அறிவியல் அப்டேட்ஸ் - தொகுப்பு: அரிக்டோ சைரஸ்




உணர்ச்சிகளை கண்டுபிடிக்கும் இக்யூ ரேடியோ!

ஒருவரின் மனநிலையை புரிந்துகொள்வது   இன்றுவரையிலுமே பலருக்கும இடியாப்ப சிக்கலாகவே இருக்கிறது. நம் பாஸின் மனநிலை தெரிந்தால் சர்க்கரையாய் பேசி புரோமோஷன், ட்ரான்ஸ்பர் உட்பட பலதுக்கும் நல்வழி தேடிக்கொள்ளலாமே! ஒருவரின் மனநிலையை கணிக்க எந்தக்கருவியுமே இந்த உலகில் இல்லையா? கண்ணீர் விட்டு கதறியவர்களின் குரல், மாசாசூசெட்ஸ் விஞ்ஞானிகளின் காதில் கேட்டு நெஞ்சிலும் ஆழமாக இறங்கி ஒலிக்க உருவானதுதான் உணர்ச்சிகளை கண்டுபிடிக்கும் ரேடியோ!

ரேடியோவில் நேயர் விருப்ப பாடல் கேட்டு குதூகலமாகலாம், ஆனால் உணர்ச்சிகளையெல்லாம் எப்படி சார், சான்சே இல்லை என்கிறீர்களா? கடினம்தான். அறிவியலுக்கு தேவை சவால்தானே! சவாலை ஏற்று உழைப்பை உரமாக போட்டு சாதித்திருக்கிறார்கள் மாசாசூசெட்ஸ் விஞ்ஞானிகள். மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின்(எம்ஐடி) கணினி அறிவியல் மற்றும் செயற்கை அறிவியல் பிரிவு(CSAIL) ஆராய்ச்சியாளர்கள் ஒருவரின் இதயத்துடிப்பு, மூச்சு வெளிவிடும் விதம் ஆகியவற்றை இக்யூ ரேடியோ மூலம் கணித்து அவர் சந்தோஷத்திலா, சங்கடத்திலா, கடுகடுப்பிலா, எதிர்பார்ப்பிலா, ஆங்காரத்திலா என அசால்டாக கண்டுபிடிக்க முடியும் என தைரியம் தருகின்றனர்.

இக்யூ ரேடியோவிலிருந்து வெளிப்படும் சிக்னல்கள் ஒருவரின் உடலில் பட்டு திரும்ப ரேடியோவை வந்தடையுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னல்கள் ஒருவரின் இதயத்துடிப்பின் இடைவெளிகளை கணித்து விழிப்புணர்வு மற்றும் நேர்மறையான தன்மையை பீட் எக்ஸ்ட்ராக்‌ஷன் அல்காரிதம் எனும் முறை மூலம் துல்லியமாக கணிக்கிறது என ரேடியோவின் செயல்பாட்டை அட்சர சுத்தமாக விவரிக்கிறார் எம்ஐடி பல்கலைக்கழக பேராசிரியரும் இந்த ஆராய்ச்சியின் தலைவருமான டினா கடாபி. இவரோடு இணைந்து பிஹெச்டி மாணவர்களான ஃபாதல் அதிப், மிங்மின் ஸாவோ என இரு மாணவர்களும் இந்த ஆராய்ச்சிக்கு வியர்வை சிந்தியுள்ளனர்.

இதயத்துடிப்புகளில் குறைந்த விழிப்புணர்வு எதிர்மறைத்தன்மை என்றால் சோகம், இவை உயர்ந்த விழிப்புணர்வு, நேர்மறைத்தன்மை என்றால் மகிழ்ச்சி என்று கணிக்கும் இக்யூ ரேடியோவிலிருந்து வரும் வயர்லெஸ்  சிக்னல்களைப் பயன்படுத்தி பல்வேறு மனிதர்களுக்கு செய்த ஆய்வு முடிவுகள் 87 சதவிகிதம் துல்லியமாக இருக்கிறது என்பது யாருக்குத்தான் வியப்பைத் தராது?

