விநோதரசமஞ்சரி- தொகுப்பு: ரோனி ப்ரௌன்




அழகு மனைவிக்காக புடவை அபேஸ்!

மனைவி மேல் லவ் இருந்தால் என்ன செய்வீர்கள்? பக்கெட் பிரியாணியை ஆஃபரில் ஆர்டர் செய்வோம், ஆடி ஆஃபர் தள்ளுபடி கடைகளை கூகுளில் காட்டலாம். தண்ணீர் லாரி வந்தால் டோக்கன் போட்டு குடம் வைக்கலாம். ஆனால் தன் அதிலோக சுந்தரி மனைவிக்காக ஹஸ்பெண்ட் என்ன செய்தார் தெரியுமா?

சத்தீஸ்கரின் பிலாஸ்பூரைச் சேர்ந்த காந்த் குப்தாதான் மனைவி பிரமிளா மேல் டன் கணக்கில் பாசம் கொண்ட கணவர். மனைவி பிரமிளா பிலாஸ்பூரில் நடந்த சாவன் சுந்தரி என்ற லோக்கல் அழகிப்போட்டிக்கு பெயர் கொடுத்துவிட, மனைவி கண்ணுக்கு லட்சணமாக நின்றால்தானே தனக்கு கௌரவம் என்று நினைத்த காந்த் அதன்பின் எல்லாம் நோ யோசனைடிசைனர் கடை ஜெட் வேகத்தில் சென்றவர், 50 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகளை டக்கென  அபேஸ் செய்தவர், அதனை தன் மனைவிக்கு போட்டு அழகுபார்த்ததோடு நின்றிருக்கலாம். ஆனால் அழகிப்போட்டியில் ராம்ப்வாக் செல்ல திருட்டு புடவையைக் கட்டிவிட்டதுதான் வினையானது. விழாவில் புடவையைப் பார்த்து ஒருவர் போலீசுக்கு மிஸ்டுகால் கொடுக்க, பிரதீப் இப்போது மாமியார் வீட்டில் கம்பி எண்ணுகிறார்.


மின்சாரமில்லாத மேஜிக் ஃபிரிட்ஜ்

இன்றும் இந்தியாவில் உணவை முறையாக பாதுகாக்கும் ஃப்ரிட்ஜ் வசதியில்லாத வீடுகள் ஏராளம். அதேசமயம் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் தவிக்கும் மக்களும் இங்குதான் மேக்சிமம். ஓராண்டுக்கு இந்தியாவில் வீணாகும் உணவின் அளவு 67 மில்லியன். இதை தீர்க்கத்தான் டெல்லியைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவி வழிகாட்டியுள்ளார்.

டெல்லியின் வசந்த்கன்ஞ் பகுதியைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவி, தீக்க்ஷிதா குல்லர்தான் மேஜிக் ஃபிரிட்ஜின் பிரம்மா. இதில் காய்கறிகளை, பழங்களை கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியுமாம். செங்கற்கள், மணல், சணல்பைகள், மூங்கில்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்த ஃபிரிட்ஜை உருவாக்கியுள்ளார் தீக்‌ஷிதா. செவ்வக அமைப்பின் உள்ளே மற்றொரு செவ்வக வடிவில் கற்களை அமைத்து, இரண்டுக்கும் இடையில் மணல் நிரப்பி, மூங்கில்களை அடுக்கி ரெடியான மேஜிக் ஃபிரிட்ஜ் அசத்தல்.120 கிலோ காய்கறிகளை 7 நாட்களுக்கு கெடாமல் சேஃப் செய்யலாமாம். வாடி ராசாத்தீ!

மினிமலிச ஜீனியஸ் சுட்டி!

கறை நல்லது என சாக்லெட்டை உடையாய் அணிவது, இரவெல்லாம் சூப்பர் சிங்கராய் பாடி பெற்றோர்களை டார்ச்சர் செய்வது, ஒவ்வொரு பொருளையும் உடையுமா என ரிசர்ச் செய்வது என ஒவ்வொரு வீட்டிலும் வாண்டுகளின் வம்புகள் வேறுபட்டாலும், அவர்கள் எதிர்கால ஜீனியஸ்களாக குறும்புகளும் தேவைதான் போல. லீகோ போட்டியில் ரைலி என்ற சிறுவன் செய்த டிசைன் அப்படி.

