ஜாலி பிட்ஸ் - ரோனி ப்ரௌன்



எம்பிஏ ட்ரைவர்!

டாக்ஸியை புக் பண்ணி ஏறி உட்கார்ந்த உடனே ஹெட்போனை காதில் இணைத்து ஃபேஸ்புக் ஜோதியில் ஐக்கியமாகும் ஆட்கள்தானே அதிகம். டெல்லியில் எம்பிஏ மாணவர் டாக்ஸி ட்ரைவரிடம் ஜாலியாக பேச்சு கொடுத்தார் என்ன ஆச்சு தெரியுமா?

டெல்லியைச் சேர்ந்த எம்பிஏ மாணவர் ஜஸ்தேஜ் சிங் காலையில் தன் கல்லூரிக்கு செல்ல டாக்ஸியை புக் செய்தார். வண்டியை ஓட்டி வந்தது 60 வயது டிஷர்ட் போட்ட அங்கிள். இவருக்கு என்ன தெரியப்போகிறது என நினைத்த ஜஸ்தேஜ்சிங், "எம்பிஏ படிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? உங்கள் பேரனைக்கூட இப்படிப்பில் சேர்த்துவிடாதீர்கள்" என்று ஏதோ போக்கில் புலம்பியிருக்கிறார். திடீரென ட்ரைவர் அங்கிள், சில எம்பிஏ டெக்னிக்கல் வார்த்தைகளைச் சொல்லி அதுதான் பிராப்ளமா ப்ரோ? என கேட்க, ஜஸ்தேஜ்சிங் மெர்சலாகிவிட்டார். விபரம் கேட்டபோதுதான் தெரிந்தது, பொதுத்துறையில் ஜெனரல் மேனேஜராம் அவர். ரிடையர்டான பின் ஜாலியாக வண்டி ஓட்டும் அவர் இதில் கிடைக்கும் பணத்தை ஏழை குழந்தைகளின் கல்விக்கு கொடுத்துவிடுகிறாராம். ஏன் இப்படி மனுஷனை நிலைகுலைய வைக்கிறீங்க அங்கிள்ஸ்!

சீனாக்காரர்களின் அமேசிங் திருட்டு!

சீனாவுக்கு இந்தியா என்றாலே இளப்பம்தான். சீனா இன்ச் பை இன்ச்சாக இந்தியாவுக்கு சொந்த பகுதிகளை ஆக்கிரமிக்கிறது என்றால், மும்பைக்கு வந்த சீன மனிதர்கள் கூட அப்படியே தம் தேசத்தை ஃபாலோ செய்தால் எப்படி?

அண்மையில் மும்பையின் கோரேகானில் நடந்த உலகளாவிய நகைகள் கண்காட்சியில் திடீரென ஒரு கடையில் பரபரப்பு. சில வைரங்களை காணோம் என ஸ்டால் ஓனர்கள், போலீசுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்க, டீசலுக்கு காசு வாங்கிக்கொண்டு திருடர்களை துரத்தியது காவல்துறை. ஏர்போர்டில் ஹாங்காங்குக்கு தப்பி ஓட டிக்கெட் வாங்கி சாதுவாக உட்கார்ந்திருந்த சீனாக்காரர்களை வலைவீசிப்பிடித்தவர்கள், மாண்டரின் மொழியில் சம்சாரித்து அவர்களின் பேக்கில் ஷாம்பூ பாட்டிலில் அபேஸ் செய்து வைத்திருந்த வைரங்களை கேட்ச் செய்து, திருடர்களை லாக்கப்பில் தள்ளியுள்ளனர். 9 ஆயிரம் கட்டி ரெஜிஸ்டர் செய்து  உள்ளே போகும் கண்காட்சியிலேயே கைவரிசை காட்டிய இந்த நூதன சீனர்கள் திருடிய வைரங்களின் மதிப்பு ஜஸ்ட் 34 லட்சம்தான்.    

பஸ் சீட்டில் பர்கா பெண்கள்!

ஃபேஸ்புக்கில் திடீரென ஷேர் ஆகும் புகைப்படங்கள் புத்தியை டம்மி செய்து கண்ணதாசா, யேசுதாஸா என குழப்ப குருமாவை மூளையில் ஊற்றும். அதிலும் கருத்து கந்தசாமிகளிடம் போட்டோக்கள் சிக்கினால் என்னாகும்?