இதோடு மைக்ரோசாஃப்டின் எமோஷன் ஏபிஐ எனும் முக உணர்ச்சிகளை கண்டுபிடிக்கும் கருவியை ஒப்பிட்டால் அக்கருவியை விட இக்யூ ரேடியோ நல்ல துல்லியமான தரத்தைக் கொண்டுள்ளது. நெஞ்சு ஏறி இறங்கும் வேகம் என்பது இதயம் துடிக்கும் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது இந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்களுக்கு கடும் சவாலைக் கொடுத்தது. சிக்னல்கள் எப்படி செயல்படுகிறது என்பதை மட்டுமே  கணக்கில் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் சோதனையை நிறைவு செய்துள்ளனர். இதயத்துடிப்பு, நேரம் இவற்றைக் அளவீடாக கொண்டு இக்யூ ரேடியோ செயல்படுகிறது 

உணர்ச்சி அறியும் சோதனையில் பயன்படுத்தப்படும் வயர்லஸ் சிக்னல்கள் மூலம் தவறு ஏற்பட வாய்ப்பு 0.3 சதவிகிதம்தான் உள்ளது என்பது கண்டுபிடிப்பின் நம்பிக்கையை உயர்த்துகிறது. சாதாரணமாக இதய வால்வுகள் மில்லிசெகண்ட் வேகத்தில் திறந்து மூடுகின்றன. அதில் ஏற்படும் இதயத்துடிப்பு மாறுதல்களை இந்த இக்யூ ரேடியோ மூலம் கண்டுபிடிக்கலாம் என நம்பிக்கையோடு பேசுகிறார் ஆராய்ச்சி மாணவரரான ஃபாதல் அதிப்.

நாங்கள் வயர்லஸ் சிக்னல்கள் மூலம் ஒருவரின் மனநிலையைக் கண்டறிய பயன்படுத்தும் வயர்லஸ் சிக்னல்களை சாதாரண கண்களால் காண முடியாது. இது எதிர்காலத்தில் வரும் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு பயன்படலாம். மருத்துவத்துறை, பொழுதுபோக்குத்துறை ஆகியவற்றில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனை மேம்படுத்தினால் எதிர்காலத்தில் மன அழுத்தம், பதற்றம் உள்ளிட்டவற்றையும் குறிப்பாக, இயல்பு மீறிய இதயத்துடிப்பு சிக்கலை அடையாளம் காணவும் குணமாக்கவும் பயன்படும் என நம்புகிறோம் என்கிறார் ஆராய்ச்சியாளர் கடாபி. நாங்களும் நம்புறோம் சார்!


உலகில் முதல் ஹைட்ரஜன் ரயில்

உலகில் ஏற்படும் காற்று மாசுக்களால் நுரையீரல் தொடர்பான நோய்கள், புற்றுநோய்கள் உட்பட பல்வேறு நோய்களின் எண்ணிக்கையும் கிடுகிடுவென அதிகரித்து வருகின்றன. இதற்கு மாற்றான யோசனைகளாக கார்பனை குறைவாக வெளியேற்றும் எரிபொருட்களை பயன்படுத்தும் வாகனங்கள், உலகெங்கும் வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி ஒருவரின்  சிந்தனையில் உருவான கார்பன் ஃப்ரீ கண்டுபிடிப்பைத்தான் நீங்கள் படிக்க போகிறீர்கள்.

ஜெர்மனியில் உலகில் முதன்முறையாக ஹைட்ரஜனில் முற்று முதலாக இயங்கும் பயணிகள் ரயில் விசிலூசி புறப்படத் தயாராக இருக்கிறது. கோராடியா ஐலிண்ட் என அம்சமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மூத்தான சூழல் காக்கும் ரயில்,வெளியேற்றுவது நீராவியை மட்டுமே என்பது இதில் பெரும் பிளஸ் பாயிண்ட். ஹைட்ரஜன் டேங்கின் உள்ள செல்களின் மூலம் உருவாகும் மின்சக்தி, நீரினை சூடுபடுத்தி அதனால் உருவாகும் சக்தியினால் ட்ரெயின் தண்டவாளத்தில் தடதடத்துப் பாய்கிறது. லித்தியம் அயன் பேட்டரிகளில் ஹைட்ரஜன் வாயு வடிவில் அடைக்கப்பட்டு வேதிவினைகளின் மூலம் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது. இந்த பேட்டரி கூடுதலாக உள்ள ஆக்ஸிலேட்டர் ஒன்றினால் உடனுக்குடன் ரீசார்ஜ் செய்யப்படுகிறது. வண்டி இயக்கம் நிறுத்தப்படும்போது சேமிப்பாகும் ஆற்றல் பேட்டரியில் செலுத்தப்படுகிறது.   ஐரோப்பாவின் பல்வேறு டீசல் எஞ்சின்களுக்கு மாற்றாக இந்த ஹைட்ரஜன் ரயில்கள் அமையும் என அல்ஸ்டோம் ரயிலை தயாரித்துள்ள ப்ரெஞ்ச் நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.  

