ஒளிச்சேர்க்கை மூலம் கார்பன் டை ஆக்சைடை காற்றில் இருந்து அகற்றும் தொழில்நுட்பம் - அசத்தும் லிவ்விங் கார்பன் நிறுவனம்

 

 

 

 

 

 

காடுகளை வளர்த்து அதாவது அதை செயற்கையாக கூட வளர்க்கலாம். ஆனால் அதன் மூலம் மாசுபாடுகளை குறைக்கவேண்டும் என எண்ணும் காலம் வந்துவிட்டது. காடு, இயற்கை சூழல் என எதற்காகவும் மக்கள் தங்கள் சுகங்களை தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாது. நாளிதழ்கள், வார இதழ்கள் எல்லாம் ஏழைகளிடம், சாதாரண மக்களிடம் சிவப்பு இறைச்சியை சாப்பிடாதீர்கள், மீத்தேன் அதிகரித்துவிடும் என பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால் இந்த பிரசாரத்தை அவர்கள் தொழிலதிபர்களிடம் செய்தால் நெஞ்சுக்கு நேர்மையாக இருக்கும். ஆனால் அவர்கள்தான் ஊடகங்களை நடத்துகிறார்கள். அல்லது விளம்பரங்கள் மூலம் படியளக்கிறார்கள். அவர்களை எதிர்க்கத் துணிவார்களா கடினம்தான்.


குறிப்பிட்ட மண் சார்ந்த மர வகைகளை கண்டறிந்து அதை மண்ணில் ஊன்றிவைத்து கார்பனை உறிஞ்சுகிறதா என பார்த்துவந்தது கடந்த காலம். இப்போது காற்றிலுள்ள கார்பனை உறிஞ்சுவதற்காகவே நூறுக்கும் மேற்பட்ட மர வகைகளை ஆய்வகத்தில் உருவாக்கி அதை மண்ணில் ஊன்றி வருகிறார்கள். இதை வணிகமாகவே சில நிறுவனங்கள் செய்து வருகின்றன. 2019ஆம் ஆண்டு லிவ்விங் கார்பன் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் கார்பனை உறிஞ்சும் மரக்கன்றுகளை ஆய்வு செய்து உருவாக்கி வருகிறது. அமெரிக்காவில் இந்த நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள்.


சான்பிரான்சிஸ்கோ, ஓஹியோ , ஜார்ஜியா ஆகிய இடங்களில் பைலட் முறையில் மரக்கன்றுகளை சோதித்து வருகிறார்கள். 120ஹெக்டேர்களில் 1,70,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு அதை பரிசோதனை செய்கிறார்கள். இதில் ஐந்து சதவீத மரக்கன்றுகளில் மரபணு மாற்றப்பட்டிருக்கிறது. நிலத்தை மரக்கன்றுகளை நட கொடுக்கும் நில உரிமையாளர்களுக்கு லிவ்விங் கார்பன் குறிப்பிட்ட தொகையை வழங்கி வருகிறது.


கார்பன் டை ஆக்சைடை எப்படி மரக்கன்றுகள் தங்களுக்குள் தேக்குகின்றன. இதுதான் இதில் முக்கியமான விஷயம். ஒளிச்சேர்க்கை பற்றி படித்திருப்பீர்கள். அந்த செயல்முறையில் கார்பன், நீர், ஒளி ஆகியவை உள்ளிழுக்கப்பட்டு ஆக்சிஜன் வெளியே விடப்படுகிறது. இந்த செயல்முறையை இன்னும் அதிகமாக்கும் முறையில் லிவ்விங் கார்பன் நிறுவனம் வேலை செய்கிறது. இதனால் மரக்கன்றுகள் இதுவரை ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுத்தி கார்பனை இன்னும் அதிகமாக பயன்படுத்தும். இதன் விளைவாக சூழலில் உள்ள கார்பன் அளவு குறையும். இதுதான் ஐடியா.


அரிசி, கோதுமை, சோளம், சோயாபீன்ஸ் ஆகியவை பயிரிடும் பரப்பு அதிகம். அந்த பயிர்களில் மாறுதல் செய்தால் கார்பனை எளிதாக குறைக்கலாமே என சில பல்கலைக்கழகங்கள் யோசித்தன. பயிர்களின் வேர்கள் பெரிதாக, ஆழமாக உருவாக்குவது, நுண்ணுயிரிகளின் வேதிமாற்றத்தை மெதுவாக்கி கார்பன் செறிந்த பாலிமரை உருவாக்குவது என திட்டமிட்டு உழைக்கின்றனர். காற்றிலுள்ள முப்பது சதவீத கார்பனை மண்ணில் உள்ளிழுப்பது ஏற்பாடு. இந்த நோக்கத்தில் வெற்றி பெற்றாலே கார்பன் பாதிப்பு உலக நாடுகளில் பெருமளவு குறைந்துவிடும்.


மரபணு மாற்றிய கார்பனை உள்ளிழுக்கும் மரக்கன்றுகளை, பயிர்களை விளைவிக்க அரசின் அனுமதி தேவை. சட்டங்களும் அவசியம். அப்போதுதான் மக்களின் எதிர்ப்பு இன்றி பெரு நிறுவனங்கள் சோதனையை செய்து பார்த்து வணிகமயம் செய்ய முடியும்.


கார்டியன் நாளிதழில் எழுதிய ஜோ கார்பைன் கட்டுரையை தழுவியது.


கருத்துகள்