அறிவியல் கதம்பம் - ச.அன்பரசு


 

மகளுக்காக கட்டிய தீம்பார்க்!-

அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த தந்தை ஒருவர் தன் மகளுக்காக என்ன செய்திருக்கிறார் தெரியுமா? பிரமாண்ட தீம் பார்க்கையே உருவாக்கியிருக்கிறார்.

தன் மகள் மோர்கனை லீவில் தீம்பார்க் ஒன்றுக்கு கார்டன் ஹர்ட்மன் அழைத்துச் சென்றார். அங்குள்ள குழந்தைகளுடன் நீந்தி விளையாட மோர்கன் விரும்பினாலும், அவளது ஆட்டிச இயல்பினால் பலரும் விலகிச்செல்ல தவித்துப்போனார் கார்டன். 2010 ஆண்டு தன் செல்லமகளுக்காக அவர் உருவாக்கியதுதான் கார்டன் வொண்டர்லா தீம்பார்க். செலவு 34 மில்லியன் டாலர்கள். உடல் குறைபாடுள்ளவர்களுக்கான விசேஷ வசதிகள் இதன் ஸ்பெஷல்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தீம்பார்க்கில் இலவச என்ட்ரி உண்டு. ஆண்டுதோறும் இந்த தீம்பார்க்கால் 1 மில்லியன் டாலர்கள் நஷ்டம்தான். எனினும் அதனை சமாளிக்க நண்பர்கள், அமைப்புகள் உதவுகின்றனர் என்கிறார் கார்டன். 67 நாடுகளிலிருந்தும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதனை சுற்றிப்பார்த்துள்ளனர்.

 மிரட்டும் நாஸி சோதனைகள்! - .அனுஷா

உயிர்களைக் கொன்ற ரஷ்யபனி!

நெப்போலியனை ரஷ்யா மண்ணை கவ்வ வைத்தது அதன் பருவகாலம்தான் என்பதை ஹிட்லர் உணராதவரா என்ன? ஐரோப்பாவை வெல்லும் முயற்சியில் ரஷ்யா அவருக்கு தடைக்கல்லாக மாறும் என்பதால் அதனை முதலில் வீழ்த்த ஸ்கெட்ச் போட்டார். குளிரை தாக்குப்பிடிக்க என்ன செய்யலாம். நெருப்பு மூட்டலாம், மது அருந்தலாம், பெண்ணோடு சரசமாடலாம் இதெல்லாம் குளிருக்கு முன்னாடி அணுவளவும் பயன்தரவில்லை. குளிர் அப்படி. உறைந்த பனிக்குளிரில் கைதி சுயநினைவை இழக்கும்வரை நிற்க வைப்பது, உறைபனியில் குளிக்க வைப்பது, மின்சார ஷாக் வைப்பது என எல்லைமீறிய சோதனைகளால் கைதிகள் பலரும் வைகுண்டம் சேர்ந்தது துயரக்கதை. அப்படியும் ரஷ்யாவை ஹிட்லர் ஜெயிக்க முடியவில்லை.

நச்சுத்தோட்டா கொல்லுமா?

தோட்டா உடலை துளைத்தவுடன் எதிரி துடித்து சாகவேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்த நாஸிகளுக்கு பழங்குடிகளின் விஷ அம்புகள் நினைவுக்கு வந்தன. எந்த விஷம் நம்பர் 1 என எப்படி கண்டுபிடிப்பது? அதற்குத்தான் கைதிகள் இருக்கிறார்களே! குறிப்பாக ரஷ்யர்கள். தினசரி ஒரு விஷம் என அனைத்திலும் சயனைட் உண்டு. உணவில், உடலில் என இருவகையில் செலுத்தப்பட்டு விஷத்தின் வேகம் அளவிடப்பட்டது. அடுத்து விஷம் தடவிய தோட்டாக்களால் கைதிகளை சுட்டு அவர்கள் உயிரைவிடும் நேரத்தை நோட் செய்தனர். விஷத்தை மீறி பிழைத்தால், அடுத்த ரூமுக்கு எடுத்து சென்று கொல்வார்கள். ஏன்? உடலை விஷம் எந்தளவு பாதித்தது என எப்படி தெரிந்துகொள்வதாம்.  பேன் தொல்லையை நீக்க  பயன்படும் Zyklon-Bயை சயனைடோடு கலந்து கேஸ் சேம்பர்களில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றனர் நாஸிகள்.

