தேர்தல், அரசியலில் தலையிடாமல் தள்ளி நிற்க முயலும் டெக் நிறுவனங்கள்!

 













கீழ்த்தரமாக பேசுவது அரசியலில் இயல்பாக இருக்கிறது. அதை இன்னும் புதிய உயரங்களுக்கு காவிக்கட்சி ஆட்கள் கொண்டு சென்று வருகிறார்கள். எதிராளி பேசும் விதமாக அதற்கு நிகராக அதை விட கீழ்த்தரமாக பேச நிறைய ஆட்கள் தயாராகி வருகிறார்கள். தனிநபர்கள் பேசுவது வேறு. அதையே டெக் நிறுவனங்கள், இணையத்தில் பதிலாக அளிப்பது வேறு. குறிப்பிட்ட கட்சி சார்ந்து தவறான பதில்களை அல்லது அவர்களுக்கு பிடிக்காதது போல நேர்மையாக பதில் சொன்னால் கூட தொழில் செய்யமுடியாது. 


இந்த விதிகளை யாரும் மீறமுடியாது. மீறினால் உடனே அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, தேசியபாதுகாப்பு, உளவுத்துறை என பல்வேறு அமைப்புகள் தொழிற்சாலைகளுக்கு, அலுவலகங்களுக்கு வந்து சோதனையிடுவார்கள். பிறகு தேர்தல் பத்திரங்களில் காசு கொடுத்தால் மட்டுமே தொழில் பிழைக்கும். இல்லையெனில் லஞ்ச, ஊழல் வழக்கு பதிவாகும். தேசதுரோகி என பிழைப்புவாத ஊடகங்கள் அலறுவார்கள். இதற்கு யாரும் விதிவிலக்கு கிடையாது. இப்படி மிரட்டி பணம் பிடுங்குவதில் காவிக்கட்சி அதிகாரத்தில் இருப்பதால் கெட்டிக்காரத்தனம் காட்டுகிறது. 


கூகுள், அரசியல் கருத்துகளைக் கூறுவது தொடர்பான பிரச்னையில், எந்த கருத்தும் கூறுவதில்லை. தேர்தல் தொடர்பாக நிறைய கேள்விகளைக் கேட்கிறார்கள். நாங்கள் இந்த கேள்விகளை சுயதணிக்கை செய்துகொண்டே பதில் அளிக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. பார்டு என்றசெயற்கை நுண்ணறிவிலிருந்து ஜெமினி என மாறினாலும் கூட கேட்ட  கேள்விக்கு பதில் என்றால் கூகுள் திணறுகிறது. இந்த வகையில் சாட் ஜிபிடி இணையத்தில் உள்ள தகவல்களை காசு கொடுக்காமல் திருடி பயிற்சி பெற்றாலும் கெட்டிக்காரத்தனம் காட்டிவருகிறது. செயற்கை நுண்ணறிவு சேவைகளில் மோடி, ராகுல்காந்தி, தேர்தல், காங்கிரஸ், காவிக்கட்சி என்று டைப் செய்தாலே எந்த பதிலும் வராது. வந்தாலும் இந்த கேள்விக்கு பதில் இல்லை. தேவையெனில் கூகுளில் தேடுங்கள் என ஜெமினி கூறுகிறது. பின்னே உயிர் பிழைக்க வேண்டுமே? 


குறிப்பிட்ட நாடு, அரசியல் கட்சி என்றில்லை உலகம் முழுக்கவே செயற்கை நுண்ணறிவில் சர்ச்சையான விஷயங்களைக் கேட்டால் பதில் கூற வேண்டாம் என்று தீர்மானித்து அதற்கேற்ப கோடிங்குகளை எழுதிவிடுகிறார்கள். எனவே, குறிப்பிட்ட சொற்கள், வார்த்தைகளை பயன்படுத்தினாலே ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள பதில் அதற்கு வழங்கப்படும். அதற்கு மேல் கேள்விக்கான பதில் செல்லாது. சாட்ஜிபிஇ, ஜெமினி, பர்பிளெக்ஸிட்டி, கிளாட் ஆகிய  செயற்கை நுண்ணறிவு மாடல்கள், இணையத்தில் உள்ள தகவல்களை தொகுத்து கோர்வையாக்கி தருகின்றன. அவையே அவற்றை எழுதுவதில்லை. ஆனாலும், அவற்றின் அல்காரிதம் தொகுப்பதால், பதிலுக்கு அவைதான் பொறுப்பு. 


டெக் நிறுவனங்கள் சுயதணிக்கை செய்துகொண்டு பதில்களை தயாரித்து வருகின்றன. கூகுள் ஜெமினியைப் பொறுத்தவரை உங்கள் கேள்விக்கு பதிலளிக்க நான் பயிற்சி எடுத்து வருகிறேன். அதுவரை கூகுளில் தகவல்களைத் தேடுங்கள் என்று கூறுகிறது. சில ஏஐகளில் வேறு எந்த தகவலும் இல்லை. மன்னித்துவிடுங்கள், என்னுடைய அறிவு வரம்புகளுக்கு உட்பட்டது. நான் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன். இதை புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால் தயக்கமின்றி கேட்கலாம் என பதில் அளிக்கிறது. 


கூகுள் அண்மையில் தனது செயற்கை நுண்ணறிவு தேடலில் பன்மைத்தன்மை இல்லாத பதில்களை புகைப்படங்களை கொடுத்து சர்ச்சையில் சிக்கியது. இந்தியாவில் பிரதமர் மோடி, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பற்றிய கேள்விகளுக்கு பல்வேறு முரண்பாடுகளைக் கொண்ட பதில்களை வழங்கியது. இந்திய அரசு கூகுளிடம் இதுபற்றி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், அந்தளவுக்கு எல்லாம் இதை எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. பொதுவான ஏஐ கருவிகளை வைத்து ஒருவர் கோடிங்குகள் எழுதலாம், பாடல்கள் உருவாக்கலாம், இசையை தயாரிக்கலாம், மருந்துகள் கண்டுபிடிப்பு பற்றி அறியலாம். அதைவிட்டுவிட்டு தகவல் துல்லியம் கொண்ட விஷயங்களை எதற்கு கேட்கவேண்டும் என சில தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து கூறுகிறார்கள். அதுவும் சூழலுக்கு பொருத்தமாகவே இருக்கிறது. 


அரசியல் கட்சிகள், தலைவர்கள் பற்றி ஏஐ கருவிகள் கூறும் கருத்து தவறாக இருக்கிறது என்றால் அது இயல்பானதுதான். இப்பதில்களை சரியாக கூறுவதற்கு அதை தயாரித்திருக்க மாட்டார்கள். சர்ச்சையான அரசியல் கேள்விகளை தடுக்கும் வகையில் கோடிங்குகளை எழுதிவிட்டால் போதுமானது. பெரிய சர்ச்சைகள் ஏதும் வராது. 


based on ie article.

கோமாளிமேடை டீம் 

கருத்துகள்