ஏன்?எதற்கு?எப்படி? -Mr.ரோனி




ஏன்?எதற்கு?எப்படி? -Mr.ரோனி

சில இடங்களில் தூங்கும்போது ஏன் அதிகப்படியான கனவுகள் வருகிறது?


ரேபிட் ஐ மூவ்மெண்ட் எனும் நிலையில்தான் பெரும்பாலும் நமக்கு டோராவின் ஐந்து நண்பர்களில் ஒருவராகவும், ஜாக்கிசானோடு மந்திரக்கற்களை தேடித்திரியும் ஜூலியாகவும்  பயணிக்கும் டுபாக்கூர் சூப்பர் ஹீரோ கனவுகள் வருகிறது. இந்தநேரத்தில் நம்மேல் தண்ணீர் ஊற்றி 'எழுந்திரு எருமை' என அம்மா செல்லம் கொஞ்சி எழுப்பினாலும் இவை நமக்கு மறக்காமல் நினைவிலிருக்கும். சூடான புழுக்கமாக, குளிர்ச்சியாக, இரைச்சல் உள்ள இடங்களில் நம் மனம் பாதுகாப்பு தேடும் அவசரத்தில் இருப்பதால்  கனவுகள் டன் கணக்கில் வரும். எனவே இதுபோன்ற கச்சடா இடங்களில் தூங்கி எழுந்தால் 1000 வாட்ஸ் பல்பின் வெளிச்சமாய் கனவுகள் உங்கள் நினைவுக்கு வரும்.

வயதானவர்களுக்கு காயங்கள் குணமாக அதிக நாட்களாகிறதே ஏன்?

உடலில் உள்ள நோய்தீர்க்கும் அமைப்பு காலப்போக்கில் மெல்ல சிதைவடையத் தொடங்குவதால் முதியவர்களுக்கு காயம் குணமாக அதிக காலம் பிடிக்கிறது. காயம் ஏற்படும்போது வெள்ளையணுக்கள் ரத்தப்பெருக்கை நிறுத்தி உடனடியாக ஸ்டெம்செல் மற்றும் கொலாஜன் மூலம் காயத்தை குணமாக்குகிறது. ஆனால் வயதாகும்போது இந்த பணியில் தளர்வு ஏற்படுவதால்தான் காயம் ராக்கெட் வேகத்தில் குணமாவதில்லை. 


மழைக்காடுகளை திரும்ப வளர்க்க முடியுமா?

உலகம் முழுவதும் மழைக்காடுகளை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை பல்வேறு நாட்டு அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன. பிரேசில் அரசு, 2030 ஆம் ஆண்டுக்குள் 12 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் வனத்தை உருவாக்குவதற்கான தீவிர முயற்சியில் உள்ளது. இயற்கையாக உருவாகும் காடுகளின் தன்மையை, மரக்கன்றுகளை ஊன்றி உருவாக்கும் காடுகள் பெறாது. விலங்குகளின் பல்லுயிர்த்தன்மையையும் இதில் ஏற்படுத்துவது கடினம். எனவே இருக்கும் காடுகளை அதன் தன்மை மாறாமல் காப்பதே சிறந்தது