உடலை கந்தலாக்கிய காசநோய்!

போரில் ஜெயிப்போமா, ஊத்திமூடுவோமோ மனதில் தோன்றுவதையெல்லாம் செய்வோம் என்று நாஸிகள் செய்த டெஸ்டில் ஒன்றுதான் காசநோய் டெஸ்ட். Neuengamme முகாமில் கைக்கு கிடைத்தவர்களையெல்லாம் பிடித்திழுத்து காசநோய் பாக்டீரியாவை ஒரே சிரிஞ்சில் பல நூறு நபர்களின் உடலுக்குள் செலுத்தினார்கள். எதற்கு? ஊசி கண்டுபிடிக்கலாம் என்றுதான். 200 பேர்  செத்தார்களே ஒழிய கடைசிவரை ஊசி கண்டுபிடிக்கப்படவேயில்லை.

கரடுமுரடாய் இதயத்தை மாற்று!

ஒரே ஜீன் எப்படி டபுளாகிறது என்பதுதான் கரடுமுரடு டாக்டர் ஜோசப் மென்ஜெலேவின் மூளையைக் குடைந்த கேள்வி. மனிதர் ரொம்ப யோசிக்கவில்லை. உடனே ட்வின்ஸ் சிறுவர்களின் கை,கால்,கண், மார்பெலும்பு உட்பட உடனே மாற்றிப்பொருத்தி பார்த்தார். இத்தனை டெஸ்டுகளுக்கும் உயிர் தாங்குமா என்ன? இருவரின் உடல்களை ஓருடலாக்குவது, தோலின் நிறத்தை மாற்றுவது என சைக்கோத்தனமாக யோசித்ததெல்லாம் உடனே லேபில் பிராக்டிகலாக்கினார் டாக்டர் ஜோசப். ரிசல்ட்? ஆயிரம் பேரில் மிஞ்சியது 200 பேர்தான். அத்தனை ட்வின்ஸும் வேஸ்ட் என்று ஜோசப் ஒரே ஒரு கையெழுத்து போட, மிஞ்சிய ட்வின்ஸ்களின் இதயத்தில் குளோரோபார்ம் ஊசி செலுத்தப்பட்டு  கொல்லப்பட்டனர்.

பெண்ணின் கருவில் மிருகம்!

ஜெயிலிலுள்ள பெண்களுக்கும் கொடூரத்தில் இடஒதுக்கீடு வேண்டுமே? செயற்கை முறையில் விலங்கு விந்தணுக்களை பெண்களின் கருப்பையில் செலுத்தி ரிசல்ட் என்ன என்று பார்ப்பதுதான் டெஸ்ட். ஐடியா உபயம் டாக்டர் கார்ல் கால்பெர்க் மற்றும் ஹிட்லர். மனிதனும் மிருகமும் கலந்த பிறப்பு நிகழ்ந்தால் லாபம்தானே என்பது ஹிட்லர் நினைப்பு. ஆனால் கர்ப்பமான பெண்கள ்பலரும் இந்த சோதனையின் முடிவுக்கு பயந்து வயிற்றை கிழித்து தற்கொலை செய்துகொண்டனர் என்பதே வேதனை உண்மை.

காகித பேட்டரி!

பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானியான சியோகியோன் சோய் என்ற கம்ப்யூட்டர் சயின்ஸ் உதவியாளர், 5 ஆண்டுகளாக முயற்சித்து கண்டுபிடித்ததுதான் ஓரிகாமி ஸ்டைலிலுள்ள காகித பேட்டரி. பாக்டீரியாவை அடிப்படையாக கொண்ட இந்த காகித பேட்டரியை(MFC) உயிர்ப்பாக்க உமிழ்நீர் ஒரு துளி இருந்தால் போதும் என்பது புதிய கண்டுபிடிப்பு. இதன் மூலம் ஒரு எல்இடி லைட்டை எரிய வைக்க முடியும் என்பதுதான் இதன் ஸ்பெஷல். நுண்ணுயிரி பேட்டரியான இதில் ஏற்படும் ஆக்சிடேசன் செயல்முறையில் பரிமாறும் எலக்ட்ரான் செல்கள் மூலம் பேட்டரி செயல்படுகிறது. சிறுநீர், உமிழ்நீர், அழுக்கு நீர் ஆகியவற்றாலும் பேட்டரியை ரீசார்ஜ் செய்யமுடியும்.  

பாக்டீரியாக்களை உறைய வைக்கும் செயல்முறை மூலம் பேட்டரியில் நீண்டநாள் வைத்திருக்கலாம். இது குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடந்துவருகிறது என உற்சாகமாகிறார் ஆராய்ச்சியாளர் சோய். தற்போது மின்சாரத்தின் தன்மையை அடர்த்தியாக்க கடுமையாக உழைத்துவருவதோடு எதிர்காலத்தில் கருவிகளை காகிதம் போல மடிப்பது சாத்தியமாகும் என்கிறார் விஞ்ஞானி சியோகியோன் சோய்.

அறையில் ஒளிரும் மேகம்!

அமெரிக்காவின் ப்ரூக்ளினைச் சேர்ந்த டிஸைனரான ரிச்சர்ட் கிளார்ஸனின் கண்டுபிடிப்பு மேக விளக்கு. மேகத்தில் இடிமின்னல் வந்தால் எப்படியிருக்குமோ அதைப்போல ரெயின்போ கலர்களில் மின்னும்படி உருவாக்கியிருக்கிறார்.

அறையிலுள்ள மோஷன் சென்சார்கள் மூலம் இசைக்கு ஏற்ப மேகத்தின் எல்இடி வண்ணங்கள் மாறுவது புதிய டெக்னிக்காக வசீகரிக்கிறது.

70 மி.மீ அளவில் உருவான மேக விளக்கிலுள்ள மைக்ரோபோன் இசையை உள்வாங்கி 4 வித ஸ்டைலில் தன்னை மாற்றிக்கொள்கிறது. பாலிஸ்டரில் உருவான மேகத்தின் உள்ளே 6600 லித்தியம் அயான் பேட்டரி உள்ளது. அழகாக இருந்தாலே விலையும் அதிகமாகத்தானே இருக்கும்? விலை ரூ. 2,73,092


 அமெரிக்காவின் பொருளாதாரப்போர் 2.0
ஆகஸ்ட் 2.  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின்மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதாவில் தன் கையெழுத்தை பதித்தார். நாடாளுமன்றத்தில் ட்ரம்பின் வெற்றியை கொண்டாடிய உறுப்பினர்கள் இனி ரஷ்யாவின் மீதான தடைகள் எல்லாம் நீங்கிவிடும் என ஷாம்பைன் கோப்பைகளோடு ஸ்வீட் எடுத்து கொண்டாடிய கொண்டாட்டங்கள் இவ்வளவு விரைவாக வீணாகும் என்று யார் கண்டது?
2014  ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாமீது பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதன்விளைவாக 2014 -2016 வரையிலான ரூபிளின் மதிப்பு 50% குறைந்துவிட்டது. ரஷ்யாவின் முக்கிய வருமானமே அதன் இயற்கை வளங்களை ஏற்றுமதி செய்வதுதான் என்ற நிலையில் அமெரிக்காவின் தடை அதன் முக்கிய வருமான ஆதாரத்தை ஆட்டம் காணச்செய்தது. 2014 ஆம் ஆண்டில் ரூபிளின் மதிப்பு 2.4 சென்ட்டுகள். 2017 ஆம் ஆண்டில் அதன் மதிப்பு 1.7 சென்ட்டுகளாக சரிந்துள்ளது பொருளாதாரத்தடைகளின் தாக்கமே. 2014-2016 ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவின் உள்நாட்டு உற்பத்தி(GDP) 2,053 ட்ரில்லியன் டாலர்கள் என்றாலும் 2015 ஆம் ஆண்டில் ஜிடிபி மதிப்பு 1331 ட்ரில்லியன் டாலர்களாக மாறியுள்ளதையும் உலக வங்கி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.



