வன உரிமைச் சட்டத்தை நான் ஆதரிக்கவில்லை - எம் கே ரஞ்சித் சிங், இயற்கைச்சூழல் செயல்பாட்டாளர்

 





எம் கே ரஞ்சித் சிங்






வனப்பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட அடிப்படையான விஷயங்களை செய்தவர், திரு. எம் கே ரஞ்சித் சிங். இவர் புலிகளைக் காப்பதற்கான பல்வேறு செயல்பாடுகளை செய்வதோடு, காப்பகங்களை உருவாக்கவும் உதவியுள்ளார். குஜராத்தின் வங்கானர் எனும் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர், ரஞ்சித் சிங். தனது செயல்பாடுகளின் விளைவாக இந்தியாவின் முக்கியமான வனப்பாதுகாப்பு செயல்பாட்டாளராக அறியப்பட்டு வருகிறார். பதினொரு வனப்பாதுகாப்பு சரணாலயங்கள், எட்டு தேசியப் பூங்காங்களை உருவாக்குவதில் பங்களித்துள்ளார். அவரிடம் புலிகளின் பாதுகாப்பு பற்றி பேசினோம்.

புலிகளின் பாதுகாப்பு திட்டம் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

1972ஆம் ஆண்டு, புராஜெக்ட் டைகர் குழுவில் செயலாளராக இருந்தேன். அடுத்த ஆண்டு கைலாஷ் சங்கலா இந்த பதவிக்கு வந்தார். புலிகளை பாதுகாத்து அதன் எண்ணிக்கையை பெருக்குவதே எங்கள் குழுவின் நோக்கமாக இருந்த து. எங்கள் குழுவின் லட்சியத்தை எட்டியதாகவே நினைக்கிறேன். இந்த திட்டம் மட்டும் உருவாக்கப்படாமல் இருந்திருந்தால்  நிறைய துணை விலங்கினங்களைக் காப்பாற்ற முடியாமலேயே போயிருக்கும்.

பலாமாவு, சிமிலிபல் ஆகிய காப்பகங்களில் பலவீனமான புலிகள் தானே உருவாகின?

அதனால் என்ன? சரிஸ்கா, பன்னா ஆகிய காப்பகங்களில் முழுமையாக அங்கு வாழ்ந்த ஒட்டுமொத்த புலி இனங்களே அழிந்துபோய்விட்டன. ஆனால் நீங்கள் சொன்ன காப்பகங்களில் புலிகள் உயிர்ப்புடன் வாழ்கின்றன. புலிகளின் எண்ணிக்கையைப் பெருக்குவதும், காப்பகங்களைக் காப்பதும்தான் எங்கள் பணி.

 இந்தியாவில் இப்போதுள்ள புலிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

இந்தியாவில் தற்போது மூவாயிரம் புலிகள் உள்ளன. புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழியைத் தேடிக்கொண்டிருக்கிறோம். புலிகளுக்கான இரையைப் பாதுகாத்துத்தான் புலியை உயிர்வாழ வைக்கவேண்டியுள்ளது. இல்லையெனில் புலிகள் பசியாலும் மனிதர்களோடு ஏற்படும் மோதலாலும் எளிதாக இறந்துபோய்விடும்.

வன உரிமை சட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்த சட்டத்தை காங்கிரஸ் அரசு உருவாக்கியது. அதை பாஜக நடைமுறையில் பயன்படுத்தி வருகிறது. இச்சட்டம் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. நான் இதை எதிர்க்கிறேன்.

 

அடுத்த ஐம்பது ஆண்டுகளில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என நினைக்கிறீர்கள்?

இந்தியாவில் வாழும் புலிகள் மக்களின் இதயம் கவர்ந்தவை என்பதால் அவை அழிந்துபோய்விடாது என நினைக்கிறேன். ஆனால் அதன் எண்ணிக்கை காடுகளில் எந்தளவு இருக்கும் என்று கூற முடியாது. கிப்பான், காட்டு பூனை இனங்களில் ஒன்றான காரகால், மான் இனங்களில் ஒன்றான பாரசிங்கா ஆகியவை உயிரோடு இருக்குமா என்று தெரியவில்லை.

மக்களை மையப்படுத்திய கொள்கைகளால் புலிகளுக்கு எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படுமா?

நான் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. ஆனால், விலங்கினங்களை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உண்டு. அதில் அரசியல் கருத்தியல்களைக் கொண்டு வராமல்  இருக்க வேண்டும். வளர்ச்சியின் பெயரால் அழிவை ஏற்படுத்தக்கூடாது.

வளர்ச்சி, இயற்கை பாதுகாப்பு என இரண்டையும் ஒருங்கே செய்வது நல்லது. அரசு அழியும் நிலையிலுள்ள கானமயில் (இந்தியன் பஸ்டர்டு) போன்ற பறவைகளைக் காக்க நிதி முதலீடு செய்யவேண்டும். குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் நூறு கிப்பான்கள்தான் எஞ்சியுள்ளன. அவற்றைக் காக்க மின்சார கம்பிகளை தரைக்கு கீழே பதித்து கொண்டு செல்லவேண்டும் என உச்சநீதிமன்றம் 2021ஆம்ஆண்டு ஏப்ரல் 19 அன்று உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

 

விஜய் பின்ஜார்கர்

டைம்ஸ் ஆஃப் இந்தியா


கருத்துகள்