"விவசாய வளர்ச்சி என அரசு காட்டும் புள்ளிவிவரங்கள் தவறானவை" முத்தாரம் நேர்காணல்




"விவசாய வளர்ச்சி என அரசு காட்டும் புள்ளிவிவரங்கள் தவறானவை"

நேர்காணல் ஹிமான்சு பொருளாதார வல்லுநர்.
தமிழில்: .அன்பரசு

டெல்லியில் தமிழக விவசாயிகள் எலிதின்று, தலைமுடி சிரைத்து பெறமுடியாத கடன் தள்ளுபடி சலுகைகளை மகராஷ்டிரா விவசாயிகள் தங்களது இடையறாத போராட்டத்தின் வழியே பெற்றுவிட்டார்கள். அடுத்து மத்திய பிரதேசத்திலும் விவசாயிகள் சாலைக்கு வந்திருக்கிறார்கள். அங்கு போலீஸ் நடத்திய அடக்குமுறையில் 6 விவசாயிகளின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. கடன்தொல்லையால் தற்கொலைகளும் நிகழ்ந்துவரும் நிலையில் இது குறித்து பொருளாதார வல்லுநர் ஹிமான்சுவிடம் உரையாடினோம்.

பயிர்களுக்கு, பாலுக்கு சரியான விலை வேண்டும் என ஒவ்வொரு மாநிலங்களாக போராட்டத்தில் குதிப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

பயிர்களுக்கான விலை உயராத நிலையில் விவசாயிகள் அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறார்கள். அரசு அளிக்கும் குறைந்தபட்ச விலை, விவசாயிகளுக்கு பயிர் விளைவிக்கும் செலவையும் பெற்றுத்தராதபோது போராட்டம் தவிர்த்து வேறுவழியென்ன இருக்கிறது அவர்களுக்கு? 2014-2015 ஆம் ஆண்டு வறட்சியான ஆண்டும் கூட. .பி அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தது கருணையல்ல; நிலைமையை புரிந்துகொண்ட அவசியமான நடவடிக்கை அது.

போராட்டத்திற்கு முக்கியகாரணம் உத்தரப்பிரதேச அரசு, தம் மாநில விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்ததுதான் முக்கிய காரணமா?

பயிர்களுக்கான விலை பிரச்னை ஒரு மாநிலம் சார்ந்ததல்ல. தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் கடன்தொல்லையால் இறந்தபோது இப்பிரச்னை அகில இந்திய அளவில் பெரிதாக உருவெடுத்துவிட்டது.

பணமதிப்பு நீக்கம் விவசாயிகளை பாதித்திருக்கிறதா?

நிச்சயமாக. இந்தியாவின் சந்தைகளிலும், மண்டிகளிலும் இன்றும் ரொக்கமாகவே வியாபாரம் நடைபெற்று வருகிறநிலையில் பாதிப்பு ஏற்படாமல் எப்படி இருக்க முடியும்? ஆனால் விவசாய வளர்ச்சி என அரசு காட்டுகிற புள்ளிவிவரங்கள் நம்மை தவறான திசை நோக்கி நடத்துகின்றன. உண்மை உங்கள் கண்முன்னே இருக்கிறதே? பணமதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்டபோது காரிஃப் பருவ பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு விற்பனையில் இருந்தன என்பதை நீங்கள் அறியவேண்டும்.

இதில் தவறான தகவல் எங்கிருக்கிறது? விவசாயத்துறை வளர்ச்சி என்பது விவசாயிகளின் செயல்பாட்டை நல்ல முறையில்தானே வெளிப்படுத்துகிறது?

நாம் வளர்ச்சி எனும்போது உற்பத்தியை மட்டுமே பேசுகிறோம். ஆனால் அதன்மூலம் விவசாயிக்கு கிடைக்கும் விலையை யாரும் பேசுவதில்லை. உற்பத்தி 4.9% என்ற நிலையில், பணமதிப்பு நீக்கமும், பஞ்சமும் விவசாயிகளின் வாழ்வை வேட்டையாடிவிட்டன என்பதே நிஜம். தற்போது விவசாயிகளிடம் வளர்ச்சி இல்லை; தவணை கூட கட்ட முடியாத கடன்தொகைதான் உள்ளது.

விவசாய கடன்கள் என நிலமுள்ள விவசாயிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் நிலமற்ற விவசாய கூலிகளின் நிலை பற்றி கூறுங்களேன்.

நிலத்தில் வரும் வருமான அடிப்படையில் விவசாய கூலித்தொழிலாளர்களின் சம்பளம் குறித்து பேசவேண்டும். மேலும் விவசாயம் செலவுகள் பட்டியலில்தான் கூலித்தொழிலாளர்களின் சம்பளம் இடம்பெறவேண்டும். ஆனால் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு இச்செலவு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இது குறித்து எவ்வித விவாதமும் நடத்தப்படவேயில்லை

அரசு இவ்வாண்டு விவசாயத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளதாக வாதிட்டு வருகிறதே?

அரசு கூறுவதெல்லாம் வெறும் நம்பர் விளையாட்டுதான். வங்கிகள் அளிக்கும் விவசாய கடனுக்கு வட்டியைத்தான் விவசாயிகளுக்கான உதவி என பெருமை பேசுகிறார்கள். இதன் மூலம் வங்கிகளுக்குத்தான் நன்மையே தவிர விவசாயிகளுக்கல்ல. இதனை நீங்கள் அரசு அளிக்கும் நிதியுதவி என்றால் கிரிஷி விக்ஞான் எனும் செஸ் வரியை என்ன சொல்வீர்கள்?

தற்போதைய நிலைக்கு தீர்வென்ன?

முதலில் விவசாயத்துறையை நிலைப்படுத்தவேண்டியது அவசியம். இன்று விவசாயிகளுக்கு உதவினாலும் கடன் தள்ளுபடி சரியான அணுகுமுறை அல்ல. இத்துறையை சீர்திருத்த அரசு பேரளவிலான முதலீடுகளை செய்யவேண்டிய தேவையுள்ளது.

நன்றி: Sruthisagar Yamunan, scroll.in 
முத்தாரம் வார இதழ்



பிரபலமான இடுகைகள்