ஜெர்மனியின் வடமேற்கு மாநிலமான சாக்‌ஸோனியிலுள்ள ரயில் பாதைகளில்தான் ஹைட்ரஜன் ரயில்கள் ஓடப்போகின்றன. மொத்தம் 14 ட்ரெயின்களை சாக்‌ஸோனி போக்குவரத்துறை வாங்க முடிவு செய்துள்ளது. ஹைட்ரஜனில் ஓடும் பயணிகள் ரயில் என்ற வகையில் இதுதான் முதலிடம் பெறுகிறது. ஆனால் இது முதல் முயற்சி என்று கூறிவிடமுடியாது. 2004 ஆம் ஆண்டே  ஹைட்ரஜன் மூலம் ரயில்களை இயக்கலாம் என்ற
ஹைட்ரெயில் கான்செப்டை ஏடி&டி நிறுவனத்தின் திட்ட மேலாளரான ஸ்டான் தாம்சன் தெரிவித்திருக்கிறார். ஜப்பானில் ஹைபிரிட் என்ற முறையில் ஹைட்ரஜனை ரயில்களில் பயன்படுத்தி வருகிறார்கள். 300 பயணிகளை சுமந்துகொண்டு 800 கி.மீ தொலைவை மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது இந்த ஹைட்ரஜன் ரயில்.

மக்களின் விருப்பங்களை கேட்டறிந்து 2 ஆண்டுகளில் கோராடியா ரயிலை உருவாக்கியுள்ளோம். கார்பனை வெளியிடாத மேம்பட்ட புது தொழில்நுட்பங்களினை கொண்டு உருவாக்கியுள்ள இந்த ரயில் பலரையும் கவரும் என நம்புகிறோம் என எனர்ஜியோடு பேசுகிறார் அல்ஸ்டோம் நிறுவனத்தின் சிஇஓவான பாபர்ட் லாஃபார்ஜ்.


தற்போது ஜெர்மனியில் 4 ஆயிரம் டீசல் ரயில்கள் பயன்பாட்டில் உள்ளன. ஜெர்மனிய அரசு 2020 ஆம் ஆண்டிற்கள் அதன் எண்ணிக்கையை 40 சதவிகிதமாக குறைக்க தீர்மானித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஹைட்ரெயில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. உடனே இதில் பயணிக்க பலரும் விரும்பினால் ரயில் கிளம்ப கார்டு கொடி காட்டி விசிலூதப்போவது டிசம்பர் 2017 ஆம் ஆண்டில்தான். எனவே பொறுப்பாக சிந்தித்து நிதானமாக உலகை காப்பாற்றும் வெளிநாட்டினரை நாம் பின்பற்றுவதில் தவறு ஒன்றுமில்லைதானே!

இருளை அகற்றும் இக்னைட் பாக்கெட் ப்ளாஷ் லைட்

    டிடெக்டிவ்கள் வில்லனின் வீட்டில் பைல்களை நம் நெஞ்சம் துடிக்க தேடும்போது கையில் வைத்திருப்பார்களே, அந்த பென் டார்ச்சின் தலைமுறைதான் இதுவும்.  ஆனால் வீட்டைவிட்டு வானம் தேடி அலையும் ஜிப்ஸி மனிதர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைமுறையிலும் மனிதர்களே அப்டேட்டாகும்போது லைட்டுகள் மட்டும் நவீனமாகாமல் இருந்தால் எப்படி? ஸ்லீக் டிசைனில் டைட்டானிய உலோக பளபளப்பில் மைக்ரோ யுஎஸ்பி சார்ஜரோடு சந்தைக்கு புத்தம் புதுசாக வந்திருக்கிறது ஜீரோஹவர் இக்னைட் ப்ளாஷ்லைட்.

