ஆல் நியூ அறிவியல் - மங்கள்தாஸ் சுதர்சன்


ஆல் நியூ அறிவியல் - மங்கள்தாஸ் சுதர்சன்


நினைவுகளை எடிட் செய்யலாம்!

நம் மூளையிலுள்ள மோசமான நினைவுகளை அகற்றினால் நம் சோகம் குறையும் என நம்புகிறீர்களா? PTSD எனும் மன அழுத்தம் குறைக்கச்செய்யும் புதிய மருத்துவசிகிச்சையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையம் மற்றும் மெக்கில் பல்கலைக்கழகம் இணைந்து அப்லைசியா எனும் கடல் நத்தையின் நியூரானை ஆராய்ந்தபோது, பதட்டம் ஏற்படுத்தும் நினைவுகளை அழிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர். ஒரு நாய் குரைப்பது, சூடான பொருளை தொடுவது, வன்முறை ஆகிய சம்பவங்களை நரம்பணுக்கள் தாமாகவே ரெக்கார்ட் செய்கின்றன.  
 
"நீங்கள் அதிக க்ரைம் சம்பவங்கள் நிகழும் ஓரிடத்தில் நடந்து செல்கிறீர்கள் என்றால் அங்குள்ள தபால் பெட்டியை பார்க்கும்போது உங்களுடைய உறவினர்களுக்கு அச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்க நினைப்பீர்கள். எதிர்காலத்தில் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, பாதிப்பை தவிர்க்கும் முடிவுகளை எடுக்கவைக்கும் நினைவுகளைத் தவிர பிறவற்றை இனி நம் மூளையிலிருந்து நீக்க விட முடியும்" என்கிறார் ஆராய்ச்சியாளரான சாமுவேல் சாச்சார். இது நத்தை வரையில் ஓகே. மனிதர்களுக்கு?
மூளையின் சம்பவம் குறித்த நிகழ்ச்சிகளுக்கும், பிற நினைவுகளுக்கும் ஆன தொடர்பு குறித்து இன்னும் ஆராய்ச்சியாளர்களுக்கு தெளிவு கிடைக்கவில்லை.


 நடைவெளிப்பயணம்!
 அமெரிக்காவைச் சேர்ந்த எம்ஜேஎபர்ஹர்ட் தன் 61 வயதில் என்ற மனிதர் நடந்த தூரம் மட்டும் 10 மில்லியன் அடிகள்(7,081 கி.மீ.) இது ஒன்றும் முடிவல்ல. இன்னும் நடந்துகொண்டே இருக்கிறார் இந்த நடைமனிதர். தான் சம்பாதித்த பணத்தை பெரும்பாலும் இதுபோன்ற நடைபயணத்திற்கு செலவு செய்வது எபர்ஹர்டின் வழக்கம். நடைபயணத்தில் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தன் கால்விரல் நகங்களைக் கூட நீக்கி இருக்கும் நடைவெளி மனிதர் இவர். ஸ்டவ் உட்பட இவர் வைத்திருக்கும் பையின் எடையே 4 கி.கி.தான்.
கடந்த 15 ஆண்டுகளில் எபர்ஹர்ட் நடந்தே கடந்த தூரம் மட்டும் 54 ஆயிரத்து 718 கி.மீ. 2013 ஆம் ஆண்டு மட்டும் 11 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு நடந்தே சென்று சாதனை செய்திருக்கிறார். மெரிடித் எபர்ஹர்ட் என்ற இம்மனிதர் பிறந்தது அமெரிக்காவில்தான். ப்ளோரிடாவின் டிட்சுவில்லேவில் இவரது மகன்கள் இருவரும் வசித்துவருகின்றனர். இவரது முதல் நடைபயணம் ப்ளோரிடாவிலிருந்து க்யூபெக் நகரத்துக்கு(7,081கி.மீ) தொடங்கினாராம். நடைவெளி மனிதர்!


