கார்பன் டை ஆக்சைடு, பயிர்களுக்கு நல்லது - நச்சு பிரசாரம் செய்யும் வலதுசாரி பெருநிறுவனங்களும், கைக்கூலி சிந்தனை அமைப்புகளும்





















சமூக பகிரலுக்கு எடுத்துக்காட்டு, நூலகம். இன்று தமிழ்நாட்டிலுள்ள பல நல்ல நூலகங்கள் போட்டித்தேர்வு மாணவர்களுக்கான பயிற்சிக்கழகமாக மாறிவிட்டது. ஆனால், முன்னர் ஏராளமான நல்ல நூல்களுக்கான உறைவிடமாக இருந்தது. தனிநபராக ஒருவர் புத்தக திருவிழா அல்லது நூல் கடைக்குச் சென்று எதையும் வாங்க வேண்டியதில்லை.




நூலகத்தில் அரசு நூல்களை வாங்கி வைத்திருக்கும். அதை ஒருவர் இலவசமாக அணுகி படிக்கலாம். வீட்டில் எடுத்து வந்து படிக்க காசு கட்டவேண்டும். இதன்மூலம் நிறைய நூல்களை வாங்கவேண்டிய தேவை இல்லை. சூழல் சார்ந்து அனுகூலங்கள் அதிகம். காகிதம் தயாரிக்க மரங்களை வெட்டி கூழாக்கவேண்டியதில்லை. மாசுபாடும் குறையும்.




கார் பூல் எனும் ஒரு காரை நிறைய பயணிகள் பகிர்ந்துகொண்டு பயணிப்பதைக் கூட சமூக பகிரலில் சேர்க்கலாம். சூழல் சோசலிசம் தனிநபர் உடைமையை எதிர்க்கவில்லை. வீணாக்குதலை தவிர்க்க கோருகிறது. இயற்கை வளம் சேதப்படுத்துதலை தடுக்க முயல்கிறது. பொருளாதார வளர்ச்சி நிச்சயம் நாட்டிற்கு தேவை. ஆனால், அதற்கான வழி இயற்கைச்சூழலை குறைந்தளவு பாதிப்பதாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அதை ஈடுகட்ட முடியாது.




இயற்கை வளம் அழிப்பு சார்ந்த விஷயங்களை சமூகத்திலுள்ள சிலர், தொழில்நுட்பம் மூலம் சரிசெய்துவிடலாம் என அப்பாவியாக நினைக்கிறார்கள். தொழில்நுட்பம் வாழ்க்கையை எளிதாக உதவுகிறது. ஆனால் அதை வைத்து அடிப்படையான பிரச்னைகளை மூடிமறைக்க முடியாது. எடுக்கவேண்டிய முடிவுகளை தள்ளிப்போடமுடியாது.




சூழல் சோசலிசம் என்பது எதிர்காலத்திற்கான செயல்பாடுகளை இன்றே திட்டமிட்டு செய்வது...இதை பேசிக்கொண்டிருக்கின்ற இந்நேரத்தில் கூட கூலிப்படையினர், பழங்குடிகளை கொன்று மழைகாடுகளை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். சோசலிச, பசுமை அமைப்புகளை முதலாளித்துவ அரசுகள் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கி வருகின்றன. வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வருகின்றது. அடிப்படை பிரச்னை அரசியலில் உள்ளது. தொழில்நுட்பத்தில் இல்லை.




காலநிலை மாற்றத்தை அது ஒரு பெரிய பிரச்னை இல்லை என்று கூறி நடைமுறை பிரச்னைகளை மடைமாற்றுவது வலதுசாரி சிந்தனைக்குழுக்களுக்கு தெரிந்த வேலைதான். இந்த வகையில், அறுபது, எழுபதுகளில் சிகரெட் தயாரிப்பாளர்கள் ஆராய்ச்சி அமைப்புகளுக்கு காசை அள்ளிவிட்டனர். இதன் காரணமாக, புகையிலை பயன்படுத்தினால் எந்த நோயும் வராது என ஆய்வுகள் நாளிதழ்களில் வெளிவரத் தொடங்கின. இந்த பாணி புதிது என்று சொல்லமுடியாது. ஆனால் வெற்றிகரமாக இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.




1998 -2005ஆம் ஆண்டு வரை எக்சான் மொபைல் என்ற நிறுவனம், காலநிலை மாற்றம் மக்களை பாதிக்காது என்று கூறச்சொல்லி வலதுசாரி சிந்தனை அமைப்புகளுக்கு நிதியை வழங்கியது. இதன் காரணமாக அந்த அமைப்புகளுக்கு வாங்கிய தொகைக்கு விசுவாசமாக கார்பனை டை ஆக்சைடு வளிமண்டலத்தில் அதிகமானால் நல்லதுதான். பாதிப்பு கிடையாது. பயிர்களின் வளர்ச்சி அதிகமாகும் என புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டனர். இதில் உச்சபட்ச நகைச்சுவை என்பது, அமெரிக்காவில் நிலக்கரி அகழ்ந்தெடுக்கும் நிறுவனத்தின் தலைவராக இருந்தவரை மாசுபாடு பற்றிய சிந்தனை அமைப்புக்கு இயக்குநராக்கினர். அவர்தான் கார்பன் டை ஆக்சைடு மனிதர்களுக்கு ஆபத்தானதல்ல என்று அறிக்கையை வெளியிட்ட மகான்.




வளைகுடா நாடுகளில் ஓராண்டுகளில் படிப்படியாக பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டியுள்ளது என செய்தியைப் படிக்கிறோம். இதற்கு என்ன முட்டுக்கொடுப்பது? பருவகாலங்கள் தவறுவதும், மேக உடைப்பில் மழை பெய்து நகரங்கள் வெள்ளத்தில் மூழ்குவதும் மக்களுக்கு நன்மை தருவதுதானா? இதைக்கூட வெயில் குறைந்தது மழையால்தான் என வலதுசாரி சிந்தனை அமைப்புகள் அறிக்கை வெளியிடலாம். ஆனால் நமக்கு கண்கள் இருக்கிறது. அதை திறந்து பார்த்தால்தான் சுற்றி நடப்பவற்றை அறியலாம்.




வளரும் நாடுகளுக்கு கார்பன் அளவை குறிப்பிட்ட அளவு குறைக்க முடிந்தால், வளர்ந்த நாடுகள் தேவையான நிதியுதவிகளை வழங்கலாம். அதைத் தவிர்த்துவிட்டு மாநாடுகளை நடத்தி அதைப் பற்றிய செய்திகளை ஊடகங்களில் வெளிவரச்செய்வது சிறந்த செயல்பாடு அல்ல. அதனால் எந்த நல்ல விஷயங்களும் மக்களுக்கு நடக்கப்போவது அல்ல. குறிப்பிட்ட காலகட்டத்தை விதித்து அதற்குள் மாசுபாட்டை ஏற்படுத்தும் வாயுக்களை கட்டுப்படுத்துவது முக்கியம். வெறும் பேச்சு செயலுக்கு ஈடாகாது. பயனும் தராது.




1997ஆம் ஆண்டு செய்யப்பட்ட மாசுபாடு தொடர்பான ஒப்பந்தமொன்றில், 170 உலக நாடுகள் கையெழுத்திட்டன.










கருத்துகள்