    ஏமி மற்றும் ஆரோன் என இருவரும் இணைந்து 2013 ஆம் ஆண்டு தொடங்கியதுதான் ஜீரோஹவர் எனும் நிறுவனமாகும். மனிதர்கள் வெளியே செல்லும்போது அவர்களுக்கு உதவும் பொருட்களை தயாரித்து அளிப்பதே எங்களுடைய நோக்கமாக கொண்டு முதலில் நாங்கள் பேக் அப் வசதி கொண்ட டார்ச் லைட்டுகளை தயாரித்து விற்கத் தொடங்கினோம் என தங்களது நிறுவனத்தின் தொடக்கத்தை கோரசாக பேசுகிறார்கள். அதை நிரூபிப்பதுபோல இன்று ஜீரோ ஹவர் நிறுவனமானது பல்வேறு டார்ச் லைட்டுகள், டார்ச்சுகளை பாதுக்காக்கும் பைகள், நீர்புகாத குறிப்பேடுகள்  என பயணம் செய்பவர்களுக்கான பல்வேறு வித பொருட்களை தனித்துவமாக தயாரித்து  விற்று வருகிறார்கள். அதில் முக்கியமானது இந்த மைக்ரோ டார்ச்லைட் ஆகும். எப்படி?
கிரேட் 5 டைட்டானிய உலோகத்தினால் உறுதியாக உருவாக்கப்பட்டு நீரிலும் பாதிக்கப்படாத விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சிறிய உருளை வடிவத்தினால் காம்பேக்டாக பாக்கெட்டில் அடைக்கலமாகிறது. ஒரு நொடிக்கு ஒளி உமிழும் அளவை 0.5 - 385 lm அளவுக்கு மாற்றியமைத்து 91 மீட்டர் அளவு பிரகாச ஒளியில் சேஃபாக பயணிக்கலாம். சரி சிறிய ப்ளாஷ் லைட்தான், ஆனால் கையிலேயே எவ்வளவு நேரம் வைத்திருப்பது? என்று சலிப்பவர்களுக்காகவே, இதனை உங்கள் கீசெயினோடு, வேறு இணைப்புகளில் ஈஸியாக இணைக்க, மூடி ஒன்றையும், காந்தசக்தி மூடி ஒன்றையும் ப்ளாஷ் லைட்டோடு விலையில்லாமல் தருகிறார்கள். இனி எதுக்கு டென்ஷன்! காந்த மூடியை இரும்பின் மேல் டக்கென ஒட்டி வைத்துவிட்டு ஒளியில் வேலையை ப்ரீயாக பார்க்கலாமே!

    அதிக வெளிச்சத்தை (385lm) பாய்ச்சினால் 15 நிமிடங்களும், நடுத்தர வெளிச்சத்தில் (100lm) 2.50  நிமிடங்களும், குறைவான வெளிச்சத்தில் (0.5lm) 57 மணி நேரமும் தளராமல் தாக்குப்பிடிக்கிறது 86 மி.மீ நீளமும், 15.3 மி.மீ சுற்றளவும் கொண்டுள்ள மைக்ரோ டைட்டானிய ப்ளாஷ்லைட். ஒளியின் அடர்த்தியை அளவிடும் காண்டெலா அளவீட்டில் 2043சிடி ரேட்டிங் பெற்றுள்ள 49.32 கிராம் எடைகொண்ட  இந்த மைக்ரோ லைட்,  1.5 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தாலும் திடமாக வேலை செய்யும் நிறுவனத்தினர் கூறுகிறார்கள். மைக்ரோ ப்ளாஷ்லைட்டோடு மூன்று வித க்ளிப்புகள்(கீசெயின் க்ளிப், காந்த க்ளிப், பாக்கெட் க்ளிப்) மற்றும் பேட்டரி ஒன்று, யுஎஸ்பி சார்ஜ் கேபிள் ஒன்று சேர்த்து 5688 ரூபாய் பில் வருகிறது. இதனை இப்போது ஆர்டர் செய்தால் ஜனவரி 2017 அன்று புத்தாண்டு பரிசாக பெற்று குதூகலமாகலாம்.



 மின்னலில் உருவாகும் வெப்பம் எவ்வளவு?