கேட்ஜெட்ஸ் புதுசு! - பா.ஜோஸபின்

மொமென்டோ மோரி ஹெட்போன் ஆம்ப்ளிஃபையர்

இசை என்பது அள்ளிப்பருகவேண்டிய அமுதம் என்பதை உணர்ந்த டிசைனர் கோஸ்டாஸ் மெடாக்ஸஸ் மூலம் செதுக்கப்பட்ட துல்லியமான இசையை அள்ளித்தரும் ஹெட்போன் இது. கட்டிங் எட்ஜ் முறையில் இசையை தருவதில் குறைபாடு இல்லையெனினும் மினிமமான ஒலி பட்டன்கள் முதலில் பழகுவது சிரமம். மண்டையோட்டு வடிவில் ஆம்ப்ளிபையர் புதுவிதமாக இருந்தாலும் தரத்தில் தங்கம். விலை ரூ. 5,03,856.

வீட்டுக்கு பாதுகாப்பு தரும் பிளிங்

வீட்டில் அனுமதியின்றி யாரேனும் நுழைந்தால் அவர்களைப் பற்றிய வீடியோ உடனே உங்கள் போனுக்கு அப்டேட்டாக அனுப்பி எச்சரிக்கை செய்யும் ஒரு செக்யூரிட்டி கார்டுதான் பிளிங். வலுவான AA பேட்டரி இருப்பதால் அடிக்கடி சார்ஜ் தேவையில்லை. பாதுகாப்பு தொடர்பான டாஸ்க்குகளை இதில் செட் செய்து குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்ட ஜாலியாக ஹாலிடே கொண்டாடக்கூட செல்ல முடியும். விலை ரூ.10,916

சோஷியல் மீடியா கேமரா
டெடு ட்வின் 360 டிகிரி கேமரா முழுக்க முழுக்க சோஷியல் மீடியாவுக்கென தன் ஆன்மாவை அர்ப்பணித்தவர்களுக்கானது. லைட்வெயிட் கேமராவான இதில், 2 ஆப்டிக்கல் Fisheye லென்ஸ்கள் மூலம் எக்கச்சக்க படங்களையும்  சுட்டுத்தள்ளி உடனே சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்து மாஸ் காட்டலாம்.
விலை ரூ. 19,230   

சயின்ஸ் விளையாட்டு கிட்
இது விரைவில் வரவிருக்கும் எலக்ட்ரோ கரன்சிதான். தற்போது இணையத்தில் ரிலீசாகியிருக்கிறது. எல்இடி லைட்டுகள், பஸ்ஸர்கள் என அட்டகாசமான வடிவமைப்பில் அறிவியல் விளையாட்டு என அசத்துகிறது. கிட்டிலுள்ள பொருட்களை இணையத்திலுள்ள வழிகாட்டுதல்படி ஜாலியாக மாற்றி விளையாடமுடிவது சூப்பர்தானே! விலை ரூ. 1,930

சீனாவின் புதிய கிரிப்டோகரன்சி!

சீனா சென்ட்ரல் வங்கியானது, விரைவில் கிரிப்டோகரன்சியை தங்கள் நாட்டில் அறிமுகப்படுத்த இருக்கிறது. எப்போதும்போல அவர்களுக்கேற்றபடி கஸ்டமைஸ் செய்துதான் என்றாலும் இந்த செயல்பாடு முக்கியமானது. யுவான் புழக்கத்தில் இருக்கும்போது கிரிப்டோகரன்சியும் வணிகத்தில் பயன்படுத்த சீன அரசு திட்டமிட்டுள்ளது.

பல நாடுகளும் யோசிக்கும்போது சீனா எப்படி திடீரென இந்த கிரிப்டோகரன்சி திட்டத்தில் இறங்குகிறது? கிரிப்டோகரன்சியை பயன்படுத்தினால் வணிக பரிமாற்றத்திற்கான செலவு குறையும். வங்கியோடு தொடர்புகொள்ள முடியாத மக்களும் இதனை எளிதாக பயன்படுத்த முடியும். பொருளாதார வளர்ச்சிக்கு உலகளவில் எளிதாக பயன்படுத்தும் கரன்சி தேவை எனவே கிரிப்டோகரன்சியை தன் கையில் எடுத்துள்ளது சீனா. சீனா மட்டுமல்ல உலகில் பல நாடுகளும் பிட்காயின் உள்ளிட கிரிப்டோகரன்சியை வணிகத்தில் பயன்படுத்த யோசித்து வருகின்றன. ஜப்பானில் பிட்காயின்களை சட்டப்பூர்வமாக 2 லட்சத்து 60 ஆயிரம் கடைகள் அங்கீகரித்துள்ளன என்பது சின்ன சாம்பிள். அகதிகளுக்கான நிதியுதவியை கிரிப்டோகரன்சி வழியாக நிகழ்த்த ஐ.நா சபை சோதனைமுயற்சிகளை செய்து வருவது கிரிப்டோகரன்சியின் எதிர்காலத்தை உங்களுக்கு கூறும்.