ஃபேஸ்புக்கில் சின்ட்ரா பேயர் என்பவர் சில போட்டோக்களை பதிவிட்டு, இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டிருந்தார். உடனே Fedrelandet viktigst என்ற நார்வே அமைப்பு, திகில், பயங்கரம் என்று கருத்துக்களை பதிவிட்டிருந்தது. நிஜத்தில் படத்தில் இருந்தது பஸ்ஸின் வெற்று சீட்டுகள்தான். ஆனால் அதைப் புரிந்துகொள்ளாமல் பர்கா பெண்கள் அமர்ந்திருப்பதாக புரிந்துகொண்ட அகதிகளுக்கு எதிரான ஃபெட்ரிலேண்டர் குழு பொங்கியிருப்பதுதான் காமெடி. பர்காவின் உள்ளே வெப்பன் இருக்கலாம் பாஸ் கவனம்! என சிலரின் எச்சரிக்கை வேறு. உண்மையை சொன்னதும் சின்ட்ராவை வறுத்தெடுத்திருக்கிறார்கள் அந்நபர்கள். ஆனால் உண்மையில் அப்போட்டோக்களை எடுத்த ஜர்னலிஸ்டான ஜோகன் ஸ்லாட்டாவிக், "திடீர்னு வேல போரடிச்சது. அதான் ஜாலி போட்டோ எடுத்து ஷேர் செஞ்சேன். அதுக்கான கமெண்டுகள் சிரிப்பு தாங்கல" என்கிறார் ஜோகன். உங்களை புரிஞ்சுக்கவே முடியலை சார்! 

ஸ்டேட்பேங்க் ஆஃப் தக்காளி 

மெஸ்ஸில் தக்காளி தொக்கு என்பதை சொல்லி முடிக்கும் முன்பே தாலிபான் டெரரிஸ்ட் போல தீயாய் பதறி முறைக்கிறார்கள். கொல்கத்தாவில் 95, டெல்லியில் 92, மும்பையில் 80 என தக்காளி எகிறும் நிலையில் லக்னோவில் தக்காளிக்கென பேங்க் தொடங்கி மிரட்டியிருக்கிறார்கள் சில நல்ல உள்ளங்கள்.

.பியின் லக்னோவில்தான் தக்காளி வங்கி தொடங்கியிருக்கிறார்கள். 5% வட்டி, லாக்கர் வசதி, 80% லோன் என புது ரூட்டில் ஐடியா பிடித்து போராட்டம் செய்கிறார்கள் உ.பி காங்கிரஸ் கட்சியினர். பேங்க் மட்டுமல்ல இதில் தக்காளி சேல்ஸூம் உண்டு. இதையும் நம்பி கிருஷ்ணசர்மா என்ற 103 வயது விவசாயி, அரைக்கிலோ தக்காளியை முதலீடாக்கியுள்ளார். "6 மாதத்தில் ஒரு கிலோ கிடைக்கும் என்று கூறியுள்ளனர். அதுவரையில் நான் உயிரோடு இருந்தால் அதை ஷயூராக வாங்கிக்கொள்வேன்" என்கிறார். நம்பிக்கை அதானே எல்லாம்!


ஃபேஸ்புக் கல்யாண கலாட்டா!

கல்யாணம் ஆவதெல்லாம் ஏலியனை பூமியில் பார்த்தேன் என்று சொல்வது போல அரிதினும் அரிய சமாச்சாரமாக மாறிக்கொண்டிருக்கிறது. வரிவிளம்பரம் டூ மேட்ரிமோனியல்வரை அலைந்து தலைமுடி கொட்டிப்போன நிலையில் கேரள வாலிபர் கிரியேட்டிவ்வாக என்ன செய்தார் தெரியுமா?

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தின் ரன்ஜிஸ் மஞ்சேரி என்பவர்தான் மேரேஜூக்கு பெண்தேடும் திருநிறைச்செல்வன். 30 பிளஸ்ஸில் போட்டோகிராபராக பணிபுரியும் இவருக்கு வரும் வரன்கள் எல்லாம் சம்பளம் கம்மி, வயசான உங்க பேரன்ஸையும் பாத்துக்கணுமா? என கேள்விகள் கேட்டு தட்டிக்கழிக்க, மனிதர் நொந்து நூடுல்ஸாகிவிட்டார். வேறுவழியின்றி ஃபேஸ்புக்கிலேயே விளம்பரம் செய்து அபுதாபி, பஹ்ரைன், துபாய், சவுதி அரேபியா என எக்கச்சக்க வரன்கள் வந்து குவிந்திருக்கின்றன. அப்படி என்ன சொன்னார்? 'பொண்ணை எனக்கு பிடித்திருந்தால் போதும். எந்த டிமாண்டும் இல்லை' என விளம்பரத்தில் அநியாய அடக்கம். இப்பவே தொடங்கிட்டாரு!  

நன்றி:குங்குமம் வார இதழ்