இயற்கை பேரழிவுகளான வெள்ளம் நிலநடுக்கம் போன்றவை தவிர மனிதர்களுக்கு அதிக நடுக்கம் தந்து கிடுகிடுக்க வைப்பது மின்னல்தான். மழை பெய்யும் வானில் மரத்தின் வேர் போல மேகத்திற்கு மேகம் சடக்கென கிளைவிட்டு தாவிச்செல்லும் மின்னல் குறித்த ஆராய்ச்சிகள் இன்றும் வேகம் குறையாமல் நடந்துவருகின்றன.

மின்னல் எப்படி உருவாகி பயணிக்கிறது என்பதை மட்டுமே இயற்பியலில் நாம் அறிந்துள்ளோம். ஆனால் இது மின்னல் குறித்த குறைவான அறிவுதான் என தடாலடியாய் பேசுகிறார் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் மின்னல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் மூர்.

வானத்தில் அது பாட்டுக்கு வந்துவிட்டு போகும் மின்னல் பற்றி நமக்கென்ன சார்? என்று நினைத்தால் அது தவறு. அமெரிக்காவில் நடந்த மின்னல் தாக்குதல்களினால் மட்டும் 5 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்றால் இதை எப்படி லைட்டாக எடுத்துக்கொள்ள முடியும்? புயல்களின் சேத மதிப்பை விட மின்னல்களால் ஏற்படும் டேமேஜ்கள் அதிகம் எனும்போது மின்னல் குறித்து ஆர்வம் காட்டி ஆராய்வதுதானே நமது கடமை.

மின்னல் உருவாகி மின் கம்பங்களைத் தாக்கும்போது அவை உருகி, பெரும் தீவிபத்து வனவளத்தை அழிக்கும் காட்டுத்தீ ஏற்படுகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டியது மின்னலில் உருவாகி வரும் வெப்பத்தின் அளவு என விஷயத்தின் நாடி பிடித்து கச்சிதமாக பேசுகிறார் மற்றொரு மின்னல் ஆராய்ச்சியாளரான ஷியாங்சாவோ லீ. அண்மையில் இவரது குழுவினர் மின்னலில் உருவாகும் வெப்பத்தின் அளவு, அடர்த்தி குறித்து செய்த ஆய்வறிக்கை, சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ் அறிவியல் இதழில் வெளிவந்துள்ளது.

 உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆண்டின் ஒவ்வொரு நாளும் 1 லட்சம் மின்னல் தாக்குதல்கள் நிகழ்கின்றன. காய்ச்சலை நொடியில் அறிவதற்கான தெர்மோமீட்டர் போல மின்னலை அளவிட எந்த கருவியும் இல்லை. எனவே ஜெனரேட்டர் மூலம் செயற்கையான மின்னலை பல்லாயிர ஆம்பியர் அளவில் உருவாக்கப்பட்டது. சில ஆம்பியர் அளவு மின்சாரமே மனிதர்களைக் கொல்ல போதுமானது. இயற்கையில் தோன்றும் மின்னலில் 20,000 -30,000 ஆம்பியர் அளவு மின்சாரம் இருக்கும் என தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்கூடத்தில் உருவாக்கும் மின்னல் இயற்கையாக வானில் பரப்பில் உருவாகும் மின்னலுக்கு எப்படி சரிசமமாகும்? இந்த ஆய்வில் லீ குழுவினர் மின்னலை உருவாக்கியபோது அதில் உருவான மின்சாரத்தின் அளவு 5000 - 50000 அளவிலும், இதனால் உருவான வெப்பத்தின் அளவு 9426 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. இது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தைவிட(5505 டிகிரி செல்சியஸ்) 2 மடங்கு அதிகமாகும்.

இப்படி பேரளவிலான வெப்பத்தை எந்த கருவி தாக்குப்பிடித்து அளக்கும்? எனவே அதன் மின்னலை உருவாக்கியபோதே வேகமாக அதன் அடர்த்தியை லீ குழுவினர் குறித்துவைத்துவிட்டனர். இதன்மூலம் வெவ்வேறு ஆம்பியர் அளவில் தோன்றும் மின்னலில் உருவாகும் மின்சாரம் அதன் அடர்த்தி ஆகியவற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

அடுத்து இயற்கை மின்னலை அல்லது ராக்கெட் மூலம் தூண்டப்பட்டு உருவாக்கும் மின்னலினை ஆய்வுக்குட்படுத்தி ஆய்வக அளவுகளை சோதிக்க இருக்கிறோம் என தீர்க்க திட்டமிடலோடு பேசுகிறார் மின்னல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் மூர்இந்த ஆராய்ச்சியின் மின்னல் தாக்குதலை தாங்கும் விதத்தில் நம்மால் கட்டுமானங்களை உருவாக்க முடிவதோடு, மின்னல் மின்சாரம் குறித்தும் அடுத்த கட்ட சோதனைகளுக்கு இந்த ஆராய்ச்சி உதவக்கூடும்.



