இனி ரிவென்ஞ்ச் படங்களுக்கு தடை! - ஃபேஸ்புக் அதிரடி - கா.சி. வின்சென்ட்



இனி ரிவென்ஞ்ச் படங்களுக்கு தடை! - ஃபேஸ்புக் அதிரடி - கா.சி. வின்சென்ட்


மனிதர்கள் எங்கு குழுமினாலும் அங்கு பிரச்னைகள் ஷ்யூராக எழும். ஃபேஸ்புக்கும் ஆயுதமாவது இத்தலைமுறையில்தான். பாதிக்கப்பட்டவர்கள் பிறரையும் நாசம் செய்யும்விதமாக அந்தரங்க போட்டோக்களை தினமும் பெயர் சொல்லி ரிலீஸ் செய்வது அதிகரிக்கிறது. இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கில்லை.

அங்கும் கடற்படையிலுள்ள பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் Marines United என்ற ஃபேஸ்புக்கில் டஜன்கணக்கில் ரிலீஸாக, கடற்படை அதிகாரிகள் சங்கடத்தில் நெளியத்தொடங்கியுள்ளனர். அதோடு அதனை வெளியிட உதவிய ஃபேஸ்புக்கும் திருதிருவென விழித்தது. ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அதுபோன்ற புகைப்படங்களை தடுக்கவென போட்டோ மேட்ச் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
"நாங்கள் உருவாக்கியுள்ள புதிய தொழில்நுட்பம் எப்படி பயன்படப்போகிறது என பின்னர்தான் தெரியும்" என உற்சாகமாக பேசுகிறார் ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு துறைத்தலைவர் ஆன்டிகன் டேவிஸ். புகைப்படம் அனுமதியின்றி பகிரப்பட்டால் அதனை நிறுத்தும் வசதி, போட்டோ மேட்சிங் மூலம் நிர்வாண புகைப்படங்களை தடுக்கும் வசதி ஆகியவை ஃபேஸ்புக்கில் தற்போது கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

கடற்படையில் உள்ள பெண் வீரர்களின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டபோது அதனை தடுத்துநிறுத்துவதற்கான எவ்வித வசதியும் ஃபேஸ்புக்கில் ஏற்படுத்தப்படவில்லை. இனி இவை ஃபேஸ்புக்கின் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிலும் விரைவில் செயல்படத் தொடங்கும். போட்டோ மேட்ச் முறையில் பெரிதாக பயனில்லை. ஒரு கணக்கு இம்முறையில் முடக்கப்பட்டால் எழுத்துக்களை சற்றே மாற்றினால் போதும். கடற்படை அதிகாரிகள் விசாரணை செய்துகொண்டிருக்கும்போதே  Marines United 2.0 என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கம் புதிதாக திறக்கப்பட்டு விட்டது விஷயத்தின் சீரியஸாவதற்கு சின்ன சாம்பிள்.

"குறிப்பிட்ட முடக்கப்பட்ட கணக்குகளில் வெளியிடப்பட்ட படங்களை பிற பயனர்கள் மற்றவர்களுக்கு பகிர்ந்தால், அது ஃபேஸ்புக்கின் விதிகளுக்கு எதிரானது. பிறருக்கு பகிர்வதை எங்கள் குழு தடுக்கும்" என திடமாக பேசுகிறார் டேவிஸ். தற்போது அறிமுகப்படுத்தப்பட வசதிகளிலுள்ள விதி விலக்குகள் குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் எந்த தகவல்களையும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் இதற்கு காரணமானவர்களை பிடித்தாலும் தண்டனை கிடைக்காது. ஏனெனில் அமெரிக்காவின் பல மாநிலங்களில் இணையத்தில் ஆபாச புகைப்படங்களை பகிர்வது தண்டனைக்குரிய செயல் அல்ல.

"நாங்கள் தொடர்ந்து இணையத்தில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அத்துமீறல்களுக்கு எதிராக புதிய சட்டங்களை ஏற்படுத்துமாறு சட்ட வல்லுநர்களை கேட்டு வருகிறோம்" என ஆக்ரோஷமாகிறார் மியாமி பல்கலையில் சட்டத்துறை பேராசிரியையும், சைபர் சிவில் சட்ட அமைப்பின் செயல்பாட்டாளருமான அன்னே ஃப்ராங்க்ஸ். 2013 ஆம் ஆண்டிலிருந்து இதற்காக போராடிவருகிறார் இவர். முதலில் 3 மாநிலங்களில் இதற்கான சட்டங்கள் அமுலாயின. ஆனால் இன்று 35 மாநிலங்களில் முறையான அனுமதியின்றி ஒருவரின் புகைப்படத்தை பகிர்வது தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் இதற்கு எதிரான நடவடிக்கையில் தனிப்பட்ட ஒருவரின் கருத்து சுதந்திரம் பறிபோகிறது என சைபர் சட்டத்தினை எதிர்க்கும் குழுவினரும் இதிலுண்டு. எனவே இதில் தனிப்பட்ட பொறுப்புணர்வு என்பதே சிக்கல் தீர்க்க உதவும்.
நன்றி: முத்தாரம் வார இதழ்