"அமெரிக்காவால் பாரீஸ் ஒப்பந்தத்திற்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது" நேர்காணல்: ப்ரூனே போய்ர்சன், சுற்றுச்சூழல் அமைச்சர், ப்ரான்ஸ்



"அமெரிக்காவால் பாரீஸ் ஒப்பந்தத்திற்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது"
நேர்காணல்: ப்ரூனே போய்ர்சன், சுற்றுச்சூழல் அமைச்சர், ப்ரான்ஸ்
தமிழில்:.அன்பரசு

ப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரவிருக்கிறார். அதற்கான தயாரிப்பில் பரபரப்பாக உள்ள சுற்றுச்சூழல் அமைச்சர் ப்ரூனே போய்ர்சன் அமெரிக்கா சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திலிருந்து விலகியது அணுவளவும் சூழலியல் ஒப்பந்தத்தை பாதிக்காது என உற்சாகம் பிளஸ் தைரியமாக  பேசுகிறார். பாரீஸ் ஒப்பந்தம் குறித்து அவரிடம் விரிவாக பேசினோம்.

அமெரிக்கா சூழல் ஒப்பந்தத்திலிருந்து திடீரென விலகிவிட்டது. இது உலகநாடுகளிடையே எதிர்காலத்தில் என்னவிதமான சவால்களை உருவாக்கும் என நினைக்கிறீர்கள்?

அமெரிக்காவின் அதிரடி முடிவால் பாதிப்பை எதிர்கொள்ள போவது, ஏழை நாடுகளும், சிறிய தீவு நாடுகளும்தான். சூழல் மாறுபாட்டுக்கு எதிரான போர் இன்றும் தொடர்கிறது. அமெரிக்கா சூழல் ஒப்பந்திலிருந்து விலகினாலும், அந்நாட்டின் நிறுவனங்கள், மாநில மேயர்கள், ஆளுநர்கள் அனைவரும் கூறுவது, நாங்கள் பாரீஸ் ஒப்பந்தத்தில் உள்ளோம் என்றுதான் கூறியுள்ளனர்.  

உலகில் அதிகளவில் கார்பனை வெளியிடும் நாடு அமெரிக்கா. அந்நாடே ஒப்பந்தத்திலிருந்து விலகியிருப்பது என்ன மாதிரியான விளைவுகளை மூன்று ஆண்டுகளில் ஏற்படுத்தக்கூடும்?

அமெரிக்காவின் முடிவினால் பாரீஸ் ஒப்பந்தத்திற்கு அணுவளவு அச்சுறுத்தலும் கிடையாது என்பதே உண்மை. இந்த ஒப்பந்தம் இன்றைய உலகிற்கு தவிர்க்கமுடியாததும், மாற்ற முடியாததுமான ஒன்று என இதற்கு ஒப்புதல் தெரிவித்த இந்தியபிரதமர் மோடிக்கு நன்றிகள். மேலும் உலகளவில் பாரீஸ் ஒப்பந்தத்தின் மூலமே தொழில்வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், சூழல் மேம்பாடு, வாழ்க்கைத்தரம் உயர்வு, வறுமை ஒழிப்பு அனைத்தும் சாத்தியம் என்பதை உலகிலுள்ள பல்வேறு துறையினரும் உணர்ந்துதான் இதற்கு ஆதரவளித்துள்ளனர்

சூழல் ஒப்பந்தத்தில் ப்ரான்ஸ் மற்றும் ஐரோப்பா என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறது?

பாரீஸ் ஒப்பந்தப்படி, ப்ரான்ஸ் கடந்த ஜூலையில் பல்வேறு சூழல் திட்டங்களை உருவாக்கியுள்ளது. 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பனை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம். இம்மாதம் கரிம எரிபொருட்களின் பயன்பாட்டை தடை செய்யும் முக்கிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதை மறுபரிசீலனை செய்யும் முடிவிருக்கிறதா?
ஜி7,ஜி20 ஆகிய பல்வேறு நாட்டு தலைவர்களும் பங்கேற்றும் பேசும் அமர்வு போன்றதல்ல பாரீஸ் ஒப்பந்தம். உலகம் முழுக்க சூழலைக் காக்கும்படியான நடவடிக்கை இது. உலகநாடுகளின் ஆலோசனைகளைப் பெற்று இதற்கான விதிகள் உருவாக்கப்படுகின்றன. சூழல் பிரச்னைகளை குறைப்பதற்காக தீவிரமாக வேலை செய்வது மட்டுமே இதற்கான மாற்று. இது நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றுவதோடு, மக்களின் வாழ்வையும் காப்பாற்றும்.

ஃபிஜி தீவில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் COP23 மாநாடு பற்றிக்கூறுங்கள்.
இம்மாநாடு பாரீஸ் ஒப்பந்தத்தை மேலும் விரிவாக்கும் விதமாக இருக்கும். டிசம்பர் 12 பாரீஸ் ஒப்பந்தத்திற்கு இரண்டு வயதாகிறது என்பதையொட்டி, டிசம்பர் 12 சூழல் நிகழ்வை ப்ரான்ஸ் ஏற்று நடத்தும் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைபெறும் நிகழ்விது.

நன்றி:TOI

நன்றி - முத்தாரம் வார இதழ்