டேட்டிங் ஆப்பில் தீயாய் காதல் வளர்க்கும் இந்தியர்கள்! - இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் காட்டாறாக பாயும் காதல்

 



பம்பிள் டேட்டிங் ஆப்

டிண்டர் போன்ற வடிவத்தில் ட்ரூலிமேட்லி

ட்ரூலிமேட்லி ஆப்





காற்றில் பரவுகிறது காதல்

தலைப்பை பார்த்ததும் எங்கே என கேள்வி கேட்க கூடாது. இதெல்லாம் நாமே கற்பனை செய்துகொள்ளவேண்டியதுதான். இந்தியாவில் உள்ள இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் டேட்டிங் ஆப்களை பயன்படுத்தி தங்களுக்கான காதலை, நட்பை ஆண்களும், பெண்களும் தேடத் தொடங்கியிருக்கிறார்கள்.

டிண்டர், பம்பிள், ட்ரூலிமேட்லி, அய்லே ஆகிய டேட்டிங் ஆப்கள் இன்று மிக பிரபலமாகிவிட்டன. காரணம், இவற்றின் வழியாக லட்சக்கணக்கான இளைஞர்கள் குறிப்பாக 18-23 வயதுப் பிரிவினர் காதலைத் தேடி டேட்டிங் சென்று வருகிறார்கள்.  பெருந்தொற்று காலகட்டம் காதலி, நண்பர்கள் என பலரையும் சந்திக்க விடாமல் செய்தது. இந்த சூழல் பலரையும் மனதளவில் பாதித்தது. அந்த நேரத்தில் உதவியாக இருந்தது இணையமும், அதன் வழியாக அறிமுகமான டேட்டிங் ஆப்களும்தான்.

ட்ரூலிமேட்லி என்ற ஆப், இந்தியாவில் உருவாக்கப்பட்டது மாதம் 699 தொடங்கி 2,800 வரை காசு கட்டினால் டேட்டிங் அனுபவத்தை சுகமானதாக்குகிறார்கள். அதாவது, நிறைய வசதிகளை பயன்படுத்தி பெண்களைப் பற்றி அறியலாம். பாதுகாப்பு என்ற வகையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி போலி கணக்குகளை நீக்குகிறார்கள்.

பயன்படுத்தும் பெண்களின் யூசர் நேமை இந்த ஆப் காட்டுவதில்லை. ட்ரூலிமேட்லிஆப் இந்தியாவில் உருவாக்கப்பட்டது என்பதால், இந்தியர்கள் இதை அதிகம் பயன்படுத்தி காதலிக்கிறார்கள். பிறகு மணக்கிறார்கள். காதலித்த அதே பெண்ணையா என்று கேட்க கூடாது. இந்த வகையில் 25 ஆயிரம் மணம் செய்துகொண்டிருக்கிறார்களாம். நிறுவனத்திற்கு பெருமை என்றாலும் மணம் செய்தவர்களுக்கு மனநிலை எப்படியோ….

பள்ளித்தேர்வில் மாணவிகள் அதிக மதிப்பெண்ணைப் பெறுவது வழக்கமானது. இந்த வகையில் டேட்டிங் ஆப்பில் சந்தா கட்டி ஐக்கியமாவதில் ஆண்கள்தான் 90 சதவீதம் பேர் முந்துகிறார்கள். பெண்கள் இந்த வகையில் மந்தமாகவே இருக்கிறார்கள்.

இந்திய ஆப்களை விட வெளிநாட்டு ஆப்களில் பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் அதிகம். பம்பிள் ஆப்பை எடுத்துக்கொண்டால், அதில் பெண்கள் ஆணை டேட் செய்ய விரும்பினால் அவர்கள் முதல் செய்தி அனுப்பினால் மட்டுமே அவருடன் ஆண் ஒருவர் சாட் செய்யவே முடியும். தீயை பெண்கள் பற்றவைத்தால் ஆண்கள் அதை அணைப்பார்கள் என புரிந்துகொள்ளலாம். நல்ல உத்தி.

பம்பிள் ஆப்பில் புரொஃபைல்களைத் தேட வாரம் 149 ரூபாய் சந்தா வாங்குகிறார்கள். மாதம் என்றால் 500 ரூபாய் வசூலிக்கிறார்கள். அய்லே ஆப் மாதம் ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். பார்க்க ஏதோ லாட்ஜில் ரூம் வாடகை போல இருந்தாலும் டேட்டிங்கில் பல்வேறு பெண்களின் புரொஃபைலை பார்க்கத்தான் இத்தனை அயராத முயற்சிகளும் நடைபெறுகின்றன. எல்லாம் யாருக்காக.. மக்களிடம் காதலை வளர்க்கத்தான். பெண்களை பப்பிற்குள் இலவசமாக அனுமதித்து, அவர்களை பின்தொடர்ந்து ஆண்களை வரச்செய்கிறார்களே அதே கான்செஃப்டைத்தான் டேட்டிங் ஆப்களும் பின்பற்றுகின்றன. இதில் இலவசமான பிரிவிலும் காமா சோமாவென நிறைய புரொஃபைல்களை கொடுக்கிறார்கள். இடது பக்கம் அல்லது வலது பக்கள் தள்ளி உங்கள் காதல் இணையைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது மறுக்கலாம்.

பெண்கள் டேட்டிங் ஆப்பில் சந்தா கட்டாமலேயே ஏராளமான வசதிகளைப் பெறலாம். ஆனால், இவர்களைப் பார்க்க வரும் ஆண்கள் கட்டாயம் சந்தா கட்டியே ஆகவேண்டும். ஒரு பெண்ணுக்கு எட்டு ஆண்களின் புரொஃபைல் அனுப்பி வைக்கிறார்கள். காசு கட்டினால் ஆண்களுக்கும் இதேபோல அல்காரிதம் மூலம் தேர்ந்தெடுத்த பெண்களின் தகவல்களை கொடுக்கிறார்கள். அன்பை வளர்க்கவே இதுபோன்ற கடினமான முயற்சிகள். வேறொன்றையும் நினைக்காதீர்கள். சாமி கண்ணைக் குத்திவிடும்.

மேம்பட்ட அல்காரிதம். ஒருவர் உள்ள இடத்தைப் பொறுத்து அங்குள்ளவர்களின் தகவல்களை வழங்குவது என டேட்டிங் ஆப்கள் புகழ்பெற்றுள்ளன.

2022ஆம் ஆண்டு, டேட்டிங் ஆப்பில் அதிக பணத்தை செலவிட்ட நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. 31 மில்லியன் டாலர்களை செலவிட்டிருக்கிறார்கள்.  

 

உமா கண்ணன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் எழுதிய கட்டுரையைத் தழுவியது.

கருத்துகள்