பசியில் தவிக்கும் உலகம்!


Bread, Snack, Cheese, Melon, Ham, Grapes, Tomatoes, Eat
pixabay


நாம் கடந்த அறுபது ஆண்டுகளாக பசியோடு போராடி வருகிறோம். இந்திய அரசு ரேஷன் கடைகள் மூலம் பல்வேறு உணவுப்பொருட்களை வழங்கினாலும், அவற்றை மக்கள் வாங்க முடியாத அளவுக்கு விலையை சர்வதேச முதலாளிகளோடு செய்துகொண்ட ஒப்பந்தப்படி மாற்றி வருகிறது. அதன் தரத்தை குறைத்து வருகிறது. இதே நேரத்தில் இந்திய உணவுக்கழகம் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து அதனை பாதுகாக்கும் வசதியின்றி வீணாக்கி வரும் செய்திகளையும் படித்திருப்பீர்கள்.

பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநில மக்கள் இன்னும் கூட ரேஷன் உணவுப்பொருட்கள் கிடைக்காமல் குழந்தைகளை பலிகொடுத்து வரும் செய்திகளை வாரத்திற்கு ஏதேனும் தேசிய நாளிதழ் செய்தி வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 1960களில் மக்களுக்கு சரியானபடி உணவுப்பொருட்களை வழங்கமுடியாத பிரச்னை எழுந்தது. இதனை பால் எல்ரிச்என்ற எழுத்தாளர் 1968ஆம் ஆண்டு எழுதிய தனது தி பாப்புலேசன் பாம் என்ற நூலில் விவரித்துள்ளளார். இந்த நிலையை சமாளிக்கவே, பசுமை புரட்சி உருவானது.

இது வேறு ஒன்றும் இல்லை. மாடுகளால் உழுத நிலத்தை ட்ராக்டர் கொண்டு உழுவது, இயற்கை உரங்களைப் பயன்படுத்தாமல் வேதி உரங்களைப் பயன்படுத்துவது, பல்வேற நீர் பாய்ச்சும் முறைகள், களைக்கொல்லிகள், பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்துவது, குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் தரும் ரகங்கள் என விவசாயத்தின் முகமே மாறியது.

இது உலக மக்களின் உணவுப்பசியைப் போக்கியதா என்றால் இல்லை என்றே கூறவேண்டும். மேற்குலகில் 30 சதவீதம் இறைச்சியை உணவாக கொள்கிறார்கள். அதற்காக பண்ணை விலங்குகளை வளர்க்கவேண்டும். அதற்கான மேய்ச்சல் நிலம், தண்ணீர் உள்ளிட்ட ஆதாரங்கள் தற்போது சுருங்கி வருகிறது. இன்று விலங்குகளின் எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு தேவை அதிகம் உள்ளது.

இன்று உலகளவில் உற்பத்தியாகும் தானியங்களில் 30 சதவீதம் மக்களுக்கும், மீதி 70 சதவீதம் பண்ணை விலங்குகளுக்கும் செலவாகிறது. உலகில் இன்றும் கூட 800 மில்லியன் மக்களுக்கு முறையான சரியான ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைப்பதில்லை.

சூழலுக்கு உகந்த பயிர் என்றால் அது பீன்ஸ்தான். இப்பயிர் மண்ணில் நைட்ரஜனை இழுத்து அதனை வளமாக்குகிறது. இதன் விளைவாக கரிம எரிபொருட்களை வெளியிடும் உரச்செலவு குறைகிறது.