவல்களும் வாசகர்களுக்கு இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஒன்றின் தொடர்ச்சியாக நீளும் இரு நாவல்களிலும் மத்திய கிழக்கில் ஏற்பட்ட அரேபிய வசந்தம் எனும் போராட்டம் பற்றிய மையத்தைக் கொண்டுள்ளன. 2014ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நூல் 2018ஆம் ஆண்டு ஜேசிபி எனும் இலக்கிய விருதைப் பெற்றது. இதன் மையம் அரசுக்கு எதிரான கிளர்ச்சி, வன்முறை, மக்கள் போராட்டத்தைப் பற்றியது. இதனை இந்தியாவுக்கும் கூட நினைத்துப் பார்க்கமுடியும். ஏனெனில் இங்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் கொரோனாவை விட தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். தற்போதைய இந்திய அரசியல் பொருளாதார சூழல் உங்களுக்கு எழுதுவதற்கு உதவுகிறதா?

இன்று இந்தியாவில் உள்ள அரசியல் நிலைமை பற்றிய நூல்கள் அடுத்த பத்தாண்டுகளில் அதிகம் வெளிவரும். நான் தற்போது கேரளத்திலிருந்து மலேசியாவிற்கு இடம்பெயர்ந்த மக்களின் பயணம் பற்றி யோசித்து வருகிறேன். அவர்களின் வாழ்க்கை. இடம்பெயர்வு பற்றி எழுத திட்டம் உள்ளது.

உங்களது அல் அரேபியன் ஃபேக்டரி நாவலைப் படித்தால் அதிலுள்ள சர்ரியல் தன்மை அப்படியே இன்று இந்தியாவில் உள்ள நிலைமையை ஒத்துள்ளதே?

நான் இந்த நாவலை எழுதும்போது இந்தியாவில் இப்படியொரு நிலைமை ஏற்படும் என்று நினைத்து எழுதவில்லை. இந்தியா அனைவருக்கும் சுதந்திரமான உரிமைகளை அங்கீகரித்த செயல்படுத்திக்கொண்டிருந்த நாடு. ஆனால் அனைத்து விஷயங்களும் திடீரென மாறிவிட்டன. பயமும் பதற்றமும் மக்கள் மனதில் குடிகொள்ளத் தொடங்கிவிட்டது. அரசின் மோசமான நடவடிக்கைகளை யாரும் வெளிப்படையாக விமர்சிக்க தயங்கும் அளவு நிலைமை மாறிவிட்டது. ஆனாலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. இளைஞர்கள் தெளிவாகவும் உறுதியாகவும் போராடி வருகிறார்கள். தெருவில் இறங்கி ஜனநாயகத்தைக் காப்பாற்ற போராடும் அவர்களுக்கு என்னுடைய ஆதரவு உண்டு.

உங்களுடைய நூல்களை மொழிபெயர்ப்பவர்களுடன் என்ன மாதிரியான உறவைப் பேணி வருகிறீர்கள்?

நான் மொழிபெயர்ப்பில் பெரிதாக தலையிடுவதில்லை. காரணம் ஒரு கலாசாரத்திலிருந்து மற்றொரு கலாசாரத்திற்கு நூல்களை மறுவடிவமைப்பு செய்வது எளிதான காரியமல்ல. மலையாளத்தில் எழுதிய என்னுடைய நூல்களை ஆங்கிலத்திற்கு கொண்டு சென்றபின்தான், நிறையப் பேர் அதனை வாசிக்கத் தொடங்கினார்கள். நூலை மொழிபெயர்க்கும்போது சில சந்தேகங்களைக் கேட்டார்கள். அதனை விளக்கி, தீர்த்து வைத்து என்னுடைய தரப்பில் சில திருத்தங்களைச் சொன்னேன். மொழிபெயர்ப்பில் என்னுடைய பணி அவ்வளவுதான். என்னுடைய இரு நூல்களையும் செம்மையாக மொழிபெயர்த்தவர் ஷாநாஸ் ஹபீப். நியூயார்க்கிலுள்ள இந்த பெண்மணி மொழிபெயர்ப்பை இலகுவாகவும் சிறப்பாகவும் செய்திருந்தார். அவருக்கு என் நன்றி.

மொழிபெயர்ப்பு மூலம் நீங்கள் உலகளவில் கவனம் பெற்றுள்ளீர்கள். இதன்மூலம் மலையாளத்தில் எழுதும் விஷயங்கள் ஏதேனும் மாறியிருக்கிறதா?

நான் வெளியிட்ட நூல்கள் புகழ்பெற்றதற்கு முக்கியக் காரணம் அவை வெளியிடப்பட்ட நேரம்தான். 2014இல் மலையாளத்தில் வெளியிடப்பட்ட நாவல், அவ்வளவு எளிதாக பாராட்டுகளைப் பெறவில்லை. இன்று என் நாவல்கள் ஆங்கிலத்தில் புகழ்பெற்றபிறகு மலையாளத்திலும் அதனை வாசிக்கின்றனர். காரணம், அனைத்து மக்களின் வாழ்க்கையையும் ஓர் நாவல் பிரதிபலித்துவிட முடியாது. கோட் டேஸ் எனும் முதல் நாவலை எழுதும்போது மலையாள பழமொழிகளை என் இயல்புப்படி பயன்படுத்தினேன். ஆனால் இன்று என்னுடைய பழமொழிகள், மலையாள நிலத்திற்குரிய சொற்களை பயன்படுத்தும்போது அதனை பிற மொழிகளில் மொழிபெயர்க்க முடியுமா என யோசித்தே எழுதுகிறேன். கலாசாரம் வேறு என்பதால் பிறமொழி மக்களையும் சேர்த்து யோசிக்க வேண்டியுள்ளது.

நீங்கள் பெற்ற விருது மூலம் நடந்த மாற்றங்கள் என்ன?

பிராந்திய ரீதியாக எழுதப்பட்ட நாவல் புகழ்பெற்ற இலக்கிய பரிசை வென்றது மொழிபெயர்ப்புக்கு உதவுகிறது. இன்று நான் மலையாளத்தில் எழுதினாலும் கூட அதனை பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்க பதிப்பாளர்கள் தயாராக காத்திருக்கிறார்கள். ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா என பல்வேறு உலக நாடுகளுக்கும் என்னுடைய நாவல் ஆங்கிலம் மூலம் சென்றிருக்கிறது. இந்த விருது மூலம் பிராந்திய இலக்கியம் வளரும். அந்த எழுத்தாளர்களுக்கு ஊக்கம் கிடைக்கும் என நம்புகிறேன்.



நன்றி - டெக்கன் கிரானிக்கல் மார்ச் 22, 2020 – நேகா பட்