 இ்ங்கிலாந்தில் ஆட்கடத்தல்!

இங்கிலாந்தில் பல்லாயிரக்கணக்கிலான மனிதர்கள் கடத்தப்பட்டு வருகிறார்கள் என அந்நாட்டின் தேசிய குற்ற ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் மட்டும் 3800 நபர்களை அரசு மீட்டுள்ளது என்றாலும், இந்த எண்ணிக்கையை விட கடத்தப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

வியட்நாம், கிழக்கு ஐரோப்பா, நைஜீரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அதிகளவில் கடத்தப்படுகிறார்கள் என்று தகவல் கூறுகிறார் என்சிஏவின் இயக்குநரான வில் கெர்.
2016 ஆம்ஆண்டு ஆட்கடத்தல் மற்றும் அடிமைமுறைக்கு எதிரான ஹெல்ப்லைன் எண் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. தினசரி ஹெல்ப்லைனுக்கு வந்த ஆயிரக்கணக்கான அழைப்புகளின் மூலம் சரியான தகவல்களைப் பெற்று இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை அரசு மீட்டுள்ளது. கார் துடைப்பது, ஹோட்டல், கட்டிடப்பணி என குறைந்தகூலிக்கு பலரும் பரபரவென அடிமையாக விற்கப்படுகின்றனர்.




 அறியப்படாத கணித மேதைகள்! -.அனுஷா

மிகச்சிறந்த கணிதமேதைகளான ஆர்க்கிமிடிஸ், ஐசாக் நியூட்டன் ஆகியோர்களின் பிரதாபங்களை நூல்கள் வழியாகவும், படங்களின் மூலமும் உலகமே அறிந்துள்ளது. ஆனால் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. அப்படிப்பட்ட கணக்கு மாஸ்டர்களைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

முகமது அல் க்வாரிஸ்மி

கி.பி. 800 இல் காலிப் அல் ரஷீத் பல்வேறு கலாசாரங்களிலுள்ள முக்கிய நூல்களை அரபி மொழியில் மொழிபெயர்த்து விஸ்டம் என்ற பெயரில் நூலகத்தை நடத்தி வந்தார். அதில் படித்து வளர்ந்த மாணவர் க்வாரிஸ்மியின் பூர்வீகம் பெர்ஷியாவின் க்வாராஷிம். நம் அக்கவுண்டை காலி செய்து காசை எடுப்பதற்கும், நாம் என்ன சர்ச் செய்கிறோம் என்பதை நாசூக்காக கூகுள் சுடுவதற்கும் உதவும் அல்காரிதத்தை முதலில் சூடம் காட்டி தேங்காய் உடைத்து தொடங்கி வைத்தவர் க்வாரிஸ்மிதான். இன்றுவரையும் ஹிட்ஹாட்டாக விற்கும் இரண்டு கணிதநூல்களை எழுதியவர் க்வாரிஸ்மி. al-Kitab al-mukhtasar fi hisab al-jabr wal-muqabala என்ற தலைப்பிலான இவரது நூல் என்ன சொல்கிறது? அல்ஜீப்ராவின் நுணுக்கங்களைத்தான். சிம்பல்களை பற்றி முழுக்க விவரிக்கவில்லையெனினும் அதனை பயன்படுத்துவது பற்றி இந்நூலில் பேசியுள்ளார்.

