நோய்த்தொற்று அதிகரிக்க மத்திய அரசின் முடிவுகள்தான் காரணம்! - ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்






குடியுரிமையை நிரூபிக்கவும் ...



மத்திய அரசின் தடாலடி முடிவுகளால்தான் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது

ஹேமந்த் சோரன், ஜார்கண்ட் முதல் அமைச்சர்

நன்றி: தி இந்து ஆங்கிலம்

ஆங்கிலத்தில்: அமித் பருவா

நோய்த்தொற்று உங்கள் மாநிலத்தில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

எங்கள் மாநிலத்தில் இப்போதுதான் சோதனைகளை செய்ய தொடங்கியுள்ளோம். இதுவரை வெளிமாநிலங்களிலிலிருந்து வந்தவர்கள் 450 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் இறந்துவிட்டனர். நாங்கள் தொடர்ச்சியாக சோதனைகளை செய்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முயன்று வருகிறோம்.

உங்கள் மாநிலத்தில் 53 ஆயிரம் சோதனைகள் மட்டுமே நடந்துள்ளன. இதுதான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க முக்கிய காரணமா?

அப்படி சொல்ல முடியாது. முதலில் நாங்கள் இந்த சோதனைகளை கோல்கட்டாவுக்கு அனுப்பித்தான் செய்து வந்தோம். இப்போது நான்கு ஆய்வகங்களை மாநிலத்தில் தொடங்கி சோதனைகளை செய்து வருகிறோம். பாதிப்பு குறைவாக இருப்பது என்பதல்ல. நாங்கள் வெளிமாநிலங்களிலிருந்த வந்த தொழிலாளர்களைச் சோதனை செய்வதில் முழுகவனத்தை செலுத்தி வருகிறோம். அவர்களை பாதுகாப்பாக மாநிலங்களில் தனிமைப்படுத்தி வைக்க முயல்கிறோம்.

இன்னும் மாநிலத்திற்கு வரவேண்டிய தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று சொல்ல முடியுமா?

நான்கரை லட்சம் தொழிலாளர்கள் பேருந்துகள், தனியார் பேருந்துகள், வண்டிகள் மூலம் மாநிலத்திற்கு வந்துவிட்டனர். இன்னும் எட்டு லட்சம் பேர் வரவேண்டியுள்ளது. நாங்கள் அவர்களை மரியாதையுடன், கௌரவத்துடன் எங்கள் மாநிலத்திற்கு கொண்டு வரவேண்டும் என்ற நினைக்கிறோம். இதுவரை 166 ரயில்கள் எங்கள் மாநிலத்திற்கு தொழிலாளர்களை கொண்டு வந்ததுள்ளன. இன்னும் 70 ரயில்கள் தொழிலாளர்களை கூட்டிவரச்  செல்கின்றன.

மத்திய அரசு பொதுமுடக்கங்களை தொடராக அறிவித்து வருகிறது. முதலில் அறிவித்த பொதுமுடக்கத்தை சற்று தாமதமாக அறிவித்திருக்கலாம் என நினைக்கிறீர்களா?

நான் முதலிலேயே மத்திய அரசைக் கேட்டுக்கொண்டேன். இப்போது பிணக்கூராய்வு வேண்டாம். முதலில் நாம் கோவிட் -19 யை எதிர்த்து போராடுவோம் என்றேன். அவர்கள் எதையும் திட்டமிடாமல் திடீரென அறிவித்த பொதுமுடக்கம், இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பேரச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் சொந்த மாநிலங்களை நோக்கி நடக்க தொடங்கினர். வண்டிகளில் வரத்தொடங்கினார். இதன் காரணமாக நோய்த்தொற்று வேகமாக பரவத் தொடங்கிவிட்டது. ஷிராமிக் ரயில்களை தொழிலாளர்களுக்கு என மத்திய அரசு திட்டமிட்டது. இதனை மாநிலங்களுக்கு தகவல் சொல்லி ஒருங்கிணைப்பு செய்யவில்லை. இதன்காரணமாக பெருங்குழப்பம் ஏற்பட்டுவிட்டது. முறையாக ரயில்களின் பயணத்தை அரசு திட்டமிடவில்லை. இது நோய்த்தொற்று ஏற்படவும், தொழிலாளர்களுக்கு பயம் ஏற்படவும் காரணமாகிவிட்டது. மாநில அரசுகளிடம் மத்திய அரசு முன்னமே ரயில் திட்டம் பற்றி சொல்லியிருந்தால் இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்காது. இதனால் மாநில அரசுகள் என்ன செய்வது என தடுமாறிப் போய்விட்டன.

பொதுமுடக்கத்திற்கு முன்னதாகவே மக்களை ரயில்வேதுறை மாநிலங்களுக்கு அனுப்பி வைத்திருக்கலாம் என்கிறீர்களா?

உலக நாடுகள் தொழிலாளர்கள் வீட்டுக்கு திரும்ப இம்முறையைத்தான் கடைபிடித்தனர். இதன் காரணமாக தொழிலாளர்கள் அச்சமின்றி தங்கள் சொந்த மாநிலங்களுக்கு, ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இந்தியாவில் இந்த செயல்முறை நடைபெறவில்லை. இதன் காரணமாக, நோய்த்தொற்று தாமதமாக இப்போது தொடங்கியுள்ளது. மாநில அரசுகளுக்கு தகவல் சொல்லிவிட்டு மத்திய அரசு தொழிலாளர்களை அனுப்பும் முடிவை எடுத்திருந்தால், மாநில அரசுகள் தொழிலாளர்களை தனிமைப்படுத்தி, நோய்த்தொற்று சிகிச்சைகளை அளித்திருப்பார்கள். நாங்கள் நெடுஞ்சாலையில் இருபது கி.மீ. தூரத்திற்கு ஒரு சமையல் அறையை உருவாக்கி தொழிலாளர்கள் பட்டினி கிடக்காமல் ஏற்பாடு செய்துள்ளோம். அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் முயன்றுள்ளோம்.

இத்தொழிலாளர்களுக்கு எப்படி நிதியுதவிகளை வழங்கப்போகிறீர்கள்?

நாங்கள் இப்போது பத்து லட்சம் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறோம். இதற்குப் பிறகே அவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டங்களை ஆலோசித்து முடிவு செய்வோம். இது முழுக்க மாநில அரசின் வரிவருவாய் சார்ந்துதான் செயல்படவிருக்கிறது.

பொதுமுடக்கம் 4.0 முடிவுக்கு வந்துவிட்டது. இதுபற்றி தங்களின் கருத்து?

பசியில் தவிக்கும் தொழிலாளர்களைக் காப்பாற்றுவதே எங்களது அரசின் முதல் இலக்கு. பொதுமுடக்கம் அடுத்து அமலுக்கு வருமா என்பதையெல்லாம் நாங்கள் யோசிக்கவில்லை.


கருத்துகள்