வணிகத்தில் சமூகப் பொறுப்பு - சமூக பொறுப்புணர்வு திட்டம்!




பிக்சாபே



2

சமூக பொறுப்புணர்வின் தொடக்கம்

அமெரிக்காவில் 1950ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு பங்களிக்கும் விதமாக விதிகளை மாற்ற உத்தரவிட்டது. அக்காலம் தொடங்கி அங்கு சமூகப்பிரச்னைகளுக்கு நிறுவனங்கள் நிதி மட்டும் அளிக்காமல், அப்பிரச்னையைத் தீர்க்க பாடுபடும் செயல்பாடுகளைத் தொடங்கின. இதனைப் பற்றிய கட்டுரை ஒன்றை செய்தியாளர் கிரெய்க் ஸ்மித் 1994ஆம் ஆண்டு ஹார்வர்ட் ரிவ்யூ இதழில் எழுதியுள்ளார்.

அதில் மற்றொரு முக்கியக்காரணமாக அவர் சுட்டிக்காட்டுவது எக்ஸான் வால்டெஸ் என்ற நிறுவனம் எண்ணெய்யை கசிய விட்ட செய்தி. இதன் விளைவாக சூழல் மாசுபட்டது. இதையொட்டியே சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தை பல்வேறு நிறுவனங்களும் முன்னெடுத்தன. இதற்கான சட்டங்களை அரசு உருவாக்கியது. இதற்கு பத்தாண்டுகள் முன்பே 1960-70 காலகட்டத்திலேயே அமெரிக்க நிறுவனங்கள் சமூகத்திற்கு பங்களிப்பு செய்யவேண்டும் என்ற குரல்கள் மக்களிடையே எழத் தொடங்கிவிட்டன. இதன் காரணமாக, 1980களின் தொடக்கத்திலேயே அமெரிக்காவில் குறைவான எண்ணிக்கையிலான நிறுவனங்கள் பல்வேறு சமூகப் பிரச்னைகள் தொடர்பாக பங்களிக்கத் தொடங்கினர். 1989ஆம் ஆண்டு எக்ஸான் நிறுவனம் சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தியது, நெருக்கடியை தீவிரப்படுத்தி அனைத்து நிறுவனங்களும் சமூகம் சார்ந்த பொறுப்புணர்வோடு செயல்படவேண்டும் என மக்களை போராட வைத்தன.

இதன் தொடர்ச்சியாக சமூக பொறுப்புணர்வை ஏடிஅண்ட்டி தொலைத்தொடர்பு நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுத்திக்காட்டியது. அதன் மூலம் தனது பிராண்டிற்கான விளம்பரம், சமூக நன்மதிப்பு ஆகியவற்றை பெற்றது. பெரும்பாலான பணிகளை தனது ஊழியர்களை வைத்தே செய்துகொண்டது அதன் புத்திசாலித்தனத்திற்கு சான்று.

சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த வணிகம்

சமூகப் பொறுப்புணர்வுக்கு ஆண்டுதோறும் நிதியளித்துவிட்டு ஒதுங்கி நின்றால் போதாதா? இது வெட்டிச்செலவு என்று கூட பல்வேறு நிறுவனங்கள் நினைக்கலாம். ஆனால் அது தவறு. சமூகப்பொறுப்புணர்வு சார்ந்த வணிகத்தையும் வெற்றிகரமாக செய்யமுடியும். லைப்ஃபாய், சேவ்லான், டெட்டால் என இந்த மூன்று பிராண்டுகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இவை உடல் சுத்தம், சுகாதாரம் சார்ந்த சோப்பு, ஹேண்ட்வாஷ், சானிடைசர் ஆகியவற்றை சந்தையில் விற்கும் போட்டி நிறுவனங்கள். வணிகத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் அடிக்கடி கைகழுவும் போட்டி, சுகாதார விழிப்புணர்வு என இந்த நிறுவனங்கள் நாடெங்கும் நடத்துகின்றன. இதன்மூலம் என்ன பயன்?

டெட்டால் என்றாலே கேடயமும், கத்தியும் உங்களுக்கு நினைவுக்கு வருகிறது அல்லவா? அதுதான் அவர்களின் வெற்றி. மேலும் அவர்கள் சுத்தம் சுகாதாரம் சார்ந்த பொருட்களை மட்டுமே தயாரிக்கிறார்கள். தங்களுடைய பிராண்டை மனதில் எளிதாக பராமரிக்க முடிகிறது. இதில் லைஃபாய் சோப்பை தனியாக சொல்லவேண்டியதில்லை.

முன்னர் கரையாத சோப்பாக தயாரித்தனர். இதனால் எங்கள் கந்தசாமி மாமா, அவரும் சோப்பு போட்டுக்குளித்துவிட்டு, துணிகளையும் இதன் மூலம் அழுக்குப் போக துவைப்பார். பின் தான கூட்டி வந்த மணி நாயையும் அன்பாக சோப்பு போட்டு குளிப்பாட்டி வீட்டுக்கு அழைத்துவருவார். இதன் லோகோவான பிளஸ் குறி, மருத்துவம் சார்ந்த பாதுகாப்பு அம்சத்தை நினைவுபடுத்துகிறது. இதன்மூலம் பிராண்டை மக்கள் மனதில் பதியவைத்து சந்தைப் பங்களிப்பை அதிகரிக்க முடிகிறது. புதிய பணியாட்களை ஈர்க்க முடிகிறது. தங்கள் செயல்பாட்டிற்கான செலவை பெருமளவு குறைக்கலாம். முக்கியமாக நிறுவனம் மீதான நன்மதிப்பை எவரெஸ்ட் அளவுக்கு உயர்த்தலாம்.