நிகோலாய் இவனோவிச் லோபசெவ்ஸ்கி

ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோடில் ஆண்டில் பிறந்த கணிதமேதை நிகோலாய்(1792-1856) Euclidean geometry எனும் புதிய கணித முறையை உலகிற்கு கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியவர். கண்டுபிடித்த காலத்தில் பெரிய அங்கீகாரமின்றி வறுமையில் அலைகழிந்த வாழ்வு இவருடையது. பின்னர் ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற சார்பியல் கொள்கைக்கே ஆதாரமாக அமைந்ததால் உலகம் முழுக்க பிரபலமானார்.

அகஸ்தா அதா கிங்

இங்கிலாந்தின் லண்டனில் பிறந்த அகஸ்தா(1815-1852) உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர். செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்த வளர்ந்த அகஸ்தா, 1833 ஆம் ஆண்டு கணிதவியல் அறிஞரான சார்லஸ் பாப்பேஜை ஒரு பார்ட்டியில் சந்தித்தார். பின் கணித எந்திரங்களை உருவாக்கிக்கொண்டிருந்தவரின் ஆராய்ச்சியில் இணைந்த அகஸ்தா, அவை இயங்கும் முறைகளை டிசைன் செய்தார். இன்றைய செயற்கை அறிவு ஆராய்ச்சிக்கும் இவர்தான் ஆதாரம் என்ற சர்ச்சை கருத்து நிலவுகிறது.

சோஃபியா கோவலெவ்ஸ்கயா

ரஷ்யாவின் மாஸ்கோவில் பிறந்த சோஃபா சிறுவயதிலேயே கணிதவியலாளராக மனதில் பிளான் செய்தவர். பின்னாளில் அதை நிறைவேற்றினாலும் பெண் படிக்க அன்றிருந்த சமூக தடைகளோடு கடுமையாக போராட வேண்டியிருந்தது. 1870 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் விதிகளையும் மீறி கணிதவியலாளரான Karl Weierstrass யிடம் கசடற கணிதம் கற்றார். 1874 ஆம் ஆண்டு சோஃபியா எழுதிய சனியின் வளையங்கள், பகுதி வேறுபாடு சமன்பாடு, நுண்கணிதம் குறித்த ஆராய்ச்சிக்கட்டுரைகள் இன்றும் மதிக்கப்படுபவைஐரோப்பாவில் ஸ்டாக்ஹோம் பல்கலையில் பணியாற்றிகாலத்தில்,சோஃபியா மட்டும்தான் ஒரே பெண். கணிதம் மட்டுமல்ல நாவல்கள் நாடகம் ஆகியவற்றிலும் கலக்கியவர்.


எம்மி நோதர்

ஜெர்மனியின் எர்லாங்கன் பகுதியில் பிறந்தவரான எம்மி நோதர்(1882-1935) பாரம்பரிய கணித ஃபேமிலி பெருமையுடையவர். நாம் இன்றைக்கும் மக்கப் பண்ணும் நவீன அல்ஜீப்ராவை உருவாக்கிய பிரம்மா எம்மி நோதர்தான். தந்தை மேக்ஸின் கால்தடம் வழியாக கணிதத்தில் ஆர்வமானார் எம்மி. எர்லாங்கன் பல்கலையில் படித்தபோது  அப்போது படித்த 986 மாணவர்களில் எம்மி உட்பட இருவர் மட்டுமே பெண்கள். அல்ஜீப்ராவின் இன்வேரியன்ட் தியரியில் பிஎச்டி படித்தவர், பேராசிரியர்களின் பர்மிஷன் கேட்டுத்தான் கிளாசில் அமர்ந்து படித்தவர். கணக்குகளை சால்வ் செய்து பல சான்ஸ்களை பிடித்து முன்னேறியவர் பின்னாளில் நோதர் தேற்றத்தை உருவாக்கினார்.   



 சர்க்கரை கார் லினா!

சர்க்கரையில் என்ன செய்யலாம். நெஸ்கஃபே காஃபி போட்டு குடிப்பதைத் தவிர்த்து வேறு ஏதும் அறியாத மனுஷகுமாரன்கள்தானே நாம்! ஆனால் சர்க்கரையைப் பயன்படுத்தி நான்கு நபர்கள் ஒரு மணிநேரத்தில் 50 கி.மீ பயணித்திருக்கிறார்கள் எப்படி?

