பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித்தவித்த இந்தியாவில், தொடங்கிய இந்திராகாந்தியின் யுகம்!

 









குழப்பமான காலத்தில் தொடங்கிய இந்திராகாந்தியின் ஆட்சி!


சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மூன்றாவது (1962), நான்காவது (1967) மக்களவைத் தேர்தலின்போது மக்களின் மனநிலை சிக்கலுக்குள்ளாகி தவித்தது. அன்றைய இளம் வாக்காளர்கள் அனைவருக்குமே இந்தியா என்னாகும் என்ற தவிப்பு இருந்தது. அப்போதுதான் இந்தியா சீனாவுடன் போரிட்டு தோற்றுப் போயிருந்தது. அதற்கடுத்த கெடுவாய்ப்பாக பிரதமர் நேரு 1964, மே 27 அன்று காலமானார். அதற்கடுத்து பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி இரண்டு ஆண்டுகள் கூட பதவியில் முழுமையாக இருக்கவில்லை. அவரும் விரைவிலேயே காலமானார். 


இந்தியா பாகிஸ்தானுடன் இரண்டு மாதங்கள் போரிட நேர்ந்தது. அதில் வெற்றியும் பெற்றது. பிறகுதான் அமைதி ஒப்பந்தம் உருவானது. தாஸ்கென்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சாஸ்திரி அதற்கடுத்த நாளான ஜனவரி பதினொன்றாம் தேதி மரணமடைந்தார். உஸ்பெக் நகரில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றது. மேற்கண்ட ஒப்பந்தம் கூட ஐ.நாவின் தலையீட்டாலேயே சாத்தியமானது. 


இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, காலமானபோது தற்காலிக பிரதமராக இருந்தவர் குல்சாரிலால் நந்தா. இவர் நேருவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இயங்கி வந்தார். சாஸ்திரி அமரரானபோதும், பதிமூன்று நாட்கள் தற்காலிக பிரதமராக செயல்பட்டார். அன்று இந்திராகாந்தி தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். பிரதமர் பதவிக்கு கட்சிக்குள் மொரார்ஜிதேசாய், இந்திராகாந்தியுடன் போட்டியிட்டார். 1966ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று வெற்றிகரமாக இந்திராகாந்தி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். 


1967ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 21ஆம் தேதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்றது. கட்சிக்குள், இந்திராவுக்கும் மொரார்ஜி தேசாய்க்குமான உறவு கெட்டுப்போனது. மக்களவைக்கும், மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. மத்தியில் காங்கிரஸ் வென்றாலும், மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் வென்று ஆட்சியைக் கைப்பற்றின. 


1961ஆம் ஆண்டு செய்த மக்கள்தொகை கணக்கெடுப்புபடி, நான்காவது மக்களவைத் தொகுதியில் உறுப்பினர்களுக்கு 520 இடங்கள் இருந்தன. 1962ஆம் ஆண்டில் இந்த இடங்களின் எண்ணிக்கை 494 மட்டுமே. இதில் 77 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், 37 இடங்கள் பழங்குடியினருக்கும் அரசு ஒதுக்கியது. மொத்த மாநிலங்களில் 3,563 உறுப்பினர் இடங்கள் என்றால், அதில், 503 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், 262 இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டது. 


1967ஆம் ஆண்டு இந்தியாவில் பல்வேறு நிர்வாகரீதியான மாற்றங்கள் உருவாயின. 1963ஆம் ஆண்டு நாகலாந்து தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. 1966ஆம் ஆண்டு ஹரியானா தனி மாநிலமானது. சண்டிகர் யூனியன் பிரதேசமாக்கப்பட்டது. இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, கோவா, டையூ டாமன், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டசபை உருவாக்கப்பட்டது. அமைச்சர்களுக்கான கௌன்சிலும் தயாரானது. 


மூன்றாவது முறையாக நேரு பிரதமராக இருக்கும்போது, இந்தியாவில் அமைதியற்ற நிலை இருந்தது. மக்கள் சாப்பிடுவதற்கு உணவு போதுமானதாக இல்லை. நாட்டின் பல பாகங்களில் பஞ்சம் உருவாகி பரவத் தொடங்கியது. 1963ஆம் ஆண்டு, நேரு ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர்களை பதவி விலக கோரினார். இதற்கான அடிப்படைத் திட்டத்தை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான காமராஜர் உருவாக்கிக் கொடுத்தார். இதை அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவர்களே ஏற்கவில்லை. ஏனெனில் அந்தளவு அவர்களுக்கு அதிகார ருசி பழக்கப்பட்டு போயிருந்தது. காமராஜர் உருவாக்கிய திட்டம், புதிய நபர்களை கட்சிக்குள் கொண்டு வந்து அதற்கு புத்துயிர் ஊட்டுவதேயாகும். 


