வரும் வாரத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஆளுமைகள், தினங்கள்!




Child, Patient, Vaccine, Vaccination, Syringe, Inject
pixabay




அகஸ்டோ போல்
மார்ச் 16,1931

பிரேசில் நாட்டு நாடக கலைஞர்.  இடதுசாரி கருத்துகளைச் சொல்ல தியேட்டர் ஆஃப் தி ஆப்ரஸ்டு என்ற நாடக அமைப்பைத் தொடங்கினார். நாடக வடிவங்களைப் பற்றியும், தனது அரசியல் செயற்பாடு பற்றியும் நூல்களை எழுதியுள்ளார்.

தேசிய தடுப்பூசி தினம்
மார்ச் 16,1995

இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் 16ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று போலியோ இல்லாத நாடாக இந்தியாவை, உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

நோர்பட் இல்லியக்ஸ்
மார்ச் 17, 1806

நோர்பட் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர், வேதியியல் பொறியியலாளர். இவர், சர்க்கரை தொழில்துறைக்காக கண்டுபிடித்த மல்டிபிள் எஃபக்ட் எவாபெரேட்டர் இவரை உலகிற்கு அடையாளம் காட்டியது. எகிப்து நாட்டின் தொன்மை வரலாறு பற்றிய ஆய்வையும் செய்து வந்தார்.

ரிச்சர்ட் பி ஸ்ட்ராங்
மார்ச் 18, 1872

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர். பிளேக், காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைப் பற்றிய விரிவான ஆய்வுகளை நடத்தினார். 1906இல் சிறைக்கைதிகளுக்கு நோய்க்கிருமிகளை செலுத்தி இவர் செய்த சோதனைகள் கடுமையான கண்டனங்களைப் பெற்றன. The African Republic of Liberia and the Belgian Congo: Based on the Observations Made and Material Collected during the Harvard African Expedition என்ற பெயரில் இவர் எழுதிய நூல் முக்கியமானது.

ஆலன் மெக்மாஸ்டர்ஸ்
மார்ச் 20,1865

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர். இவர்தான் முதல் மின்சார டோஸ்டர், கெட்டில் ஆகியவற்றைக்  கண்டுபிடித்தவர். வணிகரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், இவரது கண்டுபிடிப்புகள் இன்றைய டோஸ்டரை மேம்படுத்தி உருவாக்க உதவின.

உலக வன நாள்
மார்ச் 21,2013

உலகம் முழுவதும் உள்ள அனைத்து வகை காடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக வன நாள் (IDF) கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா. சபை, 2013ஆம் ஆண்டு முதலாக இத்தினத்தை அனுசரித்து வருகிறது. அனைத்து நாடுகளின் அரசுகளோடும் இணைந்து காடுகளை மேம்படுத்த ஐ.நா. இத்தினத்தைப் பயன்படுத்துகிறது.

உலக தண்ணீர் தினம்
மார்ச் 22, 1993

ஐ.நா. அமைப்பு ஆண்டுதோறும் கடைபிடிக்கும் தண்ணீர் தினத்தில் வெப்பமயமாதலையும் இணைத்து மக்களுக்கு விழிப்புணர்வு செய்யவிருக்கிறது. நீர், சுகாதாரம், இயற்கை சார்ந்த விழிப்புணர்வை பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து ஐ.நா அமைப்பு செய்யவிருக்கிறது. 

நன்றி - பார்ன் குளோரியஸ் வலைத்தளம்