உறவுகளை சீரமைத்தாலே மனநிலை குறைபாடுகளை தீர்த்துவிடலாம்! - வில்லியம் கிளாசர்

 










மனிதர்கள் என்பவர்கள் சமூக விலங்குகள். இன்று பெருகியுள்ள தொழில்நுட்ப வசதிகளால் நிறைய மனிதர்கள் நெருக்கமாகி இருக்கமுடியும். ஆனால் சிலர் நெருக்கமாக இருந்தாலும் பலர் விலகி மனதளவில் தொலைதூரத்தில் இருப்பது போல சூழல் உள்ளது. இதைப் பற்றித்தான் வில்லியம் கிளாசர் என்ற உளவியலாளர் ஆய்வுசெய்து சாய்ஸ் கோட்பாட்டை உருவாக்கினார். 


மகிழ்ச்சி, பிழைத்திருத்தல், அதிகாரம், சுதந்திரம், வேடிக்கை என்பது அனைத்து மனிதர்களின் தேவை. அதை நோக்கித்தான் வாழ்க்கை முழுக்க ஓடுகிறார்கள். ஆனால் இந்த தேவைகளை அனைவரும் திருப்திகரமாக நிறைவேற்றிக்கொள்ள முடியாது. அதில் தோல்வி பெறுபவர்களுக்கு துன்பம், அவநம்பிக்கை, விரக்தி உருவாகிறது. இதை தீர்க்க மனநல மருந்துகளை சாப்பிட்டு எந்த பிரயோஜனமும் இல்லை. அவை மூளையிலுள்ள வேதிப்பொருட்களை கட்டுப்படுத்தலாம். ஆனால் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தாது. ஆரோக்கியமான இனிய உறவுகளை தேடி உருவாக்கிக்கொண்டால் நல்ல மனநிலையோடு, மகிழ்ச்சியும் உருவாகும் என உளவியலாளர் வில்லியம் கிளாசர் விளக்கினார். 



மனிதர்கள் சமூக விலங்குகளாக உருவாகிறார்கள். இதற்கடுத்து காதலும், சொத்துகளும் தேவையாக உள்ளன. உயிர் பிழைத்திருப்பதற்கு சொத்துகளும் காதலும் தேவையில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இருந்தாலும் இந்த தேவைகளையும் மனிதர்கள் எதிர்பார்க்கிறார்கள். நெருக்கமான உறவுகளில் எப்போதும் இணக்கம் உள்ளது என்று கூறமுடியாது. அதில் ஏற்படும் பிரச்னைகள் ஒருவரின் நிம்மதியை இழக்க வைக்கிறது. மகிழ்ச்சியற்ற மனநிலை என இதைக் கருதலாம். 


ஒருவருக்கு மகிழ்ச்சியற்ற மனநிலை என்பது அதிக காலம் நீடித்தால் அவர் மனநிலை குறைபாடுகளில் மாட்டிக்கொள்வார். இதிலிருந்து ஒருவர் மீள்வது மிக கடினம். தற்காலிக நிவாரணமாக மருந்துகளை கருதலாம். ஆனால் நிரந்தர தீர்வாக அவரின் தோல்வியுற்ற உறவுகளை சீர் செய்வதே முக்கியம். அதுவே தொலைநோக்கில் பயனளிக்கும்.


வில்லியம் வெளிப்படையாகவே மனநிலைக் குறைபாடுகளுக்கு மருந்துகளை பயன்படுத்துவது அவசியமில்லை என கருத்து கூறினார். மனநிலை குறைபாடுகளுக்கு மகிழ்ச்சியின்மை காரணம். அதற்கான மூலம், தோல்வியுற்ற மனித உறவுகளில் உள்ளது. அதை சீர்செய்தாலே ஒருவரின் மனநிலை குறைபாடுகளை சீராக்கிவிடலாம் என வில்லியம் கிளாசர் கருதினார். 1965ஆம் ஆண்டு, மனநிலை குறைபாடுகளுக்கான ரியாலிட்டி தெரபியை உருவாக்கினார். தனது நோயாளிகளின் தற்போதைய தேவை என்பதை என்ன என்று அறிவதே முக்கியம் என்றார். 


வில்லியம் கிளாசர் 


1925ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓகியோவில் க்ளீவ்லாந்தில் பிறந்தார். தொடக்கத்தில் வேதியியல் பொறியாளர் படிப்பை படித்தார். பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்று அங்கு உளவியல் கற்றார். கற்ற பாடத்தை நடைமுறையில் பயிற்சி செய்யத் தொடங்கினார். பிசிடி எனும் கட்டுரையில், கண்ட்ரோல் தியரி சிஸ்டம் பற்றி விவரித்து எழுதி வெளியிட்டார். 1967ஆம் ஆண்டு, கலிஃபோர்னியாவில் ரியாலிட்டி தெரபி சிகிச்சை மையம் ஒன்றை தொடங்கினார். இங்கு மாணவர்களுக்கு சாய்ஸ் கோட்பாடு கற்றுத் தரப்பட்டது. உளவியல் குறைபாடுகள், அதற்கான ஆலோசனைகள், பள்ளி மேம்பாடு பற்றி உரையாற்றியிருக்கிறார். நூல்களை, அறிக்கைகளை எழுதி வெளியிட்டிருக்கிறார். தனது பணிக்காக அமெரிக்க உளவியல் சங்கத்தால் விருதுகளும் பெற்றுள்ளார். 


முக்கியமான படைப்புகள் 


1965 ரியாலிட்டி தெரபி

1969 ஸ்கூல் வித்தவுட் ஃபெயிலர்

1998 சாய்ஸ் தியரி

2003 வார்னிங் - சைக்கியாட்டிரி கேன் பி ஹசார்ட்டஸ் டு யுவர் மென்டல் ஹெல்த்


Born(1925-05-11)May 11, 1925
ClevelandOhio
DiedAugust 23, 2013(2013-08-23) (aged 88)
Los AngelesCalifornia
NationalityAmerican

கருத்துகள்