"இந்திய அரசு மெல்ல உணர்ச்சியற்ற அரசாக மாறிக்கொண்டிருக்கிறது"





"இந்திய அரசு மெல்ல உணர்ச்சியற்ற அரசாக மாறிக்கொண்டிருக்கிறது"
நேர்காணல்: மேதா பட்கர், நர்மதா பச்சோ அந்தோலன்
தமிழில்:.அன்பரசு

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நர்மா அணையில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணையினால் பாதிக்கப்படும் மக்களுகான இழப்பீடு, மறுகுடியமர்வுக்காக போராடி வரும் புரட்சிப்பெண்மணி  மேதாபட்கர்.புனேவில் அமைக்கப்படும் தனியார் கட்டுமானத்திற்கு எதிராக இடையறாது போராடிவருகிறார்.

கிராமங்கள் பாதிக்கப்படும் என போராடத்தொடங்கியுள்ளீர்கள். ஆனால் உங்களது போராட்டம் இத்தனை ஆண்டுகளாக சிறியளவிலேயே உள்ளதா நினைக்கிறீர்களா?

அதுதான் நம் பிரச்னை. நர்மதா அணை பிரச்னை உலகிலுள்ள பல்வேறு சூழல் அமைப்புகளின் கவனத்தையும் இதயத்தையும் தொட்டது உண்மை. வளர்ச்சி என்ற பெயரால் மக்களுக்கு இங்கு நடக்கிறது என்பதை உலகுக்கு சொல்லுகிறேன். மூன்றாம் தலைமுறையாக நடைபெறும் போராட்டம் இது. தந்தை, மகன் என தொடர்கிறது. உலகமயமாக்கத்தின் விளைவு இது. சூழல் பாதிப்பு குறித்த ஆய்வுகளை இவர்கள் முறையாக செய்யவில்லை. நாங்கள் இவற்றை எதையும் விடப்போவதில்லை. இன்றைய அரசு, போராட்டத்தினரின் சொற்களை காதுகொடுத்து கேட்கவே மறுக்கிறது. தினசரி நாங்கள் சவால்களை எதிர்ப்புகளை கண்டு வருகிறோம். உடல் தளர்ந்தாலும் மனம் இன்னும் தளரவில்லை.

தேசிய மக்களியக்க கூட்டணி(NAPM)யை உருவாக்கினீர்களே அது பற்றிக்கூறுங்கள்.

மக்கள் பிரச்சினைக்காக தேசியளவில் கூட்டணியை உருவாக்குவது சிரமம். குறிப்பிட்ட ஜாதி என்றால் குழு ஓரணியாய் மக்களை திரட்டிவிட முடியும். தற்போது ஆட்சிசெய்யும் பிஜேபியின் அதிகாரத்தை சமாளிப்பது எளிதல்ல. அமைப்பு உங்களுக்கு ஏற்படுத்தும் காயங்கள் வெளியில் தெரியாது. ஆனால் உள்ளே காயமாகி இருக்கும். தொழிலாளர்கள்,கல்வி, மின்சாரம், அடிப்படை கட்டமைப்பு என பல்வேறு பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துள்ளோம். பல்வேறு அரசியல் நலன்கள் சார்ந்ததாக வளர்ச்சி என்ற சொல் உச்சரிக்கப்படுகிறது. இயற்கை வளங்கள் லாபவெறி நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. எங்களை முதலாளிகளின் ஊடகமும் கண்டுகொள்வதில்லை. இன்றும் என்னை தேர்தலில் போட்டியிடச்சொல்லி மக்கள் வற்புறுத்துகிறார்கள். அதைச் செய்ய நான் என்ன முட்டாளா?

ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்டீர்கள். ஆனால் அம்முடிவை தவறு என நினைக்கிறீர்களா?

மக்கள் இயக்கத்தை சரியாக கட்டமைக்காமல் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று தெரிந்துகொண்டேன். தேர்தலில் வெற்றிபெற்றால் உடனே நம் கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடாது. இறுதியில் ஏமாறுவது நாம்தான். ஜெயித்தோம் என்ற உணர்வு சில நாட்கள் மனதுக்குள் இருக்கும். மக்களுக்கான இயக்கத்தின் மூலம் உருவாக்கும் தாக்கம் தலைமுறைகளை தாண்டி செல்லும்.

உங்களது வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்?

புனேவின் கட்டிட நிறுவனத்தை லவசாவிலும், அரசியல்வாதி சாஹன் புஜ்பாலின் சர்க்கை ஃபேக்டரியை மூடியதை முக்கியமானதாக நினைக்கிறேன். நிறையப்பேர் பணம், பயன்கள் என கணக்கிடுகின்றனர். பலாபலன்களை தாண்டியது எங்களது செயல்பாடுகள். இன்று அரசுகள் கோர்ட் தீர்ப்புகளை பெரிதாக மதிப்பதில்லை. சிப்கோ இயக்கம் போல மரத்தை கட்டிப்பிடித்தால் இன்று அதனை காப்பாற்ற முடியாது. அரசு இன்று உணர்ச்சியற்றதாக மாறிவருவதோடு மக்களோடு உரையாடவும் மறுக்கிறது.

எதிர்கால திட்டம் என்ன? உங்களை தொடர்ந்து இயங்கச்செய்வது எது?

மக்களின் வீட்டை அழித்துவிட்டு தகரக்கொட்டாயை போட்டுக்கொடுத்து வன்முறையை நிகழ்த்திவிட்டு வளர்ச்சி என்று அரசு கூறுகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் பின்னே அரசியல்வாதிகளும் மாஃபியாவும் உள்ளனர்.எங்களிடமுள்ள தன்னார்வலர்கள் அனைவரும் 30 வயதுக்குட்பட்டவர்கள்தான். நுகர்வு கலாசாரத்தின் விளைவாக அநீதியை எதிர்த்துக் கேட்கும் துணிச்சலை நடுத்தர வர்க்கம் இழந்துவிட்டது. மினரல் வாட்டர் வாங்கிகுடித்துவிட்டு நிலத்தடி நீர் இழப்பு பற்றி எப்படி போராடுவீர்கள்? இளைஞர்கள் மட்டுமே அநீதியை எதிர்த்து போராடுவதற்கான நம்பிக்கையை தருகிறார்கள். இயக்கம் முன்னே நகருகிறது.

நன்றி: Prachi Pinglay-Plumber, Outlook

வெளியீட்டு அனுசரணை: முத்தாரம் வார இதழ்