 கலப்பட தண்ணீரை சுத்திகரிக்கும் எக்கோமோ பாட்டில்

சாதாரணமாக தண்ணீர் பாட்டிலை வைத்து என்ன செய்வோம்? குடிக்க நீரைப்பிடித்து வைத்துக்கொண்டுதாகம் எடுத்தால் குடிக்கலாம். ஆனால் நவீன காலத்தில் தண்ணீர் பாட்டில் இன்னும் பாட்டி காலத்திலே இருந்தால் எப்படி? ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் போன் என எல்லாமும் ஸ்மார்ட்டாக ட்யூன் ஆகும்போது தண்ணீர் பாட்டிலும் கொஞ்சம் மாறினால் சூப்பராக இருக்குமே!

உங்களுக்கு தோன்றியதோ இல்லையோ எகோமோ நிறுவனத்திற்கு அந்த யோசனை சட்டென தோன்ற உடனே தயாரித்ததுதான் எகோமோ ஸ்மார்ட் பாட்டில். இதில் என்ன ஸ்பெஷல் என்றால் தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்வதோடு அதில் கலப்படம் இருந்தால், அதற்கு காரணமான வேதிப்பொருட்களையும் நீக்கி விடுகிறது. மேலும் பிட்னெஸ் பிரியர் என்றால், உடற்பயிற்சியில் வேர்த்து விறுவிறுத்து தாகம் எடுக்கும் நேரத்தையும் இதில் பதிவு செய்யலாம். பாட்டில் உங்களுக்கு அந்த நேரத்தை நினைவுபடுத்தும். மேலும் பாட்டிலோடு தரும் ஆப்பை போனில் பதிவு செய்தால், அதில் வரும் அலர்டை பின்தொடர்ந்தால்  தாகம் எடுக்கும்போது சுத்தமான நீரை குடித்து ஆரோக்கியத் திருமகனாக சூப்பராக வாழலாமே!

ஸ்மார்ட் பாட்டில் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போமா? இந்த பில்டரிலுள்ள கார்பன் பைபரானது, நீரிலுள்ள குளோரின், வேதிப்பொருட்கள், பெட்ரோலியப்பொருட்கள் ஆகியவற்றை துல்லியமாக நீக்குகிறது. நானோ பைபர் மூலக்கூறு மூலம் நுண்ணுயிரிகளான பாக்டீரியா மற்றும் காப்பர், காட்மியம், பாதரசம், ஈயம் ஆகியவற்றையும் நீக்குகிறது. இதிலுள்ள பில்டரை எளிதாக நீக்கி, சுத்தம் செய்ய முடியும். பில்டரை மாற்றுவதற்கான நேரத்தையும் ஸ்மார்ட் பாட்டிலே நமக்கு கூறிவிடுகிறது. நீரை எங்கிருந்து வேண்டுமானாலும் அடித்து பிடித்து பிடித்துவிட்டால் போதும். நீரை எப்போது சுத்தப்படுத்தவேண்டும் என விரும்புகிறீர்களோ அப்போது, பாட்டிலின் கீழ்பகுதியினை திருப்பினீர்கள் என்றால் போதுமானது. கீழே உள்ள எல்இடி ட்ராக்கரில் நீர் தூய்மையாகிவிட்டதா இல்லையா என கூறும்.
இதில் உள்ள பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு வாரத்திற்கு ஹெர்குலிஸ் போல தாக்குப்பிடிக்கிறது. ஒருமுறை பில்டர் மாற்றினால் 4 மாதங்களுக்கு எந்த கவலையுமில்லாமல் ஜாலியாக ஸ்மார்ட் பாட்டிலோடு பயணிக்கலாம்.  ப்ளூடூத் வசதி இருப்பதால், ஆண்ட்ராய்டு, ஐபோன் என எதனுடனும் சட்டென இணைத்து பயன்படுத்த முடியும்.  25 செ.மீ நீளமும், 8 செ.மீ சுற்றளவும் 591 மி.லி கொள்ளளவும் கொண்ட இந்த ஸ்மார்ட் பாட்டில் கருப்பு, சிவப்பு, வெள்ளை, ப்ளூ என பல்வேறு நிறங்களில் மனதை கவர்கிறது. 15 ஆயிரத்து 299 ரூபாய் கொடுத்தால் எகோமோ பாட்டிலோடு ஒரு ட்ராக்கரையும் கையில் கொடுப்பார்கள்.
உடனே பாட்டிலுக்கு கைநீட்டக்கூடாது. அதெல்லாம் மார்ச் 2017 ஆம் ஆண்டில் பாட்டில் விற்பனைக்கு வந்த பிறகுதான் முன்பதிவு செய்து முந்திக்கொண்டால் தள்ளுபடி வாய்ப்புகளும் உள்ள அனைவருக்கும் வாய்ப்புண்டு.
   
