மும்பை குடிசைவாழ் மக்களுக்கு உணவு வழங்கும் முன்னாள் டிஜிபி! - தன்னார்வ முயற்சியின் சாதனை




Local Guides Connect - Mumbai Roti Bank: Hunger Ends Here. - Local ...
local guides connect





மும்பை ரொட்டி வங்கியின் சாதனை

மும்பையைச்சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரி டி சிவானந்தன், ரொட்டி வங்கியை நிறுவி செயல்பட்டு வருகிறார். தற்போது ஊரடங்கு காலத்திலும் வேலையின்றி அவதிப்படும் மக்களுக்கு தனது ரொட்டி வங்கி அமைப்பு மூலம் உணவு வழங்கி வருகிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மும்பை ரொட்டி வங்கியை, காவல்துறை உதவியோடு தொடங்கி மக்களுக்கு உதவத் தொடங்கினார் சிவானந்தன். இவர், மகாராஷ்டிரா காவல்துறையில் டிஜிபியாக பதவி வகித்தவர்.

உணவு வங்கி மூலம் தினசரி நான்காயிரம் உணவுப் பொட்டலங்களை மக்களுக்கு விநியோகித்து வந்திருக்கிறார். தற்போது தினசரி நாற்பதாயிரம் உணவுப் பொட்டலங்கள் வரை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

கொலபா, மீரா சாலை, மேன்கர்டு ஆகிய பகுதிகளிலுள்ள குடிசைவாழ் மக்களுக்கு இந்த உணவுப்பொட்டலங்களை அமைப்பினர் விநியோகித்து வருகின்றனர். இதில் தன்னார்வம் மிக்க சில நிறுவனங்களும் இணைந்துள்ளன. தைரோகேர், ஷாரூக்கானின் மீர் பவுண்டேஷன், பிகேசி ஆகிய நிறுவனங்கள் மும்பை ரொட்டி வங்கியுடன் கைகோத்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.

உணவுகளை நேரடியாக ஏழைமக்களின் வீட்டுக்கு கொண்டு சென்று கொடுக்கத்தான் நினைத்திருக்கிறார் சிவானந்தன். ஆனால் பெருந்தொற்று பிரச்னையால் அத்திட்டத்தைக் கைவிட்டிருக்கிறார். உணவு தயாரித்தவுடன் அதனை சாப்பிட்டுப் பார்த்து பின்னரே பிறருக்கு வழங்க அனுமதிக்கிறார் சிவானந்தன். இவர்கள் மஹூல் கிச்சன் எனுமிடத்தில் தயாரிக்கும் உணவு தவிர, குறிப்பிட்ட சில உணவகங்களில் மிஞ்சும் உணவுகளையும் வாங்கி ஏழைகளுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் இந்த செயல்பாடுகளை முன்னாள் காவல்துறை அதிகாரியான ஜெயன்கார் யஷ்வந்த் தம்பே என்பவர் பார்த்துக்கொள்கிறார்.

ஸ்காட்டிஸ் கதீட்ரல் பள்ளிகளின் ஆதரவுடன் தலா மாணவர்களிடமிருந்து இரண்டு சப்பாத்திகளைப் பெற்று அவற்றை பசிப்பிணி கொண்டவர்களுக்கு வழங்கி வருகிறார். பதினான்கு வண்டிகள் மூலம் அவற்றைக் கொண்டு செல்ல 140 தன்னார்வலர்கள் இதற்காக உழைத்து வருகின்றனர்.

தனது சிறுவயதை கோவையில் கழித்துள்ளார் சிவானந்தன். 1967-68ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட வறுமை நிலையால் உணவுக்கு பல்லாயிரம் பேர் அலைந்ததைப் பார்த்து வருத்தமுற்றிருக்கிறார். இந்தியாவில் 200மில்லியன் மக்கள் இரவு உணவு இன்றி தூங்க செல்கிறார்கள். இங்குதான் 1.4 கோடி உணவுகள் வீணாக குப்பையில் வீசப்படுகின்றன. உணவுக்காகத்தான் மக்கள் திருடவும் பல்வேறு குற்றங்களையும் செய்யத் தொடங்குகின்றனர். நான் பணிசெய்ய மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் உள்ள பகுதியில் உணவின்றி அம்மக்கள் தடுமாறுவதை நான் பார்த்துள்ளேன். இன்று நாங்கள் இந்த அமைப்பைத் தொடங்கி உணவை வழங்க அத்தகைய சம்பவங்களே காரணம் என்கிறார். வறுமைநிலையில் மீரா சாலையில் வாழும் சிறுவர்களுக்கு 1500 உணவுப்பொட்டலங்களை இந்த அமைப்பு தொடர்ந்து தயாரித்து வழங்கி வருகிறது. இவர்களுக்கு உணவு இல்லையென்றால் பள்ளிக்கு செல்லமாட்டார்கள். படிப்பு தடைபட்டால் அவர்கள் உணவைப் பெற தவறான வழிகளில் இறங்கிவிடுவார்கள் என்கிறார் சிவானந்தன். மேலும் பல்வேறு சிறுமிகளை தன்னுடைய அமைப்பின் செல்வாக்கினால் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தும் வருகிறார்.

 

நன்றி: மும்பை மிரர், சுகாரா கோஷ்


கருத்துகள்