மறைந்துபோன கணித பெண் மரியா!

மரியா மிர்ஸாகானி கடந்த 2014  ஆம் ஆண்டு கணிதத்தில் உயரிய நோபலுக்கு நிகரான விருதை பெற்று சாதித்த இரானிய பெண் ஆவார். அண்மையில் மார்பக புற்றுநோயால் தன் 40 வயதில் மரணித்த மரியம் மிர்ஸாகானி, உலகம் வியக்கும் முக்கியமான கணிதவியலாளர்.

மிர்ஸாகானி moduli spaces, Teichmuller theory, hyperbolic geometry, Ergodic theory, symplectic geometry உள்ளிட்ட கணக்கு வகைகளில் தனித்திறன் கொண்டிருந்தார். ஜியாமெட்ரிக், உருளைகளின் வளைந்த பகுதி குறித்த இவரது விளக்கங்கள் மிகவும் புகழ்பெற்றது. ஈரானின் டெஹ்ரானில் பிறந்த மரியம், பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு 2008 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிக்கு சேர்ந்தார். கணிதத்தில் புகழ்பெற்றாலும், எழுத்தாளராகவே மரியம் விரும்பியிருக்கிறார்.

"நீங்கள் ஒரு காட்டுக்குள் தொலைந்து விடுகிறீர்கள். உங்களின் அத்தனை பலத்தையும் ஒன்றுதிரட்டி அங்கிருந்து வெளியேற முயற்சி செய்வீர்கள் அல்லவா? அவ்வளவுதான் கணக்கு" என அட்டகாச மேத்ஸ் மந்திரம் சொல்லியிருக்கிறார் மரியம். பலகோடி மாணவர்களுக்கு மரியம் தன் கணிதவியல் விளக்கங்களின் மூலம் இன்ஸ்பிரேஷனாக இருந்து காட்டிலிருந்து நாம் வெளியேற உதவி செய்வார்.   


ஒளியை கன்ட்ரோல் செய்யும் ப்ரீலைட்!

வீட்டில் ஒவ்வொரு லைட்டிற்கும் ஒவ்வொரு ஸ்விட்சை போட ஸ்பைடர் மேனாக தாவிக்கொண்டிருந்தால் மற்ற வேலைகளை எப்படி பார்ப்பது? அனைத்து லைட்டுகளையும் ஒரே கன்ட்ரோலில் இணைத்தால்.. எப்படியிருக்கும் அதுதான் ப்ரீலைட்.

பிளக் பாயிண்டில் ஃப்ரீலைட் ட்ரான்ஸ்மீட்டரைப் பொருத்தி, ரிசீவரை லைட்டுகளுள்ள இடத்தில் பொருத்தி இணைத்துவிட்டால் வேலை முடிந்தது. ஒரே ஸ்விட்சில் அறையிலுள்ள அனைத்து லைட்டுகளையும் சிம்பிளாக கன்ட்ரோல் செய்யலாம். ப்ரீலைட் பயன்படுத்த எந்த மொபைல் ஆப்பும் பயன்படுத்த அவசியமில்லை. அதிக செலவு செய்து ஸ்மார்ட் டிவைஸ் வாங்கவேண்டியதில்லை. ஏன் இதனைப் பொருத்த எலக்ட்ரீஷியனைக் கூட அழைக்க அவசியமில்லை. எளிதாக எடுத்து பொருத்தி லைட்டோடு இணைத்தால் போதும், ரிசீவரை மற்றொரு பிளக்கில் பொருத்தி லைட்டோடு இணைத்தால் சிம்பிளாக அனைத்து விளக்குகளையும் திருவண்ணாமலை ஜோதியாக ஜொலிக்க வைக்கலாம் ஒரே ஸ்விட்ச்சினால். விலை ரூ. 2,573.

நன்றி: முத்தாரம் வார இதழ்