லீகோ நிறுவனம் அண்மையில் சிறுவர்களுக்கு நடத்தியபோட்டியில்தான் புதிய ஜீனியஸ் ரைலி உதயமானார். பல சிறுவர்கள் டாங்கி, கட்டிடம், கம்ப்யூட்டர் என லீகோ மூலம் உருவாக்கியபோது, ரைலி என்ற சூப்பர் சுட்டி, சிம்பிளாக ஒரு மஞ்சள் நிற லீகோ பிரிக்கை எடுத்து வைத்து புழு என பெயரிட்டிருந்தான்.  "பையனுக்குள்ள இப்படியொரு மினிமலிச ஐடியாவா!" என ஆச்சர்யத்தை பொங்க வைத்துவிட, ட்விட்டரில் பாராட்டுகளோடு, ட்ரெண்டிங்கிலும் இந்த 12 வயது சுட்டிதான் டாப்கியரில் ஹாட்.  


  
 சீனாக்காரர்களின் அமேசிங் திருட்டு!

சீனாவுக்கு இந்தியா என்றாலே இளப்பம்தான். சீனா இன்ச் பை இன்ச்சாக இந்தியாவுக்கு சொந்த பகுதிகளை ஆக்கிரமிக்கிறது என்றால், மும்பைக்கு வந்த சீன மனிதர்கள் கூட அப்படியே தம் தேசத்தை ஃபாலோ செய்தால் எப்படி?

அண்மையில் மும்பையின் கோரேகானில் நடந்த உலகளாவிய நகைகள் கண்காட்சியில் திடீரென ஒரு கடையில் பரபரப்பு. சில வைரங்களை காணோம் என ஸ்டால் ஓனர்கள், போலீசுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்க, டீசலுக்கு காசு வாங்கிக்கொண்டு திருடர்களை துரத்தியது காவல்துறை. ஏர்போர்டில் ஹாங்காங்குக்கு தப்பி ஓட டிக்கெட் வாங்கி சாதுவாக உட்கார்ந்திருந்த சீனாக்காரர்களை வலைவீசிப்பிடித்தவர்கள், மாண்டரின் மொழியில் சம்சாரித்து அவர்களின் பேக்கில் ஷாம்பூ பாட்டிலில் அபேஸ் செய்து வைத்திருந்த வைரங்களை கேட்ச் செய்து, திருடர்களை லாக்கப்பில் தள்ளியுள்ளனர். 9 ஆயிரம் கட்டி ரெஜிஸ்டர் செய்து  உள்ளே போகும் கண்காட்சியிலேயே கைவரிசை காட்டிய இந்த நூதன சீனர்கள் திருடிய வைரங்களின் மதிப்பு ஜஸ்ட் 34 லட்சம்தான்.    

 ஆசிட் பாட்டிலோடு ரக்‌ஷாபந்தன்!

டெல்லியின் வணிகப்பகுதியான கன்னாட் பிளேஸ். குண்டூசி டூ ஃபிட்ஜெட்ரன்னர்வரை கிடைக்கும் அக்கட்டிடத்தின் பி பிளாக்கில் முகத்தை மறைத்து கூனிக்குறுகி ரிதுராய் அமர்ந்திருக்கிறார். தன் சகோதரியின் பிரேஸ்லெட் கடையை அவரின் பிள்ளைகளோடு சேர்ந்து கவனித்துக்கொள்ளும் ரிதுராய், கடைக்கு வருபவர்கள், தனக்கு உதவியவர்களின் கைபிடித்து மலர்ச்சியோடு ரக்‌ஷாபந்தன் கயிறு கட்டியபடி இருக்கிறார். அவரின் கை அன்றும் வெறுமையாகவே இருக்கிறது.

இன்று ஆதரவற்று அமர்ந்திருக்கும் ரிதுராய்க்கும் முன்பு கணவன் இரு பிள்ளைகள் என குடும்பம் இருந்தது. 19 வயதில் பாலுறவுக்கு மறுத்ததால் கோபத்தில் ஒருவன் வீசிய ஆசிட்டால், முகம் மட்டும் உருகி குலையவில்லை; அவரின் வாழ்வும்தான். முதலில் குடும்பம் கைவிட்டது, அலங்கோல முகத்தால் எங்கு வேலை கிடைக்கும்? பிறகு தன் சகோதரியின் கருணையால் கிடைத்ததுதான் கன்னாட் பிளேசின் பிரேஸ்லெட் வியாபாரம். கடந்த ஆண்டுகளைவிட ஆசிட் தாக்குதல் அளவு 300% அதிகரித்துள்ளது. 2004 இல் 27 ஆக இருந்த எண்ணிக்கை 2014 இல் 309 ஆக உயர்ந்துள்ளது. உத்தரப்பிரதேசம் ஆசிட்தாக்குதல்களில்(185) முதலிடம் வகிக்கிறது என தகவல் கூறுகிறது தேசிய குற்றப்பதிவு ஆணையம்.


 நன்றி: குங்குமம் வார இதழ்