பசுமைப் பேச்சாளர் 22 கரோலின் லூகாஸ்





பசுமைப் பேச்சாளர் 22
கரோலின் லூகாஸ்.அன்பரசு


இங்கிலாந்தைச் சேர்ந்த கரோலின் லூகாஸ், பசுமைக்கட்சியின் துணை தலைவர், நாடாளுமன்ற உறுப்பினராக பல்வேறு சூழலுக்கு கேடான தொழில்மய திட்டங்களுக்கு எதிரான தொடர்ந்து போராடிவரும் பெண்மணி.

1960 ஆம் ஆண்ட இங்கிலாந்தில் வோர்செஸ்டர்ஷையரில் மால்வெர்னில் பிறந்த கரோலின், 1989 ஆம் ஆண்டு எக்சிடர் பல்கலையில் முதுகலைப்பட்டம் பெற்றார். இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பசுமைக்கட்சியில் செயல்படத் தொடங்கிவிட்டார். 2008 ஆம் ஆண்டு பசுமைக் கட்சியில் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கரோலின். பசுமை பொருளாதாரம், உள்நாட்டு தொழில்கள், விலங்குகள் நலம், உலகமயத்துக்கு மாற்று ஆகியவற்றுக்கான தேடல்களில் மக்களுக்கான நலன்களை பெற்றுத்தர முயலும் பசுமை உள்ளம் இவருடையது. Seeing Green -Jonathon Porritt என்ற புத்தகம்தான் கரோலின் பசுமைக்கட்சியில் சேர்ந்து போராட்டங்களை நடத்த சூப்பர் இன்ஸ்பிரேஷன்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி சார்ந்த பசுமைக்கட்சியின் பிரதிநிதியான கரோலின், நவம்பர் 2001 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்தின் ஃபாஸ்லேன் அணுஉலைக்கு எதிராக அமைதி போராட்டம் நடத்தியதற்காக 150 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்பட்டாலும் பல்வேறு நிகழ்வுகளில் முனைந்து போராடி மக்களின் அபிமானம் பெற்ற பெண்மணி கரோலின். "அமைதியாக போராடிய போராட்டம், பொதுஅமைதிக்கு ஆபத்து விளைவிக்கிறது என அரசு சொல்வதே நகைமுரண்" என ஆக்ரோஷமாக அரசை விமர்சிக்கும் துணிச்சல் கரோலினின் நெஞ்சில் குறையாத ஒன்று. தற்சார்பு பொருளாதாரம், சூழல் பிரச்னைகளை குறித்து தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதி மக்களுக்கு விழிப்புணர்வை விதைத்து வருகிறார் கரோலினுக்கு சிறந்த அரசியல்வாதி விருதை 2007,2009,2010 ஆகிய ஆண்டுகளில் வென்று சாதித்தவர்.

இங்கிலாந்தில் அனைத்து மக்களுக்குமான அடிப்படை வருமானம் திட்டத்தை செயல்படுத்த குரல் கொடுக்கும் சமூகத்தின் மாற்றுக்குரல். "வாக்களிக்கும் வயதை 16 என்றாக்கி இளைஞர்களை அரசியலுக்கு இழுப்பது எதிர்கால உலகிற்கு நன்மை தரும். இன்று பல்வேறு அரசியல் பிரச்னைகளில் இளைஞர்கள் மிகவும் விலகி நிற்பது சரியல்ல. எனவே இளைஞர்கள் அரசியலுக்கு வந்து போராடினால் மட்டுமே நம் வாழ்வை நாம் மீட்க முடியும்" என ஆத்மபூர்வமாக பேசுகிறார் கரோலின் லூயிஸ்.

நன்றி: முத்தாரம் வார இதழ்