அப்போது காங்கிரஸ் கட்சிக்குள்ளும் மிதவாதிகள், தீவிரவாதிகள் போராட்டம் தீவிரமாக இருந்தது. 1962ஆம் ஆண்டு,  காந்திய சோசலிசவாதியான ஜே பி கிரிபாளினி, பிரஜா சோசலிச கட்சியை விட்டு விலகினார். அடுத்த ஆண்டு, சோசலிசவாதியான ராம் மனோகர் லோகியா, ஃபருகாபாத் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று மக்களவை உறுப்பினரானார். வெற்றி தந்த நம்பிக்கையில் சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சியைத் தொடங்கி, எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைத்து காங்கிரஸை எதிர்த்தார். 


1964ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடைந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியது. கேரளத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி உடைந்து அதில் இருந்து கேரள காங்கிரஸ் கட்சி உருவானது. 

1965ஆம் ஆண்டு, டாக்டர் அம்பேத்கரின் அகில இந்திய பட்டியலின ஃபெடரேஷன் அமைப்பிலிருந்து உருவான குடியரசுக்கட்சி இரண்டாக உடைந்தது. 1962ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு சிரோமணி அகாலிதளம் கட்சி, தாராசிங், துறவி ஃபதே சிங் என இரண்டு பேரின் தலைமையில் இரு கட்சிகளாக பிரிந்தது. 


1967ஆம் ஆண்டு, மூன்றாவது மக்களவையின் காலம் முடிவுக்கு வந்தது. மாநில சட்டசபையின் காலம் மார்ச் 11, ஏப்ரல் 5 ஆகிய தேதிகளில் நிறைவுக்கு வந்தது. தேர்தலில் 15.27 கோடி மக்கள், அதாவது, 61.33 சதவீதம் பேர் வாக்களித்தனர். இவர்களுக்கென 2.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 


மாநில சட்டசபைகளுக்கு 16, 501 உறுப்பினர்களும், மக்களவைக்கு 2,369 உறுப்பினர்களும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறவில்லை. பிப்ரவரி 21ஆம் தேதியில் மூன்று இடங்களுக்கான முடிவு கூறப்பட்டது. மார்ச் 10 ஆம் தேதி, இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 520 மக்களவை உறுப்பினர்களில் முப்பது பெண்களும் உள்ளடங்குவர். மாநில சட்டசபையில் 3,486 உறுப்பினர்களில் 98 பேர் பெண்கள். 


வெளியான தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி தந்தது. அக்கட்சி, நாற்பது சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்றிருந்தது. ஆனால் வென்ற மக்களவை உறுப்பினருக்கான இடங்களின் எண்ணிக்கை 283. 44 இடங்களில் வென்ற ராஜாஜியின் சுதந்திரா கட்சி, மக்களவையில் வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. குஜராத், ஒரிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சுதந்திரா கட்சி காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமான போட்டிக்கட்சியாக இருந்தது. 


1962ஆம் ஆண்டு, பாரதிய ஜனசங்கம் தேர்தலில் போட்டியிட்டு பதினான்கு இடங்களை வென்றது. தமிழ்நாட்டில் திமுக, இருபத்தைந்து இடங்களை வென்றது. 13 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிதான் பெரிய கட்சியாக இருந்தது. பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.  எனவே, அரசமைக்க கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்க்கப்பட்டன. 


சம்யுக்தா விதாயக் தல் என்ற கட்சி, பஞ்சாப், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம், மெட்ராஸ், கேரளா ஆகிய மாநிலங்களி்ல் ஆதரவு கொடுத்து அரசமைத்தது. உத்தரப்பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரசின் போட்டிக்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து அரசு அமைத்தன. இந்த வகையில் இருபது கட்சிகள் வரை கூட்டணி அரசில் இருந்தன. 


லோகியா, இந்திராவை பேசாத பொம்மை என்று கிண்டல் செய்தார். ஆனால், இந்திராவின் செல்வாக்கு தேர்தலில் தெரிய வந்தது. இந்திராவின் கணவர் ஃபெரோஸ் காந்தி ரேபரேலி தொகுதியில் முன்னமே போட்டியிட்டு வென்றிருந்தார். அதே தொகுதியில் இந்திரா போட்டியிட்டு வென்றார். இங்கு, நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் கூட தேர்தலில் நின்று வென்றிருக்கிறார். ஹரியானாவின் கைத்தால் தொகுதியில் நின்று  குல்சாரிலால் நந்தா வெற்றி பெற்றார். 


லோகியா, ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் ஆகியோர் கன்னாஜ், பாம்மே தெற்கு தொகுதிகளில் நின்று வென்றனர். பால்ராம்பூர் தொகுதியில் பாரதிய ஜனசங்கத்தின் அடல்பிகாரி வாஜ்பாய் வென்றார். 1967ஆம் ஆண்டு, அரசியல் வரலாற்றில் புதிய யுகம் தோன்றியது. அதை வழிநடத்திச் சென்றவர், இந்திராகாந்தி. 


ஐஇ


கருத்துகள்