நெதர்லாந்தைச் சேர்ந்த மாணவர்கள் சர்க்கரையிலிருந்து எடுத்த ரெசின் மூலம் உருவாக்கிய லினா எனும் காரில்தான் மேலே சொன்ன சாதனை சாத்தியமாகியிருக்கிறது. "இந்த காரில் அனைத்தும் சர்க்கரைதான் என்றாலும் வீல் மற்றும் சஸ்பென்சன் மட்கும் தன்மை கொண்ட பொருட்களல்ல" என்கிறார் என்தோவன் தொழில்நுட்ப பல்கலையைச் சேர்ந்த இகோமோடிவ் குழுவைச் சேர்ந்த மாணவர் யானிக் வான்ரைல். 310 கிலோ எடையுள்ள இக்காரில் ஃபைபர்கிளாஸ் பயன்பாடு உண்டு. மாசுபாட்டை குறைக்கும் விதமாக உருவாகியுள்ள லினா இன்னும் கிராஷ் டெஸ்டுக்கு தகுதியாகவில்லை. நெதர்லாந்து அரசின் போக்குவரத்து ஆணையம் க்ரீன் சிக்னல் கொடுத்தபிறகுதான் மார்க்கெட்டிற்கு லினா வரும் வாய்ப்புள்ளது.


உலகை உலுக்கிய கொலைகள்!

கொலைகள் நம்மை திகிலுக்குள் தள்ளுவது உண்மைதான். அதோடு குறிப்பிட்ட கொலையை செய்த மனிதர்களுக்கும் அன்றைய சமூகத்திற்குமான பிரச்னைகளுக்கும் தொப்புள்கொடி உறவுண்டு. அப்படி பரபரப்பாக பேசப்பட்ட சில கொலை வழக்குகள் இதோ..!

எலிஸபெத் ஷார்ட்

1947 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று லாஸ் ஏஞ்சல்ஸின் தெற்கு பகுதியிலுள்ள தெருவில் கடுமையான கத்தி வெட்டுக்களோடு நிர்வாணமாக கிடந்த பெண் எலிஸபெத் ஷார்டின் உடல், கண்டெடுக்கப்பட்ட அன்றே  பிரேக்கிங் நியூஸ் அமுலானது. மார்புகள், மற்றும் கால்களில் வெட்டுக்கள் ஆழமாக இருந்தன. இடுப்பு, மற்றும் கீழ்பகுதியின் வெட்டுக்களால் மேல்பகுதி, கீழ்ப்பகுதியை விட சரிந்து கிடந்தது. எலிஸபெத்தின் உடலில் கத்தியால் கோலம்போட்ட கொலையாளியை பைனாகுலரில் பார்த்தும்கூட கண்டேபிடிக்கமுடியவில்லை போலீசாரினால். திரைப்படங்கள், நாவல்கள், டிவி நிகழ்ச்சிகள் என பலவற்றுக்கும் பயன்படுத்திக்கொள்ளப்பட்ட எலிஸபெத் ஷார்ட் கொலை, இன்றுவரை தீர்க்கப்படாத புதிரான வழக்கு.