  



 ஆட்டோபேஜி முறைக்காக  நோபல் வென்ற விஞ்ஞானி

    அண்மையில் ஜப்பானைச் சேர்ந்த யோஷினோரி ஆசுமி என்ற உயிரியல் ஆய்வாளருக்கு செல் சுழற்சி முறையினை கண்டுபிடித்ததற்காக மருத்துவப்பிரிவில் 107 ஆவது நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    நமது உடல் பசித்திருக்கும்போது, தேவைப்படும் புரத தேவையை ஈடுகட்ட பழைய செல்களை உடைத்து அதனை சக்தியாக மாற்றுவதை ஆட்டோபேஜி என்று குறிப்பிடுவார்கள். அதாவது செல்கள் தம்மை தாமே உண்ணுவது என்று இதனைப் புரிந்துகொள்ளலாம். செல்களில் உட்புகுந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளை அழிக்கவும்,  சிதைந்துபோன தமது கட்டமைப்புகளை அழித்து தம்மை புதுப்பிக்கவும் ஆட்டோபேஜி முறையை உடல் பயன்படுத்திவருகிறது. அதேசமயம் இந்த தானுண்னும் செயல்முறை இயல்பை மீறும்போது, புற்றுநோய், நரம்புநோய்கள், சர்க்கரை நோய், பார்கின்சன் நோய், தடுப்பாற்றல் நோய்களை உருவாக்குவதிலும், உடல் முதுமை அடைவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை ஆய்வாளர் யோஷினோரி அறிந்து கூறும்வரை பலரும் இதனை அறிந்திருக்கவில்லை என்பதே நிஜம்.

   
    உடலில் இயல்பாக நடக்கும் செல்கள் தானுண்ணும் செயல்முறையை புற்றுநோய் செல்கள் தமது வளர்ச்சிக்கு பயன்படுத்தி தம்மை பெருக்கிக்கொள்கின்றன. எனவே இந்த செல்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதமான ஆய்வுகளுக்கான தேவையுள்ளது என்று பேசி திகைக்க வைக்கிறார் நியூஜெர்சியிலுள்ள ரட்ஜர்ஸ் புற்றுநோய் மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் எய்லீன் ஒயிட்.

    செல்களின் சுழற்சியில் ஆட்டோபேஜி ஜீன்கள் தமது வளர்சிதை மாற்றத்தால் உடலில் நோய் ஏற்படுத்துவதை ஈஸ்ட் எனும் பூஞ்சை உயிரி மூலம் கண்டறிந்த சாதனைக்குத்தான் யோஷினோரிக்கு விருது கிடைத்துள்ளது. இவரின் ஆராய்ச்சி வழியிலான கண்டுபிடிப்புகள் இல்லையென்றால் மொத்த துறையும் அதிக நாட்கள் பிழைக்க வாய்ப்பே இல்லை என புகழ்கிறார் சிகாகோ பல்கலைக்கழகத்தின் நோயியல் துறையின் துணை பேராசிரியரான சியுங்மின் வாங்.

