வீட்டிலேயே தனியறையில் இருப்பது சரியா?



Image result for home quarantine



கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் பலரும் பரிந்துரைப்பது வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்றுதான். வீட்டிலேயே அலுவலக வேலையைப் பார்ப்பது என்பது அனைவருக்கும் பொருந்தாது. காரணம், அதற்கான அடிப்படை வசதிகளை பலரும் உருவாக்கி வைத்திருக்க மாட்டார்கள். மேலும், வேலை செய்வதற்கான மனநிலையை வீட்டில் உருவாக்கிக்கொள்வது கடினம்,. வீட்டில் இருக்கும்போது, மனைவி பேசுவதைக் கேட்கவேண்டியிருக்கும். குழந்தைகளோடு விளையாட நேரம் ஒதுக்கவேண்டும். இதற்கிடையில் கவனமான ஆபீஸ் வேலையையும் பார்க்கவேண்டும் என்பது பெரும் சுமையாகவே இருக்கும்.

கணியம் சீனிவாசன் எழுதியுள்ளது போலவே, நேர மேலாண்மை இதில் முக்கியமானது. அதை கடைப்பிடித்து வேலை செய்வது உடனே அனைவருக்கும் சாத்தியமாகாது.

மேற்கு நாடுகளில் குழந்தைகளுக்கு தனி அறை உண்டு. அவர்களுடைய பணியை அங்கு வைத்து செய்வார்கள். சாப்பிட, பேச என ஹாலுக்கு வருவார்கள். இந்திய வீடுகளில் இப்படி தனி அறைகளை எதிர்பார்க்க முடியாது. நேரடியாக சொன்னால் இங்கு அந்தரங்கம் என்பதே பொதுவாகத்தான் இருக்கும். வீடு என்பது குறைந்தபட்சம் ஹால், ஒரு அறை, சமையலைறை, கழிவறையோடு இணைக்கப்பட்ட குளியலறை என்றே பொதுவாக இருக்கும். இதில் நோயால் பாதிக்கப்பட்டவர் எப்படி தனியாக இருக்கமுடியும். தன் நோய் தீரும் காலம் வரை தனியாக இருப்பது மேற்கு நாடுகளில் எளிதாக இருக்கலாம். இந்தியாவில் அடிப்படையிலே தடுமாற்றநங்கள் உண்டு.

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி 5 சதவீத இந்தியர்களின் வீடுகளில் மட்டுமே ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அறைகள் உள்ளன என்று தெரிய வந்துள்ளது. 69 சதவீத இந்தியர்கள் தங்களின் அறைகளை குடும்ப உறுப்பினர்களோடு பகிர்ந்துதான் வாழ்கிறார்கள். அன்பு என நினைக்கிறீர்களா? கையில் உள்ள காசிற்கு அவர்களால் இந்த வசதிகளைத்தான் உருவாக்கிக்கொள்ள முடிந்திருக்கிறது. எனவே இந்தியாவில் நோய் பாதிக்கப்பட்டவர்களை அறிகுறி உள்ளவர்களை அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்தால்தான் உண்டு. அவர்களே வீட்டில் இருப்பது என்பது சீனாவில் குடும்பமே நோயால் பாதிக்கப்பட்டு திண்டாடினார்களே அந்த நிலையில்தான் கொண்டுபோய்விடும்..

அப்படி தனியாக அறையில் அடைந்து இருந்து வைரஸ் பாதிப்பை சரிசெய்யும் திறன் இந்தியர்களில் 15 சதவீத குடும்பத்தினருக்கே உண்டு.

சீனாவை விட அதிகம் பேர் பாதிக்கப்பட்டது இத்தாலி நாட்டில்தான். இதற்கு காரணம், அங்கு வீட்டில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இதனால்தான் சீனா, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

நன்றி - டைம்ஸ் மார்ச் 19,2020