1993-94ஆம் ஆண்டுகளில் கோன் ரோப்பர் என்ற நிறுவனம் மக்களிடையே சர்வே ஒன்றை நடத்தியது. அதில் சமூக பிரச்னைகளில் பங்கேற்கும் நிறுவனங்கள் விரும்புவதாக 84 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். 78 சதவீத மக்கள் கல்வி, சுகாதாரம் சார்ந்த பிரச்னைகளில் பங்கெடுக்கும் நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதாக கூறினர். 64 முதல் 62 சதவீதம் பேர் சமூக பிரச்னைக்கு கைகொடுக்கும் நிறுவனங்களுக்காக தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை மாற்றிக்கொள்வதாகவும், கடைகளை கூட மாற்றிக்கொள்வதாகவும் கூறினர். கொரோனா காலத்தில் கைகழுவதை லைஃபாய் விளம்பரம் செய்கிறார்கள் இல்லையா? இந்த பாணியை அறுபது சதவீத மக்கள் இயல்பான நடவடிக்கை என்று கூறுகிறார்கள்.

இன்று ஸ்விக்கி, ஸோமாடோ ஆகிய நிறுவனங்கள் முக்கிய உணவு சேவை நிறுவனங்களாக மாறியுள்ளன. இவையும மக்கள் சார்ந்த பிரச்னையில் கருத்து சொல்வதை மக்கள் விரும்புகின்றனர். இஸ்லாமியர் உணவு டெலிவரி செய்யக்கூடாது என்று ஒருவர் கூறியது சமூக வலைத்தளத்தில் செய்தியாக பரவியது. அப்போது உணவு சேவை நிர்வாகி, நாங்கள் மதச்சார்பினமையை பின்பற்றுகிறோம். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக பணியாட்களை மாற்ற முடியாது. எங்களுக்கு எங்களுடைய மதிப்புகள் முக்கியம் என வெளிப்படையாக கூறி மக்களின் வரவேற்பை பெற்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். அமெரிக்க ஆய்வும் கூறுவது இதைத்தான். அதாவது, லாபம் தாண்டிய சமூக அக்கறை, கரிசனம் நிறுவனங்களுக்குத் தேவை என்று.

இதை புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டு. அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி நிலையை டிவியில் பார்த்திருப்பீர்கள். உப்புக்காற்றால் அரிக்கப்பட்டு வரும் அதனை அமெரிக்க அரசு அடிக்கடி புதுப்பித்து வருகிறது. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் என்ற டெபிட், கிரெடிட் கார்டு நிறுவனம் அதனை புதுப்பிக்கும் பணியைக் கையில் எடுத்தது. தனது வாடிக்கையாளர்களின் கடன் அட்டை வாயிலாக பிரசாரம் செய்து மக்களின் மனதை வென்றது. இதனால் அவர்களின் வாடிக்கையாளர்கள் பத்து சதவீதம் கூடுதலாக பெருகினர். அவர்களின் அட்டை வாயிலான பரிமாற்றமும் கூடியது. இந்த சமூக பொறுப்புணர்வு திட்டம் மூலம் பத்து லட்சம் ரூபாய்க்கும் மேலாக சேகரித்து அமெரிக்க அரசுக்கு வழங்கியது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம். இதன்மூலம் அனைத்து மக்களின் மனதிலும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போய் சேர்ந்துவிட்டது. சின்ன ஐடியா எப்படி வேலை செய்தது பார்த்தீர்களா?

பிராண்டை நிலைநிறுத்தலாம்

குறிப்பிட்ட சேவையை மக்களுக்கு வழங்குகிறோம். அதற்கு அவர்கள் காசு கொடுக்கிறார்கள் என நிறுவனத்தை நடத்தினால் அனைத்து மக்களிடமும் நிறுவனம் சென்ற சேராது. பி அண்ட் ஜி நிறுவனத்தை உதாரணமாக பார்ப்போம். கல்வி சார்ந்த பணிகளுக்காக அவர்களின் பொருட்களிலிருந்து குறிப்பிட்ட தொகையை கொடுத்து வருவதாக விளம்பரம் செய்கிறார்கள். பொருளின விலை, தரம் ஆகியவற்றோடு அவர்கள் செய்யும் பணியும் இந்தியர்களுக்கு பிடித்துப்போனதால் அவர்களின் நுகர்வோர் பொருட்கள் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த பென் அண்ட் ஜெர்ரி என்ற நிறுவனம் ஐஸ்க்ரீம்களை தயாரித்து விற்கிறது. ஆனால் அவர்கள் தங்களது பிராண்டை இயற்கைச் சூழலைக் காப்பதாக, உலக அமைதிக்கு பாடுபடுவதாக பிரசாரம் செய்து ஆண்டுதோறும் ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இயல்பாகவே மக்களுடைய பிரச்னைகளுக்கு காது கொடுப்பவர்களை மக்களுக்கும் பிடிக்கும். அப்படித்தான் அமெரிக்காவில் பென் அண்ட் ஜெர்ரி ஐஸ்க்ரீம் மகத்தான வெற்றி பெற்றது.

தொடரும்....