    தற்போதுதான் யோஷினோரிக்கு நோபல் பரிசு கிடைத்தாலும், தன்னைத் தானுண்ணும் செல்களைக் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு, 1990 ஆம் ஆண்டே குறிப்பிட்ட செல்களைக் கண்டுபிடித்துவிட்டார். சோதனைகள் முழுமையாக முடிந்து செல் தானுண்ணும் செயல்முறையில் தீவிரமாக செயல்படும் ஜீன்களை துல்லியமாக அடையாளம் காட்டி கண்டறிந்த  பின்னரே, யோஷினோரியின் கண்டுபிடிப்பை அங்கீகரித்து நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது என்று மகிழ்ச்சியோடு பேசுகிறார் நோபல் அகாடமியின் தலைவரான ரூன் டாஃப்கார்ட்

    1945  ஆம் ஆண்டு ஜப்பான் புகோகாவில் பிறந்த  ஆசுமி, 1974 ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படிப்பை நிறைவு செய்தார். வேதியியல் படித்தாலும், அதில் புதிய வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் மூலக்கூறு உயிரியல் படிப்பிற்கு தாவினார். ஆனாலும் இவரது பிஎச்டி ஆய்வில் மைலேஜ் காட்டி முன்னேறாததால் சரியான வேலையும் கிடைக்கவில்லை. அந்த சூழ்நிலையை அறிந்த அவரது ஆசிரியர், நியூயார்கில் உள்ள ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் செயற்கை கருத்தரிப்பு குறித்த படிப்பை படிக்க பரிந்துரைத்தார். அப்போதுதான் ஈஸ்ட் என்ற நுண்ணிய பூஞ்சையில் உள்ள டிஎன்ஏக்களை நகல் செய்யும் ஆராய்ச்சியில் இறங்கினார். இந்த ஆராய்ச்சியே யோஷினோராவுக்கு 2009 ஆம் ஆண்டு வரை டோக்கியோ பல்கலைக்கழகத்தில் ஜூனியர் பேராசிரியராக பணிபுரியும் வாய்ப்பை தேடித்தந்தது. இப்படி அரும்பாடுபட்டு அலைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்கு இதோ தனது 71  வயதில் பெரிய அங்கீகாரம் பெற்று நோபலை வென்றேவிட்டார் யோஷினோரி.

    அறிவியில் ஆராய்ச்சியில் ஈடுபடும் அனைவருக்கும் வெற்றி கிடைக்காதுதான். ஆனால் சவாலை சந்திக்கும் துணிச்சலோடு எப்போதும் இருக்கவேண்டும். எனது ஆராய்ச்சிக்கு கிடைத்துள்ள விருது வாழ்விற்கான பெரிய அங்கீகாரம் என ஊடகங்களுக்கான பேச்சில் நெகிழ்கிறார் யோஷினோரிஜப்பான் பிரதம்ர ஷின்சோ அபே, உங்களது ஆராய்ச்சி தீவிரமான நோய்களைக் கொண்டவர்களுக்கு வாழவைக்கும் ஒளியாக திகழ்கிறது என பாராட்டியிருப்பது எவ்வளவு பெரிய கௌரவம்!.

    தற்போது யோஷினோரி வென்ற மருத்துவப் பிரிவு நோபல் பரிசை 2015 ஆம் ஆண்டு மலேரியாவைப் பரப்பும் ஒட்டுண்ணிக்கு எதிரான மருந்துகளை தாவரங்களிலிலிருந்து பிரித்தெடுத்த செயல்முறைக்காக வில்லியம் சி கேம்பெல், சடோஷி ஓமுரா, டு யூயு  என மூவரும் பெற்றது குறிப்பிடத்தக்கது. 1905 ஆம் ஆண்டிலிருந்து  ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த நோபல் பரிசோடு 9 லட்சத்து 33 ஆயிரம் டாலர்கள் அன்பளிப்பும் உண்டு.
அறிவியலுக்கு இறுதி எல்லை என்பதே கிடையாது. ஒரு கேள்விக்கு பதில் கிடைத்ததும், அடுத்த கேள்வி தொடங்கிவிடுகிறது. எனவே நான் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துவிட்டேன் என்று எண்ணவில்லை என நோபல் பரிசு மகிழ்ச்சியோடு தன்னடக்கத்தோடு புன்னகைக்கிறார் யோஷினோரி ஆசுமிசாதித்தவர் சொன்னால் உண்மையாகத்தானே இருக்கும்!
 நன்றி:
-.அன்பரசு, கா.சி.வின்சென்ட்