கதைகள் சொல்லப்படாமல், கேட்காமல் வளர்வது குழந்தைகளுக்கு ஆபத்தானது - கஹானி சவாரி

 









பாகிஸ்தான். கராச்சியில் உள்ள லையாரி டவுன். அங்கு இளைஞர் ஒருவர் நூலை விரித்து குழந்தைகளுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் வேடிக்கையாக கூறுவதைக் கேட்டு குழந்தைகள் சிரித்துக்கொண்டிருக்கின்றன. அவர்கள் கேட்கும் கதை பலமுறை சொல்லப்பட்டதுதான். ஆனாலும் சலிக்காத ஒன்று. 


பாகிஸ்தானில் உள்ள பொருளாதார சூழலில் கல்வி அனைவருக்கும் எட்டாத ஒன்று. நூல்களும் உடைகளும் வாங்கி அரசின் இலவசக் கல்வியைப் பெறுவது கூட அங்குள்ள குழந்தைகளுக்கு இயலாத ஒன்று. இதற்கு, அங்கு எரிபொருட்களின் விலை உயர்வும், அதன் விளைவாக ஏராளமான மக்கள் வேலை இழந்ததும் முக்கியமான காரணங்கள். 


பத்து வயதிலுள்ள குழந்தைகளில் 77 சதவீதம் பேருக்கு எளிமையாக வாக்கியத்தை புரிந்துகொண்டு வாசிக்கத் தெரியவில்லை. பத்திலிருந்து 16 வயது வரம்பு கொண்ட குழந்தைகளில் 44 சதவீதம் பேர் பள்ளியிலிருந்து விலகிக்கொண்டுவிடுகிறார்கள். இத்தனைக்கும் பாக்.கில் கல்வி இலவசம், கட்டாயமும் கூட. ஆனால் விலைவாசி பிரச்னையில் குழந்தைகளும் தப்பவில்லை. 


லையாரி டவுனின் தெருக்களில் ஐஸ்பெட்டி வண்டியை தள்ளிக்கொண்டு வரும் இளைஞர் பெயர் முகமது நோமன். இவர் கஹானி சவாரி எனும் திட்டத்தில் இணைந்து வறுமையில் உள்ள குழந்தைகளுக்கு கதை சொல்வதன் வழியாக வாசிப்பு ஆர்வத்தை ஊட்ட முயன்று வருகிறார். முகமதுவும் கூட நிறைய படித்தவர் அல்ல. வறுமையால் பள்ளிப்படிப்பபை நிறுத்திக்கொண்டு வேலை செய்தவர்தான். பள்ளிப்படிப்பை இப்போதும் முயன்று படித்து வருகிறார். அவர் குழந்தைகளுக்கு வேடிக்கையாக கூறும் கதை, தாழ்வுணர்ச்சி கொண்ட மஞ்சள் கிளி பற்றியது. 


கோரீட் எனும் அமைப்பு நடத்தும் கதை சொல்லும் பட்டறைதான் கஹானி சவாரி. லையாரி டவுனில் ஆறு லட்சத்து அறுபத்து ஆறாயிரம் மக்கள் வாழ்கிறார்கள். பெரும்பாலானவர்கள் பலுசிஸ்தானைச் சேர்ந்த இனக்குழுவினர். முகமது டவுனில் உள்ள முப்பது ஏரியாக்களுக்கும் சென்று கதைகளை சொல்லியிருக்கிறார். குழந்தைகள் மட்டுமல்ல தெருக்களில் உள்ள வியாபாரிகளும் அதை கேட்கிறார்கள். 


2021ஆம் ஆண்டு தொடங்கிய கஹானி சவாரி திட்டம் மூலம் 15 ஆயிரம் குழந்தைகள் கதைகளைக் கேட்டு அவற்றை நூல்மூலம் வாசிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த திட்டம் மூலம் குழந்தைகளுக்கு வாசிப்பு ஆர்வம் ஏற்பட்டு, பள்ளியில் சென்று சேரவேண்டும் என்பதே முகமதுவின் நோக்கம். ஆனால் அது நிறைவேறுவது எளிதல்ல. 


கதைகள் சொல்லப்படுவதன் வழியாகவே குழந்தைகள் வாழ்க்கையைப் புரிந்துகொள்கிறார்கள். கதைகளே சொல்லப்படாமல் குழந்தைகள் வளருவது ஆபத்தானது. கதைகளை சொல்வது, கேட்பதன் மூலம் அவர்கள் மனம் திறக்கப்படுகிறது. நாம் நூல்களை வாசிக்காமல் விரும்பாமல் குழந்தைகளை வாசிக்கச் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை என்றார் கோ ரீட் அமைப்பின் இயக்குநர் நுஷர் சையத். 


ஸோஃபின் இப்ராகிம்

கார்டியன் நாளிதழ்  


கருத்துகள்