ஜேம்ஸ் பல்ஜெர்

1993 பிப்ரவரி 12 அன்று  இங்கிலாந்தின் மெர்சேசைட்டில் கிர்க்பை பகுதியைச்சேர்ந்த ஜேம்ஸ் பல்ஜெர், இரு சிறுவர்களால் கடத்தப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டபோது அவன் வயது 2. பூட்டில் பகுதியிலுள்ள நியூஸ்‌ராண்ட் ஷாப்பிங் மாலில் பிப்ரவரி 12 வெள்ளிக்கிழமை மாலை 3.40 க்கு தன் அம்மாவோடு ஷாப்பிங்கில் இருந்த ஜேம்ஸை, பத்து வயது சிறுவர்களான ஜோன் வெனபில்ஸ், ராபர்ட் தாம்ப்சன் ஆகியோர் இருவரும் அவன் அம்மாவை ஏமாற்றி டெக்னிக்காக கடத்தினர். 3 கி.மீ ஜேம்ஸை நடத்தி சென்று, லிவர்பூல் பகுதியிலுள்ள வால்டன் ரயில்நிலையத்தில் இரு சிறுவர்களும் டார்ச்சரை தொடங்கினர். ஜேம்ஸின் கண்களில் பெயிண்டை ஊற்ற, இன்னொருவன் பேட்டரிகளை வாயில் திணிப்பது என தொடங்கிய சித்திரவதையில் பறிபோனது ஜேம்ஸின் உயிர். ஜேம்ஸின் உடல் ரயில்வே தண்டவாளத்தில் இரு நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டபோது உடலில் பொட்டுத்துணியில்லை. சைக்கோ சிறுவர்களுக்கு சிறைதண்டனை கிடைத்தது.

சில்வியா லைகென்ஸ்

அமெரிக்காவில் 16 வயது பெண்ணான சில்வியா லைகென்ஸையும் அவரது தங்கையையும் அவரது அம்மா, அருகிலிருந்த கர்ட்ரூட் பெனிஸேவ்ஸ்கி என்ற பெண்மணியின் வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக தங்க வைத்து பராமரிப்பு செலவிற்கு பணம் கொடுத்து வந்தார். ஆனால் கர்ட்ரூட் குடும்பமே சில்வியாவிடம் கொடூர வன்முறையில் இறங்கியது. மாடியிலிருந்து தள்ளிவிடுவது, சிகரெட்டில் சுடுவது, நிர்வாணமாக்குவது, காயங்களில் உப்பு தடவுவது, மலத்தை தின்னவைப்பது என டார்ச்சர்கள் வெகுநீளம். 1965 அக்டோபர் 26 அன்று இறுதியாக போலீசார் க்ளைமேக்ஸ் காட்சியில் வந்தபோது சில்வியாவின் உடலில் கண்ணீர்விடக்கூட நீரில்லை. தீக்காயங்கள், கொப்புளங்கள், வீக்கம், ஊட்டச்சத்துக்குறைவு என மூளைச்சாவு அடைந்திருந்தார் சில்வியா. பெனிஸேவ்ஸ்கிக்கு 14 ஆண்டு சிறைதண்டனை கிடைத்தது.

கெல்லி அன்னே பேட்ஸ்

இங்கிலாந்து பெண்ணான கெல்லி தன் 17 வயதில் 1996 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் அவரது காதலன் ஜேம்ஸ் பேட்டர்சன் ஸ்மித் என்பவரால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நான்கு வாரங்கள் ஜேம்ஸினால் கடுமையான வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட கெல்லிக்கு அடுத்து நடந்ததுதான் உச்சகட்ட கொடூரம். கெல்லியை பாத்டப்பில் கொல்வதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே அவரின் இரு கண்களையும் பிடுங்கியிருந்தார் ஜேம்ஸ். கெல்லியின் வழக்கை ஆராய்ந்த ஜோசப் மோனகன், "எனது 15 ஆண்டு போலீஸ் வாழ்வில் இவ்வளவு கொடூரமான வழக்கை சந்தித்ததேயில்லை" என வாய்விட்டே கூறிவிட்டார். தன் காதலிகளை கொடுமைப்படுத்துவதில் ஜேம்ஸ் கைதேர்ந்தவர் என்று போலீசார் கண்டுபிடித்து, கையில் காப்பு மாட்டி  1997 ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனை விதித்தபோதும் ஜேம்ஸ் கூறிய வார்த்தை "நான் கெல்லியை கொல்லவில்லையே?" என்பதுதான்.

தொகுப்பு: ஜார்ஜ் கெல்லி,ராமன் விஜய்
நன்றி: முத்தாரம் வார இதழ்