மரபணு தடுத்தாலும் உடல் எடையைக் குறைக்க முடியும்!

 








இயற்கையாகவே சிலருக்கு உடல் பழனி படிக்கட்டு போல கட்டாக இருக்கும். திருமணமானபிறகு, செல்வச்செழிப்பில் பூரித்தால் உடல் சற்று பூசினாற்போல மாறி குனுக் மினுக் என மாறுவார்கள். ஆனால் சிலர் வெளியேற்றம் நாவலில் வரும் குற்றாலிங்கம் போல வேளைக்கு இருபத்தைந்து இட்லிகளை உள்ளே இறக்கினாலும் உடலில் வேறுபாடே தெரியாது. பரம ரோகியாக இருந்தாலும்கூட யோகி போல வெளியே தெரிவார்கள். அத்தனைக்கும் காரணம் என்ன? மரபணுக்கள்தான். 

சிலருக்கு அடிப்படையான உடற்பயிற்சி செய்து நாற்றம் பிடித்த சோயா சங்சை ஊறவைத்து தின்றாலே உடல், கீரை சாப்பிட்ட பாப்பாய் போல கட்டாக அமைந்துவிடும். ஆனால் இன்னும் சிலர் என்னென்னமோ உடற்பயிற்சி செய்தாலும் கூட உடலில் சுண்டைக்காய் அளவு மாறுதல் மட்டுமே தெரியும். இதற்கெல்லாம் காரணம் நாம் செய்த வினை அம்புட்டு பலமாக இருக்குதோ என நினைத்து கவலை கொள்ள வேண்டியதில்லை. மரபணு காரணமாக சில பிரச்னைகள் வந்தாலும் கூட நம்மால் முடிந்த பிரயத்தனங்களை செய்தால் போதும் உடல் எடை குறைவதோடு உடல் கட்டமைப்பும் பலம் பெறும். 


சோத்துக்கு பஞ்சமில்லாதவர்கள்தான் உடற்பயிற்சி பற்றி யோசிக்கவேண்டும். உடல் எடை என்றாலே அவர் கண்டிப்பாக பசி, பட்டினி என்று கிடப்பவர் அல்ல. இருந்தாலும் உடற்பயிற்சி செய்ய உடலில் அடிப்படையாக பலம் தேவை. குர்குரே,லேஸ், ஏஞ்சல் மிக்சர், ஏ1 சிப்ஸ் என வெட்டு வணக்குபவர்களுக்கு வாய்க்கட்டு தேவை. நடுத்தரமான அடர்த்தி கொண்ட உடற்பயிற்சிகளை வாரத்திற்கு நான்கு முறை செய்வது போல அமைத்துக்கொள்ளலாம். உடலில் வியர்வை வெளியேறுவது முக்கியம். உடற்பயிற்சி மூலம் உடலிலுள்ள சர்க்கரை கரையும். உப்பின் அளவு துல்லியமாகும். கொழுப்பு கரையும். சைக்கிள் மிதிப்பது, நடைப்பயிற்சி, உடலை நெகிழ்த்தும் பயிற்சிகள் ஆகியவற்றை செய்தாலே உடல் எடை மெல்ல குறையும் என 2006ஆம் ஆண்டு செய்த ஆய்வில் ஜார்ஜியா பல்கலைக்கழகம் கண்டுபிடித்து கூறியுள்ளது. 


வாட்சை வாங்குங்க எடையைக் குறையுங்க


ஃபிட்பிட், கார்மின் ஆகிய வாட்சுகளை ஆடித்தள்ளுபடியில் வாங்கி அணியுங்கள். அப்புறம் என்ன உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டியதுதான். பத்தாயிரம் அடி நடப்பது பற்றியெல்லாம் பேசுவதை விட்டுவிட்டு, எவ்வளவு முடியுமோ அந்தளவு தூரம் நடக்கலாம். வாட்ச் நாம் நடப்பதை, இதயம் துடிப்பதை எல்லாமே துல்லியமாக கணக்குப் போட்டு சொல்லிவிடும். வாரத்திற்கு 150 நிமிடங்கள் செலவழித்தாலே போதும். உடலில் வித்தியாசம் தெரியத்தொடங்கும். மேற்சொன்ன வாட்சுகளை வாங்கிக்கட்டிக்கொண்டு மயோனிஸ் சாண்ட்விட்சுகளை தின்றபடி,ரொட்டிசியசில் பிளம் கேக் வாங்கித் தின்றபடி சில லூசுகள் சுற்றித்திரியும். அவர்களுக்கு மூன்றுமாத கர்ப்பிணி போல தொந்தியும் இருக்கும். அவர்களைப் பார்த்து நம்பிக்கை இழக்கவேண்டாம். பயம் ஒதலு கெலிச்சுடு என மகேஷ்பாபுவே தெலுங்கில் கூறியிருக்கிறார். மவுண்டைன் ட்யூ குடித்து உற்சாகம் பெற்று பிறகு கூட உடற்பயிற்சி செய்யலாம். 


முழங்கால் வலி, இரண்டாம் நிலை நீரிழிவு ஆகிய நோய்கள் இருந்தால் உடற்பயிற்சி செய்வது அதன் பாதிப்பைக் குறைக்கும். ஆனால் முறையாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தனியாக உடற்பயிற்சி வல்லுநரின் வழிகாட்டுதலில் பயிற்சிகளை செய்யவேண்டும். 


உடல் எடையை தக்க வைக்கவேண்டும், குறைக்கவேண்டும் என கருத்துகள் கொண்டிருந்தால் ஏரோபிக், பளுதூக்கும் பயிற்சிகளைச் செய்யலாம். சுற்றிலும் சைக்கோ சாடிஸ்டுகளைக் கொண்ட ஆபீஸ் என்றால் இயல்பாகவே மனச்சோர்வு, அழுத்தம், பாரனோயா என பல பாதிப்புகள் ஏற்படும். இப்படியான காலகட்டத்தில் உடற்பயிற்சி செய்வதை தினசரி வழக்கமாக்கிக்கொள்ளலாம். தவறில்லை. நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது ஆகியவற்றை செய்தால் மனநிலை சீராகும். மேம்பட வாய்ப்புள்ளது. 


கோமாளிமேடை டீம் 

கருத்துகள்