பசுமை பேச்சாளர்கள் 14 வெண்டல் பெரி




பசுமை பேச்சாளர்கள் 14
வெண்டல் பெரி
.அன்பரசு

1934 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கென்டக்கியில் பிறந்தவரான வெண்டல் பெரிக்கு கவிஞர், எழுத்தாளர், விவசாயி என தசாவதாரங்கள் உண்டு. நவீன தொழில் விவசாயமுறை, கரிம எரிபொருட்கள் பயன்பாடு ஆகியவற்றை எழுத்து, பேச்சு, போராட்டம் என அத்தனை வழியிலும் எதிர்த்துவரும் இயற்கைநேய போராளி.

ஐந்தாம் தலைமுறை விவசாயி!

வழக்குரைஞரும், விவசாயியுமான ஜான் மார்ஷல் பெரி குடும்பத்தில் வெண்டல் பெரி, 4வது மெம்பர். ஐந்து தலைமுறையாக ஏர்பிடித்து புகையிலை பயிரிடும் பாரம்பரிய குடும்பம் இவர்களுடையது. மில்லர்ஸ்பர்க் பள்ளியில் இளங்கலை படித்து முதுகலையை கென்டக்கி பல்கலையில் முடித்தவர் உடனே தன்யா அமிக்ஸை தன் துணைவியாக்கிக்கொண்டார்.

விவசாயி எழுதுகிறார்!

1965 ஆம் ஆண்டு தன் மனைவி இரு குழந்தைகளோடு 125 ஏக்கர் பண்ணையில் செட்டிலாகி விவசாயம் பிளஸ் எழுத்தும் தொடங்கிவிட்டார். "இயற்கையின் பரிசை உதாசீனப்படுத்தக்கூடாது. சூழலுக்குகந்த பொருட்களைப் பற்றி அமெரிக்கர்கள் பேசினாலும், இயற்கையைக் காக்க இதுவரை ஒரு துரும்பைக்கூட அவர்கள் கிள்ளிப்போட்டதில்லை" என எண்ணெயில் கடுகாய் பொரிகிறார் வெண்டல் பெரி. இதே வேகத்தில் 25 கவிதைத் தொகுதிகள், 16 கட்டுரைத்தொகுப்புகள், 11 நாவல்கள், சிறுகதை என அனைத்து கேட்டகிரியிலும் தூள் கிளப்பிய ஆளுமை இவர்.

துணிச்சல் போராளி!

போர், அணுஆயுதம், வேதிப்பொருள் விவசாயம்,மரண தண்டனை சட்டங்களை கறாராக சமரசமின்றி எதிர்கொள்ளும் வெண்டல், "என்னை கைது செய்து கொடுமைப்படுத்தினாலும் எனக்கு கிடைக்கிற ஒவ்வொரு நொடியும் அரசுக்கு எதிரானவனாக இருக்க விரும்புவேன்" என தில் ஸ்டேட்மெண்ட் கொடுப்பார். நகரத்தில் இயற்கை விவசாயம் செய்ய ஆர்வமுள்ளவர்களையும், நிலையான வேலையில் இருந்துகொண்டு சேமிப்பு பணத்தைக்கொண்டு விவசாயம் செய்யவே வெண்டல் பெரி வேண்டுகிறார். ஒற்றைத்தன்மை கொண்டு சோயாபீன், சோளம் ஆகியவற்றை பயிரிடுவதை எதிர்க்கும் வெண்டல் "விவசாயம் சார்ந்த தொடர்பேச்சுகள் என்னை களைப்பாக்குகின்றன. செயல்பாடுகள்தான் இங்கு தேவை. இந்த வயது முதிர்ந்த கிழவன் அரசை எதிர்த்து சிறைசெல்லவும் இனி தயங்கப்போவதில்லை" என்று சிரிக்கிறார். தன் வயது முதிர்ந்த காலத்திலும விவசாயத்தை தொழில்மயமாக்கும் முயற்சியை தொடர்ந்து தடுத்த வரும் வெண்டல் இதைக்காக்கவே பெரி சென்டரை தொடங்கி இனக்குழுக்களுக்கு உதவி வருகிறார். பசுமை சூழ் போராளி.

நன்றி: முத்தாரம் வார இதழ்